Tuesday, January 24, 2012

சந்திரனை பற்றி தொடரும் மர்மங்கள்?


விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் மிக அதிகமாக பூமியின் துணைக் கிரகமான சந்திரனே ஆய்வுசெய்யப் பட்டுள்ளது எனலாம். அதிலும் முக்கியமாக உலகின் முதல் நிலை வல்லரசுகளான அமெரிக்கா,சீனா,ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டு கடந்த பத்து வருடங்களுக்குள் ஐந்திற்கும் மேற்பட்ட செய்மதிகளை அனுப்பியுள்ளன.


 இதன் முக்கிய நோக்கம் இன்னும் பதினைந்து வருடங்களுக்குள் தற்போது விண்ணில் உள்ள சர்வதேச விண் நிலையத்தை போல் உலக நாடுகள் கூட்டாக இணைந்து சந்திரனில் விண் தளத்தை அமைக்கவுள்ளதே எனலாம். இத்தளம் மூலம் மனிதன் வருங்காலத்தில் குடியேறலாம் என எதிர்பார்க்கும் சந்திரன்,செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கான பயணங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வகையில் சந்திரனின் ஈர்ப்பு நிலையை ஆராய்வதற்கு என கடந்த செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்பட்ட கிரைல் ஏ, கிரைல் பி, என்ற இரட்டை செய்மதிகள் சந்திரனின் நீள் வட்ட பாதையை கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 31, 2011) சென்றடைந்தது.


அதன் ஈர்ப்பு நிலையை ஆயும் கருவிகள், 2012 புது வருட தொடக்க தினமன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவின் சுற்றுப் பாதையிலும் இணைந்துள்ளன. இக்கருவிகள் நிலவின் உட் புறத்தை விரிவாக ஆராயும் என நாசாவின் விஞ்ஞானி மரியா ஷுபேர் தெரிவித்துள்ளார்.1960 ஆம் ஆண்டு அதாவது இற்றைக்கு 52 வருடங்களுக்கு முன்னரும், அதன் பின் 10 வருடங்கள் கழித்து 1970 ஆம் ஆண்டும் நாசாவிலிருந்து நிலவுக்கு செலுத்தப்பட்ட மனிதர்களை கொண்டு சென்ற அப்போலோ விண்கலங்கள் சந்திரனைச் சென்றடைய 3 நாட்களே எடுத்தன.


ஆனால் ஆர்பிட் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டு விண்ணில் பயணஞ் செய்த கிரைல் ஏ மற்றும் பி ஆகிய செய்மதிகள் செப்டம்பரில் பூமியில் இருந்து ஏவப்பட்டு இலக்கை சென்றடைய 3 மாதங்கள் எடுத்தது குறிப்பிடத் தக்கது. நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் கருத்து என்னவென்றால் சந்திரன் பல கோணங்களிலும் மிகவும் மர்மம் வாய்ந்த கிரகமாக உள்ளது. இதன் பூமிக்கு அண்மையான பக்கம் அடுத்த பக்கத்தை விட கோளவியற் படி பெரிதும் வித்தியாசப்பட்டு உள்ளது. இதன் ஒரு பக்கம் எரிமலை குழம்பால் நிரம்பியும் மறு பக்கம் மலைகளுடன் கூடிய மேட்டு நிலமாகவும் உள்ளது. மேலும் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் மோதிய செவ்வாய்க் கிரகத்துக்கு ஒப்பான பருமனுடைய விண்கல்லின் தாக்கத்தால் பிளவு பட்டு போன பகுதியே சந்திரன், என்ற விடயங்களே சந்திரனை பற்றிய இவர்களின் கருத்து.இம் மர்ம முடிச்சுக்கள் அதாவது இவை எவ்வாறு தோன்றின என்பன கிரைல் விண்கலங்கள் உட்பகுதியை ஆய்வு செய்வதன் மூலம் அவிழ்க்கப்படலாம் என இவர்கள் கூறுகின்றனர். நாசாவின் JPL ஆய்வகக் கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்காவின் 'கேப் கனெவரெல்' விமான நிலையத்தில் இருந்து டெல்டா 2 ராக்கெட்டுக்கள் மூலம் இச் செய்ம்மதிகள் ஏவப்பட்டன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF