Sunday, October 30, 2011

யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு..


உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது. இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.

பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம். சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும்.


கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன. நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம். அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். 


பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும். இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது. பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது.


இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும். ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம். தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு..


தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ரோபோக்களையும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் ரோபோக்களையும் புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த மையத்தின் ஒரு பிரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியியல் அமைப்பு புனேயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.

  ஒரு ரோபோ தனது தலையில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியால் தீவிரவாதிகள சுட்டுக் கொல்லும் திறன் படைத்தது. சிறிய ரக துப்பாக்கி மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. கையெறி குண்டுகளை வீசக்கூடிய திறனும் இதற்கு உள்ளது. இரண்டாவது ரோபோ வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த ரோபோக்களின் சோதனைகளும் முடிந்து விட்டன. அவற்றை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும். இந்த ரோபோக்களை வாங்குவதற்கு ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படைகள் ஆர்வம் காட்டியுள்ளன என்று புனே அமைப்பின் இயக்குனர் குருபிரசாத் கூறினார்.

தீவிரவாதிகள் பெரும்பாலும் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதுபோன்ற நேரங்களில் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுக்கும் போது உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. அதுபோன்ற நேரங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்தினால் தீவிரவாதிகளை தேடிச் சென்று கொல்வதுடன் ராணுவத்துக்கு உயிர் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறினர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு..


நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்.அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும். பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். 


இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது. குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள். பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள். இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

இலங்கை ஊடக நிறுவன உரிமையாளர் சிங்கப்பூரில் கைது.
இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரின் ஷாங்கி விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சிங்கப்பூர் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஊடக உரிமையாளர் கைதுசெய்யப்படும் போது, அவரிடம் 5 லட்சம் சிங்கப்பூர் டொலர்கள் இருந்துள்ளதுடன், இலங்கை கடவூச்சீட்டும், போலியான பிரித்தானிய கடவூச்சீட்டு ஒன்றும் இருந்தாக கூறப்படுகிறது.
குறித்த நபர் சிங்கப்பூர் டொலர்களை வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு குடிவரவு, குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சிங்கப்பூர் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்டவிரோத நாணய கடத்தல், போலிக்கடவுச்சீட்டு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
சரத் பொன்சேகாவுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! பாப்பாண்டவரிடம் ஐ.தே.க. கோரிக்கை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, பாப்பாண்டவர் பதினாறாம் பெனடிக் ஆண்டகையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வத்திக்கானில் வைத்து இது தொடர்பான விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படுவதற்கு சரத் பொன்சேகா முன்னின்று செயற்பட்டார் எனவும், படைத்தளபதியாக அவர் கடமையாற்றியதாகவும் ஜயலத் ஜயவர்தன, போப்பாண்டவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தலைமையில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அநீதி இழைக்கப்படுவது பெரும் அநியாயம் என்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.அத்துடன் பயங்கரவாதம் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியப் பெண்கள் கட்டுநாயக்கவில் கைது.
இலங்கைக்குள் சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்திவர முற்பட்ட பாகிஸ்தானியப் பெண்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடலுக்குள் மறைத்து வைத்து கடத்தி வர முற்பட்டபோதே பிரஸ்தாப இரண்டு பாகிஸ்தான் பெண்களும்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் என காவற்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கராச்சியில் இருந்து இலங்கை வந்த இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு பெண்களையும் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.
இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை உயர்வடைந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் டீசலின் விலை 8 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவுக்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சண்டேலீடர் ஊடகவியலாளர்கள் கோரிக்கை : விக்கிலீக்ஸ்.
இலங்கையில் ஊடக சூழலை மேம்படுத்த அமெரிக்கா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சண்டேலீடர் ஊடகவியலாளர்களான ஜேன்ஸ் மற்றும் முஸ்டாக் ஆகியோர் கோரிக்கை விடுத்தினர்.
இந்த தகவலை அமெரிக்க தூதரகம், வோசிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரு ஊடகவியலாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் கடிதம் வந்ததன் பின்னரே இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவி அலுவலக மேலாளர் வெலரி புளவர் இதனை இராஜாங்க திணைக்களத்துக்கு 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு தொடர்பில் வினவப்பட்டபோது தாம் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையே விரும்புவதாக இரண்டு ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இந்தக்காலப்பகுதியில் அமெரிக்க தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இராஜாங்க திணைக்களத்துக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 60 மாடி இரட்டைக் கோபுர நிர்மாணத்துக்கு வந்த இந்திய முதலீட்டாளர் மாயம்.
இலங்கையில் உயரமான 60 இரட்டைக் கோபுர கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கவிருந்த இந்திய முதலீட்டாளர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடம் பத்தரமுல்லையில் அமைக்கப்படவிருந்தது.
குறித்த முதலீட்டாளர் இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான உடன்படிக்கையை செய்துள்ளார். எனினும் தமது நிர்மாணத்தை அவர் இதுவரை ஆரம்பிக்கவில்லை.குறித்த 60 மாடி இரட்டைக் கோபுர கட்டிடத்தில் பத்தரமுல்லையில் இருந்து கொழும்புக்கு சென்று வருவதற்கான மெற்றோ ரெய்ல் சேவையும் உள்ளடக்கப்படவிருந்தது.
எனினும் நடராஜா என்ற குறித்த இந்திய முதலீட்டாளர் உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் இதுவரை இலங்கைக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இலங்கையின் முதலீட்டுசபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சீன முதலீட்டாளர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வீசா கட்டணத்தை குறைந்தது இலங்கை.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக வீசா கட்டணங்களை குறைக்க இலங்கை தீர்மானித்துள்ளது.இலங்கை அண்மையில் தெற்காசிய பயணிகளுக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டது.
இதன்படி வீசா கட்டணங்களை 50 டொலர்களாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.எனினும் இது இலங்கையில் சுற்றுலா சந்தையை கொண்டுள்ள இந்தியாவின் சுற்றுலா பயணிகளை பாதிக்கும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.இந்தநிலையில் ட்ரான்சிட் பயணிகளுக்கான வீசா கட்டணங்களை மாத்திரம் 50 டொலர்களாகவும் சிறுவர்களுக்கு இலவச வீசாவையும் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளதாக தகவல்.
இலங்கையின் கொழும்பு நகரத்தில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இதில் 45 பேர் ஹெரோய்ன் மொத்த வர்த்தகர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.தற்போது இலங்கையில் 10 முதல் 15 வரையிலான ஹெரோயன் மொத்த விற்பனையாளர்கள், மாபியா என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர்.இவர்களால் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் 25 கிலோகிராம் ஹெரோயன் பரிமாற்றப்படுகிறது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் சுமார் 300 பேர் ஹெரோய்னை 50 கிராம் மற்றும் 100 கிராம் என்ற அளவுகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி இலங்கைக்கு 90 வீதமான ஹெரோய்ன், பாகிஸ்தான் மற்றும் தென்னிந்தியா ஆகிய நாடுகளில் இருந்து எடுத்து வரப்படுகின்றன.இவை, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களின் ஊடாக இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன.
இதனை தவிர, ஹிக்கடுவ, திருகோணமலை, தலைமன்னார், மாரவில, பேருவளை, கல்முனை, அக்கரைபற்று, தொடுவேவ, மட்டக்களப்பு, அருகம்குடா, பாணந்துறை ஆகிய இடங்களுக்கும் ஹெரொய்ன் கிடைத்து வருகிறது.இந்தநிலையில் ஒரு கிலோகிராம் ஹெரொய்ன் இலங்கையில் 4.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பஷில் - நாமல் மோதல் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான மோதல் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது.
இவர்களின் பனிப்போர் அண்மையில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை இரத்து செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் இராணுவத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு பஷில் ராஜபக்சவிற்கு நெருக்கமான சிலர் ஊடாக முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கொடுக்கல், வாங்கல்கள் இறுதிசெய்துள்ள கெதிக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய மஹிந்த உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், காலிமுகத்திடலில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து பாரிய முதலீட்டுத் திட்டமொன்றை மேற்கொள்ள முன்வந்த டெல்டா கன்ட்ரக்ஸன் நிறுவனத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வேலைத் திட்டங்களும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஊடாக முதலீட்டுச் சபையினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
கெதிக் நிறுவனத்திற்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்ட அதே வேளை அதே பாணியில் எவ்வித கேள்விமனுக் கோரலுமின்றி ஷான்கில்லா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணி ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடல், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் ஷான்கில்லா விடுதி அமைக்கும் வேலைத் திட்டம் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச முன்னெடுத்துவரும் வேலைத் திட்டமாகும்.
காலிமுகத்திடல் காணி விவகாரம் : சீன நிறுவனம் - இலங்கை அரசாங்கம் மோதல்.
இலங்கையின் காலிமுகத்திடலுக்கு அருகில் பலநோக்கு கட்டிடத்தொகுதியை அமைக்கவுள்ள சீன நிறுவனம் அதற்கான முற்பணத்தை வழங்க மறுத்துள்ளது.
குறித்த கட்டிடம் அமையவுள்ள இடத்தை முழுமையாக விற்பனை செய்வதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கையை அடுத்தே இந்த மறுப்பை சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது.
CATIC என்ற இந்த சீன நிறுவனம், தமக்கான காணிப் பரப்பை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கு குறித்த நிலத்தை முழுமையாக விற்பனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிராக சட்ட உதவியை பெறவுள்ளதாக CATIC  நிறுவனம் கூறியுள்ளது.
இதற்காக முன்னர் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த காணிப்பரப்பு சங்ரி லா ஹோட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளமையை குறித்த சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.CATIC நிறுவனமும் இலங்கையின் நிதியமைச்சும் குறித்த நிர்மாணம் தொடர்பில் கடந்த பெப்ரவரியில் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டன.
இதன்படி 50 மில்லியன் டொலர்களை முற்பணமாக வழங்க வேண்டும்.  அத்துடன் மீதித்தொகையான 86 மில்லியன் டொலர்களை 2011 ஏப்ரல் 21க்குள் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.எனினும் அதனை சீன நிறுவனம் வழங்கவில்லை.இதன்காரணமாக அந்த நிறுவனத்துடனான உடன்படிக்கை ரத்தாகிவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தாம் சட்ட உதவியை பெறவுள்ளதாக CATIC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் புற்றுநோயால் அவதி.
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா(66). இவர் தொண்டை வலியால் அவதிப்பட்டார்.
எனவே சாபாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தொண்டை நோய் பாதித்து இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லுலா கடந்த 2003 முதல் 2010ம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்துள்ளார்.
லிபியாவிலிருந்து பிரிட்டன் படைகள் தாய்நாடு திரும்பும்: பாதுகாப்பு செயலர் அறிவிப்பு.
பிரிட்டன் படைகள் தம் பாதுகாப்புத்துறைச் செயலரின் வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு லிபியாவில் இருந்து தம் தாய்நாடு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலர் பிலிப் ஹேம்மோன்ட் குறிப்பிடுகையில், லிபிய மக்களின் விடுதலையை உறுதிப்படுத்தியதால் பிரிட்டன் படை வீரர்கள் தங்களின் கடின உழைப்பு குறித்து அளவற்ற பெருமை அடையலாம் என்று குறிப்பிட்டார். நேட்டோ படையானது ஓக்டோபர் 31ஆம் திகதியுடன் தனது பணியை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளது.
ஹேம்மோண்ட் தமது ஆறு டொர்னாடோ GR4 ஜெட் விமானங்களை உடனடியாகத் தம் நாட்டிற்குத் திரும்ப உத்தரவிட்டார். மற்ற போர் விமானங்களும் இரண்டு VC10 டேங்கர்களும் படைவீரர்களும் கண்காணிப்பு விமானமும் அடுத்தடுத்து பிரிட்டன் திரும்பும் என தெரிவித்தார்.
போரின் உச்சக்கட்டத்தில் பிரிட்டன் 2300 படைவீரர்கள், 32 போர் விமானம், 4 போர்க்கப்பல் அகியவற்றை லிபியாவில் வைத்திருந்தது. அப்போது 3000 முறைகள் விமானத் தாக்குதலுக்கு விமானங்கள் புறப்பட்டன. 2100 முறைக்கும் மேலாக தாக்கிய விமானங்கள் 640 இலக்குகளைத் தகர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கிய சர்கோசி.
பிரான்ஸ் அதிபர் சர்கோசி யூரோ நெருக்கடி பற்றி தெரிவித்த கருத்துகள் அவர் அடுத்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டுத் தொலைக்காட்சிக்கு 75 நிமிடம் “சவாலைச் சந்தித்தல்” (Face a’ la Crise) என்ற தலைப்பில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் ஐரோப்பாவின் கடன் நெருக்கடி குறித்து தெளிவாக விளக்கிக் கூறினார். இவருடைய விளக்கம் இன்றைய நெருக்கடியிலிருந்து பிரான்ஸ் உறுதியாக மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்தது.
அதே வேளையில் எதிர்த்தரப்பில் உள்ள சோசலிஸ்ட்வாதிகளுக்கு முடிவு கட்டுவதாகவும் அமைந்தது. அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக இந்தப் பேட்டியில் அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைப் போலவே அவருடைய பேச்சு அமைந்திருந்தது. தன்னுடைய பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி சிறப்பாக எடுத்துரைத்த அதே வேலையில் தன் எதிர்க்கட்சியின் சோசலிசக் கொள்கைகளையும் இவர் கடுமையாக எதிர்த்தார்.
எதிர்க்கட்சி தனது வேட்பாளராக பிராங்கோய்ஸ் ஹோலண்டேயின் பெயரை அறிவித்துவிட்டது. சர்கோசி இன்னும் தன் பெயரை முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. ஆனால் அறிவிக்கப்படாத பிரச்சாரத்தை நேற்றே ஆரம்பித்துவிட்டார் என்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
சர்கோசி தன்னுடைய பேட்டியில் நேற்றிரவு(புதன்கிழமை) யூரோ தன் மதிப்பை இழந்திருந்தால் ஐரோப்பாவே உலக அரங்கில் தன் மதிப்பை இழந்திருக்கும் என்றும் அவ்வாறு நிகழவிருந்த உலகப் பொருளாதாரப் பேரழிவைத் தானும், மற்ற ஐரோப்பியத் தலைவர்களும் சேர்ந்து தடுத்து விட்டதாகவும் கூறினார்.
யூரோவின் மதிப்பையும் ஐரோப்பாவின் மதிப்பையும் காப்பாற்றியதில் தனக்கிருந்த முக்கியப் பங்கை தெளிவாக மக்களுக்கு உணர்த்தினார். தன் மூலமாக தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்ட சர்கோசி அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, பிரான்சில் குறைந்து கொண்டே வருவதாகவும் அதனைச் சரி செய்ய தனக்கு 8 பில்லியன் யூரோ தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
துறவிகள் தீக்குளிப்பதற்கு சீனாவின் கொள்கைகள் தான் காரணம்: தலாய்லாமா குற்றச்சாட்டு.
சீனாவின் கொடிய இரக்கமற்ற கொள்கைகள் தான் திபெத்தியத் துறவிகள் ஒன்பது பேர் தீக்குளிக்கக் காரணம் என தலாய்லாமா குற்றம் சாட்டியுள்ளார்.திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து கடந்த மார்ச் முதல் ஒரு பெண் புத்த துறவி உட்பட ஒன்பது துறவிகள் தீக்குளித்துள்ளனர். ஒரு பெண் புத்த துறவி தீக்குளிப்பது திபெத்திய வரலாற்றில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்காக தலாய்லாமா நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திபெத்தைப் பொறுத்தவரையில் தனது அணுகுமுறையை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும்.திபெத் பிரச்னைக்காக அல்லாமல் ஒட்டுமொத்த சீனாவின் நன்மைக்காகவும், அவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
திபெத் விவகாரம் குறித்து சீனா பேச்சு நடத்துவதற்கு சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். துறவிகள் தீக்குளித்ததற்கு சீனாவின் கொடிய, இரக்கமற்ற கொள்கைகள் தான் காரணம். அதனால் திபெத் குறித்த சீனாவின் கொள்கைகள் பற்றி வெளிப்படையான பேச்சு நடத்த சீனா முன்வர வேண்டும்.
அமெரிக்காவுடனான நட்பினை ஒருபோதும் ஈரான் விரும்பவில்லை: அமைச்சர் தகவல்.
அமெரிக்காவுடனான நட்பினை ஈரான் ஒரு நாள் விரும்பும். ஆனால் இப்போது இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி தெரிவித்துள்ளார்.ஈரான் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் அதேநேரத்தில் அந்நாட்டு மக்களை ஆதரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சலாஹி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: ஹிலாரி கூறியுள்ளது போன்ற அறிக்கைகளை நிறைய பார்த்துவிட்டோம். துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் முரண்பாடுகளாக உள்ளன.எங்களுடைய கொள்கை இஸ்ரேல் தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதுதான். அணு ஆயுதம் தயாரித்து வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் தலைவர் இருநாள் பயணமாக சீனா வருகை.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் நிதி வளத்தை அதிகரிப்பது தொடர்பாக அதன் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் நேற்று சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.யூரோ மண்டலக் கடன் நெருக்கடி பற்றிய பீதி பரவிய போது ஐரோப்பாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக அறிவித்தது.
அதன் அடிப்படையில் இ.எப்.எஸ்.எப்.பின் நிதியை அதிகரிப்பதற்கு சீனா கைகொடுக்க வேண்டும் என அக்கூட்டத்திலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.கூட்டம் முடிந்த உடனேயே பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, சீன அதிபர் ஹூ ஜிண்டோவைத் தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இ.எப்.எஸ்.எப் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் இரு நாள் பயணமாக நேற்று சீனத் தலைநகர் பீஜிங் சென்றார். சீன உயர் அதிகாரிகளுடன் இதுகுறித்து அவர் பேச்சு நடத்தினார்.நேற்று அவர் அளித்த பேட்டியில் இ.எப்.எஸ்.எப் இதுவரை யூரோ நாணயத்தில் தான் கடன் பத்திரங்கள் வெளியிட்டு வருகிறது. சீனா விரும்பும் பட்சத்தில் யுவான் நாணயத்திலும் வெளியிட முன்வருகிறோம்.
அதேபோல் சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு நிதியமைப்பு(எஸ்.பி.ஐ.வி) ஒன்றும் அமைக்கப்படலாம் என்றார். எனினும் கடன் வழங்குவதற்கு சீனா எவ்வித உத்தரவாதங்களைக் கேட்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை அவர் கூறவில்லை.
இ.எப்.எஸ்.எப்.பிற்கு கடன் வழங்குவதில் சீனா மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட்டு வருகிறது. சீன துணை நிதியமைச்சர் ஷூவூ குவாங்யாவோ இதுகுறித்துக் கூறுகையில்,"இ.எப்.எஸ்.எப்.பில் முதலீடு செய்வது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்று மட்டும் தெரிவித்தார்.இந்நிலையில் இ.எப்.எஸ்.எப்.புக்கு பெருமளவில் நிதியளிக்கும் ஜேர்மனி அரசின் முடிவுக்கு அந்நாட்டு அரசியல் அமைப்பு கோர்ட் தடை விதித்துள்ளது.
இ.எப்.எஸ்.எப்.புக்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த ஒன்பது எம்.பி.க்கள் கொண்ட ஒரு பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் ஜேர்மனி 211 பில்லியன் யூரோவை இ.எப்.எஸ்.எப்.புக்கு அளிக்கத் திட்டமிட்டிருந்தது.
ஜேர்மனி மக்களின் வரிப் பணத்தை இ.எப்.எஸ்.எப்.புக்கு அளிப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் இரு எம்.பி.க்கள் இக்குழு நியமனத்தை எதிர்த்து அரசியல் அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அயர்லாந்து அதிபர் தேர்தல்: ஹிக்கின்ஸ் வெற்றி.
அயர்லாந்து அதிபர் தேர்தலில் 57 சதவீத வாக்குகளைப் பெற்று மிகயில் டி. ஹிக்கின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.இடதுசாரி அரசியல்வாதியான ஹிக்கின்ஸ் தொழிலாளர் கட்சியின் தலைவராவார்.
70 வயதாகும் அவர் தனது வெற்றியைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் அயர்லாந்து கூட்டணி அரசிலிருந்தும் ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட 18 லட்சம் வாக்குகளில் 10 லட்சம் வாக்குகளை ஹிக்கின்ஸ் பெற்றார். தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாயின.
அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள ஹிக்கின்ஸ், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் ஆவார்.
ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 14 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் படையினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
நேட்டோ படையினர் பயணம் செய்த பஸ் மீது காரில் வந்த தலிபான் தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் நேட்டோ படையினர் 11 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.அதே நேரத்தில் நகரத்தின் மேற்கு பகுதியான அஸாதாபாதின் குணார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகத்துக்கு வெளியே பெண் மனித வெடிகுண்டு நடத்திய இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
காந்தகார் நகரில் அமெரிக்க நடத்தி வரும் பொது மக்கள்-ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படை முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கூறியிருந்தார். இந்நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: அரபு லீக் கூட்டமைப்பு.
சிரியாவில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் பேரணிகளின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து மக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை கைவிடும்படி அரபு லீக் சிரியாவுக்கு அவசரச் செய்தி அனுப்பியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் எட்டாவது மாதமாகத் தொடரும் நிலையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகள் நடந்தன.
லிபியாவில் அப்போதைய தலைவர் கடாபியின் ராணுவ வன்முறையைத் தடுக்கும் வகையில் ஐ.நா அந்நாட்டின் மீது “போர் விமானங்கள் பறக்கத் தடை” விதித்ததைப் போல சிரியாவிலும் விதிக்க வேண்டும் என்பது தான் நேற்று முன்தினம் நடந்த மக்கள் பேரணிகளின் நோக்கம் என சிரியா புரட்சி 2011 என்ற பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
லிபியாவைப் போல அதிபர் அசாத் போர் விமானங்களைப் பயன்படுத்தாததால் இந்தக் கோரிக்கையின் பலன் குறைவாகவே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கிய நகரங்களான ஹமா மற்றும் ஹோம்சில் மசூதிகளில் தொழுகைக்குப் பின் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சிரியா ராணுவம் மசூதிகளை முற்றுகையிட்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து வீடு வீடாக நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். ஹமாவில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பொலிசார் மீது நடத்திய தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹோம்ஸ் நகரில் ராணுவத்துக்கும், ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றுக்கும் நடந்த சண்டையில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கும்பல் ராணுவத்தில் இருந்து அதிபருக்கு எதிராகப் பிரிந்து சென்ற வீரர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிரியாவுக்குள் இன்னும் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைவதற்குத் தடை நிலவுவதால் பல செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. கடந்த 26ம் திகதி அரபு லீக்குக்கும், அசாத்துக்கும் இடையில் நடந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதிபரும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என அரபு லீக் வலியுறுத்தியது.
இந்நிலையில் அரபு லீக்கின் சிரியா விவகாரம் குறித்த அமைச்சர்கள் கமிட்டி நேற்று சிரியாவுக்கு விடுத்த அவசரச் செய்தியில்,“மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா உடனடியாக கைவிட்டு அவர்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எல்லையோரப் பகுதிகளில் சீனர்கள் சட்ட விரோதமாக குடியேற்றம்.
இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீனா தற்போது ரஷ்யாவிலும் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது.
அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் சீனர்கள் பலரை குடியேற்றங்கள் அமைக்க சீன அரசு தூண்டி வருகிறது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு(எப்.எஸ்.பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா தன் குடிமக்களை ரஷ்ய எல்லைப் புறங்களில் நுழைந்து குடியேற்றங்களை அமைக்கத் தூண்டி வருகிறது.
இதற்காக பல சீன நிறுவனங்கள் ரஷ்யாவின் ஓட்டுனர் உரிமங்களை போலியாகத் தயாரித்து இணையதளத்தில் வெளிப்படையாக விற்று வருகின்றன. இதை சீன அரசு கண்டும் காணாமல் அனுமதித்து வருகிறது.
ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு மரங்கள் கடத்தப்படும் போது இந்த போலி ரஷ்ய ஓட்டுனர் உரிமங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல போலி ரஷ்ய உரிமங்களைப் பயன்படுத்தும் சீனர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்.
இதற்கு முன்பு வந்த ஆய்வறிக்கைகளின்படி லட்சக்கணக்கான சீனர்கள் சட்டவிரோதமாக ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி குடியேற்றங்களை அமைத்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட எந்த ஒரு அரசு அமைப்பும் அமைக்கப்படவில்லை.
சம்பளம் உயர்வை கேட்டு பெண் ஊழியர்கள் வழக்கு.
சம்பளம், பதவி உயர்வில் வேற்றுமை காட்டுவதாக அமெரிக்காவின் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால் மார்ட் மீது பெண் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் புகழ்பெற்ற தொடர் சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால் மார்ட், சீனா உட்பட பல நாடுகளிலும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவிலும் அது உள்நாட்டு நிறுவனமான பாரதியுடன் இணைந்து ஸ்டோர்களை திறக்க தயாராகி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க ஸ்டோர்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம், பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி டெக்சாஸ், கலிபோர்னியா மாநில நீதிமன்றங்களில் பெண் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, ஜூன் மாதத்தில் முதல் வழக்கு தொடரப்பட்டது.
இப்போது கலிபோர்னியாவில் புதிய வழக்கு பதிவாகியுள்ளது. இதுபோல அந்தந்த மாநிலங்களில் வால் மார்ட் பெண் ஊழியர்கள் தனித்தனி வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ஊழியர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜோசப் செல்லர்ஸ் கூறுகையில், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் மேலும் பல மாநில உயர் நீதிமன்றங்களில் வால் மார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களின் சம்பள நிர்ணயம், பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவது நியாயமற்றது என்றார், எனினும், இந்த வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று வால் மார்ட் செய்தி தொடர்பாளர் கிரேக் ரோசிடெய்ர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஊழியரும் வேறுபட்ட திறமை உடையவர், அதற்கேற்ற ஊதியம், பதவிகளை பெறுவது இயல்பு. இதில் பாரபட்சம் ஏதுமில்லை, எனவே, இந்த வழக்குகள் எந்த வகையிலும் பொருந்தாதவை என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, October 29, 2011

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி அல்ல!!!!


அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர் அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை. பலரின் கூட்டு முயற்சியே இது. ஆனாலும் ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நிக்கோல டெஸ்லா என்பவர் தான்.ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாததால், இவர் காப்புரிமை பெறவில்லை. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி. ஆனால் அறிவியல் உலகில் மார்க்கோனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பசியின் காரணமாக பல மைல் தூரம் மலை ஏறிய டைனோசர்கள்!!!!!


அதிக பசியின் காரணமாக டைனோசர்கள் பல மைல் தூரம் மலை ஏறியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.உலகில் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினம் டைனோசர். 16 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த இனம் ஆறரை கோடி ஆண்டுகள் முன்பு அழிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது டைனோசர்களின் படிமங்கள், எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்து வருகின்றன. 

அமெரிக்காவின் உடா மாநில அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் பற்கள், எலும்புகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வின் போது கிடைத்த பற்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுபற்றி ஆராய்ச்சியாளர் ஹென்றி பிரிக் கூறியதாவது: டைனோசர் வாழ்ந்த காலம் ஜுராசிக் காலம் எனப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தாவரங்கள் தின்னும் டைனோசர்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களிலேயே வாழ்ந்திருக்கின்றன. அங்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் உணவு, தண்ணீர் தேடி மலைகளில் பல மைல் தூரம் டைனோசர்கள் அலைந்துள்ளன. டைனோசர்களின் 32 பற்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகா போர்க்குற்றத்தை கோத்தபாய மீது சுமத்த முயற்சித்தார் - விக்கிலீக்ஸ் தகவல்.
சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் தமது சொந்த நலன்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்ற நிலையில் பொன்சேகா விவகாரம் சிக்கல் நிறைந்த, கடினமான விடயமாக உள்ளது என அமெரிக்கத் தூதர், வாசிங்டனுக்கு எழுதியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா, பாதுகாப்புப் படைகளின் பிரதம தளபதியாகச் செயற்பட்ட காலப்பகுதியில் இறுதியாக அமெரிக்கா சென்று சிறிலங்கா திரும்பிய பின்னர் ஏற்பட்ட நிலவரங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையிட்டிருந்தது.
2009 நவம்பர் 06 ல் எழுதப்பட்ட தகவல்களை பிரதித் தூதுக்குழு அதிகாரி வலேரி பவ்லர் (Valerie Fowler)  இரகசியமானது என அடையாளப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளை கொழும்பு டெலிகிராவ் என்னும் ஊடகம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பில் வெளியிடப்பட்ட ஊடகங்களில் சரத் பொன்சேகாவின் அமெரிக்காப் பயணமே முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் விசாரணை செய்ய முயன்றதுடன் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான பொன்சேகாவின் வாக்குமூலத்தைப் பயன்படுத்த அமெரிக்கா முயன்றதாகவும் சிறிலங்காவின் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என அமெரிக்கத் தூதுவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் நவம்பர் 03 அன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து சரத் பொன்சேகா தொடர்பான விடயத்தை அவருடன் கலந்துரையாடியதாகவும், இது சிறிலங்கா அதிபரிற்கு எதிராக ஜே.வி.பியால் பயன்படுத்தப்படலாம் எனவும் கோத்தபாய, அமெரிக்கத் தூதரிடம் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதருடனான சந்திப்பொன்றில் சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா, அமெரிக்காவிற்கு பயணம் செய்வது தொடர்பாக தற்போது தான் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலை மேற்கொண்டது தொடர்பாக அவர் சிறிலங்காவிற்குத் திரும்பிய பின்னரே தனது அரசியல் உயர்மட்டத்திற்கு இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் விசாரணை செய்ய விருப்பம் கொண்டுள்ளது என்கின்ற இந்தச் செய்தியை சரத் பொன்சேகாவோ அல்லது அவருக்கு நெருக்கமான வேறு யாரோ சிறிலங்கா ஊடகங்களிற்குக் கசிய விடத் தீர்மானித்திருந்தனர்.
கடமைமிக்க இராணுவ வீரன் ஒருவன் தனது தளபதிக்கு தகவலை வழங்கியது போன்று காண்பிப்பதற்காக, சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து தான் நீங்கிக் கொண்டு அதற்கு கோத்தபாயவே பொறுப்பு எனச் சாட்டுதல் செய்வதை நோக்காகக் கொண்டு இவ்வாறு செய்திருக்கலாம்.
அதேவேளை, சரத் பொன்சேகாவை தனது அரசியல் போட்டியாளர்  என்கின்ற காரணத்தினால் அவரைத் தோற்கடிக்கவே மஹிந்த ராஜபக்ச விரும்பியிருந்தார். ஆனால் பொன்சேகாவைக் கைது செய்வதன் மூலமோ அல்லது தன் மீதான போர்க்குற்ற வழக்குகள் தொடர்பாக அழுத்தங்களை மேற்கொண்டுவரும் வெளிநாட்டிற்குக் கடத்துவதன் மூலமோ அவரைத் தோற்கடிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச விரும்பியிருக்கவில்லை.
இருந்தும் பொன்சேகாவை விரைவில் நாடு திரும்ப வைக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்பினார்கள்.
அத்துடன் அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருப்பவர்கள் எவராவது மஹிந்த ராஜபக்சவை அவரது பதவியிலிருந்து தூக்கி வீச விரும்பியதால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சிறிலங்காவில் உள்ள பலர் கருதுகின்றனர் என அமெரிக்கத் தூதர் புட்டெனிஸ் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
லொக்கு சீயாவை கண்டு பிடிக்க ஆறு காவல்துறைக் குழுக்கள்.
ராகம தேவாலயத்தின் பிரதம குரு மொஹமட் சாலி நியாஸ் எனப்படும் லொக்கு சீயாவை கண்டு பிடிக்க ஆறு காவல்துறைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று நேற்று முன்தினம் லொக்கு சீயாவை கடத்திச் சென்றுள்ளது.
கடத்தப்பட்டச் சந்தர்ப்பத்தில் லொக்கு சீயா மூன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பில்லி, சூனியம், வசிய மாந்திரீகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு லொக்கு சீயா பிரபலமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூஜைகளை நிறைவு செய்து ஜீப் வண்டியில் சென்று கொண்டிருந்த போது, வண்டியை வழிமறித்து இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதேவேளை, லொக்கு சீயாவுடன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபுக்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
லொக்கு சீயாவை உடனடியாக கண்டு பிடித்து கொடுக்குமாறு காவல்துறையினருக்கு பல்வேறு அரசியல்வாதிகளும் அழுத்தம் கொடுத்து வருதாகக் குறிப்பிடப்படுகிறது.
லொக்கு சீயா போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிட்டியுள்ளன.
போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான முறுகல் நிலைமையினால் இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் பங்குபற்ற வேண்டுமென கோரிய அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என 2009 ஆம் ஆண்டு டிசெம்பரில் அமெரிக்கா விரும்பியதாகவும் ஆனால் அதற்கு இலங்கை மறுப்புத் தெரிவித்தாகவும் விக்கிலீக்ஸினால் கசியவிடப்பட்ட அமெரிக்காவின் இரகசிய ராஜதந்திர கேபிள் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கிற்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் 2009 டிசெம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது இது குறித்து தெரிவிக்ப்பட்டதாகவும் அமெரிக்க கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் நடவடிக்களில் இலங்கை இராணுவம் பங்குபற்றுவது இராணுவங்களுக்கிடையிலான ஈடுபாட்டை முன்னே;றுவதற்கு குறிப்பிடத்தக்களவு உதவும் என ரொபர்ட் பிளேக் தெரிவித்தார்.
அதற்கு (கோட்டாபய) ராஜபக்ஷ பதிலளிக்கையில் இலங்கையில் தேர்தல் நடைபெறும் காலத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவது அரசியல் ரீதியில் மிக உணர்ச்சிபூர்வமாக அமையும் எனக் கூறினார்.
அத்துடன் இலங்கைத் துருப்புகளை வழங்கும்போது இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அல் கயீடா மற்றும் லக்ஷர் ஈ. ஐதபா போன்ற குழுக்களின் ஆத்திரத்தை ஈர்க்க நேரிடும் ஆபத்து குறித்தும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார் என அக் கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் சுதந்திரமான விசாரணை நடத்த பிரித்தானியப் பிரதமர் அழுத்தம்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக பொருத்தமான விசாரணைகள் நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றைய அமர்வில் உரையாற் றியபோதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

“கொமன்வெல்த் உலகில் மிகப் பெரியதொரு அமைப்பு. உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையையும், 6 கண்டங்களின் 54 நாடுகளையும் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பு.ஆனால் இந்த வலையமைப்புக்கு பலமான பெறுமானம் இருக்க வேண்டும்.மதிப்புவாய்ந்தவர்களின் குழுவின் அறிக்கை இந்தப் பெறுமானத்தை குறிப்பாக உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்.இது மிகவும் முக்கியமானது.

சிறிலங்கா அரசின் மனிதஉரிமை நிலைமை மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது.ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அங்கு கொமன்வெல்த் மாநாடு நடக்கப் போகிறது.தமிழ்ப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவின் ஆயுதப்படைகளால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.என்ன நடந்தது- என்னென்ன போர்க்குற்றங்கள் இடம்பெற்றன- யார் பொறுப்பு என்று கண்டறிய பொருத்தமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.“ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைவரினாலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்டத்திற்கு தமிழ் கூட்டமைப்பு இணங்க வேண்டும்!- ரணில்.
அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தீர்வுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
போஸ்னியாவில் அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது.
போஸ்னியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்திய செர்பியாவை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
போஸ்னியா நாட்டின் தலைநகர் சரஜிவோவில் அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வழியாக நீண்ட தாடியுடன் ஒரு நபர் நடந்து சென்றார்.
அப்போது அந்த நபர் திடீரென தூதரகத்தை நோக்கி கலாஷ்னிகோவ் வகையை சேர்ந்த தானியங்கி துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட ஆரம்பித்தார். அதை கவனித்த தூதரக பாதுகாப்பு பொலிசார் அதை எதிர்த்து சுட்டனர்.சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பொலிஸ்காரர் மற்றும் தானியங்கி துப்பாக்கியால் சுட்ட நபரும் காயமடைந்தனர். காயமடைந்து கீழே விழுந்த அந்த நபரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் செர்பியாவை சேர்ந்த மெவுல்தின் ஜசா ரெவிக்(23). இவர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
பிடல் காஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும்: கிளிண்டன்.
பிடல் காஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து கம்யூனிஸ நாடான கியூபா விடுதலை பெற வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுபேசிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: கியூபா விஷயத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ அதையே இப்போதும் கொண்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பிடல் காஸ்ட்ரோவின் பிடியில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்.கியூபாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று நினைக்கிறோம். அங்கு யாரெல்லாம் நேர்மறையான சீர்திருத்தம் அவசியம் என்று கருதுகிறார்களோ அவர்களுக்கு முழு ஆதரவை அளிக்க அமெரிக்கா தயாராவே உள்ளது.
கியூபா மக்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வதை அமெரிக்கா ஆதரிக்கும். இதுகுறித்து அந்நாட்டில் தனி நபர்களிடமும், குழுக்களிடமும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.கியூபாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உணவு, மருந்துப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறோம். இந்த உதவி வரும் காலத்திலும் தொடரும் என்றார் ஹிலாரி.
ஒருகாலத்தில் அமெரிக்கா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் நாடாக இருந்தது கரீபியன் நாடான கியூபா. ஆனால் பிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றதும் கியூபாவின் போக்கு மாறியது.
அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத நாடாக மாறியது. 1959-1976 வரை பிடல் காஸ்ட்ரோ பிரதமராக இருந்த போதும், 1976-2008-வரை அதிபராக இருந்த போதும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் காஸ்ட்ரோ.2008-ல் முதுமை, உடல்நிலை காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய காஸ்ட்ரோ, தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அமெரிக்காவிடம் பிடல் காஸ்ட்ரோ எப்படி நடந்து கொண்டாரோ அதே வழியைத்தான் ராவுல் காஸ்ட்ரோவும் பின்பற்றுகிறார்.இதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஜனநாயகம் தேவை என்று குரல் கொடுத்து காஸ்ட்ரோ சகோதரர்களுக்கு எதிராக கியூபா மக்களை கிளர்ந்தெழ வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. சூழ்ச்சி செய்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டு மக்கள் காஸ்ட்ரோ சகோதரர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அமெரிக்காவின் சூழ்ச்சிகள் எடுபடவில்லை.
இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் ஜேர்மனியில் இரட்டை நிலை.
ஜேர்மனிக்கு துருக்கியர் கூட்டமாக இடம் பெயர்ந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டதை இந்த வாரம் நினைவு கூறுகின்றனர்.ஐம்பதாண்டுகளாகியும் இவ்வாறு இடம்பெயர்ந்தோரை இரட்டைக் குடியுரிமை உடையவராகவே ஜேர்மன் அரசு வைத்திருக்கிறது. மார்க் யங் என்ற அமெரிக்கர் இந்த இரட்டைக் குடியுரிமை பற்றி தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அமெரிக்கரான மார்க் யங் ஜேர்மனிக்கு வந்து ஒரு ஜேர்மானியப் பெண்ணை மணந்தார். அவர்கட்கு ஒரு குழந்தையும் உண்டு. சுகாதாரக் காப்பீடு, தொலைக்காட்சி உரிமக் கட்டணம் போன்றவற்றை ஜேர்மானியரே கட்ட விரும்பாத போது மார்க் அவற்றில் ஈடுபாடு காட்டுகிறார்.
பதினான்கு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்த பிறகும், பெர்லின் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பிறகும் தன் அமெரிக்கக் கடவுச் சீட்டை இழக்க அவர் துணியவில்லை. இதைப்போல துருக்கியர் இங்கு வந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அப்படியேதான் இருந்து வருகின்றனர்.அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகள் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கின்றன. ஆனால் ஜேர்மனி மட்டும் இன்னும் பழைய கெடுபிடிகளை விட்டுத் தரவில்லை.
பழமைவாத ஜேர்மானிய அரசியல்வாதிகளும் பவேரியரும் துருக்கி மக்களையும், பிற நாட்டவரையும் ஜேர்மன் நாட்டுக் குடியுரிமை பெற அனுமதிக்கவில்லை.இதுவே பிரான்ஸ் நாட்டுக் குடிமகனாக இருந்தால் ஜேர்மானிய குடியுரிமை வழங்குவதில் அவர்களுக்குத் தடையில்லை. பிரான்ஸ் – ஜேர்மன் நட்புறவை வளர்க்க விரும்பி ஜேர்மானியர் தங்கள் பிரெஞ்சு நண்பர்களுக்குத் தாராளமாகக் குடியுரிமை வழங்கினர்.
2003 முதல் இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மற்ற ஐரோப்பிய நாட்டினருக்கு வழங்கப்படவில்லை.தாய், தந்தையர் வேற்று நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் குழந்தைகள் 23 வயது நிரம்பியவுடன் ஜேர்மானியராக வாழ விரும்பினால் அவர்கள் ஜேர்மானியக் குடியுரிமையைப் பெறலாம்.
அவர் தன் குடும்பப் பாரம்பரியத்தை இழந்து விடவேண்டும். மைய-இடது சோசலிசக் குடியரசுக் கட்சியும் பசுமைக்கட்சியும் இந்த இரட்டைக் குடியுரிமை நிலைக்கு ஒரு முடிவு கட்ட விரும்பியது. ஆனால் ஜேர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மார்க்கெலும் அவருடன் இருக்கும் பழமைவாதிகளும் இதனை ஆதரிக்கவில்லை.
முஷாரப்புக்கு எதிராக கைது வாரண்ட்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.2006ம் ஆண்டு பலுசிஸ்தான் தேசிய தலைவர் நவாப் அக்பர் பக்டி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் முன்னாள் பிரதமர் செளகத் அஜீஸ் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பலுசிஸ்தான் தேசிய தலைவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிபதி ஃபைசல் ஹமீதைக் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக மாகாண உள்துறை அமைச்சர் ஷோயிப் அகமது நோஷெர்வானியைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்குமாறு புலனாய்வு அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.வெளிநாட்டில் உள்ள முஷாரப்பை பாகிஸ்தானுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு பலுசிஸ்தான் மாகாண அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், இது தொடர்பாக கைது ஆணை தேவை என கோரியுள்ளனர். அதன் மூலம்தான் சர்வதேச பொலிசாரிடம்(இண்டர்போல்) முஷாரபை கைது செய்யுமாறு கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக அக்பர் பக்டியின் மூத்த மகன் நவாப்ஜதா ஜமீல் பக்டி, தேரா பக்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முஷாரப், அஜீஸ், முன்னாள் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமது கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் ஒவைஸ் அகமது கனி, முன்னாள் முதல்வர் ஜம் முகமது யூசுப் மற்றும் நோஷெர்வானி ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.2006-ம் ஆண்டு மார்ச் 30ம் திகதி எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையில் நவாப் அக்பர் பக்டியும் அவருடன் 30 ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சீனாவில் கைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 95 கோடி.
சீனாவில் 95 கோடி பேர் கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் கைத்தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன்படி செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 95 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைத்தொலைபேசி உபயோகிக்கின்றனர். இவர்களில் 1 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக  கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்கள் ஆவர்.
மேலும் 3ஜி கைத்தொலைபேசிகளை 1 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் பயன் படுத்துகின்றனர். இந்த தகவலை தொழில் மற்றும் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கைத்தொலைபேசி தவிர அகன்ற அலைவரிசை இணைய இணைப்பை 1 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆண்டு தோறும் 23 லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக இணைய இணைப்பு பெறுகின்றனர் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடாபியின் மகன் தலைமறைவு.
கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலைமை தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி லிபியாவிற்கு அருகில் உள்ள நட்பு நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்துள்ளார்.ICC என்னும் குற்றவியல் நீதிமன்றத்தின் மொரெனோ ஒகாம்போ கூறுகையில், சயீப் உடனே ஆஜராக வேண்டும் அல்லது அவர் எங்கிருந்தாலும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் கூட இடையில் தடுத்து நிறுத்தப்படுவார்.
தான் குற்றமற்றவர் என்பதை அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து நிரூபிக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நீதிபதிகள் முடிவு செய்தால் லிபியா அவரை ஏற்றுக்கொள்ளும் வரை அவர் வெளிநாட்டில் தங்க அனுமதி வழங்கப்படலாம் என்று கூறினார்.
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மறுசீரமைப்புக் குழுவினர் கூறுகையில், சயீப் லிபியாவுக்கும் நைஜருக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் துவாரெக் நாடோடிகளிடையே மறைந்து வாழ்கிறார் என்று கூறுகின்றனர்.சயீபின் நடமாட்டத்தை ICC கவனித்து வருவதாகவும் அவரை விமானப்பயணத்தின் போது தடுத்து கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அரசுத்தரப்பில் சொல்லப்படுகிறது.
நீதிமன்றத்தில் சரணடைவதே சயீப்பிற்கு ஒரே வழி என்று ICC வலியுறுத்தியுள்ளது. லிபியாவுக்கு தெற்கே உள்ள நைஜர், மாலி, சாட், புர்கினா ஃபாசோ போன்ற வறண்ட நாடுகள் அனைத்தும் சர்வதேச குற்றவியல் மன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. மனித உரிமைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு நீதி வழங்குகின்ற நிரந்தரமான சர்வதேச அமைப்பாக இந்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
ICC தனது காவல் துறையின் உதவியோடு அண்டை நாடுகளின் காவல் படைகளையும் இணைத்து சயீப்பைப் பிடிக்க முயன்று வருகிறது. அண்டை நாடுகளின் காவல்படை என்பது இங்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் படைகளைக் குறிக்காது.
தேசிய மாற்றக் கவுன்சில் படையினருக்கு நேர்மாறாக பாலைவனப் பழங்குடியினர் சயீப்புக்கு புகலிடம் தருவதை நன்றிக்கடனாகக் கருதுகின்றனர். நைஜர் அரசு சர்வதேச குற்றவியல் மன்றத்துக்குச் சவால் விடுத்துள்ளது.வடக்கு நைஜர் பகுதியில் உள்ள அகாடெஸ் என்ற இடத்தில் வாழும் மவுதூர் பர்கா என்பவர், ”சயீப்பை நாங்கள் எங்கு வேண்டுமானாலும் ஒளித்து வைப்போம். அவரை யாரிடமும் ஒப்படைக்க மாட்டோம். சர்வதேச சமூகம் அவரை விட்டு விலகி நிற்க வேண்டும் அல்லது அவருக்காக நாங்கள் தெருவில் இறங்கிப் போராடுவோம்” என்றார் ஆவேசமாக.
கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்.
கனடாவில் ஓகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே சந்தைப் போக்கில் மந்த நிலை ஏற்பட்டதால் வேலைவாய்ப்புகள் குறைந்தன.நகர்ப்பகுதிகளில் 26 பேருக்குக் கிடைத்த வேலை இப்போது 17 பேருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. மற்றவர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
கான்ஃபிரன்ஸ் போர்டு எடுத்த வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களின் படி இனிவரும் மாதங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த ஆண்டு கனடாவில் தொழிலாளர் சந்தை வலுவாக இருந்தாலும் உலகப் பொருளாதாரம் குறிப்பாக யூரோ பிரச்னை தமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை என்று ஆலன் அர்காண்ட் என்ற பொருளியல் நிபுணர் குறிப்பிட்டார்.
மேலும் பலர் இனி மூன்று மாதங்களுக்கு நாட்டில் பொருளாதாரத் தடை ஏற்படும் சூழல் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். வங்கியின் நான்காம் காலாண்டு அறிக்கையில் 8 சதவீதம் மட்டுமே முன்னேற்றம் காணப்படும். மூன்றாம் காலாண்டு அறிக்கையில் 2 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்டது. இது இனி குறையும்.
கனடாவின் புள்ளியியல் துறை ஓக்டோபர் மாதத்திற்கான வேலைகள் அறிக்கையை வரும் வெள்ளியன்று சமர்ப்பிக்கும் என தெரிகிறது. அறிஞர்கள் செப்டம்பர் மாதத்தை விட சற்று கூடுதலான வளர்ச்சி இந்த மாதம் தென்படும் என்று கருதுகின்றனர். இந்த வாரம் ஐரோப்பாவில் யூரோ மண்டல நெருக்கடிக்கான தீர்வுகள் முன்மொழியப்பட்டதனால் இனிமேல் நெருக்கடிகளின் அச்சுறுத்தல் இருக்காது.
சந்தையின் நிலை சங்கடத்துக்குரியதாக இருந்தாலும் இன்னும் சில மாதங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது என்று மொன்றியல் வங்கியின் பெஞ்சமின் ரேயிட்சஸ் கூறுகிறார். இந்த நிலை நெருக்கடி முடிவுக்கு வரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
குறைந்தபட்சம் இன்னொரு மோசமான பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்பாக ஐரோப்பா தன்னை பொருளாதார ரீதியாக இப்போது வலுப்படுத்திக்கொள்ளும். யூரோ மண்டலப் பிரச்னையால் கனடா பெரிய அளவில் பாதிப்படையாது.
2011ல் 1.9 சதவீதம், 2013ல் 2.9 சதவீதம் என்று கனடாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். தனியார் துறைகளும் ஓரளவு வளர்ச்சி பெறும் பெரிய நஷ்டம் இருக்காது.
டேவிட் மதானி என்ற தலைமைப் பொருளியல் அறிஞர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.5 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என்றார்.கனடாவில் தற்போது வேலை வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் அடுத்த மூன்று மாதத்திற்குள் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். பொருளாதார நிலையிலும் ஐரோப்பாவைப் போல பெரிய வீழ்ச்சி ஏற்படாது என்பது பொருளியலாளரின் கருத்தாகும்.
தாடியை எடுக்க மறுத்த சீக்கியருக்கு மீண்டும் வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவு.
தாடியை ஷேவ் செய்ய மறுத்ததால் சீக்கியருக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அவருக்கு வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் சீக்கியர்கள் தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது.
பள்ளிகளிலும் சீக்கிய குழந்தைகள் பல பிரச்னைகளை சந்திக்கின்றன. இனப் பாகுபாடு காட்டுவதாக சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நேரங்களில் அவர்களை தீவிரவாதிகள் என்ற சந்தேகப்பட்டு கடும் சோதனை செய்கின்றனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் திரிலோச்சன் சிங்(63). இவர் கலிபோர்னியா சிறை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தார். பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று கடைசி கட்டத்தை எட்டினார்.
கடைசியாக உடல் தேர்வின் போது சிறப்பு மாஸ்க் அணிய வேண்டி இருப்பதால் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த திரிலோச்சன் தனது மத நம்பிக்கை அதற்கு அனுமதிக்காது என்று தெரிவித்தார். இதனால் அவருக்கு வேலை வழங்க “சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு துறை” மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திரிலோச்சன் சார்பில் வக்கீல் ஹர்மீத் கே.தில்லான் வாதாடினார். இந்த வழக்கில் திரிலோச்சனுக்கும் மறுவாழ்வுத் துறைக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.
திரிலோச்சனுக்கு வேலை வழங்கவும், கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கு வேலை வழங்க மறுத்ததால் அபராதமாக 3 லட்சம் டாலர் நஷ்டஈடு வழங்கவும் ஒப்புக் கொண்டது.
மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 21 பேர் பலி.
மெக்சிகோவில் பொலிசாருக்கும், போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.மெக்சிகோவின் மேற்கு மாநிலத்தில் நடைபெற்ற மூன்று மோதல் சம்பவங்களில் குறைந்தது 15 பேர் இறந்திருக்கலாம் என்று அம்மாநில செய்தி தொடர்பாளரும் அரசு வக்கிலுமான ஜொனாதன் அரேன்டான்டோ தெரிவித்தார்.
போதை மருந்து கும்பலுக்கும், அரசு தரப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் போதை மருந்து கும்பலை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாயினர் மேலும் வேறு இரு தாக்குதலின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
8000 கி.மீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.
அணு ஆயுதங்களைத் தாங்கி 8,000 கி.மீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது.ரஷ்யாவின் புலாவா ஏவுகணை 37 டன் எடை கொண்டது. கண்டத்துக்குள் 8,000 கி.மீ தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடியது.
ரஷ்யாவின் வடதுருவத்தில் உள்ள வெள்ளைக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “யூரி டோல்கோருக்கி” என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 6,000 கி.மீ தூரம் உள்ள ரஷ்யாவின் கிழக்கு ஓரத்தின் கமசட்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கியது.
புலாவா ஏவுகணை ஏற்கனவே நடந்த 17 பரிசோதனைகளில் ஏழு முறை தோல்வி அடைந்ததால் அதை உபயோகிக்க முடியவில்லை. தற்போது குறைகளை நீக்கி நடந்த இந்த பரிசோதனை வெற்றியடைந்துள்ளதால் ரஷ்ய ராணுவத்தில் விரைவில் சேர்க்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருநாட்டில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது.
பெருநாட்டில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் இடிந்தன. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பெருநாட்டில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள பல நகரங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் சில வினாடிகள் தொடர்ந்தது. இதனால் லிமா, இகா ஆகிய நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. மின்சாரம் மற்றும் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.எனவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். கட்டிடங்கள் இடிந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லிமா நகரின் தென்கிழக்கே 35 கி.மீட்டர் தூரத்தில் இது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லிமா, இகா தவிர கல்கோ, அரிகுபா, அயாகுகோ உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது.
கடலில் உயரமான அலைகள் எழும்பின. எனவே, சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.பெருநாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு இகா மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 600 பேர் பலியாகினர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெருநாடு நிலநடுக்க அபாயத்தில் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை இங்கு 140 தடவை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவுடன் நட்பு பாராட்டும் பாகிஸ்தான்: அமெரிக்கா தகவல்.
பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான உறவுகள் சீர்கேடு அடையத் துவங்கிய பின் சீனாவிடம் பாகிஸ்தான் அதிக நட்புரிமை பாராட்டி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பர் 13ம் திகதி நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின் ஹக்கானி குழுவை மையமாக வைத்து அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான வார்த்தைப் போர் கடுமையானது. தொடர்ந்து இருதரப்பு உறவுகள் பதட்டத்தை எட்டின. அதேநேரம் பாகிஸ்தான் சீனாவிடம் நெருங்கிச் செல்லத் துவங்கியது.
இதுகுறித்து அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய, அமெரிக்க உறவு சமீப காலமாக மேலும் வலுப்பட்டு வருகிறது.
அதேநேரம் பாகிஸ்தான் அமெரிக்க உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ளது. அதனால் பாகிஸ்தான் சீனாவிடம் அதிக நட்புரிமை பாராட்டி வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.சீனா தான் சர்வதேச அரங்கில் தனது நம்பிக்கையான கூட்டாளி என்ற பாகிஸ்தானின் நம்பிக்கை ஒசாமா பின்லேடன் கொலைக்குப் பின் அதிகரித்துள்ளது.
சீனாவுடனான நெருக்கம் குறித்து இந்தாண்டில் பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிகளவில் வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் சமீபத்திய சீன பயணத்துக்குப் பின் பாகிஸ்தானின் இறைமையை மேற்கு மதிக்க வேண்டும் என சீனா கூறியது.
ஜே.எப்.-17 ரக போர் விமானங்களில் 50 விமானங்களை பாகிஸ்தானுக்கு டெலிவரி செய்வதில் சீனா கடும் தீவிரம் காட்டி வருகிறது. மூன்று பில்லியன் டொலர் மதிப்பிலான ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சீனாவிடம் பாகிஸ்தான் ஆர்டர் கொடுத்துள்ளது.
சிரியாவில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி.
சிரியாவில் அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிபருக்கு எதிராக நடந்த பேரிணியில் கலந்து கொண்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணையதள இணைப்பையும் துண்டித்துள்ளதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்க முடிவு.
பிரிட்டன் அரச குடும்பத்தில் அரியணை ஏற்பதில் பெண்ணுக்கும் சம உரிமை அளித்து சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.இதையடுத்து இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் ஜோடிக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தால அவர்தான் அடுத்த தலைமை பொறுப்பேற்பார்.
பிரிட்டன் அரச குடும்பத்தில் தலைமை பொறுப்பு வகிப்பவர்தான் காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உள்ள 16 நாடுகளின் தலைவராக இருப்பது வழக்கம். இப்போது ராணி இரண்டாம் எலிசபெத் தலைமை வகிக்கிறார்.
பிரிட்டன் மட்டுமின்றி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜமைக்கா, ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ், பெலிஸ், பப்வா நியூ கினியா, கிறிஸ்டோபர் மற்றும் நெவிஸ், வின்சென்ட் மற்றும் கிரானடைன்ஸ், துவாலு, பார்படாஸ், கிரானடா, சாலமன் தீவு, செயின்ட் லுசியா, பகாமாஸ் ஆகியவை அந்த 16 நாடுகளுக்கு அவர்தான் தலைவர். எனினும் காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 16 நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அரச குடும்ப வாரிசு சட்டத்தின்படி மன்னர் வம்சத்தில் முதலில் பிறக்கும் ஆணுக்கு மட்டுமே அரியணை ஏறும் உரிமை என்று இருந்தது.ஆண் வாரிசு இல்லாத நிலையில் மட்டுமே பெண் அந்த பதவிக்கு வரலாம். உதாரணம் இப்போது ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத். அவரது தந்தை 6ம் ஜார்ஜுக்கு ஆண் வாரிசு இல்லை.
இந்த சட்டத்தை மாற்ற ஏற்கனவே எம்.பி.க்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாக எடுத்த 11 முயற்சிகள் பலிக்கவில்லை. இப்போது பெர்த் மாநாட்டில் அது சாத்தியமானது. இதற்காக பெர்த் நகரில் நடந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா உட்பட காமன்வெல்த் 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அரச குடும்ப வம்சத்தில் பிறக்கும் முதல் வாரிசு பெண்ணாக இருந்தாலும் அவர்தான் பட்டம் ஏற்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க, பெண்ணுக்கு சம உரிமை அளிக்கும் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்றியது. இது இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் ஜோடியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்துக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவரை மணந்தால் வாரிசுக்கு அரியணை ஏறும் வாய்ப்பு இல்லை என்று விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரச குடும்பத்தை தலைவராக கொண்ட 16 நாடுகள் இணைந்து இந்த மாற்றத்தை செய்துள்ளதால் அது விரைவில் சட்டமாகிறது. ராணி எலிசபெத் அடுத்த ஆண்டு வைர விழா கொண்டாட இருக்கும் நிலையில் அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம் ஆகிய இருவரும் மன்னர் பதவிக்கு ஏற்கனவே காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் பிரான்ஸில் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால் சில நாட்களுக்கு மட்டும் விமானப் போக்குவரத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளது.முதலில் 20 சதவீதம் நிறுத்தம் மட்டுமே இருக்கும் என அறிவித்த ஏர் பிரான்ஸ் இப்போது கடைசி நிமிடத்தில் சில விமானங்கள் தடை செய்யப்படலாம் என அறிவித்துள்ளது. இந்த விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பணியாளரின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும், நடுத்தர விமானங்களின் எண்ணிக்கையை நான்கில் இருந்து இரண்டாகக் குறைப்பதாலும் தங்கள் பணிப்பாதுகாப்புக்கு அச்சம் விளைவிப்பதாக இச்செயற்பாடுகள் உள்ளன என்று பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் தியர்ரி மரியாணி நிறுவனம் நஷ்டத்தில் நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்னை ஜான் சிரில் ஸ்பினட்டா பியரி, ஹென்றி கோர்ஜியனுக்குப் பதிலாக பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்டுள்ளது.2007ல் ஏர் பிரான்சில் மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடந்த போது ஸ்பினெட்டா வேளாண்மை இயக்குநராக இருந்தார். அப்போது வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கையைத் தவறாக எடைபோட்டு விட்டார்.
பணியாளருடன் ஸ்பினெட்டாவுக்கு இணக்கமாக உறவு எப்போதும் இல்லை. இப்போது விடுமுறை நாட்களில் விமானங்களை நிறுத்தி வைத்தது வாடிக்கையாளருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
தாவர எண்ணெயில் இயங்கும் விமானம்: சீன நிறுவனம் சாதனை.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் சீனாவில் முதன் முறையாக தாவர எண்ணெயில் இயங்கும் விமான சேவை நேற்று பரிசோதிக்கப்பட்டது.
பூமி வெப்பமாவதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக விமானங்களுக்கு தாவர எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவும் இணைந்து ஆல்கா அல்லது ஜட்ரோபா கொட்டையிலிருந்து தாவர எரிபொருள் கண்டுபிடிப்ப தற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக தாவர எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதை போயிங் 747 விமானத்தில் பயன்படுத்தி நேற்று இயக்கப்பட்டது. பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் இரண்டு மணி நேரம் வெற்றிகரமாக இயங்கியது.
தாவர எரிபொருளில் விமானம் இயங்கியது சீன விமானத் துறையில் ஒரு மைல் கல் ஆகும். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் விமானங்களில் தாவர எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியும் என ஏர் சீனா துணைத் தலைவர் ஹி லி தெரிவித்துள்ளார்.
வான்கூவரில் விமான விபத்து: 9 பேர் காயம்.
வான்கூவர் சர்வதேச விமானநிலையத்தின் ஓடுதளத்தில் ஒரு விமானம் மோதி தீ பிடித்து எறிந்ததில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தோரில் ஐந்து பேர் வான்கூவரில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்ற நால்வரும் ரிச்மாண்டில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்பது பேரை ஏற்றிச் செல்லும் பீச்கிராஃப்ட் ஏர் 100 என்ற சிறிய ரக விமானம் கெலோனா என்ற ஊருக்குப் பறந்தது. அங்கிருந்து வான்கூவர் திரும்பிவந்த போது ஓடுதளத்தில் மோதி மாலை 4 மணியளவில் தீப்பிடித்தது.
தீயணைப்புப் படையினரும் மருத்துவ உதவியாளரும் உடனே அவ்விடத்திற்கு விரைந்தனர். விமானத்தின் வால்பகுதி அதன் உடல்பகுதியில் இருந்து திரும்பி நின்றது.விபத்துக்குள்ளான இந்த விமானம் நார்தன் தண்டர்பெடு ஏர் நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் 1971இல் தோன்றியது. Thunderbird மற்றும் Northern Mountain Airlines ஆகியன இணைந்து உருவாக்கிய நிறுவனம் Northern Thunderbird ஆகும். இந்த நிறுவனத்திற்கு 11 விமானங்களும் 70 பணியாளரும் உள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம்: நான்கு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்.
துருக்கியில் கடந்த 23ந் திகதி தென்கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் வான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.வான்எர்சிஸ் ஆகிய 2 நகரங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முற்றிலும் அழிந்தன. சுமார் 1000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 523 பேர் உயிரிழந்தனர். 1600 பேர் காயம் அடைந்தனர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.இடுபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்கள் இதுவரை 185 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களை இடிபாடுகளை அகற்றி தேடி வருகின்றனர்.
அது போன்று சிரிசிஸ் நகரில் ஒரு கட்டிட இடிபாடுகளை நேற்று அகற்றினர். அப்போது உள்ளே சுமார் 13 வயது மதிக்கதக்க சிறுவன் சிக்கி தவிப்பதை பார்த்தனர்.பின்னர் அவனை அங்கிருந்து பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். அவன் நிலநடுக்கம் ஏற்பட்ட 108 மணி நேரத்துக்கு பிறகு அதாவது 4 நாட்களுக்குபின் இடிபாட்டில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டான். அவனது பெயர் பெர்ஹாட் தோகே.
உணவு மற்றும் தண்ணீர் இன்றி படுகாயத்துடன் மயங்கி கிடந்த அவன் ஆம்புலன்ஸ் மூலம் சாக்ரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.துருக்கியில் தற்போது மழை பெய்கிறது. மேலும் பனியும் கொட்டுகிறது. அதனால் மீட்பு பணி மந்தம் அடைந்துள்ளது.
ஜேர்மன் செயற்கைகோள் வங்கக் கடலில் விழுந்தது: விண்வெளி முகமை தெரிவிப்பு.
செயலிழந்து போன ரோசாட் விண்கலம் வங்கக் கடலில் விழுந்து விட்டதாக DLR என்ற ஜேர்மன் விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை கிரீன்விச் மெரிடியின் நேரப்படி 1.50க்கு ரோசாட் விண்கலம் கடலில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு விழுந்ததில் 1.6 டன் எடையுள்ள விண்கலச் சிதைவுகள் கடலில் மூழ்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது.
விண்கலம் புறப்பட்ட போது இருந்த எடையில் பாதியளவு திரும்பி வந்து விட்டது. ரோசாட் விழுந்த இடத்துக்கு அருகில் வடகிழக்குத் திசையில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் சோங்கிங் மற்றும் செங்கு என்ற சீன நகரங்கள் இருந்தன.
ரோசாட் விழுந்ததில் இந்த நகரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவரை திரும்பிவந்த எந்த விண்கலமும் ரோசாட் அளவுக்கு எடையுள்ளதாகத் திரும்பி வரவில்லை. எனவே இதனை விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தனர்.ரோசாட் விண்கலம் 1990இல் வான்வெளியில் எக்ஸ்ரே எடுக்க அனுப்பப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. பிரபஞ்சத்தின் மிக மிக வெப்பமான பகுதிகளை எக்ஸ்ரே எடுத்து அனுப்பியது.
கருங்குழிகளின் ஓரப்பகுதி மற்றும் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள பகுதி போன்றவற்றையும் எக்ஸ்ரே எடுத்தது. 1999 வரை இந்த செயற்கைகோளானது செயல்பட்டது. பிறகு இதன் செயல்பாடு முடங்கியது. இதில் பெரிய பிம்பக் கண்ணாடி ஒன்று இருந்தது. இந்தக் கண்ணாடி மட்டுமே ஏறத்தாழ முப்பது துண்டுகளாக விழுந்து சிதறியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
செயின்ட் பால் கேத்ரீடல் தேவாலயம் மீண்டும் திறப்பு.
செயின்ட் பால் தேவாலயம் ஒரு வார காலத்திற்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. தேவாலயத்தின் சுற்றுப்புறத்தில் முகாமிட்டுள்ள எதிர்ப்பாளர்களால் ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் மூடப்பட்டது.சர்ச்சின் சேவை நேரம் 12:30 BSTல் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் மண்டபங்களும், நீண்ட தாழ்வாரங்களும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன.
லண்டன் எதிர்ப்புக் குழுவின் ஆதரவாளர்கள் தங்கியிருந்த குடிசைகள் மூடப்பட்டன. முன்னாள் பிசப் பான்டர்பர் ஜார்ஜ் காரே கூறுகையில், இந்த சூழ்நிலையானது திடீரென்று ஏற்பட்ட மாற்றம் என்றார்.
கெயின்ட்பால்ஸின் முதல்வர் கிலஸ் ப்ராசர், தன் வேலையை வியாழன் அன்று ராஜினாமா செய்தார். தேவாலயமானது எதிர்ப்பாளர்களை பலவந்தமாக வெளியேற்றும் சூழ்நிலையில் உள்ளது என்றார்.
லண்டன் கார்ப்பரேசன் கமிட்டியானது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்தது. சர்ச் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களிடம் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறினர்.
செயின்ட் பால் தேவாலயம் அதன் வேலைப்பாடுகளில் எந்தவொரு மாற்றம் செய்யாமலேயே மீண்டும் திறக்கப்பட்டது. லார்டு காரே என்பவர் நற்பெயர் கொண்ட கிறிஸ்தவ மதத்தினரை இச்செயல் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார். மேலும் எப்படி சர்ச்சின் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களை சமாளித்தனர் எனவும் வினவினார்.
சுதந்திர தேவி சிலையின் 125வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்.
அமெரிக்கா என்றதும் ஞாபகம் வரும் நினைவுச் சின்னம் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலை. இந்த சிலை நிறுவப்பட்டு இன்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 1886ம் ஆண்டு அக்டோபர் 28ம் திகதி அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மக்கள் வழங்கிய பரிசுதான் சுதந்திர தேவி சிலை.
சிலையை வடிவமைக்கும் பணி பாரீசில் தொடங்கி 9 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. 1884ம் ஆண்டு சிலை உருவாக்கி முடிக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் பிரான்ஸ் சிற்ப கலைஞர் பிரட்ரிக் அகஸ்தே பார்தோல்டி.
இவர் தனது தாயின் முகத்தை மொடலாக வைத்து இந்த சிலையை உருவாக்கி உள்ளார். பின்னர் இவரே அமெரிக்கா சென்று சிலையை எந்த இடத்தில் வைப்பது என்று அப்போதைய அமெரிக்க அரசுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நியூயார்க் துறைமுகம் அருகில் உள்ள தீவில் வைக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த சிலை சர்வதேச சுதந்திரம், ஜனநாயகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் லிபர்டி தீவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை காண உலகின் பல நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2001 ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய பின், சுதந்திர தேவி சிலையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், சிலையை சுற்றிப்பார்க்க 2004-ல் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சிலை நிறுவப்பட்டு இன்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலையை நிர்வகித்து வரும் தேசிய பூங்கா அமைப்பு, சிலைக்குள் உள்ள படிக்கட்டுகளை புனரமைக்க உள்ளது. இதற்காக நாளை முதல் சிலை மூடப்படுகிறது. எனினும் லிபர்டி தீவை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
சிலையின் சிறப்பு அம்சங்கள்:
1. சிலையின் கிரீடத்தில் 7 முட்கள் உள்ளன. இவை சிலையை சுற்றி உள்ள 7 கடல்களை குறிக்கின்றன. கிரீடத்தில் 25 ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன.
2. சுதந்திர தேவியின் இடது கையில் விடுதலை பெற்றதற்கான பத்திரமும், வலது கையில் சுதந்திர தீபமும் உள்ளது.
3. சிலையை உருவாக்க ஸ்டீல் பிரேம் வடிவமைத்தவர் பிரான்ஸ் இன்ஜினியர் குஸ்டாவ் ஈபிள். இவர்தான் பின்னாளில் ஈபிள் டவரையும் வடிவமைத்தார்.
4. கடும் புயல், சூறாவளியையும் தாங்கும் வகையில் இரும்பு, செம்பு போன்றவற்றை பயன்படுத்தி சுதந்திர தேவி உருவாக்கப்பட்டுள்ளது.
5. சிலையின் உயரம் 151 அடி. பீடத்துடன் சேர்த்தால் 305 அடி. சிலைக்குள் 354 படிக்கட்டுகள் உள்ளன. அதன் மூலம் சிலையில் உச்சியில் உள்ள கிரீடம் வரை சென்று நியூயார்க் நகரின் அழகை ரசிக்கலாம்.
6. சுதந்திர தேவியின் 2 கண்களுக்கு இடையில் உள்ள தூரம் 2.5 அடி. சிலையின் மூக்கு 4.5 அடி. வாய் 3 அடி.
7. இவ்வளவு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட சுதந்திர தேவி சிலையின் மொத்த எடை 225 டன். இதில் 100 டன் செம்பு, இரும்பு, மற்ற கட்டுமானப் பொருட்கள் அடங்கும்.
காமன்வெல்த் அமைப்பின் 21வது மாநாடு: ராணி எலிசபெத் தொடங்கி வைத்தார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் விடுபட்ட இந்தியா, அவுஸ்திரேலியா உள்பட 54 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்பின் 21வது மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் மாநாட்டு அரங்குக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு முன்னும், பின்னும் மோட்டார் சைக்கிளில் வீரர்கள் அணிவகுத்து சென்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடியிருந்து கொடிகளை அடைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இன்றைய மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் பெண்கள் பிரச்சினை பற்றி பேசப்படுகிறது. இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி அமித் அன்சாரி இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
இதுவரை காமன் வெல்த் அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்த டிரினிடாட் பிரதமர் பிச்சஸ்சர் புதிய தலைவரான அவுஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட்யிடம் இடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்: புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு.
லிபியாவில் சர்வாதிகாரி கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.லிபியாவில் 42 ஆண்டாக சர்வாதிகார ஆட்சி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த அதிபர் கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி லிபிய மாற்று அரசு கவுன்சிலை ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் உயிருடன் பிடிபட்ட கடாபியை கொன்றது ஏன் என்று சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில் கடாபியை கொன்றவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மாற்று கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், கடாபியை உயிருடன் பிடித்து வராமல் கொன்றவர்கள் மீது லிபிய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.
கடாபி கொலை பற்றி ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டோம். போர் குற்றவாளிகளை எப்படி நடத்துவது என்பதற்கான நடத்தை விதிமுறைகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனினும் கடாபியை கொன்றது தனிப்பட்ட செயல். இதில் புரட்சிப் படையினருக்கோ அல்லது லிபிய தேசிய ராணுவத்துக்கோ தொடர்பில்லை என்றனர்.
மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டக் கூடாது: பெனடிக்ட்.
அவரவர் மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது என்று போப் பதினாறாம் பெனடிக்ட் பேசியுள்ளார்.வியாழக்கிழமை பல்வேறு மதத்தினரின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார். இம்மாநாட்டில் ஹிந்து, ஜைன, பெளத்த, இஸ்லாமிய, சீக்கிய உள்ளிட்ட மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டங்களின் பழமையான நம்பிக்கைகளின் தலைவர்களும் இதில் பங்கு பெற்றனர்.13ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அஸிஸியின் நினைவாக இம்மாநாடு நடந்தது. உலக அமைதி, நீதி இவற்றுக்கான பிரார்த்தனைக்காக இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
யூரோ மண்டலப் பிரச்னை: சீனாவின் உதவியை நாடும் ஐரோப்பிய அமைப்பு.
யூரோ மண்டலம் மற்றும் கிரீஸ் கடன் நெருக்கடி குறித்து முக்கியமான தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் தற்போதைய நிதியை அதிகரிப்பதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது.யூரோ மண்டல கடன் நெருக்கடி குறித்து கடந்த 26ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் 27 நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
1. கிரீசின் கடன் பத்திரங்களை வாங்கிய ஐரோப்பாவின் தனியார் வங்கிகள் தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும்.
2. ஐரோப்பிய வங்கிகள் இந்த கடன் நெருக்கடி பரவலால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அவற்றின் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
3. ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின்(இ.எப்.எஸ்.எப்) தற்போதைய நிதியான 440 பில்லியன் யூரோ என்பது ஒரு டிரில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் இ.எப்.எஸ்.எப்.பின் நிதியை அதிகரிப்பதற்கு சீனாவின் உதவியை அந்த அமைப்பு நாடியுள்ளது. அமைப்பின் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் இதுகுறித்து நேற்று சீனத் தலைவர்களுடன் பேசினார்.
குறைந்தபட்சம் 70 பில்லியன் யூரோ தொகையையாவது சீனா இ.எப்.எஸ்.எப்.பில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தான் கொடுக்கும் தொகைக்கு உறுதியான உத்தரவாதங்களை சீனா கேட்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF