Friday, October 14, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை வரவுசெலவுத்திட்டம் 2012!- பாதுகாப்புக்கே அதிக நிதி! 22,994 கோடி ரூபா ஒதுக்கீடு.

எதிர்வரும் ஆண்டுக்கான உத்தேச வரவு, செலவுத்திட்டத்தில் வழமைபோல ஆகக் கூடிய தொகையான நிதி ஒதுக்கீடாகப் பாதுகாப்பு அமைச்சுக்கு 22,994 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்த அதிகூடிய தொகையாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச் சுக்கு 14,456 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கென 12,977 கோடி ரூபாவும்,பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கென 11,362 கோடி ரூபாவும்,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கென 10,457 கோடி ரூபாவும்,நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக் கென 12,421 கோடி ரூபாவும்,சுகாதார அமைச்சுக்கென 7,399 கோடி ரூபாவும், கல்வி அமைச்சுக்கென 3,326 கோடி ரூபாவும்
ஒதுக்கப்பட்டுள்ளன.அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவு, செலவுத்திட்ட சட்ட நகல் அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அது எதிர்வரும் 18ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்படி அடுத்த நிதியாண்டில் அரசின் மொத்தச் செலவீனம் 2,22,000 கோடி ரூபாவாகவும் அரசின் மொத்த வருமானம் 1,11,500 கோடி ரூபாவாகவும் அமையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சஜித் ஆதரவாளர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரினதும் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு புறம்பாக இருவரும் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்சி ஒன்றில் அங்கம் வகித்தால் பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒட்டுமொத்த தீர்மானங்களுக்கு புறம்பாக ஏதேச்சையாக நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை மேயர் பதவிக்காக சிராஸ் மீராசாஹிப் தெரிவு!- ரவூப் ஹக்கீம் அறிவிப்பு.

கல்முனை மேயர் பதவிக்காக சிராஸ் மீராசாஹிப் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
மாநகரசபையின் பிரதி மேயராக நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலுக்காக போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நிசாம் காரியப்பர் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும், தேர்தலில் சிராஸ் மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
மேயர் பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவர் கூடுதலான விருப்பு வாக்கு பெற்றவருக்கு மேயர் பதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு சிராஸ் மேயராக பதவி வகிப்பார் எனவும், பின்னர் அந்தப் பதவி நிசாமிற்கு வழங்கவும் இணக்கம் காணப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பட்ஜட்டின் பின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்.

இவ்வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைத் தீர்;வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் பின் பிரஸ்தாப நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அக்குழுவானது எதிர்வரும் 2013ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை செயற்படும் என்றும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த புதிய நாடாளுமன்ற தெரிவுக்குழு வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வுகளை சிபாரிசு செய்யும் வகையில் புதிய பணிப்புரையுடன் கூடியதாக நியமிக்கப்படுமென கூறப்படுகின்றது.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மார்ச் மாதம் வரை இழுத்தடிக்கும் திட்டமே இந்த புதிய நாடாளுமன்ற தெரிவுக்குழு திட்டம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முன்னைய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வழங்கப்பட்ட பணிப்புரையை அரசியல், அரசியல் சட்டம் தொடர்பில் அறிக்கையளித்து உரிய சிபாரிசுகளை வழங்கக் கூடியவாறு மாற்றியமைக்குமாறு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக கொடுத்த அறிவித்தலை தொடர்ந்தே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சகல மக்களும் தமது அடையாளங்களை பாதுகாத்து முன்னெடுப்பதை ஒரு தேசத்தவராக பாதுகாப்புடன் கௌரவமாக வாழ்வதை, இலங்கை மக்களின் ஐக்கியத்தை வளர்த்து சமூக, பொருளாதார, அரசியல், கலாசார அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதை உறுதி செய்வதற்கு ஆறுமாத காலத்தினுள் உரிய அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை செய்வதற்கென நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமென இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றதென இந்த பிரேரணையில் கூறபப்ட்டுள்ளது.
இந்தப்பிரேரணை அடுத்த நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதென சபைத் முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இந்த பிரேரணைக்கான அறிவித்தலில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, பசில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்சன யாப்பா, டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பி.பியசேன, டி.பி.ஏக்கநாயக்க, எம்.பி.ரஜீவ விஜேசிங்க, ஆறுமுகம் தொண்டமான், திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை முன்னைய பணிப்புரையில் யாப்புக்கான வழிகாட்டல் சட்டம் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. புதியதாக அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் இது கூறப்பட்டுள்ளது ஒரு முற்போக்கான நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ பிரேமச்சந்திரன் கூறினார்.இதுவரை அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் குறைந்தபட்சம் நடைமுறைச்சாத்தியமான கோரிக்கைகள் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதெனவும் அவர் கூறினார்.
கொழும்பின் அதிகாரத்தை கோத்தபாயவின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம.

கொழும்பின் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அதனை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு, மாநகர சபைத் தேர்தலில் தமது கட்சி தோல்வியடைந்ததற்காக நாம் அபிவிருத்தி அதிகார சபையைத் தோற்றுவிக்கவுள்ளோம் என்று எவரும் கருதக் கூடாது.அந்த நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதல்ல. கொழும்பின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தினால் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறியுள்ளார்.
பாரதவின் கொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு: அமைச்சர் வாசுதேவ.

பாரத லக்ஷ்மன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாதுகாப்பு செயலர் நந்தசேன கோத்தபாய ராஜபக்‌ச முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது.ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரினால்கூட நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இல்லை என்பது பாரதூரமான விடயம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அங்கிருந்த அரசாங்கத்தின் பிரதானிகள் சிலருடன் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் கருத்தை அங்கிருந்த அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வாவின் முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கெதிராக ஆளும் கட்சியினர் கடுமையாக குரல்கொடுக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நான்கு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெருமளவான போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து கடல்வழிஊடாக சிறீலங்காவிற்கு கடத்தமுயன்ற நால்வரை கற்பிட்டி கடற்பரப்பில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சா, மற்றும் சிறு கஞ்சா பைக்கற்றுக்கள் பல சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் கற்பிட்டி,கடவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் : சீனா.

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுப்படுத்த சீனா உறுதியளித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் இராணுவத்தின் தூதுக்குழுவே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியவை சந்தித்தபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கை விடுக்கப்பட்டால் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகள், மற்றும் மேம்படுத்தல் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று சீன இராணுவத்தூதுக்குழு தெரிவித்துள்ளது.சீனாவில் உள்ள இராணுவக் கல்லூரியில் அதிகளவு இலங்கைப் படையினரை உள்ளீர்ப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டதை விடவும் அதிக பாதுகாப்பு துமிந்த'விற்கு வழங்கப்பட்டுள்ளது!- சரத் பொன்சேகா.

இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு வழங்கப்படாத பாதுகாப்பு துமிந்த சில்வாவிற்கு கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தருணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விடவும் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொன்ற நபருக்கு தற்போது அரசாங்கம் கூடுதலான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் மூளையில் சேதம் : கண் பார்வை இயல்பு.

முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முக்கிய உறுப்புக்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய கண் பார்வை இயல்பாக உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை தரப்பை கோடிட்டு லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மண்டையோட்டில் மேலும் ஒரு துப்பாக்கி சன்னம் உள்ளமையால், அவர் விரைவில் குணமடையக்கூடிய சாத்தியம் இல்லை என லங்கா புவத் குறிப்பிட்டுள்ளது.மூளையில் சேதம் ஏற்பட்டுள்ளமையால் அவரின் உடல் நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருக்குமா? அல்லது, நீண்ட காலத்தில் அவர் குணமடைவாரா, என்பதை கூறமுடியாதுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தூதரகங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சட்டா பக்தவார்  என்ற புறநகர் பகுதி உள்ளது.இங்குதான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் தலைமையகமான தூதரகங்கள், தூதரக அதிகாரிகளின் வீடுகள், அதிபர் மற்றும் பிரதமரின் வீடுகள், பாராளுமன்ற கட்டிடம் போன்றவைகள் உள்ளன.
இஸ்லாமாபாத்தின் இதயம் போன்ற இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. அதையும் மீறி இப்பகுதியை குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் சதி செய்தனர்.இதற்காக 2 வாகனங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை நிரப்பி சாலை ஓரத்தில் அனாதையாக நிறுத்தி வைத்திருந்தனர். இதை அங்கு ரோந்து சுற்றி வந்த பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து வாகனங்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் செயல் இழக்க வைக்கப்பட்டன. எனவே தூதரகங்கள் மற்றும் உளவு நிறுவன தலைமை அலுவலகம் போன்றவற்றை தகர்க்க இருந்த தீவிரவாதிகள் சதி முறியடிக்கப்பட்டது.அதுதொடர்பாக சில தீவிரவாதிகளை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இங்கு தாக்குதல் நடத்த ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாகவும், ராக்கெட் குண்டுகளை வீச திட்டமிட்டிருந்ததாகவும் கூறினர்.இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
பப்பூவாவில் விமான விபத்து: 28 பயணிகள் பலி.
பப்பூவா நியூகினியாவில் நடைபெற்ற விமான விபத்தில் 28 பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.அவுஸ்திரேலியாவின் லேவிலிருந்து தெற்கு பசிபிக் தீவான மடாங் பகுதிக்கு இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட விமானம் ஒன்று சென்று ‌‌கொண்டிருந்தது.விமானம் பப்பூவா நியூகினியா பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது விமானகட்டுப்பாடு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய அவுஸ்திரேலிய நிறுவனம் விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது.இது குறித்து அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விமானத்தை அவுஸ்திரேலிய விமானி மற்றும் நியூசிலாந்து நா‌ட்டை சேர்ந்த விமானியும் இயக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கடற்கரையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.
இங்கிலாந்து கடற்கரையில் 87க்கும் மேற்பட்ட வெடி குண்டுகள் கண்டுபிடிக்‌கப்பட்டுள்ளன.இங்கிலாந்து கடற்கரை பகுதியில் வெடி குண்டுகள் இருப்பதாக அந்நாட்டின் கப்பல் படைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கப்பல் படை வீரர்கள் அதிரடி சோ‌த‌னை மேற்கொண்டனர்.
சோதனையி்ல் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தக்கூடிய இரண்டு குண்டுகள் மற்றும் ஆறு சிறியவகை பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் என மொத்தம் 26 குண்டுகள‌ை கைப்பற்றினர்.தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ‌மேலும் 61 வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட குண்டுகள் என 87 குண்டுகளை கைப்பற்றினர். ‌வெடி குண்டுகள் அனைத்தும் 19ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் உறுதிசெய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட குண்டுகள் அனைத்தும் கடற்கரையின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்‌கு ‌எடுத்துச்செல்லப்பட்டு வெடி குண்டு நிபுணர்கள் மூலம் செயல் இழக்கச்‌செய்யப்பட்டது.
1000 அடி ஆழத்தில் அமையப் போகும் பிரமாண்ட கட்டிடம்.
விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டிடம் பார்த்திருக்கிறோம். மெக்சிகோவில் பாதாளத்தை முட்டும் அளவுக்கு சுமார் ஆயிரம் அடி ஆழத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட இருக்கிறார்கள்.வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மத்திய பகுதியில் 65 மாடி கட்டிடம் ஒன்று வர இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால் மொத்த கட்டிடமும் அண்டர்கிரவுண்டில் அமையப் போகிறது.
கடைகள், அபார்ட்மென்ட்களில் தரை தளத்துக்கு கீழே பேஸ்மென்ட் என்று ஒரே ஒரு தளம் இருக்கும். இந்த கட்டிடத்தின் மொத்த மாடிகளும் பேஸ்மென்ட்டில்தான் அமையப் போகின்றன.
ஆயிரம் அடி உயரம்(ஆழம்) உள்ள 65 மாடி கட்டிடத்தில் 35 மாடிகளில் ஆபீஸ்கள் செயல்படும். வீடுகள், கடைகள், அருங்காட்சியகத்துக்கு தலா 10 மாடிகள் ஒதுக்கப்படுகின்றன.திருமணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த வசதியாக விழா அரங்கம் ஒன்றும் இதில் அமைக்கப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த பங்கர் ஆர்கிடெக்சுரா என்ற கட்டுமான நிறுவனம் இதை கட்டுகிறது.
இதுபற்றி நிறுவனத்தின் தலைமை இன்ஜினியர் எஸ்டிபன் சூரஸ் கூறியதாவது: இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்கும் போது 800க்கு 800 அடி சதுரத்தில் ஒரு மைதானம் போலத்தான் இருக்கும்.கட்டிடத்தின் கீழ் தளம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தரை தளம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்படுகிறது. சூரிய வெளிச்சம், வெளி காற்று கிடைப்பதற்கு வசதியாக, பிரமிடை தலைகீழாக கவிழ்த்ததுபோல கட்டிடத்தை டிசைன் செய்திருக்கிறோம்.
ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெரிய கட்டிடங்கள் கட்ட இடமில்லை. மேலும் 8 மாடிக்கு மேல் கட்டக்கூடாது என்று நகர நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றன.மீறினால் டீவியேஷன் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 65 மாடியும் அண்டர்கிரண்டில் கட்டப்படுவதால் அத்தகைய பிரச்னைகள் எதுவும் இருக்காது.
வானுயர்ந்த கட்டிடம் கட்டுவதைவிட அண்டர்கிரவுண்டில் கட்டிடம் அமைப்பது சிக்கலானது. கிரேன்கள் பயன்படுத்துவது, கட்டுமான பொருட்களை எடுத்து செல்வது என எல்லாமே சிரமமாக இருக்கும்.அவற்றை சமாளித்து உருவாக்கப்படும் இந்த பிரமாண்ட கட்டிடம் கட்டிட கலை வரலாற்றில் மைல் கல்லாக அமையும்.
நாஜி படைகள் குறித்து யூதர்களுக்கு எச்சரித்த ஐன்ஸ்டீன் கடிதம் ஏலம்.
ஜேர்மனியில் நாஜி படைகளால் போடப்பட்ட வழக்குகளில் இருந்து யூதர்கள் மீள உதவிய தொழிலதிபருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதுமட்டுமல்லாமல் இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1939ம் ஆண்டில் எழுதிய கடிதம் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகம்.
ஜேர்மனியில் 1879ல் பிறந்த பிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1955ல் மறைந்தார். இயற்பியல் துறையில் தனது சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக 1921ல் நோபல் பரிசு பெற்றவர்.
ஜேர்மனியில் 1933ல் அடோல்ப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார் ஐன்ஸ்டீன். நியூயார்க்கில் வசித்த தொழிலதிபர் ஹைமன் ஜின்னுக்கு 1939ல் அவர் ஒரு கடிதம் எழுதினார்.ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் பிடியில் இருந்து யூதர்கள் தப்ப உதவியதற்காக ஹைமனை கடிதத்தில் ஐன்ஸ்டீன் பாராட்டினார்.
நாஜிக்களால் யூதர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபாயத்தில் இருந்த நேரத்தில் அவர்களை மீட்க நீங்கள் ஆற்றிய பங்கு அபாரமானது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்து சென்றதற்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன் என்ற அந்தக் கடிதத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த நாட் டி சாண்டர்ஸ் நிறுவனம் ஏலம் விட்டது.குறைந்தபட்ச கேட்பு விலையாக ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயித்திருந்தது. எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக ரூ.7 லட்சத்துக்கு ஐன்ஸ்டீன் கடிதம் ஏலம் போனது.
சலூன் கடையில் துப்பாக்கி சூடு: 8 பேர் படுகொலை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முடி திருத்தம் செய்யும் கடையில் நுழைந்து எட்டு பேரை சுட்டுக் கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கலிபோர்னியா மாகாணத்தின் சீல் பீச் நகரில் உள்ள சலூன் ஒன்றில் நேற்று முன்தினம் நுழைந்த ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஆறு பேர் பலியாயினர், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதில் இரண்டு பேர் மருத்துவமனையில் நேற்று இறந்தனர். காரில் தப்பிச் சென்ற கொலையாளியை அரை கிலோ மீட்டர் தூரத்தில் பொலிசார் கைது செய்தனர்.கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளியின் மனைவி சலூனில் பணிபுரிபவர் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பொலிசார் கொலையாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: மூன்று பயங்கரவாதிகள் பலி.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 முக்கிய ஹக்கானி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் ஹக்கானி பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை மீரான்ஷா என்ற கிராமத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அங்குள்ள கட்டடத்தின் மீது 2 ஏவுகணைகள் வீசப்பட்டன.இதில் ஹக்கானி பயங்கரவாதிகள் இயக்கத்தின் தலைவரின் உறவினர் ஜலீல் ஹக்கானி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறையினர் கூறினர். கொல்லப்பட்ட ஜலீல், ஹக்கானி இயக்கத்தின் தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ஆவார்.
வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இருந்துதான் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜலீல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்தார்.
வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏவுக்கணைத் தாக்குதல், ஹக்கானி பயங்கரவாதிகளின் இயக்கத்தின் ஆதிக்கம் அதிகமுள்ள தந்தே தர்பா கேல் என்ற கிராமத்தின் அருகே நிகழ்ந்துள்ளது. ஆப்கன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இது அவர்களுக்கு மிக பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தான் நடந்த முக்கிய தாக்குதல்களுக்கு ஹக்கானி பயங்கரவாதிகள்தான் காரணம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ரஷ்ய ராணுவ வீரர்கள் 119 பேர் தற்கொலை.
ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களில் சுமார் 119 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என ராணுவ செய்திதொடர்பாளர் போரிஸ்குபி‌‌யேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்‌‌கோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் கூறியதாவது: ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் வீரர்கள் தற்கொலை செய்‌வோரின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.
ரஷ்யாவை தவிர பிற இடங்களில் பணி புரியும் ரஷ்ய வீரர்கள் ஒன்பது பேர்‌ தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான கால கட்டம் வரை மொத்தம் 119 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராணுவத்தில் ஒரே பிரிவில் பணி புரிந்து வருபவர்களாவர். மேலும் 86 ராணுவ வீரர்கள் காயமுற்றுள்ளனர் என தெரிவித்தார்.இந்நிலையில் ராணுவத்தினரின் இடையே ஏற்படும் வன்முறை மற்றும் தற்கொலை சம்பவங்கள‌ை மேல் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக ராணுவ உரிமைகள் அமைப்பை சேர்ந்த வாலண்டினா மெலினிகோவா கூறியுள்ளார்.
பருவகால மாற்றம் குறித்து ஆராய்வதற்காக புதிய செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டம்.
பருவகால மாற்றம் மற்றும் தட்பவெப்பநிலை குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா‌ விண்வெளி மையம் சார்பில் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து நாசா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜிம்கிலிசன் தெரிவத்துள்ளதாவது: வானில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மற்றும் பருவகால நிலை குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக புதிய செயற்க்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இந்த செயற்கை கோள் வரும் 27ம் திகதி கலிபோர்னியாவில் உள்ள வெண்டன்பெர்க் விமான படை தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.
இதன்மூலம் பருவ நிலையில் குறுகிய மற்றும் நீண்ட காலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராயப்படும் மேலும் இந்த செயற்கை கோளுடன் ஐந்து சிறிய ரக உபகரணங்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இந்த உபகரணங்கள் மூலம் தட்பவெப்பநிலை, உலகில் தண்ணீர் அமைந்துள்ள பகுதி, நிலப்பரப்பில் ஓசோனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார். 
அமெரிக்க போராட்டம்: ஈரான் விமர்சனம்.
அமெரிக்காவின் நிதி மேலாண்மையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வரம்பு கடந்து இயங்குவதை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருகிறது.நியூயார்க்கில் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தலைநகர் வாஷிங்டனையும் விட்டு வைக்கவில்லை.
ஈரானின் புரட்சிப் படைத் தளபதி மசூத் ஜஜாயேரி இதுபற்றி கூறுகையில்,"நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஒபாமா தவறியதால் உருவாகியுள்ள இப்போராட்டம் விரைவில் அரசியல் மற்றும் சமூகப் போராட்டமாக மாறும். அமெரிக்க ஊழலுக்கு எதிரான இப்போராட்டத்தின் முடிவில் மேற்கத்திய முதலாளித்துவம் வீழும். இது அமெரிக்க வசந்தத்தின் துவக்கம்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நடிகைக்கு கைது வாரண்ட்.
நீதிமன்றத்தில் ஆஜராகாத பாகிஸ்தான் நடிகைக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் அட்டிகா ஓடோ. தொலைக்காட்சி நடிகையான இவர் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாரப்பின் நெருக்கமான தோழி ஆவார். அகில பாகிஸ்தான் முஸ்லில் லீக் கட்டியின் துணைத் தலைவராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
43 வயதாகும் ஓடோ கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தார். ராவல்பிண்டி சர்வதேச விமான நிலையத்தில் அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரது கைப்பையில் 2 மதுபாட்டில்கள் இருந்தன.ஆனால் அப்போது எந்த வழக்கையும் சுங்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து மது தடைச் சட்டத்தின் ஓடோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஓடோ ஜூலை 13ம் திகதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த வழக்கு இஸ்லாமாபாதிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கடந்த மாதம் 29ம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டிகா ஓடோவுக்கு கைது வாரண்டை நீதிபதி பிறப்பித்தார்.தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நடிகை ஆஜராகாததால் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிப்பதாக நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
லிபிய அதிபர் கடாபியின் மகன் கைது.
லிபியாவில் அதிபர் கடாபியின் மகன் முடாசிம் கடாபியை புரட்சி படையினர் கைது செய்துள்ளனர்.லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது.மாற்று அரசு கவுன்சில் என்ற பெயரில் புரட்சி படையினர் கடாபியை எதிர்த்து போரிட தொடங்கினர். அவர்களுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆதரவு அளித்ததில் குடும்பத்துடன் கடாபி தலைமறைவானார்.
முக்கிய நகரங்கள் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சிர்தே மற்றும் சில பகுதிகள் மட்டும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினரிடம் இருந்தன.அவற்றையும் கைப்பற்ற புரட்சி படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிர்தேவில் பதுங்கியிருந்த கடாபியின் மகன் முடாசிம் நேற்று கைது செய்யப்பட்டார்.
உடனடியாக அவரை லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பென்காசிம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த 75ம் ஆண்டு பிறந்த முடாசிம், டாக்டராகவும் ராணுவ வீரராகவும் பணிபுரிந்தார்.பின்னர் லிபியாவின் தேசிய ஆலோசகர் பதவிக்கு வந்தார். கடாபிக்கு அடுத்து அதிபர் பதவிக்கு வருவதில் முடாசிம்முக்கும் இவரது சகோதரர் சைப் அல் இஸ்லாமுக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. அதற்குள் ஆட்சி போனதால் இருவரும் தலைமறைவாக இருந்தனர். பனி வாலித் பகுதியில் சைப் பதுங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மனிதநேயத்திற்கு எதிரான செயல்: ஜார்ஜ் புஷ்ஷை கைது செய்ய வலியுறுத்தல்.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மனிதநேயத்துக்கு எதிரான செயல்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று லண்டனை சேர்ந்த பொது மன்னிப்புக் கழகம் வலியுறுத்தி உள்ளது. கனடாவில் வரும் 20ம் திகதி பொருளாதார மாநாடு நடக்கிறது.
இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்க வரும் புஷ்சை கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லண்டனை சேர்ந்த பொது மன்னிப்புக் கழகம் கனடா அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து கழகத்தின் உறுப்பினர் சூசன் லீ கூறியதாவது: கடந்த 2002 - 2009ம் ஆண்டுகளில் புஷ் அதிபராக இருந்த போது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் மனிதநேயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குவான்டனாமோ உள்பட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு புஷ் உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் மீது சர்வதேச சட்டதிட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம்.கொடூரமான முறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்பட்ட பிரச்னையில் புஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தின.இதுவரை அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கனடா வரும் புஷ்ஷை அதிகாரிகள் கைது செய்யாவிட்டால் அது ஐ.நா ஒப்பந்தத்தை மீறுவது போலாகும்.
இந்த மாதம் மக்கள் தொகை 700 கோடியை எட்டும்: ஐ.நா சபை.
இந்த மாதம் 31ம் திகதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.அன்றைய தினம் பிறக்கும் 700 கோடியாவது குழந்தையை வரவேற்க உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
தினமும் சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை எங்கு பிறக்கும் என்பது தெரியாது. எனினும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கத்தில் 31ம் திகதி பிறக்கும் ஒரு பெண் குழந்தைக்கு 700 கோடியாவது குழந்தை என்று பிறப்பு சான்றிதழ் வழங்க பிளான் இன்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது.உலக மக்கள் தொகை கடந்த 1805ம் ஆண்டு 100 கோடியை எட்டியது. அதாவது முதல் 100 கோடியை எட்ட பல ஆயிரம் ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 122 ஆண்டில் அதாவது 1927ல் 200 கோடியை எட்டியது.
அதன்பிறகு 1959ல் 300 கோடியையும், 1974ல் 400 கோடியையும், 1987ல் 500 கோடியையும், 1999ல் 600 கோடியையும் எட்டியது. சமீப காலமாக ஒவ்வொரு 12 முதல் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை 100 கோடி அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது.இந்த வகையில் உலக மக்கள் தொகை 2025ல் 800 கோடியையும், 2050ல் 900 கோடியையும், 2100ல் 1000 கோடியையும் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டிற்கான அதிபர் தேர்தல் ஒபாமாவுக்கு சவாலாக இருக்கும்: நகர மேயர் தகவல்.
நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பராக் ஒபாமாவுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்று சிகாகோ நகர மேயர் ரஹாம் இம்மானுவேல் கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அமெரிக்காவிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஹாம் இம்மானுவேல் பேசியதாவது: அமெரிக்க அதிபர் பதவிக்கு 2012ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
இப்போது அதிபராக இருக்கும் பராக் ஒபாமா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இந்தத் தேர்தல் அவருக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். தேர்தலில் அரசியல்ரீதியாக அவருக்கு போட்டி இருப்பது உண்மை. அமெரிக்காவிலுள்ள நடுத்தர வகுப்பு மக்கள் எதிர்பார்க்கும் பொருளாதார நிலை இப்போது இல்லை. பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.அமெரிக்காவில் புதிதாக வேலைவாய்ப்புகளை அதிபர் ஒபாமா உருவாக்கவில்லை. இதனால் நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவர் அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக நாம் அவரை பாராட்டியே ஆகவேண்டும். அவர் எடுத்த பல முடிவுகள் சரியானதாக இருந்தன. சில முடிவுகள் மற்றவர்களுக்கு கஷ்டமாக இருந்தபோதிலும் சரியான முடிவுகளை எடுத்து அவர் அமல்படுத்தினார்.நிதி சீரமைப்பு, சுகாதார நலம் தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் பாராட்டுக்குரியவை. தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து முடிவுகளை எடுத்தார் அவர்.
கடல் பிரச்னைகளை தீர்ப்பதற்காக சீனா - வியட்நாம் இடையே ஒப்பந்தம்.
தென் சீனக் கடலில் எந்தப் பகுதி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க சீனாவும், வியட்நாமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா வல்லுரிமை கொண்டாடி வருகிறது.
வியட்நாம் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டு வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் இரு நாடுகளும் அதை புறக்கணித்துவிட்டன. அதையடுத்து இந்தியாவுக்கு வியட்நாம் அதிபர் ட்ரூவாங் டன் சங் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சீனத் தலைநகர் பீஜிங்கில் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையில் கடல் பிரச்னைகள் தொடர்பான ஆறு அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது.இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பு, கடல் பிரச்னைகள் தொடர்பாக நிரந்தர தொலைபேசித் தொடர்பு, சர்வதேச சட்டப்படி அடிப்படையான நீண்ட கால கடல் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுதல், சட்டங்களை இரு தரப்பும் மதித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
சவூதி அரேபியாவில் நால்வருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.
சவூதி அரேபியாவில் மேலும் நான்கு பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த 9ம் திகதியன்று எகிப்து நாட்டைச் சேர்ந்த காவலர் ஒருவரை கொன்ற வழக்கில் எட்டு வங்‌கதேச நாட்டினருக்கு தலைதுண்டித்து தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக இரு சவூதி பெண்களுக்கும், ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் இருவர், ஜெட்டா நகரில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் என நான்கு பேருக்கு சவூதி கோர்ட் தலை துண்டித்து தண்டனை விதிக்கப்பட்டதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் இந்தாண்டு 62 பேருக்கு தலை துண்டித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் ரயில் நிலையத்தில் பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு.
ஜேர்மன் தலைநகரில் உள்ள ரயில் நிலையத்தில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.மற்றுமொரு இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வெடிபொருட்கள் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை காணப்பட்டது. மேலும் Schoneberg மற்றும் Sudkreuz இடையேயான ரயில் நிலையங்களிலும் காணப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை” என கூறினார்.
இதனால் ரயில் போக்குவரத்து இரண்டு மணிநேரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் இத்தகைய நாச வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த ஜேர்மன் பொலிஸ் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜேர்மன் போக்குவரத்து துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,“குற்றவாளிகள் ஒரு புது விதமான வழியை பின்பற்றியுள்ளனர்” என்றார்.
பிரான்சில் புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய சட்டதிட்டங்கள் அறிமுகம்.
பிரான்ஸ் அரசாங்கமானது கடந்த புதன்கிழமையன்று குடியேற்ற உரிமைகளுக்கான சட்டதிட்டங்களை சற்று வலுப்படுத்தி உள்ளது.இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் குடியுரிமையை நிலைநாட்டிக் கொள்ள கண்டிப்பான முறையில் அவரது அன்றாட வாழ்வில் பிரெஞ்ச் மொழியினை புழக்கத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டதிட்டமானது பிரெஞ்ச் மொழியினை அனைவரும் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் அந்த மொழிக்கேற்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே ஆகும்.இவ்வாறான மக்கள் அரசாங்கத்தால் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் அல்லது பிரெஞ்ச் மொழியினைக் கற்றுக்கொண்ட பட்டதாரியாக இருக்க வேண்டும்.இந்த சட்டமானது புலம்பெயர்ந்தவர்கள் பிரெஞ்ச் குடியுரிமையை பெற்றுக்கொள்ளவும், தமது அன்றாட வாழ்வில் பிரெஞ்ச் மொழியினை பேசப் பயன்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
வணிக செய்தித்தாள் அறிக்கைப்படி, ஒரு பில்லியன் புலம்பெயர்ந்தவர்கள் பிரெஞ்ச் மொழி தெரியாமல் பிரெஞ்சில் வாழ்வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பிரெஞ்ச் அரசாங்கமானது வளர்ந்து வரும் இந்த சூழலில் 60 பில்லியன் யூரோவை புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரெஞ்ச் மொழியினைக் கற்றுக்கொடுப்பதற்காக செலவிடுகின்றது.
கிலானி, சர்தாரி சொத்து விவரங்களை வெளியிட பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அல் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் சொத்து விவரங்கள் வெளியிட பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் வக்கீல் ஜாவித் இக்பால் ஜாப்ரி என்பவர் கடந்த 93ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் பாகிஸ்தான் அதிபர், பிரதமர், முன்னாள் பிரதமர், முக்கிய பிரமுகர்களின் சொத்து விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும் கிலானியும், நவாஸ் ஷெரீப்பும் மக்களின் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாவித் கூறியிருந்தார்.இந்த வழக்கு பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இஜாஸ் அகமது சவுத்ரி விசாரித்தார்.
அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உள்பட வழக்கில் கூறப்பட்ட அனைவரும் உலகம் முழுவதும் உள்ள தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.இதுகுறித்து அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்குள் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஆப்கனில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்தை.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹக்கானி பிரிவு தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களுடன் ரகசிய பேச்சு நடத்துகிறது.
ஆப்கானிஸ்தான் மீது 2001ல் தாக்குதல் நடத்திய அமெரிக்க கூட்டணி படைகள் தலிபான் ஆட்சியை ஒழித்தன. ஹமீத் கர்சாய் தலைமையில் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்பும், அமெரிக்க படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன.இந்த படைகள் மீது தலிபான்களின் ஹக்கானி பிரிவினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் பழங்குடி பகுதிகளில் ஒளிந்துள்ள ஹக்கானி பிரிவு தலிபான்களுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு உள்ளது.எனவே அவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும் ஹக்கானி பிரிவு தலிபான்களுடனான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து அவர்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது.வளைகுடா நாட்டில் தலிபான் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்களில் ஒருவருடன் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF