Saturday, October 15, 2011

இன்றைய செய்திகள்.

ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற இலங்கைத் தம்பதியர் விபத்தில் பலி.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவில் உள்ள மக்கா சென்ற இலங்கை தம்பதியினர்  நேற்று முன்தினம்  இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.கண்டி கலகெதரவவைச் சோ்ந்த அப்துல் வாகாப் அப்துல் ஜவார்ட் (47 வயது) மற்றும் அவருடைய மனைவி அப்துல் ஹலீம் சம்சுனிசா (42 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
குறித்த தம்பதியர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்ததாக ஜெத்தாவிலுள்ள இலங்கை தூதுவர் ஆதம்பாவா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
இவர்கள் பயணித்த வாகனத்தின் ரயர்கள் வெடித்ததால் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் இவர்களுடன் பயணித்த மேலும் இலங்கை தம்பதியினர் காயங்களுக்குள்ளாகினர்.விபத்தில் காயமடைந்தவர்கள் ஜெத்தாவிலுள்ள கிங் அப்துல்லாஸிஸ் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தம்பதியரின் ஜனாஸாக்கள் மக்கா நகரில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இம்முறை ஹஜ் கடமைகளை நிறைவேற்றவென இலங்கையிலிருந்து 3,800 பேர் மக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – வியட்நாம் ஜனாதிபதிகள் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வியட்நாம் ஜனாதிபதி  ட்ரோங் டென் சென்ங் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இரண்டு நாடுகளின் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலக  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டுள்ளன.ஏற்கனவே வியட்நாம் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார்.
மஹிந்தவின் மருத்துவரிடம் சிகிச்சை பெறவிரும்பும் மன்மோகன் சிங்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர், அதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வைத்தியர் எலியந்த வைட் என்பவரிடம் விசேட சிகிச்சையொன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இத்தகவலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.அண்மைக்காலமாக எலியந்த வைட் இன் மருத்து சிகிச்சைகள் மற்றும் அவரின் மருத்துவ தகுதி குறித்த பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இந்தியப் பிரதமரும் அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலின் தலைமைக்கு அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதர்.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு பலத்த சவால் தோன்றியுள்ளதாக அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸ், வாஷிங்டனிலுள்ள இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ள இரகசியத் தகவல் பரிமாற்றத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றமும் ரணிலின் தலைமைத்துவத்துக்கு சவாலைத் தோற்றுவித்துள்ள ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் ரணிலின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அத்தகவல் பரிமாற்றக் குறிப்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆளுங்கட்சி பிளவுபட்டுள்ளது? !- மஹிந்த அதிர்ச்சி.

ஆளுங்கட்சிக்குள் தனது தலைமைத்துவத்திற்கு எதிராக இரண்டு அணிகள் செயற்படுவதாக ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தனது தலைமைத்துவத்திற்கு எதிராக இரண்டு அணிகள் உருவாகி தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனையடுத்து ஏனையகட்சிகளின் பிளவுகள் மற்றும் தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் குறித்த விடயங்களை கலந்துரையாடுவது ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.முக்கியமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அரசியல் கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்ளும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து பேசக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கட்சிகளின் பிளவுகள் குறித்து பேசும் போது, ஆளுங்கட்சிக்குள்; பிளவுகள் ஏற்படுத்தக் கூடிய மனநிலைமை கட்சியினருக்கு ஏற்படும் என்ற காரணத்தினால் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மையத்திற்குள் சிக்கி வருவதற்கு எதிராக முன்னணியில் உள்ள சிரேஷ்ட தலைவர்கள் போர் கொடி உயர்த்தி வருவதுடன், அண்மையில், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளது.
பயங்கரவாதத்துக்கெதிரான வெற்றிக்கு பாதாளக் கும்பல்களால் பாதிப்பு: அமைச்சர் விமல் வீரவன்ச.
பயங்கரவாதத்திற்கெதிராக பெறப்பட்ட வெற்றிக்கு பாதாளக் கும்பல்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். நேற்று குருநாகலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஜனாதிபதியும், பாதுகாப்புத் தரப்பினரும் பெற்ற வெற்றி காரணமாக வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.அதற்கெதிராக சிற்சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நாட்டில் மனித உரிமை மீறல்களும், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் முறைகேடுகளும் இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.
அவ்வாறான நிலையில் பாதாள உலகக்கும்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக விடுதலைப் புலி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது போன்று ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது.அதன் காரணமாக பயங்கரவாதத்துக்கு எதிராக பெறப்பட்ட வெற்றி பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக்கு எதிராக கரு ஜெயசூரிய கருத்து.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேல் மாகாண உறுப்பினர் சிரால் லக்திலக்க, இடைநிறுத்தப்பட்டமையை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய ஆட்சேபித்துள்ளார்.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமது அதிகாரத்தை பயன்படுத்தி சிரால் லக்திலக்கவின் உறுப்புரிமையை அண்மையில் ரத்துச் செய்தார்.
இந்தநிலையில், குறித்த முடிவு, ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று கரு ஜெயசூரிய கடிதம் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் லக்திலக்க, ஆகியோரின் வெளியேற்றத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ கண்டித்துள்ளார்.
தேசமடைந்ததால் இடிந்து விழும் அபாய நிலையில் சீனப்பெருஞ்சுவர்.
உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது.5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.
அதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும்.
மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.
சீனாவில் வால்மார்ட் கடைகளை இழுத்து மூட உத்தரவு.
சீனாவில் 120க்கும் அதிகமான நகரங்களில் 3,000க்கும் அதிகமாகன வால்மார்ட் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் உள்ளன.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோங்கிங் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஸ்டோர்ஸில் சாதாரண பன்றிக் கறியை உயர்ரக கறி என்று சொல்லி அதிக விலைக்கு விற்றுள்ளனர்.இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள் அதிக விலைக்கு விற்றதை உறுதி செய்தனர். இதையடுத்து சோங்கிங் மாகாணத்தில் உள்ள 13 வால்மார்ட் ஸ்டோர்ஸ்களை மூட உத்தரவிட்டனர். 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிக விலைக்கு பொருட்களை விற்ற வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சீனாவில் இதுபோன்ற குற்றங்களுக்கு இதற்கு முன் இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டதில்லை.
இதுகுறித்து மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வக்கீல்கள் கூறுகையில், இது அதிகபட்ச தண்டனை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஆனால் சோங்கிங் தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள் கூறுகையில், உணவு பாதுகாப்பு பிரசாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் விஷயத்தில் விதியை மீறினால் இன்னும் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மெக்ஸிகோ சிறையில் வன்முறை: 7 பேர் பலி.
மெக்ஸிகோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மோன்டெர்ரி நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் சிறை அதிகாரிகள், கைதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.தீயில் எரிந்த நிலையில் 3 பேரது சடலம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் கைதிகளா அல்லது சிறை அதிகாரிகளா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.கூர்மையான பொருள்களைக் கொண்டு நெருப்பு ஏற்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட்ட மெத்தை, போர்வையைப் போட்டு தீயை உண்டாக்கினர்.
உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த நகரான மோன்டெர்ரியில் கடந்த சில மாதங்களாக வன்முறை தலைதூக்கியுள்ளது.இரு பிரிவு தொழிலாளர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இரு பிரிவு தொழிலாளர்களும் சிறைச்சாலையிலும் மோதலில் ஈடுபட்டதால் கலவரம் உருவானதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு சர்வதேச செலவாணியம் அங்கீகாரம்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நிதி கொள்கைகளுக்கு சர்வதேச செலாவணி நிதியம் அங்கீகாரம் அளித்துள்ளது.வளரும் நாடுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது பணவீக்கம் போன்றவை தவிர்க்க முடியாதவை. அவற்றை கட்டுப்படுத்தும் போது நெருக்கடிகள் உண்டாவதும் சகஜமானதுதான்.
பணவீக்கம் குறிப்பிட்ட இலக்கை தாண்டும் போது பணவீக்க எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும். சீனா, இந்தியா, கொரியா போன்ற நாடுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நிதிக் கொள்கைகள் சரியானதுதான் என சர்வதேச செலாவணி நிதியதித்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருள்களின் விலை உயர்வு காரணமாகவே பணவீக்கம் ஏற்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பொருள்களுக்கு காணப்படும் தொடர் தேவைக் காரணமாகவும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் பல நாடுகளில் பணவீக்க எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலை ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி போன்றவற்றால் ஆசிய நாடுகளில் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் நடப்பு ஆண்டுக்கான ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.25 சதவீதமாக இருக்கும் என்று அது மதிப்பிட்டுள்ளது.பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், பண புழக்கத்தை குறைக்கவும் பாரத ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதங்களை கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை 12 முறை உயர்த்தியுள்ளது.
இருந்தபோதும் இது இரட்டை இலக்கத்தை தொடும் நிலையில் உள்ளது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் நாட்டில் தொழில் துறை பாதிக்கப்பட்டது. உற்பத்தியும் சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வரும் 25ம் திகதி இரண்டாவது காலாண்டுக்கான நிதிக்கொள்கை பாரத ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் தெரிவு.
இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணுவ அமைச்சராக லியாம் பாக்ஸ் பதவி வகித்து வந்தார்.இவர் தன்னுடைய பதவி காலத்தில் தன் நெருங்கிய நண்பர் ஆதம் வெரைட்டிக்கு சலுகை தந்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்க ஆளானார்.
இதனையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா ‌செய்ய முடிவு செய்து அதற்கான கடிதத்தை பிரதமர ‌டேவிட் கமரூனிடம் வழங்கினார்.பாக்ஸ் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கமரூன் தங்களின் உண்மையான விளக்‌கத்தை ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் பதவி விலகுவது வருத்தத்திற்குரியது என தெரிவித்தார்.
பாக்ஸ் விலகலுக்கு பின்னர் புதிய அமைச்சராக 55 வயதாகும் பிலிப் ஹேமண்ட் நியமி்க்கப்பட்டுள்ளார். இவர் மே 2010ம் ஆண்டில் கூட்டணி கட்சிகளின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.கடந்த 1997ல் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து வர்த்தகதுறை, உற்பத்திதுறை மற்றும் இயற்கை எண்ணெய், எரிவாயு, கட்டுமான பணிகளில் பணிபுரிந்துள்ளார்.
சர்வர் பிரச்னை தீர்ந்தாலும் பிளாக்பெரியில் இணைய கோளாறு.
ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பிளாக்பெரி செல்போன் மெசேஜ் சேவை சரி செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று மீண்டும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. ரிசர்ச் இன் மோஷன்(ரிம்) நிறுவனத்தின் பிளாக்பெரி போனில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ரகசிய குறியீடுகள் என்பதால் மற்றவர்கள் படிக்க முடியாது.
எனவே இதற்கு தனி வரவேற்பு உள்ளது. கடந்த ஞாயிறன்று திடீரென பிளாக்பெரி போன்களில் மெசேஜ் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பிளாக்பெரி வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான வாடிக்கையாளர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தங்கள் புகாரை பதிவு செய்தனர்.பிளாக்பெரி மெசேஜ்கள் கனடாவில் உள்ள சர்வர் வழியாக மற்றவர்களுக்கு செல்லும். அதில் ஏற்பட்டுள்ள பழுதுதான் பிரச்னைக்கு காரணம் என தெரிவித்த ரிம் நிறுவனம் நேற்று அதை சரி செய்தது. அத்துடன் பழுது ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் பிளாக்பெரி செல்போன்களில் இன்டர்நெட் தொடர்பு செவ்வாய்க்கிழமை மாலை முதல் பாதிக்கப்பட்டது.இதுபற்றி ட்விட்டரில் வெளியான செய்தியில்,“இமெயில், மெசேஜ் சேவைகள் சீரானாலும் பலருக்கு தாமதம் ஏற்படுகிறது. ப்ரவுசிங் மிகவும் தாமதமாவதாக புகார்கள் வந்துள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது.
மியான்மரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த அரசு அனுமதி.
மியான்மரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவும், ஸ்டிரைக்கில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறினார்.இதற்கான சட்டதிருத்தத்தில் அதிபர் தியின் செயின் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டதிருத்தத்தின் படி தொழிலாளர்கள் சங்கம் அமைக்கவும், ஸ்டிரைக்கில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்படும் என கூறினார்.இந்த சட்டத்தின் படி குறைந்தது 30 தொழிலாளர்களுடன் சங்கம் அமைத்து அதற்காக பெயர் மற்றும் சின்னத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும். இந்த சட்டத்திலிருந்து ராணுவம் மற்றும் பொலிசாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் புயல் தாக்கியது: 29 பேர் பலி.
மெக்சிகோ, கவுதமலா நாடுகளில் புயல் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள பசிபிக் கடலில் ஜோவா என்ற புயல் உருவானது.அந்த புயல் மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமலா, எல்சால்வாடோர், நிகாராகுவா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் தாக்கியது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பசிபிக் கடலில் ராட்சத அலைகள் உருவாகின. அவை ஊருக்குள் புகுந்தன.
இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரோடுகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டது. நிலச்சரிவு காரணமாக வீடுகள் மண்ணுக்குள் புகுந்தன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்த புயல் தாக்குதலில் வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோவில் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களில் கவுதமலா நாட்டில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். எல்சால்வாடோர், நிகாராகுவா நாடுகளில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மெக்சிகோவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மழை வெள்ளம் காரணமாக இந்த நாடுகளில் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மத்திய அமெரிக்க நாடுகளில் கடந்த ஆண்டும் இதுபோன்று பலத்த மழை பெய்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 274 பேர் பலியாகினர்.
சிரிய கலவரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் பலி: ஐ.நா தகவல்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏழு மாதங்களில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மக்களை பாதுகாக்க அந்நாடு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா உயர்மட்ட மனித உரிமை அமைப்பு அதிகாரி நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு நிலைமை மோசாமாகி விட்டது. உடனடியாக ஜனாதிபதி பஷர் அசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்ந்து இரக்கமற்ற அடக்குமுறை மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்தால் சர்வதேச நாடுகளின் போருக்கு உள்ளாகும் என எச்சரித்துள்ளார்.
சீன விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்.
சீன தலைநகரம் பெய்ஜிங்கில் இருந்து உரும்கி நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.நடுவானில் சென்ற போது விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதில் பயணம் செய்த ஒரு பெண் கூறினார். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை உடனே தரை இறக்கும்படி விமானிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.உடனே கான்சுவில் உள்ள ஜியாகுகன் விமான நிலையத்தில், விமானம் தரை இறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF