Thursday, October 27, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வில் சகல நாடுகளும் பங்கேற்பது சந்தேகமே – அவுஸ்திரேலியா.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வில் சகல நாடுகளும் பங்கேற்பது சந்தேகமே என அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
அமர்வுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்காமல் இருக்க வாய்ப்பிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.அடுத்த பொதுநலவாய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வது குறித்து குறிப்பிட்ட உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களே தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையின் நட்பு நாடுகள் அமர்வுகளில் பங்கேற்கும், ஏனைய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்பது குறிப்பிட்டு கூற முடியாது.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முதன்மை குறிக்கோள் என கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.இலங்கை அமர்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் குறைகளை சர்வதேசத்திடம் கூறுவதில் தவறில்லை!- ஐ.தே.க.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளை கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படைத் தன்மையோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சியாகும்.
மேலும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் மற்றும் பொது நலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திஸ்ஸ எம்.பி. மேலும் கூறுகையில்,
பொதுநலவாய நாடுகளின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இதில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சென்றிருக்கின்றார். அரச தலைவர்கள், இம்மாநாட்டில் பங்கு கொள்வது இயல்பான விடயமாகும்.
இந்நிலையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான பல சவால்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் சர்வதேச ரீதியாக எழுகின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும் எழுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் அரசாங்கம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் சர்வதேச நாடுகளைப் பகைத்துக் கொள்வதில் பலன் இல்லை. பொதுநலவாய நாடுகள் அனைத்திலும் இலங்கைக்கான தூதுவர்கள் உள்ளனர் இவர்களினூடாக இராஜதந்திர நடவடிக்கைகளை அரசு கையாளவேண்டும்.
மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றது. இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பொதுவானதாகும்.
எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா சென்றமை அல்லது ஏனைய நாடுகளுக்கு செல்கின்றமை, தமது நிலைப்பாடுகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கின்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல எந்தவொரு கட்சியும் ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களுக்கே உரிய ஜனநாயக உரிமையாகும். அதனைக் கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ முடியாது.
தமிழ் மக்களின் விடயம் தொடர்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் அரசாங்கம் தவறிழைத்து விட்டமையே இவ்விவகாரம் சர்வதேச மட்டத்துக்கு சென்றிருப்பதற்கும் சர்வதேச நாடுகள் எமது விடயங்களில் மூக்கை நுழைப்பதற்கும் அடிப்படைக் காரணமாகும்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. யாவும் கிடப்பில் போட்டவாறே உள்ளன.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் நோக்கில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இதுவரையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் மேற்படி பேச்சுக்களில் ஆளும் தரப்பு சார்பில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருப்பதையே உணர முடிகின்றது. பேச்சுக்களை இழுத்தடித்து நாட்களைக் கடத்துவதிலேயே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றது.அது மட்டுமல்லாது நாட்களைக் கடத்துவதன் மூலம் மூடி மறைப்புக்களை மேற் கொள்வதானது அரசியல் தீர்வை முன்வைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்பதையே காட்டிநிற்கின்றது.
இவ்வாறான நிலைமைகளே உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேசத்துக்கு செல்கின்றமைக்கு வழி வகுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அமெரிக்காவின் அழைப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என அனைத்தும் இதனடிப்படையிலேயே இடம்பெற்று வருகின்றன என்றார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் - பான் கீ மூன்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விசேட பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் நேற்றைய தினம் ஐ.நா.வில் நடைபெற்ற சந்திப்பின் போது பான் கீ மூன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவடைந்ததன் பின்னர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பான் கீ மூன் தெரிவித்த விளக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ள போதும், ஐ.நா பொதுச்செயலர் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நவம்பர் 15ம் நாள் வெளியிடப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசின் சார்பில் மகிந்த சமரசிங்க காலஅவகாசம் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த சமரசிங்க, 2012 ஒக்ரோபரில் ஜெனிவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்தச் சந்திப்பில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொகன்னவும், பிரதித் தூதுவர் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் நிதி மோசடி! ராஜ் ராஜரத்தினத்தின் கூட்டாளி ரஜத் குப்தாவும் கைது!

இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட இந்தியரான ரஜத் குப்தா நேற்று அமெரிக்காவில் எப்பிஐ அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘இன்சைடர் டிரேடிங்’ மூலம் (நிறுவனங்களின் உள் நிலவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிவது, அதை வைத்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது விற்று லாபம் அடைவது) அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜ் ராஜரத்தினம்.
அமெரிக்க வர்த்தக உலகில் இவ்வளவு பெரிய மோசடியை இதுவரை யாரும் செய்ததில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் ராஜ் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்காவின் எப்பிஐ பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜ் ராஜரத்தினத்துக்கு கொடுத்துள்ளார்.
இதை வைத்துக் கொண்டு ராஜரத்தினம் தனது கலியோன் 'ஹெட்ஜ் பண்ட்' (பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம்) நிறுவனம் மூலம் இந்த நிறுவனங்களின் பங்குகளை பரிவர்த்தனை செய்துள்ளார்.
இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை நன்றாக இருந்தபோது பங்குகளை வாங்கியுள்ளார், நிதி நிலை சரியத் தொடங்கியபோது அதை ரஜத் குப்தா மூலம் முன்பே அறிந்து பங்குகளை விற்று நஷ்டத்திலிருந்து தப்பியுள்ளார். ஆனால், இவரது நஷ்டம் பங்குகளை வாங்கிய பிறர் மீது விழுந்தது. இப்படியாக ராஜ் ராஜரத்தினம் தனது முறைகேடுகளால் ஈட்டிய தொகை 75 பில்லியன் டாலர்.இவருக்கு ரஜத் குப்தா தவிர மேலும் ஏராளமான கார்பரேட் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் உதவியுள்ளனர். இதற்காக இவர்களுக்கும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துள்ளார் ராஜ் ராஜரத்தினம்.
62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். உலகின் முன்னணி நிறுவனங்களான புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.இந் நிலையில் இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதமாலா இனப்படுகொலை: விசாரணைகள் மேற்கொள்வதற்கு தடை.
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்களுக்கு பிரதான காரண கர்தாவாக கருதப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒஸ்கார் மெஜியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அவர் அண்மையில் ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக நீதி விசாரணைகளில் கலந்து கொள்ள முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஒஸ்கார் அமஜியா விக்ரர்ஸ் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கௌதமாலா தொடர்பில் ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு கௌதமாலாவில் இடம்பெற்றிருந்த இனப்படுகொலைகளில் கைது செய்யப்பட்டுள்ள ஒஸ்கார் அமஜியா நேரடிப்பங்கு வகித்திருந்தார் என இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பான நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில் இந்த விசாரணைகளில் பங்கேற்பதற்கு உகந்த உடல் மற்றும் மனநிலையில் அமஜியா இல்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பிலான வைத்திய பரிசீலினைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடா மக்கள் ஓய்வு பெறுவதில் தாமதம்: ஆய்வில் தகவல்.
கனடாவில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் ஓய்வு பெறுவதை தள்ளிப் போடுகின்றனர், அவர்களுடைய ஆயுட்காலமும் அதிகரிக்கிறது என சமீபத்திய புள்ளி விவர ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் ஓய்வு பெறும் காலத்தை தள்ளிப்போடுவது 1990களின் மத்தியிலேயே ஆரம்பித்து விட்டது என அவ்விவரம் தெரிவிக்கிறது.முன்பு 50 வயதான வேலை பார்க்கும் மனிதர் தான் ஓய்வு பெறுவதை 12.5 வருடங்களுக்கு தள்ளி வைக்க திட்டமிட்டார். ஆனால் இன்று 50 வயதாகும் நபர் கூடுதலாக 16 வருடங்களுக்கு வேலை செய்ய விரும்புகிறார்.
கனடாவில் 55 வயதை நெருங்கும் மக்கள் அனைவரும் தாங்கள் வேலை பார்க்கும் வருடங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். 2010 புள்ளி விவரப்படி கனடாவில் 55 வயதை அடைந்தோர் ஓய்வு பெறுவதை 34 சதவீதம் தள்ளி வைக்கின்றனர். 1996ல் இந்த சதவீதம் 22ஆக இருந்தது.
கனடாவைச் சேர்ந்த சுயமாக தொழில் செய்யும் டொரன்டோவைச் சேர்ந்த அடினா லீபோ என்ற பெண்மணி கூறுகையில், கனடா மக்கள் தாங்கள் வயதான காலத்திலும், தினமும் வேலைக்குச் செல்வதை விரும்புகின்றனர். 55 வயதிலும் தாங்கள் வலிமையோடு இருப்பதாகவும், தங்கள் வேலையை நேசிப்பதாகவும், தாங்களால் முடிந்தளவுக்கு இந்த சமுதாயத்திற்கு தாங்கள் உதவுவதாகவும் கூறுகின்றனர் என்றார். மேலும் கனடா மக்கள் அறுபது வயதிலும் நாற்பதைப் போன்ற உணர்வில் இருக்கின்றனர் என்று லிபோ கூறினார்.
நியூ ராயல் பாங்க் ஆஃப் கனடா எடுத்த சர்வேயின் படி, 57 சதவீத கனடிய மக்கள் தங்கள் ஓய்வு காலத்தை தள்ளிப் போடுவது அவசர தேவைகளுக்காக பணம் சேர்ப்பதற்கு அல்ல, தங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத செலவுகளுக்காக பணம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தினால் தான் என்று தெரிய வந்துள்ளது.1977ல் 50 வயதான மனிதர் தன் மீதி வாழ்நாட்களை 45 சதவீதம் ஓய்வில் கழிக்க எண்ணினார். ஆனால் இன்று அதே வயதுள்ள மனிதர் வேலை பார்க்கும் வருடங்களை 48 சதவீதம் அதிகரிக்க எண்ணுகிறார்.
முதல் தொலைபேசி அழைப்பின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்தார். முதல் தொலைபேசி அழைப்பின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1876ல் தன் உதவியாளரிடம், மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று தான் கண்டுபிடித்த தொலைபேசியில் முதன் முதலாக பேசினார். இதுவே உலக வரலாற்றில் முதல் தொலைபேசி அழைப்பாகும்.1861 ரேஸ் என்பவர் ஒரு தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அதில் ஒருவர பேசுவதை அடுத்தவரால் கேட்க முடியும். பதில் பேச முடியாது. ஒருவழி ஊடகமாக இத்தொலைபேசி விளங்கியது. இவரால் இதற்கு மேல் கண்டுபிடிக்க முடியவில்லை. காசநோய் காரணமாக தன் 40வது வயதில் இவர் இறந்தார்.
1881 பெர்லின் நகரத்தில் முதல் தொலைபேசி இணைப்பகம் உருவாகியது. 48 பேருக்கு தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது. தொலைபேசி இணைப்பாளராகப் பெண்கள் பணிவாய்ப்பு பெற்றனர். ஆண்களின் குரலை விட பெண்களின் குரல் தொலைபேசிக்கு ஏற்றதாக இருந்தது.ஆரம்பத்தில் மதவாதிகளுக்கு தொலைபேசி என்பது புரியாத புதிராகவே இருந்தது. எனவே இவர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் உரிமையாளர் அட்டவணை புத்தகத்தை “முட்டாள்களின் புத்தகம்” என்றே அழைத்தனர்.
ஜேர்மனியில் அன்றைய வீடுகளில் தொலைபேசி செல்வந்தரின் ஆடம்பர பொருளாகவும், கௌரவச் சின்னமாகவும் இடம்பெற்றது. 1910ல் ஒரு கோடிப் பேருக்கும் அதிகமானோர் தொலைபேசிக்காக பதிவு செய்தனர். இன்றைக்கு 39 கோடி தொலைபேசி இணைப்புகள் உள்ளன. இவை தவிர கைபேசிகளும் உள்ளன.
ஜேர்மனியின் அதிசய நீர்ப்பாலம்.
கட்டுமான துறையில் பல நம்ப முடியாத அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பல பேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.ஜேர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?
ஜேர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.
1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது.அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவு.
கடந்த காலப் பொருளாதார தரவுகளின்படி தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கொரியா திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடிக்கிற போதும் தனது உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் பொருளாதாரம் தங்கியிருக்கின்றது.ஆசியாவின் நான்காவது பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடான தென் கொரியா தனது உற்பத்திகளை பெருமளனவு அமெரிக்கா ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் அண்மையில் காணப்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தென் கொரியாவின் உற்பத்தியில் கேள்வி குறைந்து காணப்படுகின்றது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், உள்நாட்டு தனியார் துறையினரது முதலீட்டின் பின்வாங்கலும் இதற்கு காரணமென பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தென் கொரிய வங்கியின் கணிப்பின்படி ஜூலையில் இருந்து செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 0.9 சதவீதமாக வளர்ச்சி காணப்பட்டது.ஏப்ரலில் இருந்து ஜூன் வரை 0.9 சதவீதமான வளர்ச்சி நிலையே காணப்பட்டது. இத்தகைய மந்த நிலை வளர்ச்சிக்கு தனிப்பட்ட முதலீட்டார்களின் பங்களிப்பு குறைவானதால் இத்தகை நிலை ஏற்பட்டதென வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
முதலீடு சென்ற மாதத்தை விட 0.4 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது. மேலும் இயற்கை அனர்த்தங்களாலும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கறது.அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக விவசாய உற்பத்தியும் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியது. இதனால் விவசாய உற்பத்தியில் 6.1 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டது.தென் கொரியாவின் பொருளாதார அமைச்சர் நாட்டில் தொழில் வாய்ப்பை அதிகரிக்கவும், உள்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்.
உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக பிரிட்டன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்தியாவில் செயல்படும் 1,900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரிட்டனுக்கு உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். குறிப்பிட்ட படிப்புக்கான செலவு மற்றும் பிரிட்டனில் இருக்கும் போது அதற்கான செலவு என அனைத்திற்கும் சேர்த்து மாணவர்களிடம் நிதி இருக்க வேண்டும் என்பது பிரிட்டனின் மாணவர் விசா விதிகளில் ஒன்று.
அதன்படி மாணவர்கள் தங்கள் விசா விண்ணப்பத்துடன் எவ்வளவு வைப்புத் தொகை வைத்திருக்கிறோம் என்பதற்கான வங்கியின் கணக்கு அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.இதுவரை இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கியில் மாணவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்து அந்த வங்கி கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தால் அதை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொள்ளும்.
ஆனால் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்தியாவில் உள்ள 1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கை விசா விண்ணப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள். அவை இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருபவை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது அவர்களின் வங்கி கணக்கு அறிக்கையை பரிசோதிப்பதற்காக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அங்கிருந்து சரியான பதில் வருவதில்லை அல்லது தொடர்பே கொள்ள முடிவதில்லை அல்லது எந்த பதிலும் தெரிவிப்பதில்லை.
பிரிட்டன் குடியேற்ற சட்டப்படி ஒரு வங்கி தொடர்ந்து இதுபோன்ற சரியான பதிலை அளிக்கவில்லையெனில், அதன் கணக்கு அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.கூட்டுறவு வங்கிகளுக்குப் பதிலாக இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சர்வதேச வங்கிகள் என 85 வங்கிகளில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்து அதன் அறிக்கையை விசா விண்ணப்பத்துடன் அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும்.
தகுதி வாய்ந்த அந்த 85 வங்கிகளின் பட்டியலிலும், மேலும் சில மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை நவம்பர் 24ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இதேபோன்று பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் வங்கிகளின் கருப்புப் பட்டியலையும் பிரிட்டன் முன்னர் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவின் புதிய இளவரசர் தெரிவு.
சவூதி மன்னரின் அடுத்த வாரிசான புதிய இளவரசராக அந்நாட்டு உள்துறை அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார். சவூதி மன்னராக அப்துல்லா உள்ளார்.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சவூதி அரேபியா நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த வாரம் காலமானார்.
இதைத் தொடர்ந்து புதிய இளவரசரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது உள்துறை அமைச்சராக உள்ள‌ நையீப் என்பவர் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதற்கான முறையான ஒப்புதல் அரண்மணை ‌நிர்வாகம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உள்துறை அமைச்சரான நையீப்(78). கடந்த 1933ம் ஆண்டு பிறந்தார். கடந்த 1975ம் ஆண்டு உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகராகவும் உள்ளார். இவர் சவூதியின் புதிய இளவரசராக பொறுப்பேற்க உள்ளார்.
தலிபான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் பாகிஸ்தான்.
பாகிஸ்தான் பல முறை மறுத்து வந்த போதிலும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு முகாம் அமைத்து பயிற்சியளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பயிற்சியை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நடத்தி வருகிறது. குண்டு தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஒருவர் கூறுகையில், பயற்சி முகாம் நடத்தி வருபவர்களில் ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர்.அவர்கள் முதலில் குண்டு தயாரிப்பது பற்றி கற்றுத்தருகின்றனர். பின்னர் செயல்முறை பயிற்சியளிக்கின்றனர்.இந்த பயற்சியின் போது ஐ.எஸ்.ஐ அமைப்பின் அதிகாரிகள் உடன் உள்ளனர். தலிபான் அமைப்பு ஐ.எஸ்.ஐ உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது என கூறினார்.
சமூக வலைத்தளங்களுக்கு சீனாவில் கட்டுப்பாடு.
சமூக வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், குறுந்தகவல் அனுப்பும் தளங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சீனா நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டுகிறது.
ஆளும் கம்யூனிஸக் கட்சியின் முக்கியமான செயல்திட்டமாக இருப்பது அபரீத வளர்ச்சி அடைந்து வரும் மைக்ரோ ப்ளாக்குகள் குறித்தது தான்.ஆளும் அரசுக்கு ஆதரவாகவுள்ள செய்திகள், அறிக்கைகள், கருத்துகள் குறித்த இணையதள நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து தலைவர்கள் மட்டத்தில் பேசப்பட்டதாக புதன்கிழமை இன்று பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் அரசின் மத்தியக் குழுவின் வருடாந்திரக் கூட்டம் இந்த மாதம் நடந்த போது, கொள்கை உருவாக்கல் குறித்த செயல்திட்டமும் இடம்பெற்றது.இதில் மக்களிடம் பரவலாக செல்வாக்கு பெற்று வரும் மைக்ரோ ப்ளாக்குகள் குறித்த கட்டுப்பாடை அரசு வைத்திருக்கவும் கண்காணிக்கவும் வேண்டிய தேவைகள் குறித்து அலசப்பட்டதாம்.
எமி ஒயின்ஹவுசின் மரணத்தில் நீடிக்கும் குழப்பம்.
எமி ஒயின்ஹவுஸ் என்ற 27 வயது பாடகி வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் பகுதியில் இரண்டரை கோடி பவுண்ட் மதிப்புடைய பெரிய பங்களாவில் வசித்து வந்தார்.
இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார். இதிலிருந்து இவரை மருத்துவ உதவியுடன் மீட்டெடுத்தனர்.
ஒருநாள் எமி தனது ஆடம்பர பங்களாவில் தன் படுக்கையில் இறந்து கிடந்தார். இவரது திடீர் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான இவரது பெற்றோர் மத்திய லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் தம் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.எமி திடீரென மதுவை நிறுத்தியதால் இறந்திருக்க கூடும் என எமியின் உறவினர்கள் கருதுகின்றனர். மதுவை நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறினர். ஆனால் எமி மூன்று வாரங்களாக குடிக்கவே இல்லை. அதனால் இறந்திருக்க கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் எமியின் குடும்பத்தினரோ இதனை மறுக்கின்றனர். மது பரிசோதனை நடத்தியதில் எமியின் ரத்தத்தில் மது கலந்திருப்பதாகவும் வேறு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏதும் இல்லை என்றும் கூறினர்.எமி குடித்ததால் இறந்தாரா அல்லது குடிக்காத காரணத்தினால் இறந்தாரா என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ஸ்டீவ் ஜாப்சின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்: சீனாவில் கடும் கிராக்கி.
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு சீனாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.கடைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955ல் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், 21 வயதில் கணணி துறையில் கால்பதித்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார்.கணணி துறையில் உலகின் சிறந்த நிபுணர்களை உருவாக்கியதுடன் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினார். இளம் வயதிலே உலக பணக்காரர்களில் ஒருவரானார்.
கணணி உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்(56) புற்றுநோய் பாதிப்பால் அக்டோபர் 5ல் இறந்தார். இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை குறிப்பு பற்றி 630 பக்க புத்தகம் ஒன்றை வால்டர் இசாக்சன் என்பவர் அண்மையில் வெளியிட்டார்.அதில் ஸ்டீவ் மனைவி, சகோதரி, நண்பர்கள், மருத்துவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கடைசி 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் நடத்திய நேர்காணல்கள் மூலம் கிடைத்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தகத்தின் சீனா பதிப்பு அந்நாட்டின் 21 முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட 30 புத்தக கடைகளில் விற்பனைக்கு வந்தது. காலை 6 மணி முதலே புத்தகத்தை வாங்க கடைகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன. ரூ.550க்கு விற்பனையான ஸ்டீவ் பற்றிய புத்தகத்தை பல்வேறு வயதுடையோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து வாங்கிச் சென்றனர். சிலர் ஓன்லைன் மூலம் பதிவு செய்தும் வாங்கினர்.
பள்ளி மாணவர்களுக்கு சைவ உணவுகளை தடை செய்த பிரான்ஸ் அரசு.
பிரான்ஸ் பள்ளிகளில் உள்ள உணவகங்களில் வழங்கப்படும் உணவில் சத்து குறைவாக இருப்பதால் சைவ உணவை தவிர்த்து மாமிச உணவைத் தர வேண்டும் என அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது.இதை எதிர்த்து பாரீசில் 20க்கும் குறைவான எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். பிரான்சின் சைவ உணவுக்குழுவான L214, பிரான்சின் விவசாய அமைச்சக அலுவலகத்தின் முன் நின்று அரசானது பிரான்சில் உள்ள 6 பில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு மாமிச உணவை தீவிரமாக திணிக்கிறது என்று கூறினர்.
பள்ளி உணவகங்களில் உண்ணும் குழந்தைகளுக்கு சத்துணவு தேவைப்படுகிறது. அதாவது அவர்கள் உண்ணும் உணவில் இரும்பு, புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் மற்றும் பழங்கள் இடம் பெற வேண்டும் என சட்டம் அமல்படுத்தப்பட்டது.மேலும் தரப்படும் உணவில் தொடர்ந்து புரோட்டீன் இடம்பெற வேண்டும். அரிசி அல்லது காய்கறிகள், பால் பொருட்கள், ஆவியில் வேக வைத்த பண்டங்களான இட்லி, ஆப்பம், களி போன்றவை இடம் பெற வேண்டும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.
புதிய சட்டமானது வெளிப்படையாக சைவ உணவுகளை தடை செய்யவில்லை என சைவ உணவுக் குழுவைச் சேர்ந்த L214 உறுப்பினர் பிரிகிட்டி கோதிரீ கூறினார்.மேலும் புரோட்டீன் அதிக அளவில் மாமிச உணவில் இருப்பதால் தான் அரசு இவ்வாறு கூறியுள்ளது என்றும், 4 உணவுகள் தரமான மாமிச உணவாகவும், 4 தரமான மீன் உணவாகவும், மற்ற நாட்கள் முட்டை, பாலாடை மற்றும் தயிர் முக்கியமான உணவாக அமையும் என்று அரசு அறிவித்ததாக கூறினார்.
கிபைபெல்லே கூறுகையில், தங்கள் குழந்தை மாமிசம் சாப்பிடுவதை விரும்பாதோர், தங்கள் குழந்தைகளை பள்ளி உணவகங்களில் சாப்பிட அனுமதிக்கக் கூடாது என கூறினார்.பிரான்ஸ் அரசை எதிர்த்து கோஷமிடும் எதிர்ப்பாளர்களிடம், உணவு அமைச்சகத்தின் அறிவுரையாளர் மாத்யூ க்ரிகரி கூறுகையில், அரசானது பள்ளிகளில் சரிவிகித சத்துணவை வழங்க எண்ணுகிறது என்றார்.
துருக்கி நிலநடுக்கம்: இரண்டு நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு.
துருக்கியில் கடந்த வாரம் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் துருக்கியின் கிழக்குப்பகுதியில் கடும் சேதம் அடைந்தது.வேன் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.ஆயிரக்கணக்கானோர் இதில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 366 உடல்கள் மீட்கப்பட்டன. 1,301 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. துருக்கியின் எர்சிஸ் மாவட்டத்தில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளங் குழந்தை நில நடுக்கம் ஏற்பட்ட 2 நாட்கள் கழித்து இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.பெற்றோரை இழந்த அந்த குழந்தையை நிவாரண முகாமில் வைத்து டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள். ஈரான் எல்லையில் உள்ள 75 ஆயிரம் மக்கள் வசித்த நகரில் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் தரைமட்டமானது. அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்தது.
இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும். மீட்பு பணிக்கு வெளி நாடுகளின் உதவி தேவையில்லை என்று துருக்கி அரசு மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் சப்ளை செய்வதில் 26 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மீட்பு வாகனங்கள் எந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 3 ஆயிரம் வீரர்களும், 355 என்ஜினீயரிங் வாகனங்களும் ஈடுபட்டுள்ளன. 100 ஆம்புலன்சுகள் அவசர சிகிச்சை உதவிக்கு தயார் நிலையில் உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF