Wednesday, October 12, 2011

இன்றைய செய்திகள்.

அம்பாந்தோட்டையில் கடற்படையினர் - பொதுமக்கள் மோதல்: கடற்படையினர் உட்பட ஐவர் படுகாயம்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது அம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் தெற்காசிய கரையோர விளையாட்டுப் போட்டித் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போதே குறித்த  மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.மேற்படி கடற்படை உத்தியோகஸ்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இம்மோதல் சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லேரியா கொலையாளிகளை பாதுகாப்பதில் கோத்தபாய தீவிரம்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதில் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர கரிசனை காட்டி வருகின்றார். 
சில நாட்களின் முன் முல்லேரியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர, கோத்தாவின் வலதுகரமும் பாதாள உலக குழுவின் இணைப்பாளருமான துமிந்த சில்வாவி;ன் பாதாள உலகக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.துமிந்த சில்வா மஹிந்தவின் ஆலோசகரை கொலை செய்யப் போகின்றார் என்பது ஏற்கனவே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியும்.அதன் காரணமாக அதற்கு முந்திய தினம் இரவே பொலிசார் துமிந்தவின் ஆதரவாளர்கள் கையிலிருந்த பல துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஆயினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் பணிப்புரைக்கமைய அவை விடுவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் துப்பாக்கி சூடு நடக்கும் போதும் அப்பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிசார் கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருந்துள்ளனர்.அது மட்டுமன்றி காய்மடைந்த பாரதவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும் கூட பொலிசார் முயற்சிக்கவில்லை.
அடுத்ததாக கொலை நடந்து முடிந்தவுடன் அங்கிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக்கூ உடனடியாக கைமாற்றம் செய்யும்படியும் அதே வேளை கொல்லப்பட்ட பாரத மற்றும் காயமடைந்த துமிந்த சில்வா ஆகியோர்களை சுட்டது ஒரே துப்பாக்கிதான் எனவும் அறிக்கை எழுதுமாறு கோத்தபாய பணித்துள்ளார்.இதனால் உண்மையான குற்றவாளிகளை அல்லது என்னதான் நடந்தது என்ற ஓர் அறிக்கையினைக்கூட எழுத முடியாது பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் கடும் நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளதாக கொழும்பு இணைய செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் எதிர்க்கட்சியென்று ஒன்று இல்லை: அமைச்சர் நிமல் பரிகாசம்.
நாட்டில் எதிர்க்கட்சியொன்று இல்லாதிருப்பதாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பரிகாசம் செய்துள்ளார்..
ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஆதிக்கம் செலுத்தப் பட்டு வந்த அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அமோக வெற்றியீட்டியுள்ளது.இந்த அமோக வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கம் மீதும் மக்களால் வழங்கப்பட்ட உறுதியான நம்பிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
கிராமங்கள் மட்டுமன்றி நகரங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்துள்ளன. கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியிருந்த போதிலும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களினூடான தோல்வியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பாரிய வெற்றியல்ல.எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும். ஒரு நாடு சிறந்த நாடாக வளருவதற்கு அங்கு சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியொன்று அவசியம். எமது நாட்டில் அப்படியான எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்காக நான் வருந்துகிறேன்.
பதுளையில் 25 சதவீதமானோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 6 ஆயிரத்து 500 மேலதிக வாக்குகளை எமக்குப் பெற்றுத் தந்துள்ளமை அனைத்து இன மக்களுக்குமிடையிலான ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறது.
அரசாங்கம் முடிவை நோக்கிப் பயணிக்கின்றது: ரணில் விக்கிரமசிங்க.
அரசாங்கத்தை முடிவு நோக்கி இட்டுச் செல்லும் போராட்டத்தை கொழும்பு வாழ் வாக்காளர்கள் ஆரம்பித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஏனைய வாக்காளர்களும், இந்த போராட்டத்தில், முழு மனதுடன் ஒன்றிணையும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
அரச அதிகாரங்களையும், அரச வளங்களையும் உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் மூன்று கட்டங்களாக உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்தியது. தமக்கு சாதகமாக இடங்களில் தேர்தலில் வெற்றிப்பெற்று, அந்த வெற்றியின் அழுத்தங்களை வேறு பிரதேசங்களுக்கு கொடுக்கும் நோக்கத்தில் அரசாங்கம் தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்தியது.
நடந்து முடிந்த தேர்தலில் அரசாங்கம், தேர்தல் சட்டங்களை கவனத்தில் கொள்ளாது, அவற்றை முற்றாக மீறி செயற்பட்டது. கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்காக அரசாங்கம் பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டது.எனினும் கொழும்பு நகரில் உள்ள புத்திசாலித்தனமான மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளனர். கொழும்பு நகர மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது மரியாதையை செலுத்துகின்றது.
இதேவேளை கட்சி; தலைமைத்துவத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.
கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போராட்டத்தைப் தொடரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றமையினால் போராட்டத்தை ஒத்தி வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கட்சியை மேலும் நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது என்ற காரணத்தினால் தேர்தல் காலத்தில் அமைதியை பேணியதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அடைந்து வரும் தோல்விகளுக்கு யார் பொறுப்பு என்பதனை அனைவரும் அறிவார்கள். 58 ஆண்டுகளாக ஐ.தே.க.வினால் நிர்வாகம் நடத்தப்பட்டு வந்த கண்டி மாநகரசபையும் இம்முறை கைநழுவிப் போயுள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக்குழு விரைவில் தீர்மானிக்கும் என்றும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பு அவசியம் : ஜனாதிபதி.
நாட்டில் போதைப் பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையின் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு ஒதுக்கம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் பாரியளவிலான சேவையை வழங்கினர்.
அதேபோன்று தற்போது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண படையினரின் ஒத்துழைப்பு அவசியம்.அண்மையில் கொழும்பைச் சேர்ந்த மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியதாகவும் அதன் போது நாட்டில் நிலவும் போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பலர் கோரியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு பணத்திற்காக சிலர் ஜனாதிபதிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர் : பெசில் ராஐபக்ஸ.
வெளிநாட்டு பணத்திற்காக சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.டொலர்களுக்காகவும், யூரோக்களுக்காகவும் இவ்வாறு ஒரு சிலர் ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தீவிரம் காட்டுகின்றனர்.
முப்பது ஆண்டுகளாக நாட்டை பீடித்திருந்த பயங்கரவாதத்திலிருந்து மக்களை விடுவித்து, அபிவிருத்தித் திட்டங்கனை முன்னெடுத்து வரும் தேசிய தலைவனுக்கு எதிராக சிலர் சதித் திட்டங்களை தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுகோகொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு வழிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, எனினும் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முகாம்களில் தங்கியிருந்த 37 இலங்கை தமிழ் அகதிகள் இன்று கப்பலில் நாடு திரும்பினர்.
இலங்கையில் வட,கிழக்கு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்களில் ஒரு தொகுதியினர் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர்.இந்த முதல் தொகுதி அகதிகளில் 15 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் அடங்குகின்றனர்.  தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான வர்த்தக கப்பலிலேயே இவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

இவர்களை வரவேற்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அகதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் ஆளுநரின் ஏற்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புரிந்துணர்வின் அடிப்படையில் இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக வயதுவந்த ஒருவருக்கு தலா 10,000 ரூபா வீதமும் சிறுவர்களுக்கு தலா 7,500 ரூபா வீதமும் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவிலிருந்து இவ்வாண்டு 1400 அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய மாநாட்டில் மஹிந்த ராஐபக்ஷவை கனேடியப் பிரதமர் சந்திப்பார்?
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்  குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் ஹாபர் சந்தித்து பேசவுள்ளதாக நம்பப்படுகிறது.அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கனேடியப் பிரதமர் சந்திக்கவுள்ளதாக நம்பப்படுகிறது.
'பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனேடியப் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். மேற்படி விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பமென நான் நினைக்கின்றேன்' என கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி நேற்று தெரிவித்தார்.சில ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதுபோன்று  கனேடியப் பிரதமர்  2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை  பகிஷ்கரிக்க மாட்டாரெனவும் அவர் கூறினார்.
'இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் குறிப்பிடவில்லை. யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் சில சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாவிடின் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது கடினமானதென்றே கனேடியப் பிரதமர் கூறினார்.  இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் உள்ளன' என புரூஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.
போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தல்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் பாரிய மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஏற்கெனவே அவுஸ்திரேலியா வலியுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்த அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல்ஷெட்டி அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு ரீதியான விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என ஷெட்டி சுட்டிக்காட்டியுள்ளார். சுயாதீனமான விசார ணைகள் நடத்தப்படும் என நீண்ட காலம் காத்திருந்த போதிலும் பயன் ஏதும் கிட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்படாமல் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் குறிப்பாக லிபியா மற்றும் சிரியாவில் நடைபெற்ற கிளர்ச்சிகளின் போது அவுஸ்திரேலியா வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என ஷெட்டி நன்றி பாராட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் விசாரணையின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் எதிராக கட்சிக்குள் எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் இணைந்து தமக்கெதிராக சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக ஜனாதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு மஹிந்தவை எச்சரித்துள்ளது.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மரணத்தைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்விருவரும் ஆதரவாளர்களையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் தூண்டிவிடுவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாரத லக்ஸ்மன் கொல்லப்பட்டமைக்கு ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் பொறுப்புகூற வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா பகிரங்காக தெரிவித்துள்ளார்.கொல்லப்பட்ட மஹிந்தவின் ஆலோசகர் பாரத லக்ஸ்மனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மலர்ச்சாலைக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மலர்ச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவிற்கு, ஆத்திரமடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்தே ஜனாதிபதியை மலர்ச்சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அந்த இடத்திற்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் கூச்சல் குழப்பம் செய்வதற்கு பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் தயாராக இருந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்தே மலர்ச்சாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாரத லக்ஸ்மனின் வீட்டிற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று முற்பகல் 9.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்கு வந்த ஜனாதிபதி, வந்திறங்கியவுடன் மலர்ச்சாலைக்கு செல்வதாகவும் இதனால் அமைச்சர்கள் சிலரை அருகிலுள்ள ஏ.எச்.எம். பௌசியின் இல்லத்திற்கு வந்தீருக்குமாறும் கூறியுள்ளார்.இதன்படி 10 மணியளவில் சுசில் பிரேம்ஜயந்த, பசில் ராஜபக்ஷ உட்பட இன்னும் சிலர் அமைச்சர் பௌசியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி மலர்ச்சாலைக்குச் செல்லும் பயணத்தை இரத்துச் செய்தமையினால் அந்த அமைச்சர்கள் பாரத லக்ஸ்மனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி நேற்று முற்பகல் 11.30 அளவில் பாரத லக்ஸ்மனின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி அங்கு அவருக்கு உரிய மரியாதைக் கிடைக்கிவில்லையென்ற ஆத்திரத்தில் அங்கிருந்து 5 நிமிடங்களில் வெளியேறியுள்ளார்.இதனையடுத்து, பாரத லக்ஸ்மனின் கொலை தொடர்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவுடன் சுமார் 45 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்.
எகிப்து நாட்டு நிதியமைச்சரின் பதவி ராஜினாமா நிராகரிப்பு.
எகிப்து நாட்டின் நிதியமைச்சர் ஹசம் எல்பெப்லாவி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இருப்பினும் ஆளும் ராணுவ அரசு அமைச்சரின் ராஜினாமா கடித்ததை நிராகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் எவ்விதத்திலும் நேரடியான தொடர்பு இல்லை என்பதால் அவரது ராஜினாமா நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பணித்திறன் குறைந்த வேலைகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த முடிவு.
பணித்திறன் குறைந்த வேலைகளுக்கான ரோபோக்களைத் தயாரிக்க துபாயைச் சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.அபுதாபியில் உள்ள ராயல் குழும நிறுவனம் ஆள் உயரத்திலான ரோபோக்களைத் தயாரிக்க உள்ளது. மாதத்துக்கு 12 ரோபோக்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் குழுமத்தின் அங்கமான பார்சிலோனாவைச் சேர்ந்த பிஏஎல் ரோபாட்டிக்ஸ் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதன் விளைவாக வர்த்தக ரீதியில் மனித உயரத்திலான ரோபோக்களை உருவாக்கியுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் ரீம் எனப்படும் 1.65 மீட்டர் உயரமுள்ள ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரோபோக்கள் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த ரோபோவில் தாமாக செயல்படும் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது. டச் ஸ்கிரீன் உள்ளது. எத்தகைய தரையிலும் செயல்படக்கூடியது. இதனால் திறமை தேவைப்படாத பணியாளர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம்.சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற தேசிய கண்காட்சியில் இந்த ரோபோவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 20 ரோபோக்களுக்கு உடனடியாக முன் பதிவு செய்யப்பட்டது. இப்போது இத்தகைய ரோபோக்களை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாதத்துக்கு 12 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஜோரியென் குய்ஜ் தெரிவித்தார்.இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் ரோபோக்கள், வணிக வளாகங்கள், கண்காட்சி மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பயன்படுத்தும் அளவுக்கு இதன் செயல்பாட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் லித்தியம் பேட்டரி இருப்பதால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் இது 8 மணி நேரம் வரை செயல்படும். ஒரு ரோபோவின் விலை 2,69,157 டாலர். இந்திய மதிப்பில் ரூ. 1.44 கோடி. இத்தகைய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். ஆள் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு இத்தகைய ரோபோக்கள் வரப்பிரசாதமாகும்.
19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வட அட்லான்டிக் கடலில் எட்டாயிரம் அடி ஆழத்தில் 19 டன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.வட அட்லான்டிக் கடலில் 1917 பிப்ரவரி 9ல் ஜேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் குண்டு வீச்சால் எஸ்.எஸ்.மன்டோலா என்ற கப்பல் மூழ்கியது.
இக்கப்பலில் 1 லட்சத்து 11 ஆயிரம் பவுண்டு அன்றைய மதிப்பிலான ஆறு லட்சம் அவுன்ஸ் வெள்ளி இருந்தது. இது கிட்டத்தட்ட 19 டன்னுக்குச் சமம்.இன்றைய மதிப்பில் இந்த 19 டன் வெள்ளியின் மதிப்பு ஒரு கோடியே 90 லட்சம் டொலர். இக்கப்பலில் இருந்து வெள்ளியை மீட்கும் பணியை விரைவில் ஒடிசி அடுத்தாண்டு துவக்க உள்ளது.
மீட்கப்படும் வெள்ளியில் 80 சதவீதம் ஒடிசி நிறுவனத்துக்குச் சேரும். ஆழ்கடலில் புதைந்து போன இதுபோன்ற கப்பல்களை இதற்கான சிறப்புக் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பதில் புகழ்பெற்றது.சமீபத்தில் அதே வடஅட்லான்டிக் கடலில் 70 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியோடு 1941ல் மூழ்கிய எஸ்.எஸ்.கெய்ர்சோப்பா என்ற கப்பலை இந்நிறுவனம் தான் கண்டுபிடித்தது. அக்கப்பலில் இருந்து 160 கி.மீ தொலைவில் தான் மன்டோலா கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி.
பிரிட்டன் ஐகோர்ட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரபீந்தர் சிங்(47) என்பவர் லண்டனில் உள்ள ராயல் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும் ஐகோர்ட்டின் நீதிபதியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2007ல் இந்திய டாக்டர்களின் குடியேற்ற உரிமை தொடர்பான வழக்கில் சிறப்பாக வாதாடியவர்.கடந்த 22 ஆண்டுகளாக பிரிட்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர். தனது நியமனம் குறித்து அளித்த பேட்டியில்,"எனது பணி மூலம் நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க முயல்வேன்” என ரபீந்தர் சிங் கூறினார்.
மியான்மர் நாட்டில் 6300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு.
மியான்மர் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மியான்மர் அதிபரின் இந்திய வருகைக்கு முன்பாக இன்னும் ஓரிரு நாட்களில் இவர்கள் விடுவிக்கப்படுவர். மியான்மரில் ராணுவ ஆட்சி அமலில் இருந்த போது பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், அரசுக்கு எதிராகப் போராடிய புத்தமதத் துறவிகள் என ஆயிரக்கணக்கானோர் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்தாண்டின் இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அதிபராக தெய்ன் செய்ன் பொறுப்பேற்றார்.மியான்மர் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு கோரியும், அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிறையில் உள்ள 6,300 கைதிகளுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க இருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் நேற்று அறிவிக்கப்பட்டது. எனினும் எத்தனை பேர் விடுவிக்கப்படுவர் எனத் தெரியவில்லை.இவர்களில் அரசியல் கைதிகள் என 1,900 பேர் இருப்பதாக அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்களில் 1,250 பேர் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர்.இந்த பொது மன்னிப்பு அரசியல் கைதிகளையும் உள்ளடக்கியதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த மே மாதம் 15 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 2009ல் ஏழாயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் இவர்களில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் அதிபர் தெய்ன் செய்ன் முதன் முறையாக இந்தியாவுக்கு வர உள்ளார்.அவரது வருகையை ஒட்டி இன்னும் ஓரிரு நாட்களில் கைதிகள் விடுவிக்கப்படுவர் எனத் தெரிகிறது. மியான்மர் அரசின் இந்த முடிவை அவுங் சான் சூச்சி வரவேற்றுள்ளார்.
பீரங்கிகளை ஏற்றி மக்களை கொன்று குவித்த ராணுவம்: மக்கள் கொந்தளிப்பு.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் பலியானோரின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைகளுக்கு காப்டிக் போப் அழைப்பு விடுத்துள்ளார். எகிப்தின் தென்பகுதியில் உள்ள அஸ்வான் மாகாணத்தில் ஒரு சர்ச் முஸ்லிம்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதைக் கண்டித்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் கடந்த 9ம் திகதி கிறிஸ்தவர்களால் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.பேரணியை கலைப்பதற்காக அதில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் பீரங்கிகளை ஏற்றியது. கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் 25 பேர் பலியாயினர்.
நேற்று முன்தினமும் இருதரப்புக்கும் மோதல் தொடர்ந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் பலியானோரின் இறுதிச் சடங்குகள் கெய்ரோவில் நடந்தன.அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ராணுவத்துக்கு எதிராக கோஷமிட்டனர். ராணுவ ஆட்சித் தலைவர் முகமது உசேன் டன்டாவி பதவி விலகக் கோரி வலியுறுத்தினர்.
எகிப்திய காப்டிக் சர்ச், ராணுவ வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைகள் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காப்டிக் போப் மூன்றாம் ஷெனுடா,"ராணுவத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். பேரணியில் ஊடுருவிய கூலிப்படையினர் நடத்திய வன்முறைகளுக்கு எங்களைக் குற்றம்சாட்டுகின்றனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.சம்பவம் நடந்த இடங்களில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பலியானோரில் பெரும்பாலோர், பீரங்கிகளால் நசுக்கப்பட்டும், பலர் துப்பாக்கிக் குண்டுகளாலும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீரங்கிகள் ஏவப்படும் முன் கூலிப்படையினர் தங்களைக் கடுமையாகத் தாக்கியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இனி மேலும் போராட்டங்கள் நடக்குமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது.நவம்பர் 28ம் திகதி அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது, ராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பொலிசாரை தேனீக்கள் கொண்டு விரட்டியடித்த கடத்தல்காரர்கள்.
கள்ள சிகரெட் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிய பொலிசார் இவ்வாறு நடக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பெட்டிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த தேன் கூடுகளை கடத்தல்காரர்கள் கலைத்து விட பொலிசாரை ஓட ஓட விரட்டி கொட்டித் தீர்த்தன தேனீக்கள்.கடத்தல்காரர்களில் இந்த விசித்திர ட்ரீட்மென்ட் துருக்கியில் நடந்தது. துருக்கியில் சிகரெட் விற்பனைக்கு தடை உள்ள பகுதி அடானா. அங்கு கள்ள சிகரெட் பண்டல்களை லாரியில் சிலர் கடத்துவதாக தகவல் வந்தது. உடனே 15 பொலிஸ் அதிகாரிகள் சோதனை சாவடியில் குவிந்தனர்.
சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கினர். லாரி கதவை திறந்ததுதான் தாமதம்... கடத்தல்காரர்கள் குச்சி விட்டு ஆட்டி கலைத்து விட்ட தேன்கூடுகளில் இருந்து படையெடுத்தன தேனீக்கள்.பொலிசாரை விரட்டி விரட்டி கோபம் தீரும் வரை கொட்டித் தீர்த்தன. இந்த அதிரடி தாக்குதல் பற்றிய ஐடியா இல்லாமல் நிராயுதபாணியாக வந்த போலீசாருக்கு உடல் முழுவதும் வீக்கம். பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.
ஒருவழியாக கடத்தல்காரர்களின் இந்த அதிரடி அட்டாக்கை சமாளிக்க தேனீ வளர்ப்பவர்களை பொலிசார் வரவழைத்தனர். அவர்கள் போர்வைகள், தீப்பந்தங்களை பயன்படுத்தி தேனீக்களை விரட்ட லாரிக்குள் பதுங்கியிருந்த 3 கடத்தல்காரர்களை தேனீக்களிடம் கொட்டு வாங்காத பொலிசார் கைது செய்தனர்.கடத்தல்காரர்கள் தப்பிக்க தேனீக்களை கையாள்வது புது உத்தியாக இருக்க, 2009ம் ஆண்டு செப்டம்பரில் தேன்கூடுகளை ஏற்றி வந்த லாரி&வேன் மோதியதில் 6 பேர் காயத்துடன் உயிருக்கு போராடினர்.அது தெரியாமல் மோதலில் கிளம்பி விட்ட தேனீக்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல காயமடைந்தவர்களை கோபம் தீர கொட்டித் தீர்த்தன. அதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும்: ஐ.நா தகவல்.
உணவு பொருட்கள் விலை உயர்வு நீடிக்கும். அதனால் விவசாயிகள், நுகர்வோர், நாடுகள் ஏழ்மை, பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா உணவு அமைப்பின் அறிக்கை எச்சரித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகளில் ஒன்று ஐ.நா உணவு ஏஜென்சி. இத்தாலியின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்ட அது தனது ஆண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு: 2006 முதல் 2008ம் ஆண்டு வரை ஏற்பட்ட சர்வதேச உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை ஏழை மற்றும் வளரும் நாடுகள் இப்போதும் சந்தித்து வருகின்றன.உணவு பொருட்களின் விலை உயர்வு நீடிக்கக்கூடும். மேலும் உயரவும் வாய்ப்புள்ளது. அதனால் ஏழை விவசாயிகள், நுகர்வோர் மற்றும் நாடுகள் ஏழ்மை மற்றும் உணவு பாதுகாப்பற்ற நிலையை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக சிறிய மற்றும் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகள் இந்த அபாயத்தில் உள்ளன. ஆப்ரிக்க நாடுகள் இந்த ஆபத்தை அதிகம் எதிர்நோக்கியுள்ளன. 2015ம் ஆண்டுக்குள் பட்டினியில் வாடுவோர் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் ஐ.நா.வின் முயற்சிக்கு உணவுப் பொருட்கள் விலை உயர்வு பெரும் சவாலாக உள்ளது.
நுகர்வோரிடம் உணவு பொருட்கள் தேவை தொடர்ந்து அதிகரிக்கும். மக்கள் தொகை உயர்வால் அதை தவிர்க்க முடியாது. அதேநேரம் சப்ளை குறைவால் விலை உயர்ந்து ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்க முடியாதவையாக இருக்கும்.தொடரும் மோசமான வானிலை மாற்றங்கள் மற்றும் விவசாயம், எரிபொருள் சந்தை இடையேயான வலிமையான தொடர்பு ஆகியவற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் உணவு பொருட்கள் விலை நிச்சயமற்ற நிலையில் உயர்வை சந்திக்க கூடும். இவ்வாறு ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய பேய் மிளகாயை சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
உலகிலேயே காரமான இந்திய மிளகாயில் செய்த கிரேவியை சாப்பிட்டவர்கள் குடல் வெந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் “த கிஸ்மத்” என்ற ஹொட்டல் உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடத்தி வருகிறார்.
இந்திய, வங்கதேச பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும். அசாம் மிளகாயில் செய்யப்படும் “கிஸ்மத் கில்லர்” எனப்படும் கிரேவி இங்கு பிரபலம்.அசாமின் “பூட் ஜோலோகியா” என்ற வகை மிளகாய்தான் உலகிலேயே காரமானதாக கருதப்படுகிறது. கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. இதை அமெரிக்கர்கள் “இந்திய பேய் மிளகாய்” என்கின்றனர்.
இதை பயன்படுத்தி செய்யப்படும் கிரேவியை மேலும் பிரபலப்படுத்த கிஸ்மத் ஓட்டல் நிறுவனம் ஆண்டுதோறும் போட்டி நடத்துகிறது. உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல என்று ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த வாரம் நடந்தது. 20 பேர் பங்கேற்றனர். அசாம் மிளகாயுடன் மேலும் காரமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து மிகுந்த காரமாக தயாரிக்கப்பட்டிருந்த கிஸ்மத் கில்லர் கிரேவியை முதலில் 10 பேர் சாப்பிட்டனர்.
சிறிது நேரம் தான் கடந்தது. அவர்களது கண்ணிலும் மூக்கிலும் நீர் கொட்டியது. முகம் வியர்த்தது. காரம் தாங்க முடியாமல் பலரும் தரையில் விழுந்து புரண்டனர். சிலர் ரத்த வாந்தி எடுத்தார்கள்.அவர்களது நிலையை பார்த்ததும் மீதி 10 பேரும் போட்டியில் இருந்து உடனே ஜகா வாங்கினர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பெவர்லி ஜோன்ஸ், கியூரி கிம் ஆகிய 2 பெண்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“எவ்வளவோ காரம் சாப்பிட்டிருக்கிறோம். இந்த அளவுக்கு சாப்பிட்டதில்லை. கிஸ்மத் கிரேவி சாப்பிட்டதும் வயிற்றை ரம்பம் வைத்து அறுத்து, அந்த காயத்தில் மிளகாய் தடவியதுபோல இருந்தது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.குழந்தைகள் நல திட்டங்களுக்கு நிதி திரட்ட இப்போட்டி நடத்தப்படுவதாக ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா, இதுபோன்ற போட்டி நடத்துவது சரிதானா என்று சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு கப்பல் கடத்தல்: சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்.
லிவர்பூலில் இருந்து வியட்நாம் நோக்கி இத்தாலியைச் சேர்ந்த தனியார் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.இரும்பு தாது ஏற்றப்பட்ட அந்த கப்பலில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 பேர் இத்தாலியர்கள், 10 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர 6 பேர் இந்தியர்கள்.
இக்கப்பல் சோமாலியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை கடத்திச் சென்று விட்டனர்.அந்த கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இத்தாலி ஈடுபட்டுள்ளது.
சிரியாவில் கலவரம்: 30 பேர் பலி.
சிரியாவில் ஆட்சி மாற்றம் தொடர்பாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சிரியாவின் தலைநகரான நிகோசியாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது.இதில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இம்மோதல் கலவரமாக வெடித்தது.
இத்தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்துக்கு மனித உரிமை கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஜப்பானின் புதிய திட்டம்.
அழகிய தீவுகளை கொண்டது ஜப்பான் நாடு- இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இதன் மூலம் நாட்டிற்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானின் புகுஷிமாவில் நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதனால் புகுஷிமா அணு உலை வெடித்ததில் கதிர்வீச்சு வெளியாகி பரவியது.
கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து காக்க அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கலக்கமடைய செய்தது. எனவே, ஜப்பானுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. இது அந்தநாட்டு அரசை கவலை அடைய செய்துள்ளது.
தொய்வடைந்து கிடக்கும் நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அரசு அதிரடி திடடமிட்டுள்ளது. அதற்காக 10 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விமான பயணம் வழங்கப்படுகிறது. இந்த திடடம் அடுத்த ஆண்டு அமலுக்கு வர உள்ளது.இலவச விமான பயணத்துக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி மேம்படும் என்ற நம்பிக்கையில் ஜப்பானியர்கள் உள்ளனர்.
இந்தோனேஷியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இரண்டு குழந்தைகள் பலி.
இந்தோனேஷியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கியதில் 2 குழந்தைகள் பலியாகினர். இந்தோனேஷியாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது.இதனால் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. போர்டு புளு என்ற வைரஸ் கிருமிகள் தாக்கியுள்ளதால் பெரும்பாலான கோழிகள் மற்றும் பறவைகள் செத்து மடிகின்றன. இந்த நோய் அங்குள்ள பாலி தீவில் பெருமளவில் தாக்கியுள்ளது.
இந்த நோய் தாக்கிய கோழி இறைச்சியை சாப்பிட்டவர்கள் பறவை காய்ச்சல் நோய் தாக்குதலுக்கு ஆளாகி சாங்க்லா என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 10 வயது சிறுவனும், அவனது தங்கையும் உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF