Tuesday, October 16, 2012

மேல் சிகிச்சைக்காக இன்று பிரித்தானியா செல்கிறார் சிறுமி மலாலா!

தலிபானியர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா, மேல் சிகிச்சைக்காக இன்று பிரித்தானியா அழைத்துச் செல்லப்படுகிறார்.பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா நகரைச் சேர்ந்த பள்ளிச்சிறுமி மலாலா யூசுப் சாயை(14 வயது ), தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் கொலை செய்ய முயற்சித்தனர்.
இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்தன.இதில் படுகாயமடைந்த மலாலா, பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் இன்று பிரிட்டன் அழைத்துச் செல்லப்படுகிறார்.அமைதி குறித்து பல்வேறு பேச்சுப்போட்டிகளிலும் தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த இவர், பெண்கல்வி குறித்து பேசியதற்காக சுடப்பட்டார் என கூறப்படுகிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, October 4, 2012

தங்கத்தை உருவாக்கும் பக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு!!!


சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய "கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.

இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, October 3, 2012

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்!


நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.இது இப்போது சூரியனின் வட்டப் பாதையில் 20 லட்சம் மைல் தொலைவில் பர வளையத்தில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரம் சூரியனின் வெளிவட்டப் பாதையில் உள்ள ஊர்ட் பகுதியில் உருவானதாக கருதப்படுகிறது. இங்கு தான் மிக அதிக அளவிலான உறைந்த குப்பை கூளங்கள் உள்ளன.

இந்த வால் நட்சத்திரம் இப்போது வியாழன் கிரகத்தின் உள்வட்டப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது அப்படியே படிப்படியாக பூமியை நோக்கி வரும் என்றும் நம்பப்படுகிறது.அழுக்குகள் நிரம்பிய ஐஸ்பந்தாக சுற்றிவரும் இஸ்கான் வால் நட்சத்திரம் நிலவை விட அதிக ஒளியை உமிழ்ந்தபடி இருப்பதால் இதை பகல் நேரத்தில் வெறும் கண்ணால் காண முடியும். கடந்த நூறாண்டுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இஸ்கான் எரிநட்சத்திரம் அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாலை வேளையில் லண்டனில் தெரியும் என பிரபல வானியல் அறிஞர் ராவின் ஸ்கேகெல் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, October 1, 2012

முஸ்லிம்களுக்கு எதிரான படம்: பாகிஸ்தானில் இந்து கோவில்கள், வீடுகள் சூறையாடல்!


முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தின் போது இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன.
அமெரிக்காவில் Innocence of Muslim என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர்.பாகிஸ்தானில் இது தொடர்பாக இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை மூண்டது.

கராச்சியில் கடந்த 21ஆம் திகதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குல்ஷன்-இ-மேமர் என்ற பகுதியில் வசித்த இந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.இதே பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கோவிலிலிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. விலை உயர்ந்த நகைகளும், பூஜை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.இது தொடர்பாக இப்பகுதி இந்துக்கள் பொலிசில் புகார் செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து பாதிக்கப்பட்ட இந்துக்கள் குறிப்பிடுகையில், நாங்கள் என்ன அமெரிக்கர்களா? நாங்கள் இந்தியர்களும் கிடையாது. பாகிஸ்தானில் தான் வசிக்கிறோம்.எதற்காக எங்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியதாக கூறி போராட்டம் நடத்தியவர்கள் ஏன் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF