Tuesday, July 31, 2012

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக!

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விடயம் உள்ளது.அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும்.

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள்: நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர்.அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை: எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும்.ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது.மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி: கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!


உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தைவிரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.


குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி!


இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம்.ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும்.எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

HP அறிமுகப்படு​த்தும் புதிய Slate 8 கணினிகள்!


கணனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான HP ஆனது Slate 8 எனும் நவீன ரக கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த புதிய கணனியானது 10.1 அங்குல திரையைக் கொண்டதாகக் காணப்படுவதுடன், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது தொடர்ச்சியாக எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன்: ஆய்வின் மூலம் நிரூபணம்!


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.


அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது.இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 21, 2012

நீரின்றி அமையாது உலகு!


தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது புண்ணியம் என்று சொல்வார்கள். தமிழர் பண்பாட்டில் வீட்டிற்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுப்பது வழமை. கோடைக்காலத்தில் குடி தண்ணீர், மோர் இவையெல்லாம் வைத்து வெப்பத்தையும், தாகத்தையும் தணிக்க மக்கள் பொது நல மனப்பான்மையோடு பொது இடங்களில் வைக்கப்படுவதும் நாம் அறிவோம். ஆனால் காலப்போக்கில் இந்த நற்செயல்கள் காணக்கிடைக்குமா என்பது சந்தேகத்தில் நிற்கும் நிலை. மக்களுக்கு பொது நலம் குன்றிவிட்டது, சுயநலவாதிகளாக அனைவரும் மாறிவிட்டனர் என்பது மட்டும் இதன் பின்னணி காரணமாக இருக்கமுடியாது என்பது மட்டும் உண்மை. ஆம் நேயர்களே.


இன்றைக்கு உலக வரைபடத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நாளடைவில் பெருகி வருவதும், பூமியின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது ஆனால் குடிநீரின் அளவோ அருகிக்கொண்டிருக்கிறது என்ற நிதர்சனமும், உலக வெப்ப ஏறல் உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அச்சுறுத்தல்கள் மெதுவாக அதிகமாகி வருகிற உண்மையும், உலகில் அடுத்த நிகழும் மாபெரும் போர், நில எல்லைகளை ஆளுமைப்படுத்தும் நோக்கிலோ, அல்லது பொருளாதார வளங்களை தன்வயப்படுத்தும் நோக்கிலோ அமையாது ஆனால் தண்ணீருக்காக உயிர்பலிகள் நிகழும் கொடும்போர் மூளும் என்று சொல்லும் அறிஞர்கள், வல்லுனர்களின் கூற்றை நம்பசெய்கிறது.


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்று தேட புறப்பட்டால் உலகின் பல்வேறு நாடுகளின் பெயர்கள் நமது பட்டியலில் இடம்பிடிக்கும். உலக மக்கள் தொகையின் இருபெரும் புள்ளிகளான சீனாவும், இந்தியாவும், உலகின் மிக முன்னேறிய நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவும், ஏழைக் கண்டமான ஆப்பிரிக்காவின் பல நாடுகளும் வறட்சிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு சீனாவின் சொங்சிங் மற்றும் சிச்சுவான் பகுதிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்திராத வறட்சிக்கு உட்பட்டுள்ளன.


சுட்டெரிக்கும் வெப்பநிலை சொங்சிங் நகராட்சியின் மூன்றில் இருபகுதி ஆறுகள் மற்றும் நீரூற்றுகளையும், 471 நீர்த்தேக்கங்களையும், 10 ஆயிரம் கிணறுகளையும் வற்றச்செய்துள்ளது. இந்நகராட்சியின் மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் செயலற்றுள்ளன. 1.31 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களும், 73 லட்சம் கால்நடைகளும் தற்காலிக தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாயினர். சொங்சிங்கில் மட்டுமே இந்த வறட்சியால் 6.13 பில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு பகுதியின் இழப்பும், பாதிப்பும் இவ்வளவு, ஆனால் சீனாவின் மொத்தம் 11.13 ஹெக்டேர் நிலப்பரப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 75 லட்சம் மக்களும், 1 கோடியே 66 லட்சம் கால்நடைகளும் குடிநீர் பற்றாக்குறைக்கு ஆளாயினர். சீனாவில் இழப்பு இப்படி என்றால், மற்ற நாடுகளும் இதே ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதை அறியும் போது நமது சிந்தனை கொஞ்சம் அச்சம் கலந்த கேள்விக்குறியில் சிக்கிக்கொள்கிறது.


கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதலான வெப்பநிலையுடன்கூடிய கோடைக்காலத்தை அமெரிக்க மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை, விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என்பதோடு, இதன் தொடர்ச்சியாக உலக உணவு பொருள் வினியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆய்வாளர்களை பொருத்தவரை சந்தேகம் என்ற நிலையைக் கடந்து, வறட்சியால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் குறைவான வேளான் உற்பத்தி, குறைவான வேளான் உற்பத்தியால் ஏற்படும் உணவு பொருள் தட்டுப்பாடு என்று சங்கிலித் தொடராக பிரச்சனைகள் நீண்டு கடைசியில் உலக உணவு பெருள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையும், நீலத்தங்கம் எனப்படும் தண்ணீர் எப்படி உலகை ஆட்டுவிக்கப்போகிறது என்பதும் எதிர்காலத்தில் நிகழப்போகும் உண்மைகள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, July 20, 2012

பூமி எவ்வளவு அழகானது?


Terra Sacra புனித பூமி எனும் பெயரில் Sean F.White எனும் புகைப்படகாரர் வெளியிட்டுள்ள டைம் லேப்ஸ் முறையிலான டாக்குமெண்டரி இது. உலகை இதைவிட இவ்வளவு அழகாக யாராலும் காண்பிக்க முடியுமா எனும் ஆச்சரியத்தை தருகிறது.2006 முதல் 2012 வரை உலகின் உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 24 நாடுகளின், புராதன நகரங்களுக்கும், எழில்கொஞ்சும் இயற்கை பிரதேசங்களும் சென்று டைம்லேப்ஸ் முறையில் எடுத்த புகைப்படங்களை கொண்டு இவர் இவ்வீடியோவை உருவாக்கியுள்ளார். 


கனடாவில் பெரிய ஸ்கிரீனில் இந்த டாக்குமெண்டரியை முதன் முறையாக வைட் திரையிட்ட போது, அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இணையத்திலும் தற்போது வெளியிட்டுள்ளார். இன்னமும் தான் செல்லாத நாடுகளுக்கு சென்று அடுத்த டைம்லேப்ஸ் வீடீயோவை தயாரிக்க இப்போதே தயாராகிவிட்டார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மைக்ரோசாப்டின் நவீன Office 2013 இவ்வளவும் சாத்தியம்!


மைக்ரோசாப்டின் நவீன Office 2013 இல் உள்ள வசதிகள் பற்றிய வீடியோ தொகுப்பை இங்கே பார்வையிடுங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, July 16, 2012

முதன் முறையாக ஆதி மனிதனின் முழுமையான எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!


ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக் கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகள் முதன் முறையாக ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட்டை கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் கிடைக்கலாம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ஆம் ஆண்டு இந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.அதில் என்ன இருக்கிறது என்பதை கூட சரியாக கணிக்க முடியாததால், அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது.


இந் நிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்து விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூடு ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரியவந்தது.இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனிதன் இறந்த போது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.இந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.


காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித்த பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூடு கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

முதன் முறையாக வாழை ஜீனோமை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!


வாழையின் ஜீன் வரிசைக் கிரமத்தை(ஜீனோம்) முதன் முறையாக வெளியிட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பொருளாக வாழை விளங்குகிறது.பல்வேறு மருத்துவ சிறப்புமிக்க இந்த வாழை, ஒட்டுண்ணி மற்றும் பல காரணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சர்வ‌தேச அளவில் அதன் அறு‌வடை பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பிரான்ஸ் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஏஞ்சலிக் டி ஹாண்ட் கூறுகையில், வாழை வருங்காலத்தில் பெரும்சரிவை சந்திக்கும் என்று அனைவரும் அச்சமுற்றிருந்த நிலையில், வாழையின் ஜீனோம் வகைப்படுத்தப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.இது வரவேற்கத்தக்கக நிகழ்வு ஆகும். இந்த ஜீனோமின் மூலம், பூச்சிக்கொல்லி உதவியின்றி நோய்த் தாக்கு‌தலுக்கு எதிர்ப்பு திறன் கொண்ட புதிய வகை வாழையை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.இந்த தகவலை டிஸ்கவரி நியூஸ் வெளியிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 14, 2012

எலி குடித்த பால் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கும் எலிக்கோவில்!


இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கர்னிமாதா என்ற இடத்தில் எலிகளின் ஆலயம் காணப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான எலிகள் காணப்படுவதுடன், இந்த எலிகள் புனிதமாக மதிக்கப்பட்டு பக்தியுடன் பராமரிக்கப்படுகின்றன.இங்கு எலிகள் குடித்த பாலினை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது. மேலும் இங்கு பக்தர்கள் தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டால், அந்த ஆலயத்திற்கு தங்கத்தில் எலி செய்து கொடுக்க வேண்டும்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதனுக்கு புரியாத சிலந்திகளின் தொழில்நுட்பம்!

ஒவ்வொரு உயிரினங்களும் தமக்கென சில விசேட இயல்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. அவற்றிலும் சிலந்திகளின் வலை பின்னும் இயல்பானது இன்றுவரைக்கும் மனிதனை வியக்க வைக்கும் தொழில் நுட்பமாகவே காணப்படுகின்றது.இது தனது உமிழ் நீரில் பின்னும் வலையின் வலிமையும் சிக்கல் தன்மையுமே இதற்கு காரணமாகும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, July 13, 2012

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு!!!!


அணுத்தொடர் இயக்கம் புரிந்து
அணுசக்தி படைத்தது போல்,
உயிரியல் விஞ்ஞானத்தில்
முதன்முதலாய் டியென்ஏ
உருவாக்கியது போல்
அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
செர்ன் விரைவாக்கி யந்திரம்
பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
அரங்கேற்றி உருவாக்கும் !
கடவுள் துகள்
தடத்தைக் கண்டதாய்
அறிவிக்கும்.
ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில்
எதிர் எதிரே
புரட்டான்களை மோத விட்டு
எழும்சக்தி துகளாய் மாறும் விந்தை !
கனமான நுண் துகளே
பரமாணுக்கு நிறை அளிக்கும்
கடவுள் துகள் !
மூவான் நுண்துகள் மோதலில்
தோன்றும் !
அணுவுக்குள் நிலையற்ற
கனத் துகள் பிரபஞ்ச மூலக்
கண்காட்சி நடத்தும் !
பராமணு வயிற்றில்
வெடித்துப் பொரிக்கும்
குஞ்சுகள் !
குளுவான்கள் ! குவார்க்குகள் !
லிப்டான்கள் !
ஃபெர்மி யான்கள் !
ஹிக்ஸ் போஸான்கள் !


+++++++

1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது.   நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள் பொதுமக்களை விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன.   அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.


பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )


ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும்.  இது  டியென்ஏ  கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம்.   நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.


பேராசிரியர் பீட்டர் நைட்.

கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை.   15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது.   இந்த அறிவிப்பானது  “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.


பேராசிரியர் பீட்டர் நைட்.


“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”


ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)


“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”


ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)


“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.


டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

“பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”


ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)


“இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”


மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)


“மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”


ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

“இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”


ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)




“ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன.  டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம்.  உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை.  அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”


டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)


“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”


ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists).  இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”


ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)


“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது.  அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும்.  மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.


டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்


சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு  நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்”  போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ்  துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி  அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார்.    அந்தத் துகளின் பெயர் :  ஹிக்ஸ் போஸான் (Higgs Boson).    அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது  “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது.    கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது.   கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம்.   புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.


2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர்.  நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள்  உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments)  அறிவித்தார்.   இரண்டு சோதனைக் கருவிகளின் விளவுகளும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின.  இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது.   ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன.   விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள்.  2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.

ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?


இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும்.   இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ?   கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது,  அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே.   அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும்.    அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.


துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ?   நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள்,  அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.    பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு  மொத்தத்தில் 4%  மட்டுமே.   தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம்  வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.

ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்


கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது.  1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார்.   அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது.    ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.)   ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி,  அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில்  2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.


பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான்.  ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே  (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது.   ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே  அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம்.   ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும்.  ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள்.   அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர  நாத் போஸ் பெயரைத் தாங்கி  உள்ளன.   அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர்.   போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது.  அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State)  வைத்திருக்க அனுமதிக்கும்.   மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா.   நிற ஏற்றமும் இல்லை.  (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge)

பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்


வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.


புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப்பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).

1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !


விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்


ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?


1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.


2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)


3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
(Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.


5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.


6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.

செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?


செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.

இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.


அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.

இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கியுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2013 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்றுவதை எதிர்பார்க்க லாம் !  “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.

இத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி


2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார்.  அதாவது சிகாகோவில் இருக்கும் ·பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன்முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம்.  இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர்.  அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி ஃபெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ  வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார்.  ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.


பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது.  அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.

ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.  ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !


ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை.  எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை.  ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார்.  அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.

ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்


1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது.  1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் !  அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார்.  2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார்.  2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார்.  2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.

அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன.  இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன.  துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும்.  (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்).  இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன.  அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !

வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி !  அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை.  ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் !  2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது.  மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.

ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு


இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம்.  அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே.  உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.  கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது.  ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது.  எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது.  ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும்.  2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.    இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே.  இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும்.   கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று  துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 7, 2012

நாளை மறுநாள் இணையத்தை தாக்க வரும் வைரஸ்: தப்பிக்குமா உங்கள் கணணி?

இணையத்தில் உலவும் டி.என்.எஸ் சேஞ்சர் என்ற வைரஸ் இணையத்தை முடக்கி கணணியை செயலிழக்கச் செய்து விடும் என்ற தகவல் இணையதள உபயோகிப்பாளர்களிடம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9ம் திகதி செயலிழந்து விடும் என்கின்றனர் கணிப்பொறி வல்லுனர்கள்.


டி.என்.எஸ்(டொமைன் நேம் சிஸ்டம்) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணணிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது.தற்போது டி.என்.எஸ் சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயலிழக்கச் செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர்.இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கணணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு (எப்.பி.ஐ) மாற்று சர்வரை நிறுவியது.


இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9ம் திகதி செயல்பட தொடங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கணணிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியுங்கள்: எனவே டி.என்.எஸ் சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய நீங்கள் www.dns-ok.us இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும். வைரஸ் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.


பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9ம் திகதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இணையதள உபயோகிப்பாளர்கள்.வைரசை முற்றிலுமாக அழிக்க: ஒருவேளை உங்கள் கணணி பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணணியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது.விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணணியிலிருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான “அவிரா” ஒரு புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.டவுன்லோட் ஆகியதும் “exe” பைலை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணணி பாதுகாப்பாக உள்ளது.


எனவே இந்த மென்பொருள் உங்கள் கணணியில் இன்ஸ்டால் ஆகாது. ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணணியிலிருந்து அழித்து விடும்.மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணணிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF