Sunday, October 30, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை ஊடக நிறுவன உரிமையாளர் சிங்கப்பூரில் கைது.
இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரின் ஷாங்கி விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சிங்கப்பூர் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஊடக உரிமையாளர் கைதுசெய்யப்படும் போது, அவரிடம் 5 லட்சம் சிங்கப்பூர் டொலர்கள் இருந்துள்ளதுடன், இலங்கை கடவூச்சீட்டும், போலியான பிரித்தானிய கடவூச்சீட்டு ஒன்றும் இருந்தாக கூறப்படுகிறது.
குறித்த நபர் சிங்கப்பூர் டொலர்களை வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு குடிவரவு, குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சிங்கப்பூர் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்டவிரோத நாணய கடத்தல், போலிக்கடவுச்சீட்டு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
சரத் பொன்சேகாவுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! பாப்பாண்டவரிடம் ஐ.தே.க. கோரிக்கை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, பாப்பாண்டவர் பதினாறாம் பெனடிக் ஆண்டகையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வத்திக்கானில் வைத்து இது தொடர்பான விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படுவதற்கு சரத் பொன்சேகா முன்னின்று செயற்பட்டார் எனவும், படைத்தளபதியாக அவர் கடமையாற்றியதாகவும் ஜயலத் ஜயவர்தன, போப்பாண்டவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தலைமையில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அநீதி இழைக்கப்படுவது பெரும் அநியாயம் என்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.அத்துடன் பயங்கரவாதம் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியப் பெண்கள் கட்டுநாயக்கவில் கைது.
இலங்கைக்குள் சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்திவர முற்பட்ட பாகிஸ்தானியப் பெண்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடலுக்குள் மறைத்து வைத்து கடத்தி வர முற்பட்டபோதே பிரஸ்தாப இரண்டு பாகிஸ்தான் பெண்களும்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் என காவற்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கராச்சியில் இருந்து இலங்கை வந்த இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு பெண்களையும் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.
இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை உயர்வடைந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் டீசலின் விலை 8 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவுக்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சண்டேலீடர் ஊடகவியலாளர்கள் கோரிக்கை : விக்கிலீக்ஸ்.
இலங்கையில் ஊடக சூழலை மேம்படுத்த அமெரிக்கா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சண்டேலீடர் ஊடகவியலாளர்களான ஜேன்ஸ் மற்றும் முஸ்டாக் ஆகியோர் கோரிக்கை விடுத்தினர்.
இந்த தகவலை அமெரிக்க தூதரகம், வோசிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரு ஊடகவியலாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் கடிதம் வந்ததன் பின்னரே இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவி அலுவலக மேலாளர் வெலரி புளவர் இதனை இராஜாங்க திணைக்களத்துக்கு 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு தொடர்பில் வினவப்பட்டபோது தாம் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையே விரும்புவதாக இரண்டு ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இந்தக்காலப்பகுதியில் அமெரிக்க தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இராஜாங்க திணைக்களத்துக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 60 மாடி இரட்டைக் கோபுர நிர்மாணத்துக்கு வந்த இந்திய முதலீட்டாளர் மாயம்.
இலங்கையில் உயரமான 60 இரட்டைக் கோபுர கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கவிருந்த இந்திய முதலீட்டாளர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடம் பத்தரமுல்லையில் அமைக்கப்படவிருந்தது.
குறித்த முதலீட்டாளர் இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான உடன்படிக்கையை செய்துள்ளார். எனினும் தமது நிர்மாணத்தை அவர் இதுவரை ஆரம்பிக்கவில்லை.குறித்த 60 மாடி இரட்டைக் கோபுர கட்டிடத்தில் பத்தரமுல்லையில் இருந்து கொழும்புக்கு சென்று வருவதற்கான மெற்றோ ரெய்ல் சேவையும் உள்ளடக்கப்படவிருந்தது.
எனினும் நடராஜா என்ற குறித்த இந்திய முதலீட்டாளர் உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் இதுவரை இலங்கைக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இலங்கையின் முதலீட்டுசபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சீன முதலீட்டாளர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வீசா கட்டணத்தை குறைந்தது இலங்கை.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக வீசா கட்டணங்களை குறைக்க இலங்கை தீர்மானித்துள்ளது.இலங்கை அண்மையில் தெற்காசிய பயணிகளுக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டது.
இதன்படி வீசா கட்டணங்களை 50 டொலர்களாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.எனினும் இது இலங்கையில் சுற்றுலா சந்தையை கொண்டுள்ள இந்தியாவின் சுற்றுலா பயணிகளை பாதிக்கும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.இந்தநிலையில் ட்ரான்சிட் பயணிகளுக்கான வீசா கட்டணங்களை மாத்திரம் 50 டொலர்களாகவும் சிறுவர்களுக்கு இலவச வீசாவையும் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளதாக தகவல்.
இலங்கையின் கொழும்பு நகரத்தில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இதில் 45 பேர் ஹெரோய்ன் மொத்த வர்த்தகர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.தற்போது இலங்கையில் 10 முதல் 15 வரையிலான ஹெரோயன் மொத்த விற்பனையாளர்கள், மாபியா என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர்.இவர்களால் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் 25 கிலோகிராம் ஹெரோயன் பரிமாற்றப்படுகிறது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் சுமார் 300 பேர் ஹெரோய்னை 50 கிராம் மற்றும் 100 கிராம் என்ற அளவுகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி இலங்கைக்கு 90 வீதமான ஹெரோய்ன், பாகிஸ்தான் மற்றும் தென்னிந்தியா ஆகிய நாடுகளில் இருந்து எடுத்து வரப்படுகின்றன.இவை, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களின் ஊடாக இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன.
இதனை தவிர, ஹிக்கடுவ, திருகோணமலை, தலைமன்னார், மாரவில, பேருவளை, கல்முனை, அக்கரைபற்று, தொடுவேவ, மட்டக்களப்பு, அருகம்குடா, பாணந்துறை ஆகிய இடங்களுக்கும் ஹெரொய்ன் கிடைத்து வருகிறது.இந்தநிலையில் ஒரு கிலோகிராம் ஹெரொய்ன் இலங்கையில் 4.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பஷில் - நாமல் மோதல் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான மோதல் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது.
இவர்களின் பனிப்போர் அண்மையில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை இரத்து செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் இராணுவத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு பஷில் ராஜபக்சவிற்கு நெருக்கமான சிலர் ஊடாக முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கொடுக்கல், வாங்கல்கள் இறுதிசெய்துள்ள கெதிக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய மஹிந்த உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், காலிமுகத்திடலில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து பாரிய முதலீட்டுத் திட்டமொன்றை மேற்கொள்ள முன்வந்த டெல்டா கன்ட்ரக்ஸன் நிறுவனத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வேலைத் திட்டங்களும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஊடாக முதலீட்டுச் சபையினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
கெதிக் நிறுவனத்திற்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்ட அதே வேளை அதே பாணியில் எவ்வித கேள்விமனுக் கோரலுமின்றி ஷான்கில்லா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணி ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடல், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் ஷான்கில்லா விடுதி அமைக்கும் வேலைத் திட்டம் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச முன்னெடுத்துவரும் வேலைத் திட்டமாகும்.
காலிமுகத்திடல் காணி விவகாரம் : சீன நிறுவனம் - இலங்கை அரசாங்கம் மோதல்.
இலங்கையின் காலிமுகத்திடலுக்கு அருகில் பலநோக்கு கட்டிடத்தொகுதியை அமைக்கவுள்ள சீன நிறுவனம் அதற்கான முற்பணத்தை வழங்க மறுத்துள்ளது.
குறித்த கட்டிடம் அமையவுள்ள இடத்தை முழுமையாக விற்பனை செய்வதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கையை அடுத்தே இந்த மறுப்பை சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது.
CATIC என்ற இந்த சீன நிறுவனம், தமக்கான காணிப் பரப்பை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கு குறித்த நிலத்தை முழுமையாக விற்பனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிராக சட்ட உதவியை பெறவுள்ளதாக CATIC  நிறுவனம் கூறியுள்ளது.
இதற்காக முன்னர் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த காணிப்பரப்பு சங்ரி லா ஹோட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளமையை குறித்த சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.CATIC நிறுவனமும் இலங்கையின் நிதியமைச்சும் குறித்த நிர்மாணம் தொடர்பில் கடந்த பெப்ரவரியில் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டன.
இதன்படி 50 மில்லியன் டொலர்களை முற்பணமாக வழங்க வேண்டும்.  அத்துடன் மீதித்தொகையான 86 மில்லியன் டொலர்களை 2011 ஏப்ரல் 21க்குள் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.எனினும் அதனை சீன நிறுவனம் வழங்கவில்லை.இதன்காரணமாக அந்த நிறுவனத்துடனான உடன்படிக்கை ரத்தாகிவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தாம் சட்ட உதவியை பெறவுள்ளதாக CATIC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் புற்றுநோயால் அவதி.
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா(66). இவர் தொண்டை வலியால் அவதிப்பட்டார்.
எனவே சாபாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தொண்டை நோய் பாதித்து இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லுலா கடந்த 2003 முதல் 2010ம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்துள்ளார்.
லிபியாவிலிருந்து பிரிட்டன் படைகள் தாய்நாடு திரும்பும்: பாதுகாப்பு செயலர் அறிவிப்பு.
பிரிட்டன் படைகள் தம் பாதுகாப்புத்துறைச் செயலரின் வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு லிபியாவில் இருந்து தம் தாய்நாடு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலர் பிலிப் ஹேம்மோன்ட் குறிப்பிடுகையில், லிபிய மக்களின் விடுதலையை உறுதிப்படுத்தியதால் பிரிட்டன் படை வீரர்கள் தங்களின் கடின உழைப்பு குறித்து அளவற்ற பெருமை அடையலாம் என்று குறிப்பிட்டார். நேட்டோ படையானது ஓக்டோபர் 31ஆம் திகதியுடன் தனது பணியை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளது.
ஹேம்மோண்ட் தமது ஆறு டொர்னாடோ GR4 ஜெட் விமானங்களை உடனடியாகத் தம் நாட்டிற்குத் திரும்ப உத்தரவிட்டார். மற்ற போர் விமானங்களும் இரண்டு VC10 டேங்கர்களும் படைவீரர்களும் கண்காணிப்பு விமானமும் அடுத்தடுத்து பிரிட்டன் திரும்பும் என தெரிவித்தார்.
போரின் உச்சக்கட்டத்தில் பிரிட்டன் 2300 படைவீரர்கள், 32 போர் விமானம், 4 போர்க்கப்பல் அகியவற்றை லிபியாவில் வைத்திருந்தது. அப்போது 3000 முறைகள் விமானத் தாக்குதலுக்கு விமானங்கள் புறப்பட்டன. 2100 முறைக்கும் மேலாக தாக்கிய விமானங்கள் 640 இலக்குகளைத் தகர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கிய சர்கோசி.
பிரான்ஸ் அதிபர் சர்கோசி யூரோ நெருக்கடி பற்றி தெரிவித்த கருத்துகள் அவர் அடுத்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டுத் தொலைக்காட்சிக்கு 75 நிமிடம் “சவாலைச் சந்தித்தல்” (Face a’ la Crise) என்ற தலைப்பில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் ஐரோப்பாவின் கடன் நெருக்கடி குறித்து தெளிவாக விளக்கிக் கூறினார். இவருடைய விளக்கம் இன்றைய நெருக்கடியிலிருந்து பிரான்ஸ் உறுதியாக மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்தது.
அதே வேளையில் எதிர்த்தரப்பில் உள்ள சோசலிஸ்ட்வாதிகளுக்கு முடிவு கட்டுவதாகவும் அமைந்தது. அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக இந்தப் பேட்டியில் அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைப் போலவே அவருடைய பேச்சு அமைந்திருந்தது. தன்னுடைய பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி சிறப்பாக எடுத்துரைத்த அதே வேலையில் தன் எதிர்க்கட்சியின் சோசலிசக் கொள்கைகளையும் இவர் கடுமையாக எதிர்த்தார்.
எதிர்க்கட்சி தனது வேட்பாளராக பிராங்கோய்ஸ் ஹோலண்டேயின் பெயரை அறிவித்துவிட்டது. சர்கோசி இன்னும் தன் பெயரை முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. ஆனால் அறிவிக்கப்படாத பிரச்சாரத்தை நேற்றே ஆரம்பித்துவிட்டார் என்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
சர்கோசி தன்னுடைய பேட்டியில் நேற்றிரவு(புதன்கிழமை) யூரோ தன் மதிப்பை இழந்திருந்தால் ஐரோப்பாவே உலக அரங்கில் தன் மதிப்பை இழந்திருக்கும் என்றும் அவ்வாறு நிகழவிருந்த உலகப் பொருளாதாரப் பேரழிவைத் தானும், மற்ற ஐரோப்பியத் தலைவர்களும் சேர்ந்து தடுத்து விட்டதாகவும் கூறினார்.
யூரோவின் மதிப்பையும் ஐரோப்பாவின் மதிப்பையும் காப்பாற்றியதில் தனக்கிருந்த முக்கியப் பங்கை தெளிவாக மக்களுக்கு உணர்த்தினார். தன் மூலமாக தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்ட சர்கோசி அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, பிரான்சில் குறைந்து கொண்டே வருவதாகவும் அதனைச் சரி செய்ய தனக்கு 8 பில்லியன் யூரோ தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
துறவிகள் தீக்குளிப்பதற்கு சீனாவின் கொள்கைகள் தான் காரணம்: தலாய்லாமா குற்றச்சாட்டு.
சீனாவின் கொடிய இரக்கமற்ற கொள்கைகள் தான் திபெத்தியத் துறவிகள் ஒன்பது பேர் தீக்குளிக்கக் காரணம் என தலாய்லாமா குற்றம் சாட்டியுள்ளார்.திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து கடந்த மார்ச் முதல் ஒரு பெண் புத்த துறவி உட்பட ஒன்பது துறவிகள் தீக்குளித்துள்ளனர். ஒரு பெண் புத்த துறவி தீக்குளிப்பது திபெத்திய வரலாற்றில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்காக தலாய்லாமா நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திபெத்தைப் பொறுத்தவரையில் தனது அணுகுமுறையை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும்.திபெத் பிரச்னைக்காக அல்லாமல் ஒட்டுமொத்த சீனாவின் நன்மைக்காகவும், அவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
திபெத் விவகாரம் குறித்து சீனா பேச்சு நடத்துவதற்கு சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். துறவிகள் தீக்குளித்ததற்கு சீனாவின் கொடிய, இரக்கமற்ற கொள்கைகள் தான் காரணம். அதனால் திபெத் குறித்த சீனாவின் கொள்கைகள் பற்றி வெளிப்படையான பேச்சு நடத்த சீனா முன்வர வேண்டும்.
அமெரிக்காவுடனான நட்பினை ஒருபோதும் ஈரான் விரும்பவில்லை: அமைச்சர் தகவல்.
அமெரிக்காவுடனான நட்பினை ஈரான் ஒரு நாள் விரும்பும். ஆனால் இப்போது இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி தெரிவித்துள்ளார்.ஈரான் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் அதேநேரத்தில் அந்நாட்டு மக்களை ஆதரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சலாஹி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: ஹிலாரி கூறியுள்ளது போன்ற அறிக்கைகளை நிறைய பார்த்துவிட்டோம். துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் முரண்பாடுகளாக உள்ளன.எங்களுடைய கொள்கை இஸ்ரேல் தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதுதான். அணு ஆயுதம் தயாரித்து வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் தலைவர் இருநாள் பயணமாக சீனா வருகை.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் நிதி வளத்தை அதிகரிப்பது தொடர்பாக அதன் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் நேற்று சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.யூரோ மண்டலக் கடன் நெருக்கடி பற்றிய பீதி பரவிய போது ஐரோப்பாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக அறிவித்தது.
அதன் அடிப்படையில் இ.எப்.எஸ்.எப்.பின் நிதியை அதிகரிப்பதற்கு சீனா கைகொடுக்க வேண்டும் என அக்கூட்டத்திலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.கூட்டம் முடிந்த உடனேயே பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, சீன அதிபர் ஹூ ஜிண்டோவைத் தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இ.எப்.எஸ்.எப் தலைவர் க்ளாஸ் ரெக்லிங் இரு நாள் பயணமாக நேற்று சீனத் தலைநகர் பீஜிங் சென்றார். சீன உயர் அதிகாரிகளுடன் இதுகுறித்து அவர் பேச்சு நடத்தினார்.நேற்று அவர் அளித்த பேட்டியில் இ.எப்.எஸ்.எப் இதுவரை யூரோ நாணயத்தில் தான் கடன் பத்திரங்கள் வெளியிட்டு வருகிறது. சீனா விரும்பும் பட்சத்தில் யுவான் நாணயத்திலும் வெளியிட முன்வருகிறோம்.
அதேபோல் சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு நிதியமைப்பு(எஸ்.பி.ஐ.வி) ஒன்றும் அமைக்கப்படலாம் என்றார். எனினும் கடன் வழங்குவதற்கு சீனா எவ்வித உத்தரவாதங்களைக் கேட்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை அவர் கூறவில்லை.
இ.எப்.எஸ்.எப்.பிற்கு கடன் வழங்குவதில் சீனா மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட்டு வருகிறது. சீன துணை நிதியமைச்சர் ஷூவூ குவாங்யாவோ இதுகுறித்துக் கூறுகையில்,"இ.எப்.எஸ்.எப்.பில் முதலீடு செய்வது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்று மட்டும் தெரிவித்தார்.இந்நிலையில் இ.எப்.எஸ்.எப்.புக்கு பெருமளவில் நிதியளிக்கும் ஜேர்மனி அரசின் முடிவுக்கு அந்நாட்டு அரசியல் அமைப்பு கோர்ட் தடை விதித்துள்ளது.
இ.எப்.எஸ்.எப்.புக்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த ஒன்பது எம்.பி.க்கள் கொண்ட ஒரு பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் ஜேர்மனி 211 பில்லியன் யூரோவை இ.எப்.எஸ்.எப்.புக்கு அளிக்கத் திட்டமிட்டிருந்தது.
ஜேர்மனி மக்களின் வரிப் பணத்தை இ.எப்.எஸ்.எப்.புக்கு அளிப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் இரு எம்.பி.க்கள் இக்குழு நியமனத்தை எதிர்த்து அரசியல் அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அயர்லாந்து அதிபர் தேர்தல்: ஹிக்கின்ஸ் வெற்றி.
அயர்லாந்து அதிபர் தேர்தலில் 57 சதவீத வாக்குகளைப் பெற்று மிகயில் டி. ஹிக்கின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.இடதுசாரி அரசியல்வாதியான ஹிக்கின்ஸ் தொழிலாளர் கட்சியின் தலைவராவார்.
70 வயதாகும் அவர் தனது வெற்றியைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் அயர்லாந்து கூட்டணி அரசிலிருந்தும் ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட 18 லட்சம் வாக்குகளில் 10 லட்சம் வாக்குகளை ஹிக்கின்ஸ் பெற்றார். தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாயின.
அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள ஹிக்கின்ஸ், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் ஆவார்.
ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 14 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் படையினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
நேட்டோ படையினர் பயணம் செய்த பஸ் மீது காரில் வந்த தலிபான் தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் நேட்டோ படையினர் 11 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.அதே நேரத்தில் நகரத்தின் மேற்கு பகுதியான அஸாதாபாதின் குணார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகத்துக்கு வெளியே பெண் மனித வெடிகுண்டு நடத்திய இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
காந்தகார் நகரில் அமெரிக்க நடத்தி வரும் பொது மக்கள்-ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படை முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கூறியிருந்தார். இந்நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: அரபு லீக் கூட்டமைப்பு.
சிரியாவில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் பேரணிகளின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து மக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை கைவிடும்படி அரபு லீக் சிரியாவுக்கு அவசரச் செய்தி அனுப்பியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் எட்டாவது மாதமாகத் தொடரும் நிலையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகள் நடந்தன.
லிபியாவில் அப்போதைய தலைவர் கடாபியின் ராணுவ வன்முறையைத் தடுக்கும் வகையில் ஐ.நா அந்நாட்டின் மீது “போர் விமானங்கள் பறக்கத் தடை” விதித்ததைப் போல சிரியாவிலும் விதிக்க வேண்டும் என்பது தான் நேற்று முன்தினம் நடந்த மக்கள் பேரணிகளின் நோக்கம் என சிரியா புரட்சி 2011 என்ற பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
லிபியாவைப் போல அதிபர் அசாத் போர் விமானங்களைப் பயன்படுத்தாததால் இந்தக் கோரிக்கையின் பலன் குறைவாகவே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கிய நகரங்களான ஹமா மற்றும் ஹோம்சில் மசூதிகளில் தொழுகைக்குப் பின் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சிரியா ராணுவம் மசூதிகளை முற்றுகையிட்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து வீடு வீடாக நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். ஹமாவில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பொலிசார் மீது நடத்திய தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹோம்ஸ் நகரில் ராணுவத்துக்கும், ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றுக்கும் நடந்த சண்டையில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கும்பல் ராணுவத்தில் இருந்து அதிபருக்கு எதிராகப் பிரிந்து சென்ற வீரர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிரியாவுக்குள் இன்னும் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைவதற்குத் தடை நிலவுவதால் பல செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. கடந்த 26ம் திகதி அரபு லீக்குக்கும், அசாத்துக்கும் இடையில் நடந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதிபரும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என அரபு லீக் வலியுறுத்தியது.
இந்நிலையில் அரபு லீக்கின் சிரியா விவகாரம் குறித்த அமைச்சர்கள் கமிட்டி நேற்று சிரியாவுக்கு விடுத்த அவசரச் செய்தியில்,“மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா உடனடியாக கைவிட்டு அவர்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எல்லையோரப் பகுதிகளில் சீனர்கள் சட்ட விரோதமாக குடியேற்றம்.
இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீனா தற்போது ரஷ்யாவிலும் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது.
அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் சீனர்கள் பலரை குடியேற்றங்கள் அமைக்க சீன அரசு தூண்டி வருகிறது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு(எப்.எஸ்.பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா தன் குடிமக்களை ரஷ்ய எல்லைப் புறங்களில் நுழைந்து குடியேற்றங்களை அமைக்கத் தூண்டி வருகிறது.
இதற்காக பல சீன நிறுவனங்கள் ரஷ்யாவின் ஓட்டுனர் உரிமங்களை போலியாகத் தயாரித்து இணையதளத்தில் வெளிப்படையாக விற்று வருகின்றன. இதை சீன அரசு கண்டும் காணாமல் அனுமதித்து வருகிறது.
ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு மரங்கள் கடத்தப்படும் போது இந்த போலி ரஷ்ய ஓட்டுனர் உரிமங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல போலி ரஷ்ய உரிமங்களைப் பயன்படுத்தும் சீனர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்.
இதற்கு முன்பு வந்த ஆய்வறிக்கைகளின்படி லட்சக்கணக்கான சீனர்கள் சட்டவிரோதமாக ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி குடியேற்றங்களை அமைத்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட எந்த ஒரு அரசு அமைப்பும் அமைக்கப்படவில்லை.
சம்பளம் உயர்வை கேட்டு பெண் ஊழியர்கள் வழக்கு.
சம்பளம், பதவி உயர்வில் வேற்றுமை காட்டுவதாக அமெரிக்காவின் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால் மார்ட் மீது பெண் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் புகழ்பெற்ற தொடர் சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால் மார்ட், சீனா உட்பட பல நாடுகளிலும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவிலும் அது உள்நாட்டு நிறுவனமான பாரதியுடன் இணைந்து ஸ்டோர்களை திறக்க தயாராகி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க ஸ்டோர்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம், பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி டெக்சாஸ், கலிபோர்னியா மாநில நீதிமன்றங்களில் பெண் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, ஜூன் மாதத்தில் முதல் வழக்கு தொடரப்பட்டது.
இப்போது கலிபோர்னியாவில் புதிய வழக்கு பதிவாகியுள்ளது. இதுபோல அந்தந்த மாநிலங்களில் வால் மார்ட் பெண் ஊழியர்கள் தனித்தனி வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ஊழியர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜோசப் செல்லர்ஸ் கூறுகையில், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் மேலும் பல மாநில உயர் நீதிமன்றங்களில் வால் மார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களின் சம்பள நிர்ணயம், பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவது நியாயமற்றது என்றார், எனினும், இந்த வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று வால் மார்ட் செய்தி தொடர்பாளர் கிரேக் ரோசிடெய்ர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஊழியரும் வேறுபட்ட திறமை உடையவர், அதற்கேற்ற ஊதியம், பதவிகளை பெறுவது இயல்பு. இதில் பாரபட்சம் ஏதுமில்லை, எனவே, இந்த வழக்குகள் எந்த வகையிலும் பொருந்தாதவை என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF