Tuesday, October 25, 2011

இன்றைய செய்திகள்.

குருநாகல் பகுதியில் பஸ் விபத்து: 90க்கும் அதிகமானோர் காயம்.

குருநாகல் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 90 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு- மெதிரிகிரிய பஸ் வண்டியும் கதுறுவெல- கொழும்பு பஸ் வண்டியும் கொக்கரெல்ல என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கொக்கரெல்ல குருணாகலை மற்றும் பொல்கஹவெல ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுளட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.
சர்வாதிகாரிகளுக்கு வழியமைக்கும் 18ம் திருத்தச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - சரத் பொன்சேகா.

சர்வாதிகாரிகளுக்கு வழியமைக்கும் 18ம் திருத்தச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரி கடாபி குழாயொன்றில் உயிரிழக்க நேரிட்டது.
நாய்களைப் போன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சர்வாதிகளுக்கு இதே முடிவுதான் ஏற்படும்.
கனவு காண்பதில் பயனில்லை நாட்டின் மீதும் மக்களின் மீதும் மெய்யான கரிசனை இருந்தால் 18ம் திருத்தச் சட்ட மூலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
சரத் பொன்சேகாவின் பதவிகளை இராணுவ நீதிமன்றம் நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட போது சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
துமிந்த சில்வா போதைப்பொருள் வியாபாரியோ, பாதாள உலக குழுவினரோ அல்லர்: கோத்தபாய.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு அந்த மக்களுடனேயே வாழந்து வரும் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா போதைப் பொருள் வியாபாரியோ அல்லது பாதாள உலகத்துடன் தொடர்புபட்டவரோ அல்லர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் எப்போதும் மக்களுடனேயே காணப்படும் ஒருவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
துமிந்த சில்வாவுக்கு எதிராக பலர் பல குற்றச்சாட்டுகளை சுமத்திகின்ற போதிலும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை.
எவ்வாறாறெல்லாம் நான் கூறுவதன் மூலம் நான் எவரையும் பாதுகாக்க முயற்சிக்கவும் இல்லை. எவருக்கும் பயந்து செயற்படவும் மாட்டேன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதியுடன் ஏன் நான் கடமையாற்ற முடியாது.? துமிந்த சில்வாவை விடவும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை நீண்ட காலமாகத் தெரியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டனர் : ராஜ் ராஜரட்னம் வருத்தம்.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்வதாக இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ராஜ் ராஜரட்னம் தெரிவித்துள்ளார்.
நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ராஜ் ராஜரட்னம் ஊடகமொன்று செவ்வியளித்துள்ளார்.
தாம் நம்பிய சிலர் துரோகம் இழைத்து விட்டதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முதனிலை சந்தையான வேல் ஸ்ட்ரீடில் முதலீடு செய்த முக்கிய தெற்காசியர்களில் ஒருவர் என்ற வகையில் பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் விசாரணைகளின் போது தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது வெள்ளையர்கள் ஒரு விதமாகவும் தெற்காசியர்கள் ஒரு விதமாகவும் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் நலன்கருதியே காணிப்பதிவை மேற்கொள்கின்றோம்: பஷில் ராஜபக்ச.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடைமுறையை கூட்டமைப்பினர் எதிர்ப்பதானது அநீதியானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதியே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார். 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
காணிப்பதிவு முன்னெடுப்பதன் அவசியம் கூட்டமைப்புக்கு தெரிந்துள்ள போதிலும் அவர்கள் அதனை எதிர்க்கின்றனர்
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் என்பதே எமது கொள்கையாகும்.
இருப்பினும் அரசாங்கம் புதிதாக எந்தவொரு சிங்களக் குடும்பத்தையும் வடபகுதியில் மீள்குடியமர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டே அங்கு காணிப்பதிவுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
காணி விவகாரங்கள் தொடர்பில் அப்பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பது அவசியமானதாகும்.
கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி உரிமையாளர்களிடம் அவற்றுக்கான எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என்றார்.
நாடு அராஜகத்தை நோக்கி நகர்கின்றது – ஐ.தே.கட்சியின் ஊடகப் பேச்சாளர்.

நாடு அராஜகத்தை நோக்கி நகர்வதாகவும், போர் வெற்றியின் பின்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதிகளவில் ஜனநாயக விரோத செயற்பாடுகளே இடம்பெறுகின்றன எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அதிகார மோகம் கொண்டு செயற்பவடுதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் கேள்வியுற்ற பயங்கரவமான சம்பவங்களை இன்று தெற்கில்அனுபவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
நாட்டில் யாசகர்களின் உயிருக்குக் கூட ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனநாயக விரோத செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் மக்களினால் அனுபவிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகு.

மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சி நடாத்தியமையே முவம்மர் கடாபியின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்றும், குடும்ப, சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
லிபிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அம்மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியவர் கடாபி.
ஆனால் காலப் போக்கில் மக்களை அடக்கி ஒடுக்கி குடும்ப ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார்.
இதனால் நசுக்கப்பட்ட மக்கள் நாட்டுத் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் வெறுப்பும் அடைந்தனர்.
மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் கிளர்ச்சி வெடித்தது. இறுதியில் உயிரிழந்தார். இது சண்டையின் போது நடந்ததா அல்லது கைது செய்யப்பட்டதன் பின்னர் நடந்ததா என்பது பற்றித் தெரியாது.
ஆனால் இது தொடர்பில் கண்ணீர் விட முடியாது. அதேவேளை, கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறலாகும்.
எனவே, சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு இது சிறந்த பாடமாகும் என்றார்.
கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூரமாக சுட்டுக் கொலை.
சுட்டுக்கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் 50 பேர் கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நியூயோர்க் நகரிலிருந்து செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று தனது இணையதளத்தில் ‌தெரிவித்திருப்பதாவது: கடந்த 21ம் திகதி லிபியா அதிபர் கடாபி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதே நாளில் அவரது சொந்த ஊரான சிர்டி நகரில் உள்ள மெகாரி என்ற ஹோட்டல் வளாகத்தில் 50 பேர் தலையில் குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.
இது குறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் பீட்டர்புகாரெயிட் கூறுகையில், கடாபி கொல்லப்பட்ட நாளன்று தான் இவர்கள் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்கள் இருந்துள்ளன என்றார்.
இதிலிருந்து அவர்கள் கொடூரமாக கொ‌ல்லப்பட்டுள்ளனர். இது குறித்து லிபியா இடைக்கால அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலை கிடைக்காத விரக்தி: 100 கார்கள் கொளுத்திய நபர் கைது.
வேலை கிடைக்காததால் விரக்தியடைந்து 100 சொகுசு கார்களை கொளுத்திய ஜேர்மனி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜேர்மனியில் கார்கள் மர்மமான முறையில் எரிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தலைநகர் பெர்லின் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 10 மாதங்களில் 62கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.
மிட், ஸ்பாண்டா, சார்லடன்பர்க் மாவட்டங்களில் பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்கள் அதிகளவில் எரிக்கப்பட்டன. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இச்சம்பவங்கள் அதிகம் நடந்தன. ஒரே நபர் இவ்வாறு செய்வதாக சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் தலைநகர் பெர்லினில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய வாலிபரை(27) பொலிசார் பிடித்து விசாரித்தனர்.
சொகுசு கார்களை எரித்தது அவர் தான் என்று தெரியவந்தது. அவர் கொளுத்தியதில் 67 கார்கள் முழுவதுமாக எரிந்துவிட்டன.
35 கார்கள் நாசமாயின என்றும் தெரிந்தது. வேலை இல்லாத விரக்தியில் இவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
பயணக்கட்டண வரிவிலக்கு ரத்து: அமெரிக்கா மீது கனடா கோபம்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் வருகை புரிகின்றனர்.
கப்பல் மூலமாக வரும் பயணிகளுக்கு இதுவரை அமெரிக்கா வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் தற்பொழுது தனது பொருளாதார நெருக்கடி காரணமாக இதனை ரத்துச் செய்துவிட்டது.
இதனால் அமெரிக்கா மீது கடுங்கோபம் கொண்ட கனடா தன் துறைமுகங்களுக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு மானியம் வழங்கி அமெரிக்கத் துறைமுகங்களுக்குப் போகவிடாமல் செய்துவிட்டது. இச்செயல் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.
அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையே 1997 முதல் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்தது.
அச்சட்டம் கனடா, மெக்ஸிகோ, கரீபியா பகுதிகளிலிருந்து அமெரிக்கா வருகின்றவர் எவ்வித வரிச்சலுகையுமின்றி, மற்ற வெளிநாட்டவரைப் போலவே பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவித்தது.
இதனால் இந்த மூன்று நாட்டைச் சேர்ந்தவர்களும் இனி கூடுதல் வரியாக 5.5 டொலர் செலுத்த வேண்டும். அமெரிக்காவின் 14 டிரில்லியன் தேசியக் கடனை அடைக்கும் முயற்சிகளில் இந்த வரிவிலக்கு ரத்தும் ஒரு வழிமுறையாகும்.
இதனால் சில பத்து பில்லியன் டொலர்கள் அமெரிக்காவின் பணப்பெட்டியில் சேரும். எனவே அமெரிக்காவானது, கனடா மக்களின் ஆதங்கத்தையோ ஆத்திரத்தையோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
“அமெரிக்காவின் சட்ட வல்லுநர்களுடன் கனடாவின் அதிருப்தி குறித்து ஆலோசிப்போம்” என்று அந்நாட்டின் சர்வதேச தொழில் துறை அமைச்சர் ஈத் பாஸ்ட் கூறினார். கனடாவின் பாராளுமன்றம் உறுப்பினர்களுக்கு இவரது இந்த பேச்சு மன நிறைவை அளிக்கவில்லை.
கனடாவில் உள்ள அமெரிக்கத்தூதர் டேவிட் ஜேக்கப்சன்,“எங்கள் நாட்டின் நிதிநிலை காரணமாகவே வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கனடா கோபப்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்கப் பொருட்களையே வாங்குவீர் என்று ஒரு வேண்டுகோளை ஒபாமா சட்ட முன் வரைவாகக் கொண்டு வருகிறார். அப்போதும் கனடா தொழில்துறை வல்லுநர்கள் பாதிக்கப்படமாட்டீர்கள். இதுவும் நசிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இரவு நேர விமானங்களை அதிகரிக்க வேண்டும்: பெர்லினில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
இரவு நேர விமானத்தை பெர்லின் விமானநிலையத்தில் அதிகரிக்க வேண்டும் என கூறி 7500க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
பெர்லினில் உள்ள ஸ்சானிபெல்டு சர்வதேச விமான நிலையத்தில் இரவில் இயங்கும் விமானங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 7,500க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
மிகப்பெரிய பிரமாண்டமான விமானநிலையம் ஜேர்மன் தலைநகர் டீஜெல்லில் இருந்தது மூடப்பட்டு, அதே மாதிரியான விமான நிலையம் பெர்லினில் ஆரம்பிக்கப்பட்டது.
விமானம் செல்லும் பாதையானது சச்சரவில் இருந்தது. ஏனெனில் விமானங்கள் மேலே பறக்கும் போதும், கீழே தரையிறங்கும் போதும் நிறைய வன்முறைகள் நடந்தன.
ஆதலால் விமானங்கள் செல்வது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை செய்யப்பட்டது என பெர்லினர் ஜெய்டிங் கூறினார்.
தற்போது 103 விமானங்கள் இரவு 10 மணி முதல் நடு இரவு வரையிலும், பிறகு காலை 5 மணிக்குப் பிறகும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானப் பாதையில் இருப்பவர்களுக்காக 5 மணி நேர விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பெர்லின் விமான நிலையமானது சர்வதேச நிலையமாக உருவாக வேண்டும் என விரும்புகிறார்கள். ஏனெனில் சர்வதேச அளவில் உயர்ந்தால் பயணிகள் ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையமானது யூன் 2012ல் இயங்கத் தொடங்கும். இரண்டாவது, மூன்றாவது திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்று பெர்லினர் ஜெய்டிங் கூறினார்.
தாய்லாந்தில் கடும் வெள்ளம்: மூழ்கும் அபாயத்தில் தலைநகரம்.
தாய்லாந்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது.
கடந்த 3 மாதங்களாக தாய்லாந்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைக்கு இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடுகளை இழந்த பல லட்சம் பேர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பாங்காக் உள்பட 6 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயுள்ளன.
தலைநகரில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இதர பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளன. எனவே அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் காலியான சந்தை மற்றும் விற்பனை அங்காடிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான டாண் மியூயாங் நிலையத்தில் 80 செ.மீ உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிறு வாகனம் கூட செல்லமுடியவில்லை. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்கள் கார்களை பாலங்களிலும், சாலைகளிலும் நிறுத்தி வைத்துள்ளனர். தண்ணீரால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் மக்கள் இறக்கநேரிடும். அது குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா சுகாதார அமைப்பு தாய்லாந்தை அறிவுறுத்தியுள்ளது. தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதில்லை: விக்கிலீக்ஸ்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது விக்கிலீக்ஸ்.
இதன் தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வழிகளை அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்டு, வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பால் போன்ற நிதி நிறுவனங்கள் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன.
இதுகுறித்து நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இனி ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி முழு வீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது அமெரிக்கா.
சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா திரும்ப அழைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் போர்டு.
அவர் அந்நாட்டில் மக்கள் எழுச்சியை அடக்க ராணுவ வன்முறையைப் பயன்படுத்தி வரும் அதிபர் பஷர் அல் அசாத்தின் செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார்.
அதோடு ஹமா உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அவரது செயல்கள், அதிபர் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.
அதனால் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசன் அப்துல் அசீமைச் சந்திக்க தனது அதிகாரிகளுடன் போர்டு சென்ற போது அதிபர் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு அழுகிய முட்டைகள், உருளைக் கிழங்குகளை வீசித் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து அமெரிக்கத் தூதருக்கான பாதுகாப்பு சூழல் கருதி அவரை கடந்த 22ம் திகதி அமெரிக்கா திரும்ப அழைத்துக் கொண்டதாக சிரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 270 பேர் பலி.
துருக்கியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. இதில் 270 பேர் பலியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தால் எர்ட்ஜிஷ் நகரில் ஆயிரம் கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன.
இவற்றில் 40 கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை 270 பேர் பலியாகியிருப்பதாகவும், 1,300 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், உள்துறை அமைச்சர் இத்ரிஸ் நயிம் சகின் அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பிரதமர் ரெட்ஜெப் டாயிப் எர்டோயன் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் 2,400 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக 680 டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழு இயங்கி வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரைக் கண்டறிய 12 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் வான் நகரில் உள்ள பெரிய சிறைச்சாலையின் சுற்றுச் சுவர்கள் விழுந்ததால் அதிலிருந்த 150 கைதிகள் தப்பியோடி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பின் அதே பகுதியில் நூறு முறை நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சேதமடைந்த வீடுகள், கட்டடங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியிருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பின் மக்கள் தெருவிலும், சாலைகளிலும் தங்கள் பொழுதைக் கழித்தனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிக முகாம்களை அமைத்து வருகிறது. இஸ்ரேல், கிரீஸ், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. எனினும் துருக்கி இந்தச் சிக்கலான சூழலைச் சமாளித்து விடும் என பிரதமர் எர்டோயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடாபி புகைப்படம் மூலம் வைரஸ் பரவும் அபாயம்.
லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை பரபரப்பாக பேசப்படும் நிலையில் அவரது புகைப்படத்தோடு கணணியை முடக்கச்செய்யும் வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை பிரபல கணணி பாதுகாப்பு நிறுவனமான சோப்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர் கிரஹாம் குலுலி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் லிபிய அதிபர் காடபியின் புகைப்படத்தில், கணணியை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் இருப்பதாகவும், இந்த மின்னஞ்சலை திறந்தால் கணணி செயல்பாட்டை முடக்கச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கணணியில் உள்ள தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்த புகைப்படத்தை பற்றி சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
2100ல் உலக மக்கள் தொகை 15 பில்லியனை தொடும்: ஐ.நா.
உலக மக்கள் தொகையானது 7 பில்லியனில் இருந்து 15 பில்லியனாக இரட்டிப்பாகும் என ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
உலக மக்கள் தொகையானது இந்நூற்றாண்டின் இறுதியில் 10 பில்லியனைத் தாண்டும் என ஒருங்கிணைந்த நாடுகளின் மக்கள் நிதி நிறுவனம் முன் கூட்டியே தெரிவித்திருந்தது.
இதுகுறித்து ரோகர் மார்டின் கூறுகையில்,“பூமியானது பேராபத்தில் நுழைந்துள்ளது” என்று மக்கள் தொகைப் பெருக்கத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் நம் கோளானது சீரான மக்கள் தொகை வளர்ச்சியையும், வெப்பநிலை மாற்றத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. பூமியின் 7 பில்லியன் மக்கள் தொகையை தாங்குவது இயலாத ஒன்று என்று கூறினார்.
1960களில் மக்கள் தொகை ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரட்டிப்பானதற்கு கரணம் நல்ல மருத்துவ வசதி, ஆரோக்கிய பாதுகாப்பு, அதிக அளவில் பிறப்பு விகிதம், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு போன்றவையாகும். உலகில் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும்.
இதுகுறித்து பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாக் கோல்டுஸ்டோன் என்பவர், பீடபூமியில் கூட 10-12 பில்லியன் வளர்ச்சி காணப்படுகிறது என்றும், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க விரும்புகின்றனர் என்றும் கூறினார்.
மேலும் குடும்ப கட்டுப்பாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சாதனங்களில் ஒன்று, இருந்த போதிலும் மக்களின் பண்பாடு, மத பழக்க வழங்கங்களால் கருத்தடை உபயோகிப்பது குறைந்துள்ளது என்றார்.
கடாபியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டம்.
லிபியா அதிபர் கடாபி கடந்த 20ந் திகதி சிர்த் நகரில் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரை உயிருடன் பிடித்து தெரு தெருவாக இழுத்து சென்று சித்ரவதை செய்து அடித்து கொன்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அவரது உடல் மிஸ்ரதா நகரில் ஒரு இறைச்சி கடையில் குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய முறைப்படி ஒரு நபர் இறந்த 24 மணி நேரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் கடாபி இறந்து 4 நாட்களாகியும் இன்னும் அவரது உடல் அடக்கம் செய்யப்படவில்லை. ஏனெனில் மிஸ்ரதா நகரில் அவரை புதைக்க அப் பகுதி மக்கள் விரும்பவில்லை.
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது கடாபியின் மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் லிபியாவில் இருந்து தப்பி பக்கத்து நாடான அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்கள் கடாபி, அவரது மகன் முட்டாசிம் ஆகியோரின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்கும்படியும், அவர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் படியும் ஐ.நா சபையிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு லிபியாவின் இடைக்கால அரசு எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடாபியின் உடலை பிரேத பரிசோதனை செய்யமாட்டோம்.
மேலும் ஒரு ரகசிய இடத்தில் அவரது உடல் புதைக்கப்படும் என்றும் தெரிவித்தது. தற்போது இந்த நிலையை இடைக்கால அரசு மாற்றிக் கொண்டுள்ளது. கடாபியின் குடும்பத்தினர் தற்போது லிபியாவில் இல்லாததால் அவரது நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆலோசனையில் இடைக்கால அரசின் தலைவர் முகமது ஜிப்ரில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அவரது ஆலோசகர் அகமது ஜிப்ரில் தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் தற்கொலைப் படை தீவிரவாதி சுட்டுக் கொலை.
ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி பிஸ்மில்லா கான். இவர் பாஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதற்காக காரில் புறப்பட்டு சென்றார். இதை அறிந்த தற்கொலை தீவிரவாதி அவரது கார் முன் பாய்ந்து தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தான்.
இதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக் கொன்றனர். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்போ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இந்த தகவலை மந்திரியின் செய்தி தொடர்பாளர் சித்திக் தெரிவித்தார்.
யூரோ பிரச்னை: சர்கோசி - கமரூன் இடையே மோதல்.
ஐரோப்பிய கண்டங்களில் நிலவும் ஆபத்தான சூழ்நிலை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுக்கும், பிரான்ஸ் அதிபர் சர்கோசிக்குமிடையே மோதலை உருவாக்கியுள்ளது.
யூரோ பிரச்னை குறித்து சர்கோசி குறிப்பிடுகையில், சில குறிப்பிட்ட நாடுகள் யூரோவை பயன்படுத்துகின்றன என்றார்.
கமரூன் கூறுகையில், இந்த பிரச்சனையானது ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகையால் நாடுகளுக்கிடையே சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.
ஐரோப்பிய யூனியன் அதிபர் ஹெர்மன் வான் ராம், அனைத்து ஐரோப்பிய தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் 17 நாடுகள் யூரோவை பயன்படுத்துகின்றன என்றார்.
கமரூன் ஒருங்கிணைந்த ராஜ்யத்தின் விருப்பமானது உடன்படிக்கையில் சில மாற்றங்களை செய்வதே என்றார். சர்கோசி கமரூனிடம், நாங்கள் உங்களுக்கு தொந்தரவாகவும், கண்டனம் செய்பவர்களாகவும் இருக்கிறோம். நீங்கள் யூரோவை தடை செய்ய விரும்புகிறீர்கள் என்று கூறினார்.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் கிரேக்கின் கடன் சுமை பற்றியும், கடனில் மூழ்க இருக்கும் கிரேக்க அரசை எவ்வாறு மீட்பது என்பது பற்றியும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கூட்டத்தின் முதலில் அதிபர் வான் ராம்பை, மாற்றம் செய்யும் உடன்படிக்கையானது, நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை தருவதாக இருக்க வேண்டும் என கூறினார். மேலும் நம் குறிக்கோளானது, ஆழமான நமது பொருளாதாரத்தை வளமாக்குவதே என்றார்.
கமரூன் கூறுகையில், பிரிட்டன் அரசு, ஐரோப்பிய மண்டல நாடுகளின் நிதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது என்றார். மேலும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 நாடுகளும், ஒரே மாதிரியான செலவாணியை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
ஏங்கலா மார்க்கெல் அளித்த பேட்டியில்,“சர்கோசி என்னிடம் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளுக்கு உருவாக்கப்படும் உடன்படிக்கையானது பலமாக அமைய வேண்டும் என்று கூறினார்” என்றார்.
மேலும் அவர் பிரான்ஸ் கூற்றின்படி, நிதி வழங்கிய வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஐரோப்பிய யூனியன்களுக்கு நிதியானது காப்பீடு மூலம் வழங்கப்படும் என்றார்.
ஐரோப்பிய மண்டலத்தின் நிதி அமைச்சர், கடனில் மூழ்கி இருக்கும் நாடுகளுக்கு, வங்கியானது 100 பில்லியன் யூரோக்களை உயர்த்தி தர வேண்டும் என்றார். கடனில் மூழ்கி இருக்கும் கிரீஸை ஜரீஷ் குடியரசும், போர்ச்சுக்கல்லும் இரண்டு தடவை வெளிக்கொண்டு வந்தது.
பொருளாதாரத்தில் தள்ளாடும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியைப் போல் கிரீசும் இருக்கக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய மண்டலமானது மூன்றாவது தடவையாக முயற்சிக்கின்றது.
அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல்: கிறிஸ்டினா அமோக வெற்றி.
அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதில் தற்போதைய அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர்(58) பெரோனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹெர்ம்ஸ்பினர் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நேற்று பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. பதிவான 15 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டதில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் 53 சதவீதம் வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக ஹெர்ம்ஸ் பின்னர் 17 சதவீத வாக்குகள் பெற்றார். இதன் மூலம் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராகிறார். அவர் டி.வி.யில் தோன்றி தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அர்ஜென்டினாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.
கிறிஸ்டினா பெர்னாண்டஸ்சுக்கு முன்பு அவரது கணவர் நெஸ்டர் கிர்ச்னர் 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். மாரடைப்பு காரணமாக அவர் திடீரென இறந்ததை தொடர்ந்து கிறிஸ்டினா அதிபரானார். தற்போது மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்கிறார்.
ஈராக்கிற்குள் ஈரான் ஊடுருவக்கூடாது: ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை.
அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியேறி விடும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஈரான் மீண்டும் ஈராக் நாட்டுக்குள் ஊடுருவக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.
ஹிலாரி CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, ஈராக் நாட்டினர் மீது தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதாகவும், அவர்கள் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதாகவும், எனவே ஈராக் நாட்டிலிருந்து தம் படைகள் வெளியேறுவதைப் பற்றி யாருமே குறிப்பாக ஈரான் தப்புக்கணக்குப் போட்டு விடக் கூடாது என்றார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க அரசு ஈராக் படைகளுக்குத் தொடர்ந்து போர்ப்பயிற்சி வழங்கும். ஆனால் அமெரிக்காவுக்கு என தனி படைத்தளம் இனி ஈராக்கில் இருக்காது. அதிபர் புஷ் காலத்தில் அங்கு ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி தன் நியாயமான இருப்பை அமெரிக்கா உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.
ஈரானிய அதிபரிடம் ஹிலாரியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றார்.
ஈராக் படைகளுக்கு ஈரான் போர்ப் பயிற்சி அளிக்குமா? என்று நிருபர் கேட்டதற்கு, இது நல்ல யோசனைதான். இதனை நாங்கள் 6 -7 மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்றார்.
பிறகு அமெரிக்கர்களின் எண்ணிக்கை தம் நாட்டில் அதிகரிப்பதை ஈராக்கியர் ஏற்கவில்லை. ஈராக் அரசு சுதந்திரமாகவும், இறையாண்மையுடன் திகழ்கிறது. அதனால் ஈராக் படைகளுக்கு வழங்க வேண்டிய பயிற்சி குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுக்காக காத்திருப்போம் என்றார்.
ஜெனீவாவில் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை: வடகொரியா – அமெரிக்கா பங்கேற்பு.
அணு ஆயுத உற்பத்தியைத் தடைசெய்வது குறித்து ஜெனீவாவில் வடகொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு நாட்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தை சுமூகமாகவே நடைபெற்றது. ஒருவர் மற்றவரை கோபிக்கவோ அலட்சியப்படுத்தவோ இல்லை.
வடகொரியா சார்பில் அதன் வெளியுறவுத் துறை துணையமைச்சர் கிம் கியே கிவானும், அமெரிக்கா சார்பில் ஸ்டீஃபன் போஸ்வர்த் மற்றும் கிலின் டேவிஸ் கலந்துகொண்டனர்.
அணு ஆயுத ஒழிப்பு குறித்து தெளிவாகத் தெரிவிக்காவிட்டால் தான் கூட்டத்தில் பங்கு பெறப் போவதில்லை என்று வடகொரியா தெரிவித்தது.
2003ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற கூட்டத்தில் வட கொரியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, சீனா தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வடகொரியா 2005 இல் அணு ஆயுத ஒழிப்புக்குச் சம்மதித்தது.
1950-58 வரை நடந்த போர் அப்போது முடிவுக்கு வந்தது, வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
அமெரிக்காவுடன் வடகொரியா இணக்கமாக நடந்து கொண்டது. 2007 இல் யாங்கியான் என்ற ஊரில் இருந்து வந்த புளுட்டோனியம் உற்பத்தியையும் வடகொரியா நிறுத்திவிட்டது.
காலப்போக்கில் வடகொரியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நன்னம்பிக்கை குறைந்து பகைமை உருவாகத் தொடங்கியது. 2009 ஏப்ரல் மாதம் வடகொரியா ஆறுபேர்க் கூட்டத்திலிருந்து விலகியது. விலகிய ஒரே மாதத்தில் இரண்டாவது அணு ஆயுதப் பரிசோதனையை நடத்தியது.
சென்ற ஆண்டில்(2010) தென்கொரியத் தீவு ஒன்றின் மீது அணு ஆயுதத் தாக்குதலை வடகொரியா நிகழ்த்தியது. இத்தாக்குதலை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வடகொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
முதலில் ஆசியப் பாதுகாப்புக் கூட்டம் இந்தோனேஷியத் தீவின் பாலி நகரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வடகொரியா பிறகு, நியூயார்க் நகரில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவிற்கும் இடையே நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. இதையடுத்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளன.
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு செயற்கை காலினை பொருத்தி மருத்துவர்கள் சாதனை.
இங்கிலாந்தில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் 14 மணித்தியாலத்திற்குப் பின்னர் பிரித்து வேறாக எடுக்கப்பட்டனர்.
இவ்வாறு ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் மில்லியனுக்கு ஒருவர்தான் தப்பிப்பிழைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் இங்கிலாந்தில் எங்கி பெனாபாப் என்வருடைய குடும்பத்தவருக்குக் கிடைத்த ஹசன், ஹூசைன் என்ற இரு குழந்தைகளும் அதிஷ்டவரமாக சத்திர சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பி வேறாகப் பிரித்து எடுக்கப்பட்டனர்.
இந்த இரு குழந்தைகளும் தமது செயற்கைக் கால்களால் நான்கு வருடங்களுக்குப் பின்னரே நடக்க முடியும் என டொல்பின் மீனுக்கு சத்திர சிகிச்சை செய்து வாலைப் பொருத்திய சத்திர சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சின்னஞ் சிறுசுகள் நடந்து செல்வதற்கும் ஓடி ஆடி விளையாடுவதற்கும் பயிற்சி எடுத்து வருகின்றனர் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இவ்வாறு பயிற்சி பெறுவதனை அவர்களுடைய பெற்றோர் தாம் எதிர்பார்க்காத நிகழ்வு என்றும் தங்களது குழந்தைகளின் ஆர்வத்தையும் குதூகலத்தை கண்டு தாம் அளவில்லாத மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விரட்டையர்கள் நுண்ணறிவில் சிறந்தவர்களாகவும் கற்பதில் திறமையுடையவர்களாகவும் உள்ளனர் என அவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் ஆயிரக்கணக்கான துனிஷிய மக்கள் வாக்களித்தனர்.
கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 10,000 மேற்பட்ட துனிஷிய மக்கள் முதன் முதலாக ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்தனர்.
இத்தேர்தலானது அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் நடந்தது. துனிஷிய மக்கள் மொன்றியல் என்னுமிடத்தில் வரிசையில் நின்று தங்களுடைய புதிய ஹோம்லாண்ட் சட்டசபைக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.
அல்கெம் ப்ரகாம் என்ற பெண்மனி கூறுகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். முந்தைய பிரெஞ்ச் காலனியில் இருந்த துனிஷிய நாடு 1956ல் சுதந்திரம் பெற்றது.
கடந்த ஒன்பது மாத காலமாக அங்கே நடைபெற்ற புரட்சியினால் அதிபர் பென் அலி நாட்டை விட்டு வெளியேறினார். அதன் எதிரொளியாக குடியாட்சி இயக்கமானது வேகமாக அனைத்து பகுதிகளிலும் பரவியது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை அரசை அமைக்கும், மேலும் புதிய சட்டத்தை அமல்படுத்தும். இஸ்லாமிக் என்னஹ்டா கட்சி, சென்ட்ரிஸ்ட் கட்சி மற்றும் லெப்ட் விங் கட்சி இவற்றில் எதுவும் புதிதாக அமையும் சட்டசபையின் மேல் அதிகாரம் செலுத்த முடியாது.
துனிஷியாவின் மொத்த வாக்காளர்கள் 7.5 பில்லியன் ஆகும், இதில் 4.4 பில்லியன் நபர்களே வாக்களித்தனர். அதாவது 60 சதவீதம் என்று பதிவாகியுள்ளது.
நாட்டின் 33 மாவட்டங்களிலும், 6 அயல்நாடுகளில் வசிக்கும் துனிஷிய மக்களிடமிருந்தும் மொத்தம் 40 முதல் 80 வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கனடாவில் மற்றும் உலகின் 23 பகுதிகளில் இருந்து துனிஷிய மக்கள் போட்ட ஓட்டுக்கள் சேகரிக்கப்பட்டு மொன்றியலில் வைக்கப்பட்டன. இறுதியில் 2 பிரதிநிதிகள் துனிஷிய சட்டசபைக்காக தேர்ந்தெடுக்கப்படுவர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF