Tuesday, October 11, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களில் நான் பொறுமை இழந்துள்ளேன் – பான் கி மூன்.

இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார்.நோர்வேயில் திங்கள் கிழமை ஆரம்பமான உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் போது இலங்கை தொடர்பாக நீண்ட நெடு நேரம் கருத்து தெரிவித்த ஜ.நா பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன்.
அது உங்களுக்கு நினைவிருக்கும். அவர்கள் அனைத்தையும் நன்கு கவனத்தில் எடுத்து பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார்கள். எனது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ள விடயங்கள் நிச்சயமாக இலங்கை மக்களால் அமுல்படுத்தபட்டிருக்க வேண்டும்.
நான், இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்று நீண்ட நெடும்காலம் காத்திருந்தேன். அதுபோல் அவர்கள் எனது நிபுணர் குழு அறிக்கையை அமுல்படுத்துவார்கள் என்வும் காத்திருந்தேன்.சில வாரங்களுக்கு முதல் நான் எனது நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமை கவுன்சிலுக்கும் ஜ.நாவின் மனித உரிமை செயலாளர் நாயகத்திற்கும் பரிசீலினைக்கு உட்படுத்துமாறு அனுப்பி வைத்திருந்தேன்.
இலங்கை நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 02 வாரங்களுக்கு முதல் ஜ.நா கூட்டத்தொடருக்கு அவர் வந்த போது, நான் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன்.இவ்விடயங்கள் தொடர்பாகவும் அவருடன் கலந்துரையாடி இருந்தேன். அவர் எனக்கு, இலங்கை தமிழ் மக்களையும் அவர்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதாகவும் அதற்கு இலங்கைக்குள் அனைத்து நடவடிக்கையையும் எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என ஜ.நாவின் செயலாளர் நாயகம் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார்.


கொழும்பு மாநகர சபையை அதிகார சபையாக்கும் திட்டத்தை ஐ.தேக. தடுத்து நிறுத்தும் : ரணில்.

கொழும்பு மாநகர சபையை ஓர் அதிகார சபையாக மாற்றும் திட்டத்தை ஐ.தே.க. வெற்றிகரமாக தடுத்து நிறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்காக அதை கொழும்பு மாநகர அதிகார சசபையாக மாற்றும்  தனது திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று கூறியமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மேலும் கூறுகையில், 'குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகளை இடிப்பதை நாம் தடுத்து நிறுத்தியதைப் போன்று கொழும்பு மாநகர அதிகார சபைத் திட்டத்தையும் நாம் தடுத்து நிறுத்துவோம்' என்றார்.
'அவர்கள் கொழும்பில் தோல்வியைத் தழுவிய பின்னரும் அவர்கள் எப்படி இவ்வாறு பேசலாம்' என ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.அதேவேளை கொழும்பு மாநகர சபை பிரதி மேயராக, டைட்டஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு நகரவாசிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐ.தே.க. செயற்படும் என அவர் தெரிவித்தார்.
கொழும்பின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், தான் அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து சமூகங்களுக்காகவும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். 'என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து சமூகத்தினருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் கூறினார்.தன்னை எப்போதும் மக்கள் அலுவலகத்திலோ வாசஸ்தலத்திலோ சந்திக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.
ஏ.ஜே.எம். முஸம்மில் கொழும்பு மாநகரசபை மேயராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சபையின் மேயராக ஏ.ஜே.எம். முஸம்மில் பெயரிடப்படுவதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதேவேளை பிரதி மேயராக டைட்டஸ் பெரேராவை கட்சி அறிவித்திருக்கின்றது.
நடந்த முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையென வர்ணிக்கப்படுவதுமான கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தது.
ஏனைய 22 சபைகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டது.
இந்நிலையில் மேயர் மற்றும் பிரதி மேயரை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கட்சியின் அறிவிப்பினை விடுத்ததுடன் கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்ற உறுப்பினர்களையும் சந்தித்தார்.இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் மேல் மாகாண சபை உறுப்பினர் சி.வை.பி. ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொலன்னாவை இணைப்பாளராக பசில் ராஜபக்ஷ் நியமனம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொலன்னாவை தேர்தல் தொகுதி இணைப்பாளராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
மீள் அறிவித்தல் வரை கொலன்னாவை தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சமூக, அரசியல் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வே பொறுப்பாகச் செயற்படுவார்.கொலன்னாவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தொகுதி அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 14.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.
யூஎஸ் எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
தனியார் துறை முதலீடுகளை அதிகரித்தல், முயற்சியான்மை விருத்தி, உள்ளூராட்சி நிர்வாக பங்களிப்பை மேம்படுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.நாட்டின் சட்டத்துறையை மேம்படுத்துவதற்கும் அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசியல் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் : கோத்தபாய தெரிவிப்பு.
அரசியல் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முல்லேரியா அசம்பாவிதம் போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டுமாயின் சில முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
முக்கியஸ்தர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், வாகனங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.முக்கியஸ்தர்களுடன் இணைந்து செயற்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- ரவி கருணாநாயக்க.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருபுறமிருக்க ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ன திட்டங்களை முன்னெடுக்கின்றது?முல்லேரியாவில் பாரிய அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது, நண்பர் பாரத காலமானதுடன் மற்றுமொரு நண்பர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலைமையை சொல்லத் தேவையில்லை என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 
முன்னுரிமை அளிக்காமையால் ஏற்பாட்டாளரை திட்டித் தீர்ந்த அமைச்சர் மேர்வின் சில்வா.
தனக்கு முதலாவதாக உரையாற்ற இடமளிக்கப்படவில்லை எனக்கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டிவிட்டு அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சிலோன் கொன்டிநென்டல் ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் ஆலோசனையின்படி ஜே.ஜே.என்டர்டைன்மன்ட் தயாரித்துள்ள ´நாமல் அரண´ சின்னத்திரை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
"நான் வந்தது ஒவ்வொருவரின் கதைகளைக் கேட்பதற்கு அல்ல. எனக்கு தேவையானவற்றை சொல்லவே" எனக்கூறி அங்கு அமர்ந்திருந்த பிக்குகளை வணங்கி அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சின்னத்திரை ஆரம்ப நிகழ்வு அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலரது பங்கேற்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
58 வருடங்களின் பின்னர் கண்டியை இழந்தது ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக கடந்த 58 வருடங்களாக இருந்து வந்த கண்டி மாநகர சபையின் ஆட்சி இம்முறை முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசமாகியுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று சபைகளுக்கான தேர்தலில் முதல் தடவையாக கண்டி மாநகரசபை உட்பட மூன்று சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
கண்டியில் குண்டசாலை பிரதேச சபை மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேசசபை என்பவற்றின் அதிகாரித்தையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,189 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 20087 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1248 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
கங்கவட்ட கோரளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,083 வாக்குகளுடன் 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 9418 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
குண்டசாலை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34,488 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 16,934 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு 1 மற்றும் ஜே.வி.பி.என்பன தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஏமன் ஆர்வலருக்கு நோபல் பரிசு: வெற்றியை கொண்டாடிய பெண்கள் மீது தாக்குதல்.
ஏமனைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான தவக்குல் கர்மனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.இதைக் கொண்டாடிய பெண்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் 40 பெண்கள் காயமடைந்தனர். தயேஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது.கர்மனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் வீதிகளில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட பேரணி நடந்தது.
அப்போது பாட்டில்களையும், கற்களையும் கொண்டு அரசு ஆதரவாளர்கள் தாக்கினர் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.சுமார் 40 பெண்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்மனுடன் லைபீரிய அதிபர் உள்ளிட்ட இரு பெண்களும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விசா கெடுபிடிகளை தகர்க்க அரசு முடிவு.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திற்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் விசா கெடுபிடிகளை தளர்த்த அம்மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அந்நாடு விசா கெடுபிடிகளை அதிகரித்த பின் கணிசமான அளவில் குறைந்து விட்டது.இந்நிலையில் விக்டோரியா மாகாண அரசு 5.8 பில்லியன் டொலர் வருமானம் அளிக்கும் கல்வித் துறையில் வெளிநாட்டு மாணவர்களை அதிகளவில் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக விசா கெடுபிடிகளைத் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அம்மாகாண முதல்வர் டெட் பைல்லி கூறியதாவது: அவுஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்விச் சந்தையின் பரப்பு குறைந்ததற்கு அவுஸ்திரேலிய மத்திய அரசுதான் காரணம்.இதனால் விக்டோரியா மாகாணத்தின் அன்னியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து நானும், நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வரும் அடுத்த மாகாணக் கூட்டம் ஒன்றில் பிரதமர் ஜூலியா கில்லார்டுடன் பேச உள்ளோம்.
சீனாவுடன் இணையும் எண்ணம் இல்லை: தைவான் அதிபர்.
சீனாவுடன் தைவான் சுமூகமான முறையில் இணைய வேண்டும் என்ற சீன அதிபரின் கோரிக்கைக்கு தைவான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சீனாவில் 1911ல் மன்னராட்சி அகற்றப்பட்டு அக்டோபர் 10ம் திகதி கோமின்டாங் கட்சித் தலைவரான சன் யாட் சென் தலைமையில் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
அதன் பின் கோமின்டாங் கட்சிக்கும், மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நடந்த உள்நாட்டுப் போரில் கோமின்டாங் கட்சி தைவானை மட்டும் தக்க வைத்தது. அதனால் கோமின்டாங் கட்சி நிறுவிய சீனக் குடியரசாக தைவான் உருவானது.இதன் நூற்றாண்டு விழா சீனாவிலும், தைவானிலும் நடைபெற்று வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் பேசிய அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறுகையில், தைவானும் சீனாவும் பழைய பகையை மறந்து அமைதியாக இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தைவான் தலைநகர் தாய்பெயில் நடந்த விழாவில் அதிபர் மா யிங் ஜியோவூ பேசியதாவது: தைவானின் ஜனநாயகத்தை சீனா பின்பற்ற வேண்டும். இணைப்பு இல்லை, விடுதலை இல்லை மற்றும் படைகளைப் பயன்படுத்துவதில்லை என்ற தைவானின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை.இந்தக் கொள்கை தான் தைவான் நீரிணையில் பதட்டத்தைத் தணித்துள்ளது. சர்வதேச சமூகத்தின் உடன்பாட்டையும், ஆதரவையும் பெற்றுத் தந்துள்ளது.அனைவருக்கும் வளத்தைப் பகிர்ந்தளிக்கும் விடுதலையான ஜனநாயக நாட்டை உருவாக்குவது தான் சீனக் குடியரசு நிறுவனர்களின் நோக்கம் என்றார்.
சவுதி அரேபியா நடுவராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: தலிபான் அறிவிப்பு.
சவுதி அரேபியா நடுவராக இருந்தால் நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தானி தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.பாகிஸ்தான் உளவுத் துறையான, ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளுடன் கொண்டுள்ள தொடர்பை அறுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகிறது.
கடந்த வாரம் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் வலியுர் ரகுமான் மெசூத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,“அரசுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை விரைவில் தீர்மானிப்போம். அதிலும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ள அரபு நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா நடுவராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் தொடரும் கலவரம்: அமைதி காக்கும் படி பிரதமர் வேண்டுகோள்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாதுகாப்புப் படையினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.
இதையடுத்து நாட்டில் அமைதி காக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எகிப்தின் அஸ்வான் என்ற தென்பகுதி மாகாணத்தில் உள்ள இத்பு என்ற இடத்தில் ஒரு கட்டடத்துக்கு முஸ்லிம்கள் தீ வைத்தனர். அக்கட்டடம் சர்ச்சாக மாற்றப்பட்டு வருவதால் தீ வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.இதைக் கண்டித்தும், அஸ்வான் மாகாண கவர்னரை பதவி விலக்கக் கோரியும் நேற்று முன்தினம் தலைநகர் கெய்ரோ, கடற்கரை நகரான அலக்சாண்டிரியா ஆகிய நகரங்களில் கிறிஸ்தவர்களின் பேரணிகள் நடந்தன.
கெய்ரோவில் புகழ் பெற்ற தாரிர் சதுக்கத்தில் நடந்த பேரணியின் போது பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று வீரர்கள் உட்பட 25 பேர் பலியாகினர், 207 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் ஒருவித பதட்டம் நிலவியது.
தொடர்ந்து கெய்ரோவில் தாரிர் சதுக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் சம்பவங்கள் நடந்த இடங்களை பிரதமர் எஸ்ஸாம் ஷராப் நேரில் பார்வையிட்டார்.பின் அவர் அளித்த பேட்டியில்,"முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்ள இந்த மோதல் நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைத்து விடும். அதனால் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்காவில் இரண்டாவது வாரமாக தொடரும் போராட்டம்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் துவங்கிய "வால் தெரு ஆக்கிரமிப்பு” போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் வாஷிங்டனில் இரண்டாவது வாரமாகத் தொடர்கிறது.
இந்த போராட்டங்களை “அமெரிக்காவின் வசந்தம்” என ஈரான் விமர்சித்துள்ளது.அமெரிக்காவின் நிதி மேலாண்மையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வரம்பு கடந்து இயங்குவதை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.நியூயோர்க்கில் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தலைநகர் வாஷிங்டனிலும் பரவியது. அந்நகரின் கே தெருவில் உள்ள மெக்பெர்சன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரு வாரங்களாக கூடாரங்கள் போட்டு தங்கி, தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளை மாளிகை அருகில் உள்ள விடுதலைக் கட்டடத்தை நோக்கி நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வாஷிங்டனின் வடபகுதியில் உள்ள மால்கம் எக்ஸ் பூங்காவிலும் அதேபோன்ற பேரணி நடந்தது.இதில் பங்கேற்ற பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த லனா பெர்ரி கூறுகையில்,"இந்நாட்டில் பலர் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் உள்ளனர். நான் மூன்றாவது உலகத்தில் வாழ விரும்பவில்லை. எங்களுக்கு மிகப் பெரிய நிறுவனங்கள் தேவையில்லை. வேலை மட்டுமே தேவை” என்றார்.
வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தைப் பார்த்து உத்வேகம் கொண்டதால் தான் தாங்களும் களத்தில் குதித்துள்ளதாக “வாஷிங்டன் டி.சி ஆக்கிரமிப்பு இயக்க” இணையதளம் தெரிவித்துள்ளது.தற்போது இதுபோன்ற போராட்டங்கள் நாட்டின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகின்றன. நாட்டின் நிதிக் கையாள்கையில் உள்ள பிரச்னை தான் இப்போராட்டங்களுக்குக் காரணம் என அதிபர் ஒபாமா முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நியூயோர்க் நகர மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், வேலையில்லா திண்டாட்டமே இதற்குக் காரணம் என்றார்.இந்நிலையில் ஈரானின் புரட்சிப் படைத் தளபதி மசூத் ஜஜாயேரி இதுகுறித்து கூறுகையில்,"நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஒபாமா தவறியதால் உருவாகியுள்ள இப்போராட்டம் விரைவில் அரசியல் மற்றும் சமூகப் போராட்டமாக மாற்றமடையும். அமெரிக்க ஊழலுக்கு எதிரான இப்போராட்டத்தின் முடிவில் மேற்கத்திய முதலாளித்துவம் வீழும். இது அமெரிக்க வசந்தத்தின் துவக்கம்” என்று கூறியுள்ளார்.
அரபு நாடுகளில் நடந்த புரட்சிகள் "அரபு வசந்தம்” என அழைக்கப்படுகின்றன. அரபு வசந்தம் குறித்து முன்பு கருத்துக் கூறிய ஈரான் அதிபர் அகமதி நிஜாத் விரைவில் அமெரிக்காவிலும் இதுபோன்ற போராட்டங்கள் நிகழும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கப் போராட்டங்களில் தற்போது தொழிலாளர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், சமூக குழுக்கள், வேலையில்லாதவர்கள் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு ஏழை, பணக்கார வித்தியாசம் அதிகரிப்பு, மோசமான நிதி மேலாண்மை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவை தான் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க நிபுணர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.
அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் சார்ஜென்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரக் கொள்கைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, முதலீடுகள் போன்ற பருப்பொருளியில் மாறிகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான செய்முறைகளை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள் என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கட்டமைப்பு பருப்பொருளியல் தொடர்பான முறையை சார்ஜென்ட் உருவாக்கினார். பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் நிரந்தரமான மாற்றத்தை ஆய்வு செய்வதற்கு இவரது ஆய்வு பயன்பட்டது.பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களும், மக்களும் தங்களது எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளும்போது பருப்பொருளியல் மாறிகளுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்ய இவர் உருவாக்கிய முறை பயன்பட்டது என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு குறிப்பிட்டிருக்கிறது.
சிம்ஸின் முறை வேறு மாதிரியானது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு போன்ற தாற்காலிக மாற்றங்களால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை இவர் உருவாக்கிய முறை விளக்கியது.
இருவரும் தனித்தனியே ஆய்வு செய்து பொருளாதார மாதிரிகளை உருவாக்கினாலும், இரண்டும் ஒன்றையொன்று முழுமையடைச் செய்வதாக உள்ளன.இவர்களின் கண்டுபிடிப்புகளை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியிருக்கிறது.
தாமஸ் சார்ஜென்ட்: 1943ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த சார்ஜென்ட் நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
1968ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்தார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
கிறிஸ்டோபர் சிம்ஸ்: 1942ம் ஆண்டில் பிறந்த இவர் 1968ல் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்டி முடித்தார். அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஜரோப்பிய வங்கிகளில் மூலதனம் அதிகரிக்கப்படும்: ஜேர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் உறுதி.
ஐரோப்பாவின் யூரோ மண்டல கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதன் ஒருபடியாக நிதி நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பிய வங்கிகளில் மூலதனம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யூரோ மண்டல கடன் நெருக்கடிக்கு இதுவரை தீர்வு எதுவும் காணப்படாத நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரான்சின் கேன்ஸ் நகரில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டிற்கு முன்பாக கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என பிரான்ஸ் கருதுகிறது.
இந்நிலையில் கடந்த இருநாட்களாக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இருவரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.யூரோ மண்டலக் கடன் நெருக்கடியின் ஒரு பகுதியாக வங்கிகள் திவாலாவதைத் தடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின்(இ.எப்.எஸ்.எப்) பணத்தை வங்கிகளுக்கு அளிக்கலாம் என பிரான்ஸ் அதிபர் யோசனை தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனை இறுதிக் கட்டத்தில் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜேர்மனி அதிபர் உறுதியாக இருந்தார்.நேற்று இருவரும் இணைந்து அளித்த பேட்டியில்,"இரு நாடுகளும் ஐரோப்பிய வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளன. அதுகுறித்த தகவல்களில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் விவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தனர்.
கிரீஸ் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஆதரவைத் தொடர்ந்து அளிப்பதாகவும் இருவரும் உறுதியளித்தனர்.ஐரோப்பிய வங்கிகளில் மூலதனத்தை அதிகரிப்பதற்கு தற்போது 200 பில்லியன் யூரோ தேவைப்படும் என சர்வதேச நிதியமைப்பு தெரிவித்துள்ளது.இக்கணக்கு தவறு எனக் கூறியுள்ள ஐரோப்பிய யூனியன் வங்கிகளுக்கிடையிலான கடன், தொழில் அமைப்புகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் ஆகிய நடவடிக்கைகள் வங்கிகளை திவாலாக்கிவிடும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் யூரோ மண்டல கடன் நெருக்கடியால் திவாலாகும் நிலையில் உள்ள டெக்சியா வங்கிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் இணைந்து நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளன.
ஜப்பானில் நிலநடுக்கம்: அணு உலைகளுக்கு பாதிப்பில்லை.
பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் நிலைகுழைந்துள்ள ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் தான் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்தது.
அந்த இரட்டைப் பேரழிவுகளில் 21,000 பேர் பலியானார்கள். அதில் இருந்தே ஜப்பான் இன்னும் மீளவில்லை. அதற்குள் புகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.
புகுஷிமாவில் இருந்து 245 கிமீ தொலைவில் உள்ள டோக்கியோவில் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
சீனாவில் ஆளில்லா விமானம் தயாரிப்பது அதிகரிப்பு.
ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.இதை தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் டிரோன் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய அளவிலான டிரோன் எந்த சீதோஷ்ண நிலையிலும், கடினமான இடங்களுக்கும் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும்.
இந்நிலையில் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜூஹாய் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில் மிகப்பெரிய விமான கண்காட்சி நடந்தது.அப்போது பல சீன நிறுவனங்கள் ரிமோட் மூலம் இயங்கும் 25க்கும் அதிகமான சிறியரக டிரோன் விமானங்களை இயக்கி காட்டின.மேலும் அமெரிக்க விமானங்கள், படைகள் மீது டிரோன்கள் தாக்குதல் நடத்துவது போன்ற அனிமேஷன் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.
சீன நிறுவனங்கள் டிரோன்களை தயாரித்து விற்றால் ராணுவத்தை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். தீவிரவாதிகளின் கைகளில் இது கிடைத்து விட்டால் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.ஏமனில் அல்கொய்தா முக்கிய தலைவர் அவ்லாகி மீது அமெரிக்க டிரோன் மூலம் தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் மற்ற நாடுகள் மீது ஒவ்வொரு நாடும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கினால் என்னவாகும்? என்று ராணுவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திரைப்படமாக உருவெடுக்கும் ஸ்டீவ் ஜாப்சின் வாழ்க்கை வரலாறு.
அண்மையில் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக வெளியிட ஹாலிவுட் திட்டமிட்டுள்ளது.கணணி மற்றும் அதிநவீன கைத்தொலைபேசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 5ம் திகதி காலமானார். முன்னதாக தனது வாழ்க்கையைப் பற்றி சுயசரிதை எழுத முடிவு செய்த இவருக்கு, பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் உதவினார்.அதாவது ஜாப்ஸ் சொன்ன தகவல்களை ஐசக்சன் பதிவு செய்து சுயசரிதையை எழுதி உள்ளார். “ஸ்டீவ் ஜாப்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சுயசரிதையை சைமன் அன்ட் ஸ்குஸ்டர் நிறுவனம் நவம்பர் 21ம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த நூலுக்கு ஐஸ்டீவ் என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, ஜாப்ஸ் சுயசரிதையை திரைப்படமாக வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான உரிமம் பெறுவது தொடர்பாக இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு ஆபத்து: குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை.
ஜப்பானில் மக்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி பரிசோதனை நேற்று தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பின் சுனாமி தாக்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.
புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறின. இதையடுத்து அந்த பகுதியில் கதிர்வீச்சு ஏற்பட்டது. காய்கறிகள், பயிர்களில் கதிர்வீச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகுஷிமா பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் கதிர்வீச்சு இருக்கிறதா என்று தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் தைராய்டு பரிசோதனையையும் அரசு நடத்த வேண்டும். ஏனெனில் ரஷ்யாவில் கடந்த 1986ம் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர்.
அப்போது ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்னை ஏற்பட்டது. எனவே ஜப்பான் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தைராய்டு பரிசோதனை நடத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை ஜப்பான் அரசு ஏற்று ஏற்று குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனையை தொடங்கியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புகுஷிமா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழந்தைகளில் 130 பேரில் 10 பேர் தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.எனவே அந்தப் பகுதியில் உள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது என்றனர்.
புரட்சிப் படைகளின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்.
லிபியாவில் பொது மக்களின் 6 மாத போராட்டத்துக்கு பின் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்தது.தற்போது ஆட்சி அதிகாரம் புரட்சிபடையினரின் இடைக்கால அரசு வசம் உள்ளது. இருந்தும் சிர்த் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஏனெனில் இது கடாபி பிறந்து வளர்ந்த சொந்த ஊராகும்.
எனவே அவரது ஆதரவாளர்கள் சிர்த் நகரில் புரட்சி படையை நுழைய விடாமல் தடுத்து வந்தனர். எனவே சிர்த் நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் புரட்சி படை இறங்கியது.இதற்காக கடந்த மாதம் 15ந் திகதி முதல் கடாபியின் ராணுவம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் போரிட்டு வந்தது. புரட்சி படைக்கு நேட்டோ நாடுகளின் ராணுவமும் ஆதரவு அளித்தன.
கடந்த 25 நாட்களாக நடந்த சண்டையில் நகரம் முழுவதையும் புரட்சி படை பிடித்தது. சிரித் நகரின் அரசு ஆஸ்பத்திரி. பல்கலைக்கழக வளாகம் போன்றவை ஏற்கனவே புரட்சி படையின் பிடியில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த சண்டையில் நகரின் அடையாளமாக திகழும் மாநாட்டு மையம் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் பிடித்தது.அதை தொடர்ந்து சிர்த் நகரம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக புரட்சி படை தலைமை தளபதி முகமது அல்-பயாத் அறிவித்தார்.
புகை மாசுபாடுகளை குறைக்க இத்தாலி முடிவு: ஞாயிறன்று வாகனங்களுக்கு தடை.
வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க இத்தாலியின் மிலன் நகரில் ஞாயிறன்று அனைத்து வாகனங்களுக்கும் 10 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.செயற்கைக் கோள் பிடித்த படங்களின் மூலம் கிடைத்த தகவலின்படி ஐரோப்பிய நாடுகளில் மிலன் நகரில் தான் அதிக மாசுபாடு ஏற்படுவது தெரியவந்தது.
இதையடுத்து மிலனில் ஏற்படும் பல்வேறு மாசுபாடுகளை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக குறிப்பிட்ட அளவிற்கு மேல் தொடர்ந்து அதிக புகை வெளியிடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் மிலன் நகரின் மத்திய பகுதியில் அதிகமாக புகை வெளியிடும் வாகனங்களுக்கு வியாழன் முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது.வாகன புகையால் காற்று மாசுபடுவதை மேலும் குறைக்கும் வகையில் ஞாயிறு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை(10 மணி நேரம்) அனைத்து வாகனங்களும் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் இந்த நடவடிக்கை அனைத்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமும் பிரபலம் ஆகாமல் விவாதத்துக்கே வித்திட்டது.வாகனங்கள் பயன்பாட்டை குறைக்க மெட்ரோ ரயில்கள், பஸ் போக்குவரத்தை அதிகரிக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் சிரிய தூதரகம் மீது தாக்குதல்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.போராட்டத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் இதுவரை 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் குர்தீஷ் எதிர்க்கட்சி தலைவர் மெஷால் திரிமோ கொல்லப்பட்டார்.
இது ஜேர்மனியில் வாழும் சிரிய மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் பெர்லினில் உள்ள சிரியா தூதரகத்துக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.அவர்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த பொலிசார் தடுத்தனர். அதை மீறி தூதரக காம்பவுண்டு சுவரை இடித்தும், கேட்டை உடைத்தும் அக்கும்பல் உள்ளே புகுந்தது.
அப்போது சிரியா தூதர் அங்கு இருந்தார். அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். தூதரகத்தின் மீது வெடிகுண்டு மற்றும் கற்களால் வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் பொலிசார் அங்கு விரைந்து வந்து தூதரை மீட்டனர்.பின்னர் அவர்களை தூதரகத்தில் இருந்து வெளியேற்றினர். அதே நேரத்தில் ஜேர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்க்கிள் உள்ள சிரியா தூதரக அலுவலகத்திலும் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
அதில் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். சிரியா மக்களின் இந்த தாக்குதலுக்கு ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி குயிடோ வெஸ்பர் வெலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியில் இருக்கும் சிரியா தூதரகங்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி தவிர ஐரோப்பிய நாடுகளில் உள்ள மற்ற சிரியா தூதரக அலுவலகங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் மூலம் இயங்கிய விமானம்.
விமானங்கள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.தாம்சன் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனமே இத்தகைய சாதனையை படைத்துள்ளது. “போயிங் 757” ரக விமானத்தில் 2 என்ஜின்கள் உள்ளன. அவற்றில் ஒரு என்ஜின் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டது.
மற்றொரு என்ஜின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மூலம் இயங்கியது. அதற்காக வீடுகளின் சமையலறைகள் மற்றும் ஹொட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன.அவை அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த விமானம் பர்மிங்காமில் இருந்து லான்ஷோரக் நகருக்கு கடந்த வாரம் இயக்கப்பட்டது. அதில் 232 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.
உலகிலேயே முதன் முறையாக சமையல் எண்ணெய் மூலம் விமானத்தை இயக்கி சாதனை படைத்ததை பெருமையாக கருதுவதாக தாம்சன் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.2012ம் ஆண்டில் விமானங்கள் முழுவதையும் சமையல் எண்ணெய் மூலம் இயக்க இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF