Thursday, January 12, 2012

NEWS OF THE DAY.

மேர்வின், களனி பிரதேசசபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதற்கு தடை.

அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் களனி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தடை விதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஊடகங்களில் குற்றம் சுமத்துவதனால் கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடும் என சுதந்திரக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலமாக கடசிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் மேர்வின் சில்வா கப்பம் கோரல் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக களனி பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமைச்சரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பஸ்ஸில் தவறவிடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை ஒப்படைத்த நடத்துனர்!- புத்தளத்தில் சம்பவம்.
புத்தளம் பிரதேச இ.போ.ச பஸ்ஸில் தவறவிடப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் கூடிய கைப்பையினை பஸ்ஸின் நடத்துனர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.புத்தளம் பஸ் டிப்போவில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:கடந்த 9 ஆம் திகதி பகல் கல்பிட்டியிலிருந்து புத்தளம் ஊடாக குருணாகல் செல்லும் பஸ்ஸில் புத்தளம் நகருக்கு வந்துள்ள திருமணமான தம்பதியினர் அவர்கள் வசமிருந்த கைப்பையினை பஸ்ஸில் தவறவிட்டுவிட்டு இறங்கிச் சென்றுள்ளனர்.
குறித்த கைப்பை பஸ்ஸில் இருந்து கண்டெடுத்த குறித்த பஸ்ஸின் நடத்துனர் அதனை தான் கடமையாற்றும் புத்தளம் பஸ் டிப்போவில் ஒப்படைத்துள்ளார்.இதேநேரம் பஸ்ஸில் தமது கைப்பை தவறவிடப்பட்டதை அறிந்த குறித்த தம்பதியினர் அதுபற்றி பஸ் டிப்போவுடன் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் பணம் என்பன உள்ளடங்கிய பஸ்ஸில் தவறவிடப்பட்ட கைப்பை அன்றைய தினம் மாலையில் புத்தளம் பஸ் டிப்போ முகாமையாளர் எல்.பி. ஸ்வர்ணசிறி என்பவரால் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆர்.எம்.டி. மைக்கல் எனும் நடத்துனரே இவ்வாறு இந்த தவறவிடப்பட்ட கைப்பையினை பஸ்ஸில் இருந்து கண்டெடுத்து டிப்போவில் ஒப்படைத்தவராவார். 
களனி பிரதேச சபை - மேர்வின் சில்வா முறுகல் தொடர்பில் தலையீடு செய்ய முடியாது!- ஜனாதிபதி.
களனி பிரதேச சபையின் உறுப்பினர்களை அமைச்சர் மேர்வின் சில்வாவே பரிந்துரை செய்தார் என்றும், எனவே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான முறுகல் நிலையில் தாம் தலையீடு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அத்துடன் பிரதேச சபைக்காக ஆளும் கட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும், அமைச்சர் மேர்வின் சில்வாவே தெரிவு செய்தார்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி, அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தமக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.இதேவேளை, மேர்வின் சில்வாவிற்கும் களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்சினை குறித்து அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவர் நாடு திரும்பியவுடன், அவருக்கு இந்தப் பிரச்சினை குறித்த முழு அறிக்கை ஒன்றை கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அனுப்பி வைக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சமாதானத்தை நிலைநிறுத்த நாட்டை இராணுவமயப்படுத்துவோம்!- கோத்தபாய ராஜபக்ஸ.
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்தவே இராணுவத்தினரை பலப்படுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் நாட்டை இராணுவமயப் படுத்துகின்றது என்ற சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் அகற்றப்பட்டுள்ளது, எனினும் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவத்தினரை நிலைநிறுத்தும் உரிமை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இராணுவத்தினரை நிலை நிறுத்துவது குறித்து, உலகின் வேறு எந்த தரப்பிற்கும் கருத்து வெளியிடும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சங்கக்காரவின் உரை, ஒபாமாவிடம், சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோருவதைப் போன்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் அணியின் வீரர் குமார் சங்கக்கார கடந்த வருடம் இங்கிலாந்தில் நிகழ்த்திய Colin Cowdrey  உரையை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்துள்ளார்.இந்த உரையானது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியமையைப் போன்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் விளையாட்டு வீரர்கள் சுயமாக இவ்வாறான உரையை ஆற்ற முடியாது குறித்த உரைகளுக்கு இலங்கையின் கிரிக்கட் அதிகாரிகளின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குமார் சங்கக்கார ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் ஊழல்களை வெளிநாட்டவர்களுக்கு தெரிவிக்கும் காரியத்தையே இதன்போது மேற்கொண்டார் என்று அமைச்சர் குற்றம் சுமத்தினார்.இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தேர்தல் அரசியல் செல்வாக்குடன் நடத்தப்பட்டது என்று முன்னாள் கிரிக்கட் வீரர் ஹசான் திலகரட்ன குற்றம் சுமத்தியுள்ளமையையும் அமைச்சர் கண்டித்தார்.
மேர்வினை கடவுள் தண்டிக்கிறார்!- முன்னேஸ்வரம் காளிகோயிலில் விசேடபூசை.
அமைச்சர் மேர்வின் சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேர்வின் சில்வாவுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து நன்றி தெரிவிக்கும் பூஜை ஒன்று இன்று முன்னேஸ்வரம் காளிகோயிலில் இடம்பெற்றது.களனி பிரதேசசபை மற்றும் பேலியகொட நகரசபை ஆகியவற்றின் 16 உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிடம் விடுத்துள்ளனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் மேர்வின் சில்வாவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் காளிக்கோயிலின் பலிபூசையை நடத்தவிடாது மேர்வின் சில்வா தடைகளை ஏற்படுத்தினார். அதன்போது தாம் காளியிடம் இந்த குற்றத்துக்காக தண்டனை வழங்கவேண்டும் என்று வேண்டுதல் வைத்ததாக காளிகோயிலின் பிரதம பூசகர் சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.
அந்தவேண்டுதலின் அடிப்படையிலேயே மேர்வின் சில்வாவுக்கு இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.எனவே அதனை குறித்தே பூசை வழிபாடு இடம்பெற்றதாக சிவபாதசுந்தரம் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற அவசர கூட்டம்.
பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அவசர கூட்டத்திற்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் உயர்மட்ட ஊழல் தொடர்பான வழக்குகளை மறு விசாரணை செய்ய தவறியுள்ளனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்த அவசர கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசியலில் தற்போது நிலவி வரும் குழப்பத்திற்கு இது முக்கிய காரணம் என பாகிஸ்தான் மக்கள் கட்சி குற்றம் சாட்டியதை அடுத்து இந்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கூட்டத்திற்கு பாகிஸ்தான் தேசிய கட்சி தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி காலை 2.30 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் கடலில் சுமார் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் பண்டா ஏசெக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கட்டடங்கள் மிக பயங்கரமாக குலுங்கின. எனினும் சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். பசிபிக் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை.
ஈரான் ரகசியமாக மையம் அமைத்து யுரேனியத்தை செறிவூட்டுவதால் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் பதட்டம் அடைந்துள்ளன.இந்நிலையில் பல அத்துமீறல்களை ஈரான் நிகழ்த்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.ஐ.நா.வில் அமெரிக்காவின் எச்சரிப்புக்கு பதிலளித்த ஈரான் தூதர், அந்நாடுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றன எனக் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியதாவது: போர்டோவில் ஈரான் 20 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டத்  தொடங்கினால் இனி, எதிர்காலத்தில் அணுசக்தி தேவைகளை முன்னிறுத்தி அந்நாடு இப்போது செய்து வரும் வன்முறைகளுடன் மேலும் பல அத்துமீறல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது.அதனால் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் உடனடியாக கைவிட வேண்டும். சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மக்கள் விருமபினால் பதவி விலக தயார்: சிரியா ஜனாதிபதி.
சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அரபு லீகின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை நேரில் பார்வையிட்டு வருகிறது.
நாட்டின் வடபகுதியின் லடாகியா நகரில் அக்குழு மீது நேற்று சிலர் தாக்குதல் நடத்தியதில் குவைத் அதிகாரிகள் இருவர் காயம் அடைந்தனர். எனினும் அக்குழு மீது பலதரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதத்திற்குப் பின் நேற்று முதன் முதலாக நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி அசாத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாதுகாப்பு ஒன்று தான் சிரியா நாட்டின் தற்போதைய முன்னுரிமை. அதை நிறுவுவதற்காக பயங்கரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும்.
நமக்கு எதிரான அன்னியச்சதிகளால் நாம் வீழ்ந்துவிடப் போவதில்லை. அரபு லீக் கடந்த 60 ஆண்டுகளாக அரபுநாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது.அரபு லீகில் இருந்து சிரியா வெளியேறும் பட்சத்தில் அந்த அமைப்பே குலைந்துவிடும். நாம் விரைவில் வெற்றியை அறிவிப்போம். மக்கள் விரும்பினால் நான் பதவி விலகத் தயார் என்று தெரிவித்தார்.
மியான்மர் தேர்தலில் சூகி போட்டியிடுவது உறுதி.
மியான்மரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆங் சான் சூகி போட்டியிடுவதை அவரது கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி தேசிய ஜனநாயக லீக் கட்சி என்ற கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் இந்தாண்டு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்தாண்டே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் யான் வின் அளித்த பேட்டியில், யாங்கூன் அருகில் உள்ள காவ்மு தொகுதியில் போட்டியிடுவதாக சூகி தெரிவித்துள்ளார் என்றார்.கடந்த வாரம் இதுகுறித்து பேட்டியளித்த சூகி தன் போட்டி குறித்து உறுதிப்படுத்த மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 32,912 நபர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று புள்ளி விபர ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.அண்மையில் புதிதாக ஒரு சட்டம் உருவாகி வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் தொகையைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் ருமேனியர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கும் வசதி 3.6 சதவீதம் குறைந்திருக்கிறது. சம்பளம் பெறும் அந்நிய நாட்டவர் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த பத்தாண்டுகளில் 6 சட்டங்கள் புலம்பெயர்ந்தோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நபரை மணந்து குடியுரிமை பெறுவதில் பெரிதும் தடைகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு 31 பேருக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் சீர் குலைந்ததால் பிரான்சுக்கு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பலர் கருதுகின்றனர்.சோசலிசக் கட்சி வெளிநாட்டவருக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று முனைப்பாகப் பிரச்சாரம் செய்து வருவதால், தற்போதைய பிரான்சின் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் வலது சாரி அமைப்பான UMP கட்சி வெளிநாட்டவருக்கான கொள்கையை உருவாக்குவதில் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.
முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் ஜேர்மனி.
வடஆப்ரிக்காவின் அல்ஜீரியா, லிபியா மற்றும் துனிஷியா நாடுகளுக்கு ஜேர்மனி உதவி செய்யத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டர்வெலே தெரிவித்தார்.
வெஸ்ட்டர்வேலே துனிஷியாவின் தலைநகரான டூனிஸில், திங்கட்கிழமை பேசிய போது, ஐரோப்பாவில் இஸ்லாமிய கட்சிகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்ற நேரத்தில் இந்த நாடு ஒரு முன்மாதியான நாடாக உருவாகியுள்ளது. மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் துனிஷியா ஒரு மாற்றத்திற்கான மாதிரி நாடாக உருவாகக்கூடும் என்றும் கூறினார்.துனிஷியா 60 மில்லியன் யூரோ கடனில் தத்தளிக்கிறது. இந்நிலையில் ஜேர்மனி 32 மில்லியன் யூரோவை முடிவு செய்துள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
லிபியாவிற்கு 100 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கி உதவி புரிந்ததுடன், மேலும் லிபியாவிற்கு ஜேர்மனி வைத்தியர்களையும் அனுப்பியது.மேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்க உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தார். ஈரான் மேலை நாடுகளுக்கு எதிராக செயல்படுவதால் அந்நாடு தனித்து விடப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.
ஆப்கானிலிருந்து கனடா சென்ற இராணுவச் சரக்குகள் மாயம்.
ஆப்கானிஸ்தானிலிருந்து இராணுவச் சரக்குகளை கனடா தன் நாட்டிற்கு கப்பல்கள் மூலம் கொண்டு வந்தது.
கனடாவில் அந்த கப்பல்களை சோதனை செய்த போது அந்தச் சரக்குகளுக்கு பதிலாக கற்களும், பாறைகளும் இருந்தது அதிர்ச்சியை அளித்தது.இதுகுறித்து கனடா இராணுவ தேசிய புலனாய்வுச் சேவை நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பத்து சரக்குப்பெட்டகங்களில் இருந்து டயர், முள்கம்பி, பொறியியல் கருவிகள், கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள் ஆகியவற்றிற்குப் பதிலாக கற்களும், பாறைகளும் வைக்கப்பட்டன.
இந்தச் சரக்குப் பெட்டகங்களில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று லெப்டினெண்ட் கமாண்டர் ஜான் நெதர்கோட் தெரிவித்தார். எல்லா ஆயுதங்களும் ஏற்கெனவே தனி விமானங்கள் மற்றும் தனிக்கப்பல்கள் மூலமாக கனடா போய்ச் சேர்ந்துவிட்டன, மேலும் இராணுவச் சீருடைகள் எதுவும் தொலைந்து போகவில்லை என்றார்.சரக்குப்பெட்டகங்களுடன் கூடிய விமானங்கள் முதலில் பாகிஸ்தான் வந்தடைந்தன. அங்கிருந்து அவை சரக்குக்கப்பல்களில் ஏற்றப்பட்டு கனடா வந்து சேர்ந்தன. விமானத்தளத்தில் சரக்கு இறக்கப்பட்டபோதே அல்லது கராச்சி துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்ட வேளையிலோ பொருட்களைத் திருடிவிட்டு கற்களை ஏற்றியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கனடாவின் ராணுவக்கழகத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி அலைன் பெல்லேரின் கூறுகையில், கொள்ளைக்கார நாடான பாகிஸ்தான் வழியாக பொருட்களைக் கொண்டுவர வேண்டி இருப்பதால் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றார்.கனடாவுக்கான பாகிஸ்தான் தூதுவர் இத்திருட்டுச் சம்பவத்தை மறுத்துள்ளார். திருட்டு நடந்திருக்க வாய்ப்பேயில்லை, கனடா நாட்டினர் தான் கதை திரித்து விடுகின்றனர் என்று காட்டமாகப் பதிலளித்தார்.
தொடர்ந்து அதிகரிக்கும் அணுவியல் விஞ்ஞானி கொலைகள்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அணுவியல் விஞ்ஞானியுமான முஸ்தாபா அஹ்மதி ரோஷன் என்பவர் கார் குண்டு வெடித்ததில் மரணமடைந்தார்.இவர் காரில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் விஞ்ஞானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரானின் அல்லாமே தபதாய் பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அருகே நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக ஈரானில் விஞ்ஞானிகள் கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.அமெரிக்காவும், இஸ்ரேலும் இக்கொலைகளைத் திட்டமிட்டுச் செய்வதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அந்த நாடுகள் இந்தக் குற்றச்சாட்டை ஏற்பதாக இல்லை.டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஐம்பது வயது நிரம்பிய பேராசிரியர் மசூத் அலி முகம்மதி என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு தொலைவிலிருந்து இயக்கிய குண்டு வெடித்ததில் மரணத்தைத் தழுவினார்.
விஞ்ஞானிகளைக் கொல்லத் திட்டமிட்ட தாக்குதல் முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் இவையனைத்தும் ஈரானின் அணுசக்தி ஆய்வுகளுக்கு எதிரானவையாக இருப்பது தெளிவாகிறது.ஈரான் தனது அணுசக்தி ஆய்வுகள் மின்சாரத் தேவைக்காக நடைபெறுவதாகக் கூறினாலும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் இக்கூற்றை நம்பத் தயாராக இல்லை.
முதன் முறையாக ஒரு குற்றவாளியை தேடும் பணியில் 13 ஆயிரம் பொலிசார்.
சீனாவில் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த குற்றவாளியை பிடிப்பதற்காக 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சீனாவை சேர்ந்தவர் ஜெங் காய்குய்(42). இவர் கடந்த வாரம் கிழக்கு ஜியாங்சு மாகாணம் நான்ஜிங் நகரில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த 31 ஆயிரம் டொலர் பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
இதுதவிர மேலும் 6 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதும், கடந்த 8 ஆண்டுகளாக காவல்துறை அதிகாரிகள் அவரை தேடி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அவரை பிடிக்க 13 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.
மீண்டும் அத்துமீறிய அமெரிக்கா.
அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி நுழைந்தால் சுட்டு தள்ளுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில்- ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானின் மிரான்ஷா நகரில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தின.அங்குள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க விமானங்கள் அந்த வீடு மீது ஏவுகணைகளை வீசின. இதில் வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியானதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தானின் கைபர் பழங்குடியின பகுதி மார்க்கெட்டில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 35 பேர் பலியாயினர், 60க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இப்பகுதி ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் பிரதான வழிகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF