Monday, January 16, 2012

NEWS OF THE DAY.

துமிந்த சில்வா மூன்று மாதத்தில் நாடு திரும்புவார்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்னும் மூன்று மாதங்களில் நாடு திரும்புவார் என எதிர்ப்பார்ப்பதாக நுகேகொடையில் அமைந்துள்ள துமிந்த சில்வாவின் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த துமிந்த சில்வா சிங்கப்பூரில் தற்போது சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரால் தற்போது மற்றவருடன் தொடர்புகளை ஏற்படுத்த முடிகிறது.
அருகில் உள்ளவர்களை இனங்காணமுடிகிறது எனவும் நுகேகொடையில் உள்ள அலுவலகத்துடன் அவர் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சஜித் மற்றும் தயாசிறியின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யக் கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இருவரது கட்சி உறுப்புரிமையையும் ரத்து செய்து ஒழுக்காற்று விசாரணை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்பட உள்ளது.
இருவரும் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் இவர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் கட்சியின் தலைமையால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒழுக்காற்று விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.இந்தநிலையில் எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைக்கும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரித்துள்ளார்..
மகிந்தவுக்கு கருணை காட்டியது ஒபாமா நிர்வாகம்!
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்து வரும் கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டேலி, இந்த விவகாரத்தில் இராஜாங்கத் திணைக்களத்தின் பரிந்துரைகளை ஜனவரி 13ம் நாளுக்குள் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று அமெரிக்க நீதித் நீதித் திணைக்களத்தின் உதவி சட்டமா அதிபர் ரொனி வெஸ்ட் மற்றும் பிரதி கிளை பணிப்பாளர் வின்ஸ் எம்.காலர்வே ஆகியோர் சிறிலங்கா அதிபருக்குள்ள இராஜதந்திர சிறப்புரிமை குறித்த பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து நீதிபதி கொட்டேலி, இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு சிறிலங்கா அதிபருக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.இதற்கிடையே, சிறிலங்கா அதிபரை போர்க்குற்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நடந்து கொண்டுள்ளது குறித்த தமிழர் இனப் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் இலங்கையையும் பாதிக்குமா?
ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பொருளாதார தடைகளை பிரயோகித்தால் அது இலங்கையையும் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கை எண்ணெய் இறக்குமதியில் ஈரானை பெரிதும் நம்பியிருப்பதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்படக் கூடுமென ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுத்திகரிக்கப்படும் மசகு எண்ணெய்க்கு ஈரானின் மசகு எண்ணெயையே இலங்கை நம்பியிருக்கின்றது. ஈரானின் அதிகளவு சல்பர் செறிந்த கனமான மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வகையிலேயே சப்புகஸ்கந்த சுத்திகரிப்புநிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.எனினும், இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருவதால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா, ரஷ்யாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது.
அதேவேளை, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டால் அமெரிக்கா இலங்கைக்கு சில சலுகைகளை வழங்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இத்தகையதொரு பின்னணியில் அமெரிக்காவின் சலுகைகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
சாரதிகளை தண்டிக்க போக்குவரத்தில் புதிய விதி அறிமுகம்!
போக்குவரத்தில் ஏற்படும் நெருக்கடி மற்றும் விபத்துக்களைக் குறைப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிகளில், மேலும் புதிதாக ஒரு விதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகனங்களின் ஹோன் சத்தமானது குறித்த வாகனம் நகரும்போது 105 டெசிபலை விட குறைவாக காணப்பட வேண்டும். அத்துடன் நிலையாக நிற்கும் வாகனங்களின் ஹோன் ஒலியானது 93 டெசிபலிற்கு குறைவாக காணப்பட வேண்டும் என்பதே அப்புதிய போக்குவரத்து விதியாகும்.
இவ்விதியானது, மிக விரைவில் சுற்றுச்சூழல் அமைச்சினால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.இது ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகை போக்கிகளின் (சைலென்சர்) ஒலியை கட்டுப்படுத்தும் விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்காபிரிக்க நாடுகளை வசப்படுத்தும் முயற்சியில் இலங்கை! மஹிந்தவின் கடிதத்துடன் பீரிஸ் சுற்றுப் பயணம்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தொடரில் அரபு நாடுகள் பலவும் இலங்கை அரசைக் கைவிடலாம் எனச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை நாடிச் சென்றுள்ளது.இதனொரு அங்கமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்�சவின் பணிப்புக்கமைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு அவசர அரசியல் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கதொரு உறவுள்ளது� என்ற வார்த்தையுடன், செனகல் நாட்டில் முதலில் கால் பதித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவைக் கோரியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்�வின் கடிதத்தையும் செனகல் நாட்டு ஜனாதிபதியிடம் பீரிஸ் கையளித்துள்ளார்.


அத்துடன், செனகல் வெளிவிவகார அமைச்சர் மற்றும் படைத்துறை அமைச்சர் ஆகியோர்களையும் சந்தித்துக் கொண்டு மேற்கு ஆபிரிக்காவின் இன்னுமொரு நாடான புர்க்கினா பாசோ ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்�சவின் கடிதத்தையும் அவரிடம் பீரிஸ் கையளித்துள்ளார். அத்து டன், இந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், மேற்கு ஆபிரிக்காவின் இன்னுமொரு நாடான மவுரித்தோனியாவுக்கு பயணமாகியுள்ளார்.
சவூதியில் மரணமான இலங்கையர் ஒருவரின் சடலம் இந்தியாவில்.
சவூதி அரேபியாவில் மரணமான இலங்கையர் ஒருவரின் சடலத்தை பொறுப்பேற்க இலங்கையில் உறவினர் இல்லாமையினால், குறித்த நபரின் மனைவி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சடலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களாக சவூதியில் தொழில் புரிந்த இலங்கை பிரஜையான பசுபதிப்பிள்ளை சிவானந்தன் திடீரென ஏற்பட்ட இதயநோயினால் அண்மையில் மரணமானார்.
இதேவேளை, இவருடைய சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஜெத்தாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற போது, மரணமானவருக்கு இலங்கையில் எந்த உறவினர்களும் இல்லை என ஜெத்தாவிலுள்ள இலங்கை தூதுவர் ஆதம்பாவா உதுமாலேப்பை குறிப்பிட்டுள்ளார்.மேலும், சென்னையிலுள்ள அவரது மனைவி விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய அவருடைய சடலத்தை சென்னைக்கு அனுப்பிவைக்க உதவுமாறு, இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவரது சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெத்தாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டார் தலைவர் அமீர் இலங்கை வருகை.
கட்டார் இராஜ்ஜியத்தின் தலைவர் அமீர் ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானி இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரிலேயே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கட்டார் தலைவர் அமீருடன் அந்த நாட்டு உயர்மட்ட அரசியல் அதிகாரிகள் குழுவொன்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவொன்றும் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த கட்டார் இராஜ்ஜியத்தின் தலைவரை விமான நிலையத்தில் வைத்து முப்படையினரின் மரியாதையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவேற்றார்.கட்டார் தலைவரின் இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்குறிய இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பர்வேஸ் முஷாரப் நாடு திரும்ப முடிவு.
பாகிஸ்தான் மக்களுக்கு இப்போது தேவை மாற்று அரசுதான் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்தார். நெருக்கடியான இந்த சூழலில் தகுதியான மாற்று அரசுதான் பாகிஸ்தானுக்குத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றாலும், இத்தருணத்தில் அதைக் கண்டு அஞ்சாமல் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிந்து தேர்தலுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி பொறுப்பேற்ற பிறகு லண்டனில் குடியேறினார் முஷாரப். அவ்வப்போது துபைக்கு வரும் அவர், இப்போது முதல் முறையாக பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அவர் பாகிஸ்தான் திரும்பக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. துபையிலிருந்து அவர் பாகிஸ்தானுக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
இது பற்றி பர்வேஸ் முஷாரப் கூறுகையில் இப்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கு என்னைப் போன்ற தலைமை தேவைப்படுகிறது என்று உணர்கிறேன். அதற்காக நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அரசியல் ஸ்திரமற்ற நிலை, சமூக பொருளாதார சூழலில் பின்னடைவு ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் மாற்று அரசை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அரசாக ஒரு கட்சி வந்தால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானை மக்கள் ஆளும் அரசு வர வேண்டும். ஆனால் இப்போது அரசியல்தான் பாகிஸ்தானை ஆள்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்ததாக முஷாரப் கூறினார்.
இம்மாதம் 27 அல்லது 30-ம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறினார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாடு திரும்ப முடிவு செய்த பிறகு இத்தகைய பிரச்னைகளை சமாளித்துத்தான் ஆக வேண்டும். நாடு திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து என்பது தமக்கு நன்கு தெரியும் என்று அவர் கூறினார்.
என்னை விட எனது குடும்பத்தினர், நண்பர்கள், எனது நலம் விரும்பிகள்தான் அச்சுறுத்தல் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர். ஆனால் அதிபராக இருந்த காலத்திலிருந்தே இத்தகைய அச்சுறுத்தலை சந்தித்து வருவதாக அவர் கூறினார். எனக்கு சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளேன்.பாகிஸ்தான் அரசும் முன்னாள் அதிபர் என்ற வகையில் உரிய பாதுகாப்பை அளிக்கும் என நம்புவதாக முஷாரப் கூறினார். எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் 100 சதவீத உத்தரவாதம் அளிக்க முடியாது. மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பது கடவுள்தான். அது எந்த முடிவாக இருந்தாலும் ஏற்க வேண்டியதுதான் என்று அவர் கூறினார்.
இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியதில் மூன்று பேர் பலி.
இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.இத்தாலியைச் சேர்ந்த கோஸ்டா கான்கொரிடா என்ற கப்பல், 450 மில்லியன் யூரோ செலவில் கட்டப்பட்டு, 2006 முதல் பயணிகள் கப்பலாக செயல்படத் துவங்கியது.
டைட்டானிக் கப்பல் போன்ற இக்கப்பலில், ஐந்து உணவு விடுதிகள், 13 மதுபான விடுதிகள், நான்கு நீச்சல் குளங்கள், ஜாக்குஸ்ஸி நிறுவனத்தின் ஆடம்பரமான ஐந்து நீச்சல் தொட்டிகள், 6,000 ச.மீ., பரப்பளவில் உடற்பயிற்சிக் கூடம், தியேட்டர், சூதாடும் அரங்கம், டிஸ்கோ அரங்கம் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன.இதில், மொத்தம், 3,780 பயணிகள் செல்லலாம். இக்கப்பல் நேற்று இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக சிறிது தூரத்தில் உள்ள கிக்லியோ தீவின் கரையருகில், தரை தட்டி, சிறிது சிறிதாக பக்கவாட்டில் சாயத் துவங்கியது. இதற்குள் நிலவரத்தை ஊகித்துவிட்ட கப்பல் அதிகாரிகள், அனைத்துப் பயணிகளையும் பத்திரமாக சிறு படகுகள் மூலம் வெளியேற்றினர்.
கப்பலில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் என, மொத்தம் 4,234 பேர் இருந்தனர். இவர்களில் 4,165 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.பலர் படகுகளை நம்பாமல், கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். இதில் மூன்று பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான கப்பல் சிறிது சிறிதாக சாயத் துவங்கி, தற்போது அதன் அரை பாகம் கடலில் மூழ்கிக் கிடக்கிறது.


தொழில்நுட்ப பொருட்களை தீயிட்டு கொளுத்திய தாலிபானியர்கள்.
பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தானில் வீடுகளுக்குள் புகுந்த தலிபான்கள், டிவி, கணினிகள், மொபைல்போன்கள் ஆகியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.


தலிபான்கள், மேற்கத்திய பாணியிலான வாழ்க்கை முறைகள், நவீன தொழில்நுட்பங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெற்கு வஜீரிஸ்தானின், வானா பகுதியில் நேற்று, ருஸ்தம் பஜாரில் புகுந்த தலிபான்கள் சிலர், பல்வேறு கடைகள், வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த, கணினிகள், டிவிக்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி, சாலையில் குவித்து அவற்றுக்குத் தீ வைத்தனர். மவுல்வி நஜீர் தலைமையிலான தலிபான் பிரிவைச் சேர்ந்த அவர்கள், ஏற்கனவே, அப்பகுதியில் இந்த கருவிகளுக்கு தடை விதித்திருந்தும், அதை மக்கள் புறக்கணித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.
பிரான்ஸ் எஸ் அண்டு பி நிறுவனம் கடன் மதிப்பை குறைத்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட 9 ஐரோப்பிய நாடுகளின் கடன் தகுதி மதிப்பீட்டை, ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் (எஸ் அண்டு பி) நிறுவனம் குறைத்துள்ளது.இது ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தர நிர்ணய நிறுவனமான எஸ் அண்டு பி, கடந்த ஆண்டு, அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டை ஒரு படி குறைத்தது.
தற்போது, பிரான்ஸ் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை 'ஏஏஏ' நிலையில் இருந்து ஒரு படி குறைத்து 'ஏ.ஏ.பிளஸ்' ஆக குறைத்துள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஜெர்மனி மட்டுமே 'ஏஏஏ' தரத்துடன் விளங்குகிறது. பிரான்ஸ் மட்டுமின்றி ஆஸ்திரியா, மால்டா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தரக் குறியீடும் ஒரு படி குறைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, இத்தாலி,சைப்ரஸ், போர்ச்சுகல்,ஸ்பெயின் நாடுகளின் கடன் தகுதி குறியீடு இரண்டு படிகள் குறைக்கப்பட்டுள்ளன. எஸ் அண்டு பி-யின் இந்த நடவடிக்கைக்கு, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இம்மாத இறுதியில் நடைபெறும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டத்தில், நிதி நெருக்கடிக்கு முக்கிய தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தான் முடிவு.
பாகிஸ்தானில் நீதித் துறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வகையில், ஊழல் வழக்கில் சிக்கியோரின் பணக் குவிப்பு குறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுத, ஆளும் கூட்டணி தீர்மானித்துள்ளது.அதோடு, அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலை இந்தாண்டே நடத்தவும் முடிவு செய்துள்ளது. கடந்த 2007ல் அப்போதைய அதிபர் முஷாரப் கொண்டு வந்த தேசிய நல்லிணக்க அவசரச் சட்டம், 2009ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது.
அதோடு, அந்த சட்டத்தால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட, முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, அவரது கணவரும் தற்போதைய அதிபருமான சர்தாரி ஆகியோர் மீதான வழக்குகளை மீண்டும் துவங்க உச்ச நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், முஷாரபுக்குப் பின் சர்தாரி, கிலானி தலைமையில் அமைந்த அரசு, கோர்ட்டின் உத்தரவுகளை கிடப்பில் போட்டது.இவ்வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்தாரி மீதான வழக்குகளை தோண்டியெடுப்பது உள்ளிட்ட ஆறு நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறினால், அதிபர், பிரதமர் இருவரையும் தகுதி நீக்கம் செய்வோம் என்றும் உத்தரவிட்டிருந்தது. வழக்கை நாளை மீண்டும் விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், நீதித் துறையிலான மோதல், நாட்டில் மீண்டும் ராணுவம் தலைமையிலான சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்று விடும் என பீதியடைந்துள்ள ஆளும் பாக்., மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி, ஊழல் வழக்குகளில் பணம் குவித்தோர் பற்றிய விவரங்களைத் தரும்படி, சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளது.அதோடு, நவாஸ் தலைமையிலான எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு இணங்க, அடுத்தாண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலை இந்தாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அரசால் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடக்க இருப்பதைத் தடுத்து நிறுத்திவிடும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுரங்க விபத்தில் சீனாவில் 7 பேர் பலி.
சீனாவின் வடக்கு பகுதியில் நடந்த சுரங்க விபத்தில் 7 பேர் பலியானார்கள். இந்த விபத்து டங் பகுதியில் நடந்தது. இந்த வெடி விபத்து எதிர்பாராதவிதமாக நடந்தது.ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரிட்டனில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம்.
பிரிட்டனில் குப்பைகளைத் தவறான தொட்டியில் போட்டாலும் குப்பைத் தொட்டிகளை தவறான நாளில் கொண்டு வந்து வைத்தாலும் ஆயிரம் பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுச் செய்தியாளர் மிக்கெ சார்ஜண்ட் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார். 
அபராதம் விதிப்பது தொடர்பாக இங்கிலாந்தில் கருத்து வேறுபாடுகள்  தோன்றியுள்ளன. ஏனெனில் மிகச் சிலரே குப்பைகளைத் தெருவில் குவிக்கின்றனர். அதனால் அபராதம் விதிப்பதை கடைசித் தீர்வாகக் கொள்ள வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் எல்லோருக்கும் அபராதம் விதிக்கக்கூடாது என சிலர் தெரிவித்தள்ளனர். அபராதமும் 110 பவுண்டு வரை விதிக்கலாம், அல்லது குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.சுற்றுப்புறச் சூழல் பிரச்சாரக்குழுவாகச் செயல்படும் புவியின் நண்பர்கள் (fiends of the Earth) என்ற குழு தொடர்ந்து குப்பைகளைத் தெருவில் கொட்டுவோர் மீது கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறித்தியுள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் அரசு கழிவுக் கொள்கையை வெளியிட்ட போது சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம நடவடிக்கைகளுக்கான துறை அபராதம் விதிக்கவேண்டாம் என்ற கருத்தில் சற்று பின்வாங்கியது.சட்டத்தை மீறுவதை தன் வாடிக்கையாகக் கொண்ட மக்களிடம் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அமைச்சர்களும் ஒருமித்த கருத்துடன் விளங்குகின்றனர்.  கடந்த 2010ஆம் ஆண்டில் அரசின் கழிவுக்கொள்கை உருவாக்கப்பட்டதில், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தை குறைந்த கழிவுகளை வெளியேற்றவும் கழிவுகளை மறுசுழற்சி முறையும் மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்டாஸி இரகசிய தலைமையகம் சீரமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
பெர்லின் தடுப்புச்சுவரை இடித்து இருபதாண்டுகள் கடந்த பின்பு கிழக்கு ஜேர்மனியின் ஸ்டாஸி என்ற ரகசியப் பொலிஸின் தலைமையகத்தை 11 மில்லியன் யுரோ செலவு செய்து புதுப்பித்து பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிட்டனர்.
கடந்த 1957 முதல் 1989 வரை ஸ்டாஸியின் இயக்குநராக இருந்த எரிக் மில்கா என்பவரின் முன்னாள் அலுவலகத்தைப் பொதுமக்கள் பார்வையிட்டனர். அங்கு பழைய அறைகலன்கள் (furnitures) அப்படியே இருந்தது குறிப்பிடத்தக்கது.மரத்தினால் செய்யப்பட்ட பெரிய மேசையும் அதில் கறுப்பு நிற தொலைபேசிகள் இரண்டும் இருந்தன. வெளிமுற்றத்தில் சின்ன பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தில் தான் அந்தக் காலத்தில் கைதிகளை ஏற்றிக்கொண்டு சிறைக்குச் சென்றனர்.
அந்தப் பெரிய வளாகத்தில் ஒரு சிறுபகுதி மட்டுமே பார்வையாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் ஒரு நிரந்தரக் அருங்காட்சியகமாக மாற்றப்படும் இதில் ஒரு தொல்பொருட்கண்காட்சி நூலகம், புத்தகக்கடை சிற்றுண்டியகம் என அனைத்தும் இடம்பெறும்.பழைய ரகசியப் பொலிஸ் அலுவலகத்தின் கோப்புகளை நிர்வகிக்கும் அதிகாரியான ரோலண்டு ஜேன் இந்தத் தலைமையகம் இனி மக்களாட்சியின் வளாகமாகக் காட்சி தர வேண்டும்.
மனித உரிமைச் செயல்வீரரான ஜேன், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர். அவர் DPA செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பொதுவுடைமை சர்வாதிகாரத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.இந்த ரகசியப் பொலிஸ் துறையை 1961ஆம் ஆண்டில் கலைக்கும் வரை நார்மன்ஸ்ட்ராஸ் என்ற இடத்தில் இந்த இதன் அலுவலக வளாகத்தில் 7000 பேர் பணிபுரிந்தனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி இந்தக் கட்டிடத்தை கிழக்கு ஜெர்மானியர் இடித்துவிட்டு இங்கிருந்த கோடிக்கணக்கான ஆவணங்களைச் சாக்குகளில் கட்டி எடுத்து வந்து எரிந்துள்ளனர்.
ஈராக்கில் ஷியா முஸ்லீம்கள் படுகொலை: 53 பேர் பலி.
ஈராக் நாட்டில் 53 ஷியா முஸ்லீம்கள் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர். இச்சம்பவம் பாஸ்ரா நகரின் தென்பகுதியில், சனிக்கிழமையன்று நடைபெற்றது. அமெரிக்கா தன் இராணுவத்தை விலக்கிக் கொண்டு சில வாரங்களேயான நிலையில் ஷியா – சன்னி பிரிவினர் மோதல் ஈராக்கில் அதிகமாகிக்கொண்டே வருகிறது.ஷியா முஸ்லீம்கள் அர்பாயீன் என்ற நாற்பது நாள் நோன்புக்காலத்தில் ஈராக்கில் உள்ள கர்பாலா என்ற புனிதத்தலத்திற்கு வருகை தருவது வழக்கமாகும். ஆயிரக்கணக்கில் யாத்ரீகர்கள் கூடும் இத்தலத்தில் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது ஷியாக்கள் மத்தியில் ஆத்திரத்தை எழுப்பியுள்ளது.
சுபாயீர் நகருக்கு வெளியேயுள்ள இமாம் அலி பள்ளிவாசலுக்கு யாத்ரீகர்கள் நடந்துகொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்ததாக, அரசுச் செய்தித் தொடர்பாளர் அயாத் அல் – எமாராஹ் தெரிவித்தார்.சன்னி முஸ்லீம்கள் வாழ்கின்ற நகரத்துக்கு அருகில் இந்தப்பகுதி இருப்பதால் இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. அல் – எமாராஹ் இந்தக் குண்டுவெடிப்பு தெருவோரத்திலிருந்து எறியப்பட்டதால் நடந்திருக்கலாம் அல்லது தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என்றார்.
ஆனால் ஈராக்கின் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் அது தெருவோரத்திலிருந்து வீசப்பட்ட குண்டு தான் என்று உறுதிபடத் தெரிவித்தார். ஏனென்றால் யாத்ரீகர்கள் பயன்படுத்திய பஸ்ராவிலிருந்து சுபேயருக்கு வரும் அந்தச் சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருந்தது. அதை மீறி இவர்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்தியென்பதால் தெரு ஓரத்திலிருந்து குண்டு வீசப்பட்டிருக்கலாம், என்றார்.குண்டுவெடிப்பில் காயம்பட்டவர்கள் 137 பேர் பிஸ்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்து போன 53 பேரின் உடல்களும் அங்குதான் வைக்கப்பட்டுள்ளது என்று அந்நகரத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்தார்.
சீனாவால் அச்சுறுத்தல் இல்லை: சீப் லெப்டினென்ட்.
இந்திய சீன எல்லை மிகவும் அமைதியாக உள்ளது என்றும் சீனாவால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் மூத்த ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பேசிய வடக்கு பிராந்திய காமாண்டிங் சீப் லெப்டினென்ட் ஜெனரல் பர்னாய்க், இந்திய சீன எல்லையில் லே பகுதியில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது.சீனாவால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. எனவே கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
தீவிரமாக ஆலோசனைநடத்துவேன்: சூகி.
பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மியான்மர் எதிர்கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங்சான் சூகிக்கு அரசில் பதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது.
இது பற்றி சூகி கூறுகையில் பதவியை நான் மறுக்கவில்லை. அதேநேரத்தில் பதவியை ஏற்றுக்கொள்வது என்பது அப்போது நிலவும் சூழல் மற்றும் என்ன அமைச்சர் பதவி என்பதை பொறுத்தது என கூறினார்.மேலும் அவரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டதற்கு, பலமாக சிரித்த சூகி, இதுபற்றி தீவிரமாக ஆலோசனைநடத்துவேன் என கூறினார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்குகள் உள்ளன: ராபர்ட் ஷெர்.
இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக ராணுவ ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஷெர் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது என்பது வெறுமனே ஆயுத விற்பனைக்காக மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன.இரு நாடுகளின் நலனுக்கும் பொதுவான சில அம்சங்கள் இதில் உள்ளன. அவற்றை எட்டுவதற்காக இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஷெர், இரு நாடுகளிடையே பொதுவான சில இலக்குகள் உள்ளன. அதேபோல பொதுவான ஒத்துப்போகும் விஷயங்களும் உள்ளன. இரு நாடுகளின் மக்களிடையே பரஸ்பரம் உறவை வலுப்படுத்த இரு நாடுகளிடையிலான ஒப்பந்தம் மிகவும் அவசியமானதாகும்.ராணுவ ஒத்துழைப்பில், கடல் பிராந்திய பாதுகாப்பில் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. இதேபோல சர்வதேச அளவிலான பிரச்னைகளில் இரு நாடுகளுக்கும் சில பொதுவான இலக்குகள் உள்ளன என்று ஷேர் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF