Friday, January 20, 2012

NEWS OF THE DAY.

மின்சார சபை ஊழியர்கள் சட்டப்படி வேலை.
இலங்கையின் மின்சாரசபை பணியாளர்கள் 45 வீத சம்பள உயர்வை கோரி நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மின்சாரசபை பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 25 வீத சம்பள உயர்வை வழங்க ஜனாதிபதி நேற்று முன்தினம் இணக்கம் தெரிவித்திருந்தார்.எனினும், வாழ்க்கை செலவைக் கருத்திற்கொண்டு அதனை நிராகரித்துள்ள மின்சார சபை பணியாளர்கள் நேற்று இரவு முதல் சட்டப்படி வேலை இயக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டின் மின்சார விநியோகங்களில் சில வேளைகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதே கோரிக்கையை முன்வைத்து, நீர்வடிகாலமைப்பு சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிமுதல் 4 மணித்தியால வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க சட்ட அமுலாக்கல் குழு - கோத்தபாய சந்திப்பு.
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸின் சட்ட அமுலாக்கல் சபையினர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.லொஸ் ஏஞ்சல்ஸின் சட்ட அமுலாக்கல் அதிகாரசபையின் தலைவர் Matt Woolman தலைமையிலான குழு ஒன்று நேற்று பாதுகாப்பு செயலாளரை சந்தித்து, இரண்டு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் சட்டஅமுலாக்கல் விடயத்தில் இரண்டு நாட்டு அனுபங்களும் இதன் போது பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலவசக் கல்வியை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சி: ரணில் விகரமசிங்க.
நாட்டின் இலவசக் கல்வி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி இலவசக் கல்வி முறைமையையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருகின்றது.
தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்குவதனை அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
பௌதீக வளப்பற்றாக்குறை, மாணவர்களுக்கான வசதிகள், விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சகல காரணிகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.துறைமுகங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், வீதிகள், பெருந்தெருக்களை அமைக்க முடியுமாயின் என்று பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்ய முடியாது என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் பதவி விலக மாட்டேன்!- அஷாத் சாலி.
தாம் பதவி விலக பேவதில்லை என்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஷாத் சாலி அறிவித்துள்ளார்.முன்னதாக மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர உறுப்பினர் அஷாத் சாலி, தான் உறுப்பினர் பதவியில் விலக போவதாக அறிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாநகர சபையின் கூட்டம் கூடும் போது, தமது பதவி விலகலுக்கான கடிதம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்முடன் தொலைபேசி மூலம் இரண்டு முறைகள் இது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். எனினும் தாம் தமது முடிவில் இருந்து மாறப்போவதில்லை என்று தெரிவித்தாகவும் அஷாத் குறிப்பிட்டார்.
எனினும் நாட்டின் நலன் கருதியும், ஜனாதிபதி என்ற முறையில் தாம் கூறுவதாகவும் ஜனாதிபதி கூறியதை அடுத்தே தாம் தமது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாகவும் அஷாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு மாநகர சபையின் மற்றுமொரு உறுப்பினரான மொஹமத் மஹ்ரூப் எதிர்க்கட்சியின் பிரதி தலைவாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது மற்றும் ஏனைய காரணங்களை முன்வைத்து அஷாத் சாலி பதவி விலகப் போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இன்று பிற்பகல் இந்தியா திரும்பினார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்தியா திரும்பினார் என கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இந்திய விசேட விமானத்தின் மூலம் அவர் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எதிர்க்கட்சியினர் உட்படப் பலரைச் சந்தித்தார்.அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்ததுடன், இலங்கையுடன் ஐந்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தென்னாசியாவில் மிக உயரமான “கொழும்பு லோட்டஸ் டவர்” இற்கு நாளை அடிக்கல் நாட்டு விழா.
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள,தென்னாசியாவிலே மிக உயரமான பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு நாளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அடிக்கல் நாட்டவுள்ளார்.“கொழும்பு லோட்டஸ் ரவர்” என பெயரிடப்பட்ட நான்கு தட்டு மேடைகளை கொண்ட இந்த 350 மீட்டர் உயரமுடைய கோபுரமானது கொழும்பு டாக்டர். விஜேவர்த்தன மாவத்தையில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நிர்மாணப்பணிகளை 30 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கோபுரத்திலிருந்து ஐம்பது வரையான ஔிபரப்பு, ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட இருப்பதுடன் தொலைத்தொடர்பு துறையில் இருபது வரையான சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை நிதிக்குழுவை ஐதேக இழந்தது.
இலங்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபையை கைப்பற்றி மூன்று மாதங்களே கடந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அமைக்கப்பட்ட நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவை அந்தக் கட்சி மாநகர சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இழந்திருக்கின்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை ஆதரித்து வாக்களித்த காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டிருக்கிறது.இதுபற்றி, பிபிசிக்கு கருத்து தெரிவித்த கொழும்பு மாநாகர சபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், நிதிக்குழுவைத் தவிர மற்றக் குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடமே இருப்பதாகவும் எந்த நிலையிலும் இடையூறின்றி மாநகர நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல தம்மால் முடியும் என்றும் தெரிவித்தார்.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
திருகோணமலை சம்பூர் அனல் மின் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சம்பூர் அனல் மின் நிலைய அமைப்பு பணிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.விரைவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி.
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கம் செய்தது குறித்து ஜனாதிபதி ஸர்தாரியும், பிரதமர் கிலானியும் விளக்கமளிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் காலித் நயீம் லோதி சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனது பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று லோதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்த விசாரணை நீதிபதி ரியாஸ் கான் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, லோதியின் பதவி நீக்கம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.இதற்குப் பதிலளித்த நீதிபதி அரசுத் தரப்புக் கருத்தை அறியாமல் அவ்வாறான முடிவுக்கு வர இயலாது என்று தெரிவித்தார். மேலும் இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், விரிவாக்கத் துறை செயலர் மற்றும் இப்போதைய பாதுகாப்புத் துறைச் செயலர் ஆகியோரின் கருத்துகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
முன்னதாக மெமோகாட் விவகாரத்தால் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும் வகையில் தவறான வகையில் நடந்து கொண்டதாகக் கூறி லோதியை பிரதமர் கிலானி பதவி நீக்கம் செய்தார்.கடித விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த தகவலில், செயல்பாட்டு ரீதியாக இராணுவம் மற்றும் உளவுத்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று லோதி தெரிவித்திருந்தது கிலானியின் கோபத்தை அதிகப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றத்தை ஒப்புக்கொண்டார் கிலானி.
இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றத்தில் பிரதமர் கிலானி நேரில் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.அப்போது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கை ஏன் நடத்தவில்லை என்றும், அரசியல் சட்ட 248வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கிலானி வேண்டுகோள் விடுத்தார்.நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்தும் கிலானிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
அதிகளவு செயற்கைகோள்களை தயாரிக்க சீனா திட்டம்.
2012ம் ஆண்டில் மட்டும் 30 செயற்கை கோள்களை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வான்வெளி ஆராய்ச்சி துறை தகவல் வெளியிட்டுள்ளது.இவ்வாறு தயாரிக்கப்படும் செயற்கைகோள்களில் ராக்கெட்டுகளின் எண்ணிக்கை 21 அடங்கும். இனிவரும் காலங்களில் வான்வெளி ஆராய்ச்சிக்காக செயற்கைகோள்கள் ஏவுவது அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் அதிகளவு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் இடம் பெற்றுள்ளது.மேலும் எதிர்வரும் 2020ம் ஆண்டில் வளிமண்டலத்தில் சுமார் 60 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தை நிறுவவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது போர் தொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை.
சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம், அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசுவோம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறி வருகிறது.இதற்கு ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரானில் ஏற்கனவே ஷியா - சன்னி பிரிவினருக்கு இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்.
அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் ஈரான் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அணுசக்தி கழக பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அந்த நாடு இப்போது ஒப்புக் கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் போர் தொடுத்தால், அமைதி நடவடிக்கை சீர்கெட்டு விடும் என்று எச்சரித்தார்.
இனப்படுகொலை மசோதா பின்னடைவு.
பிரான்சில் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்த மசோதாவை நாடாளுமன்ற மேலவை(செனட் குழு) நிராகரித்து விட்டது.செனட்டின் சட்டக்குழு இந்த மசோதாவை அனுமதிக்க இயலாது என்று மறுத்து விட்டது. மசோதா குறித்து நடந்த வாக்கெடுப்பில் 23 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 9 பேர் எதிராகவும், 8 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் விட்டனர்.
இதனால் இந்த மசோதாவுக்கு அரசு ஆதரவு உண்டா என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. சிலர் இந்த மசோதாவால் துருக்கியுடன் பகைத்துக் கொள்ள நேரிடும் என்று அஞ்சுகின்றனர்.கீழவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை எதிர்ப்போருக்கு 45000 யூரோ அபராதமும், ஓராண்டு சிறைதண்டனையும் கிடைக்கும் என்று அறிவித்தது.
துருக்கி இதனைத் திட்டமிட்ட இனப்படுகொலை அல்ல என்றும், முதலாம் உலகப்போரின் போது நடந்த போர் மரணம் என்றும் தெரிவித்துள்ளது.இந்த மசோதாவை எதிர்த்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் துருக்கி, பிரான்சு மீது அரசியல் மற்றும் இராணுவத் தடைகளை கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பெண்களை பணியாளர்களாக நடத்தும் ஜேர்மன் நிறுவனங்கள்.
ஜேர்மன் நிறுவனங்கள் உயர்ந்த பதவிகளில் பெண்களை அமர்த்துவதில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
30 உயர் நிறுவனங்களின் நிர்வாகக்குழுவில் பெண்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 1.5 சதவீதம் முதல் 3.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் நல்ல நிலையில் உள்ள 200 நிறுவனங்களில் 2010இல் 8.8 சதவீதமாக இருந்த ஆண்களின் எண்ணிக்கை தற்போது 23.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.200 நிறுவனங்களை ஆராய்ந்ததில் 11 சதவீதம் பேர் பெண்களாக இருந்தாலும் அவர்களில் மூன்றில் இரண்டு பேர் பணியாளர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களை நிர்வாக குழுவில் கொண்ட நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களைவிடச் சிறப்பாகவே செயல்படுகின்றன. இவர்களில் பணப்பரிவர்த்தனை, விற்பனை, சந்தை மதிப்பு ஆகியன(2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை) அதிகரித்துள்ளதாக எர்ணஸ்ட் ரூ யங் வர்த்தக ஆலோசனை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆனால் ஆண்களால் நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்கள் சராசரிக்கும் கீழே இருந்தன, வளர்ச்சி விகிதமும் குறைவாகவே இருந்தது.
சிரியாவின் மீது தடைவிதிப்பதில் முன்னணியில் பிரிட்டன்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் போராட்டக்காரர்களை இராணுவம் கொன்று குவிக்கின்றது.இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேலைநாடுகள் சிரியாவுக்கு எதிராக தடைகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக பிரிட்டன் விளங்கும் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஈரான் சிரியாவின் தலைவருக்கு ஆயுத உதவி செய்து வருவதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன என்பதால் போக்குவரத்துத் தடை மற்றும் சொத்துகளை முடக்குதல் போன்ற தடைகளைப் புகுத்துவதில் பிரிட்டன் கடுமையாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சிரியா மீது தடைகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இளம் சாதனையாளர் மரணம்: பில்கேட்ஸ் அதிர்ச்சி.
உலகின் இளம் மைக்ரோசாப்ட் சாதனையாளர் என்ற பெயர் பெற்ற பாகிஸ்தான் சிறுமி உடல்நலக் குறைவால் பரிதாபமாக மரணமடைந்தாள்.இதை அறிந்ததும் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி அர்பா கரீம் ரன்தவா(16).
தனது 9 வயதிலேயே மென்பொருள் துறையில் அபாரமான அறிவுடன் திகழ்ந்ததால் உலகின் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது.தொடர்ந்து மென்பொருள் துறையில் ஈடுபாடு காட்டி வந்த அர்பாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி சிறுமிக்கு வலிப்பு நோய் வந்ததால், உடனடியாக லாகூரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
இதை அறிந்த மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அமெரிக்காவில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அர்பா பரிதாபமாக உயிரிழந்தாள்.இதுகுறித்து சிறுமியின் தந்தை அம்ஜத் கரீம் கூறுகையில், என் மகள் இறந்த செய்தி கேட்டு பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அர்பானின் திறனை உலகறிய செய்தவர் பில்கேட்ஸ். அவள் இப்போது மறைந்துவிட்டாலும், உலகில் உள்ளவர்களின் அன்பு அவளுக்கு கிடைத்தது. அதற்காக பில்கேட்சுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என்றார்.
கொரிய நிலவரங்கள் குறித்து மூன்று நாடுகள் பேச்சுவார்த்தை.
மியான்மர் மற்றும் கொரிய தீபகற்பத்தின் தற்போதைய நிலவரங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் திகதி நடந்த ஆறு நாடுகள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்துவதில் மூன்று நாடுகளும் தாங்கள் உறுதியுடன் இருப்பதை வெளிப்படுத்தின எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களைக் குறைப்பது முக்கிய குறிக்கோளாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இக்கூட்டத்தில் வடகொரிய அரசியல் சூழல் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் வடகொரிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மறைந்த தலைவர் கிம் ஜாங் உன் இல்லின் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றவருமான யாங் யோங் சாப் என்ற உயரதிகாரி அளித்த பேட்டியில், நாட்டின் தலைமைப் பொறுப்பேற்றை ஏற்று நாட்டை நல்வழியில் இட்டு செல்வதற்கு தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னால் முடியும். ஏனெனில் அவர் தனது தந்தையிடம் நீண்ட காலம் பயிற்சி பெற்றிருக்கிறார் என்றார்.
விபத்துக்குள்ளான கப்பல் கடலுக்குள் மூழ்கும் அபாயம்.
இத்தாலியின் ரோம் நகரத்திற்கு அருகில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா என்ற கப்பல் கரைப்பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ரோம் நகரத்திற்கு அருகில் உள்ள கிக்லியோ போர்டோ தீவு பகுதியில் பாறை மீது மோதி கோஸ்டா கான்கார்டியா என்ற கப்பல் கவிழ்ந்தது.இந்த கப்பலின் கப்டன் பிரான்சிஸ்கோ ஷெட்டினோ(52) மீது குற்றம் சுமத்தப்பட்டதால் அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என ரோம் மாஸ்ஜிதிரேட் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாறை அருகில் கவிழ்ந்துள்ள அக்கப்பல் தொடர்ந்து நழுவி கடல் பக்கமாக செல்வதாக, இத்தாலி கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீட்புப்பணியில் இருந்த நீர் மூழ்கும் மற்றும் மலையேறும் வீரர்கள் உடனடியாக பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.மிக விரைவில் கப்பல் மேலும் நகர்ந்து கடலுக்குள் சென்று மூழ்கிவிடும் எனத் தெரிவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கப்பலின் 17 டேங்குகளில் உள்ள எரிபொருளை பத்திரமாக அங்கிருந்து அகற்றும் பணியில் நெதர்லாந்தின் ஸ்மிட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனினும் கப்பலின் நகர்வால் அப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கப்பல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி இதே வழியாக எவ்வித விபத்தும் இன்றி சென்றதற்கான ஆதாரமாக செயற்கைக் கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அப்போதைய பயணப் பாதை கப்பலை இயக்கும் கோஸ்டா க்ரூயிசஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விடயமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF