Monday, January 16, 2012

ஈரான் மீதான அழுத்தம் இலங்கையையும் பாதிக்கும் என்கிறது ரொய்ட்டர்!


ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் பிரயோகித்துவரும் அழுத்தங்கள் இலங்கையையும் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.இலங்கை எண்ணெய் இறக்குமதியில் ஈரானை பெரிதும் நம்பியிருப்பதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்படக் கூடுமென ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைகுறிப்பிட்டுள்ளது.அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஈரான் மீதான பொருளாதாரத் தடையைக் கடுமையாக்கினால், இலங்கையினால் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது போகும் என்றும் ரொய்ட்டர்ஸ் கூறுகிறது.


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுத்திகரிக்கப்படும் மசகு எண்ணெய்க்கு ஈரானின் மசகு எண்ணெயையே இலங்கை நம்பியிருக்கின்றது.ஈரானின் அதிகளவு சல்பர் செறிந்த கனமான மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வகையிலேயே சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.சகலவிதமான மசகு எண்ணெய் வகைகளையும் சப்புகஸ்கந்தவில் சுத்திகரிக்க முடியாது என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அதேவேளை, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டால், அமெரிக்கா இலங்கைக்கு சில சலுகைகளை வழங்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருவதால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா, ரஷ்யாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. இத்தகையதொரு பின்னணியில் அமெரிக்காவின் சலுகைகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைமேலும் தெரிவித்துள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF