Friday, November 12, 2010

ஈரானையும், சிரியாவையும் தாக்குவதற்கு திட்டமிட்டோம்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்



வாஷிங்டன்,நவ.11:அமெரிக்க வரலாற்றில் போர்வெறியர் என புகழாரம் சூட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபரான ஜார்ஜ் w புஷ், தன்னால் சாதிக்க முடியாதுபோன தாக்குதல்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

ஈராக் மற்றும் ஆப்கானில் தாக்குதல் நடத்துவதோடு ஈரானிலும், சிரியாவிலும் தாக்குதல் நடத்த தான் திட்டமிட்டிருந்ததாக புஷ் கூறுகிறார்.

 
டெஷிசன் பாயிண்ட் என்றழைக்கப்படும் அவருடைய நினைவுக் குறிப்புகளில் இந்த தகவல்கள் காணப்படுகின்றன.

மேலும் அதில் கூறியிருப்பதாவது: தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய அமெரிக்க பாதுகாப்பு மையமான பெண்டகனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ராணுவ நடவடிக்கை என்பது எனது விருப்பமாகயிருந்தது. ஆனால், அது கடைசி முயற்சியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இந்த தீர்மானங்களைக் குறித்து அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயருடன் விவாதித்திருந்தேன். இஸ்ரேலிய பிரதமராகயிருந்த யஹூத் ஓல்மர்ட்டின் வலியுறுத்தலால் சிரியாவின் அணுசக்தி மையங்களை தாக்க திட்டம் தீட்டப்பட்டது.

வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சிலுக்கு இதுத்தொடர்பாக எனது அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சிரியாவின் உள்ளேயும் வெளியேயும் கடந்து செல்வது சிரமமான பணியாகவிருக்கும் என்ற சி.ஐ.ஏவின் அறிக்கையைத் தொடர்ந்து அந்நடவடிக்கையை நாங்கள் கைவிட்டோம்.

 
2001 செப்டம்பர் 11க்கு முன்பே தாலிபானையும், அல்காயிதாவையும் தகர்ப்பதற்காக சிறப்பு படையை பாகிஸ்தானுக்கு அனுப்ப தீர்மானித்திருந்தோம். ஆனால், அன்றைய பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதியான முஷாரஃப் அதிலிருந்து தந்திரமாக பின்வாங்கிவிட்டார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போரில் நம்பிக்கைக் கொள்ளமுடியாத தயங்கும் கூட்டாளியாக முஷாரஃப் விளங்கினார். இவ்வாறு புஷ் கூறியுள்ளார்

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF