Wednesday, November 24, 2010

வடகொரியா குண்டுவீச்சு “தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும்” அதிபர் ஒபாமா அறிவிப்பு



வடகொரியா- தென் கொரியா இடையே கடந்த 1952-ம் ஆண்டு முதல் கடல்எலலை தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று தென்கொரியாவின் பியோன்டாயோஸ் தீவின் மீது வடகொரியா ராணுவம் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது.

அப்போது 50 குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன. பதிலுக்கு தென்கொரியா ராணுவம் 80 தடவை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் தாக்குதலுக்கு அமெரிக்காவும், ரஷியாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்பதட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்கொரியா மீது வடகொரியா ராணுவம் குண்டுவீச்சு நடத்தியது கண்டிக்கத்தக்கது.

இது தென் கொரியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தென் கொரியா அமெரிக்காவின் முக்கியமான நட்புநாடு. பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இப்பகுதியில் அச்சுறுத்தல் நீங்கி அமைதி நிலவ வேண்டும். சர்வதேச விதிமுறைகளை மீறக்கூடாது என தனது நட்பு நாடான வடகொரியாவுக்கு சீனா வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஒபாமா கூறினார். தென்கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரம் ராணுவ வீரர்களை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தென் கொரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர், பான்கிமூனின் செய்தி தொடர்பாளர் பர்கான் காப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து, ஜப்பான் நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF