Wednesday, November 9, 2011

2250 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!


எகிப்தில் 2,250 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.பதப்படுத்தப்பட்ட மம்மி உடலை சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரியவந்துள்ளது. எகிப்து மம்மிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. 


எகிப்தில் பதப்படுத்தி புதைக்கப்பட்ட மம்மி உடல் ஒன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எம்1 என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி பற்றி தெரிந்துகொள்வதற்காக டிஜிட்டல் எக்ஸ்ரே, மல்ட்டி டிடெக்டர் கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி, சிடி ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: எகிப்தில் கி.மு. 305 முதல் கி.மு. 30 வரை தாலமி மன்னர்களின் ஆட்சிக் காலம். அவர்கள் 275 ஆண்டு காலம் எகிப்தை ஆண்டு வந்தனர். அந்த காலகட்டத்தில் வசித்த ஒருவரது மம்மிதான் இது. இவர் அனேகமாக கி.மு. 285 முதல் கி.மு. 230 வரையில் வாழ்ந்திருக்ககூடும். அவரது இடுப்பு, தண்டுவட பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் இருந்திருக்கிறது. சுரப்பிகளில் ஏற்பட்ட புற்றுநோய் பிறகு இடுப்பு, விலா பகுதி, தண்டுவடம் மட்டுமின்றி, கை, கால்களின் மேல் பகுதி என ஏறக்குறைய எல்லா எலும்புகளிலும் பரவியிருக்கிறது.


புற்றுநோயால் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் நோயின் தீவிரம் தாங்க முடியாமல் இறந்திருக்கிறார். சாகும்போது அவருக்கு வயது 51 முதல் 60 வரை இருந்திருக்கும். 2,700 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க சிதியா மன்னரின் எலும்புக்கூடு ரஷ்யாவின் தெற்கு சைபீரியா பகுதியில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டது. அந்த மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது 2007ம் ஆண்டு நடந்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. எகிப்து நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தற்போது தெரியவந்திருக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF