Friday, November 11, 2011

இன்றைய செய்திகள்.

அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கு அம்பலமாகியுள்ளது!– ஐ.தே.க. குற்றச்சாட்டு.
நட்டமடையும் சொத்துக்களை சுவீகரிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு அம்பலமாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இச்சட்டமூலத்திற்கு அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அரசாங்கம் பிடிவாதமாக இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்திருந்தால் சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருக்க முடியும்.
திடீரென இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு புலனாகியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துலக ஜனநாயகவாதிகள் சங்கத்தின் ஆசிய வலயத் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு.
அனைத்துலக ஜனநாயகவாதிகள் சங்கத்தின் ஆசிய வலயத் தலைவராக  இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று இடம்பெற்ற சர்வதேச ஜனநாயகவாதிகள் சங்கத்தின் மாநாட்டிலேயே ரணிலை மீண்டும் சர்வதேச ஜனநாயகவாதிகள் சங்கத்தின் ஆசிய வலயத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தன, ருவான் விஜேவர்த்தன மற்றும் அனோமா கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசுமயப்படுத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் இம் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அம் முறைப்பாட்டிற்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என சர்வதேச ஜனநாயகவாதிகள் சங்கத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரத கொலை தொடர்பில் துமிந்த சில்வா குற்றவாளியாக இனங்காணப்படவில்லை! சபையில் நிமல் சிறிபால.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை பொலிஸார் சந்தேக நபராக தெரிவிக்கவில்லை என்றும், இதுவரை அவர் மீது எந்தவொரு குற்றமும் சுமத்தப்படவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
கடந்த மாதம்  8 ம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்து உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் எதையும் பதிவுசெய்ய பொலிஸாரால் முடியவில்லை எனவும் சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
துமிந்த சில்வா நவம்பர் முதலாம் திகதிவரை ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும், அதன்பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அமைச்சர் நிமில் சிறிபால டி சில்வா கூறினார்.
ஐ.தேக. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரதூரமான படுகொலை சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் எவ்வாறு அரசாங்கத்தின் அனுசரணையில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.
ஆனால், அவர் நீதிமன்றில் தேடப்படும் சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை எனவும் அதனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில் எந்த தடங்கலும் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.
மனிதாபிமான கொள்கையின்படி, காயமடைந்த எந்த நபரும் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்பட வேண்டும். அவர் இதுவரை எந்த வழக்கிலும் குற்றம் சுமத்தப்படவில்லை. அதனால் அவரை நாட்டுக்கு வெளியே அழைத்துச்செல்வதை தடுக்க முடியாது என அமைச்சர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வரும் 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச'விடம் இம்மாதம் 20ம் திகதி கையளிக்கப்பட உள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து சாட்சியங்களை பதிவு செய்து கொண்டன.
பெரும் எண்ணிக்கையிலானவர்களிடம் வாய் மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் சாட்சியங்கள் திரட்டப்பட்டிருந்தன.
இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு அதிகாரிகள் அண்மையில் அறிவித்திருந்தனர்.
எனினும் அறிக்கை எதிர்வரும் 20ம் திகதியே ஒப்படைக்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2002ம் ஆண்டின் பின்னரான ஏழு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அதற்கான காரணிகளை ஆராயும் நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சர்வதேச சமூகம் பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கான காலக்கெடு எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியது : நோர்வே தெரிவிப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியதாக நோர்வே தெரிவித்துள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சிகள் குறித்து மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கம் புலிகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்கியதாக மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2004ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் புலி விரோத கொள்கைகளை பின்பற்றியது.
பல்வேறு நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக காட்டிக் கொண்ட போதிலும், புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எவ்வித அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.
நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அதிகளவில் நட்புறவு கொண்டிருந்ததாக இந்தியா பல தடவைகள் விமர்சனம் செய்திருந்தது.
நேரடியாக போருக்கு உதவிளை வழங்காத போதிலும் இந்தியா புலனாய்வு மற்றும் விமான ராடார்களை வழங்கியது.
இந்தியாவின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடே இலங்கையை போருக்கு அதிளவில் உந்தியது.
பொதுமக்கள் உயிரிழப்புகளை வரையறுக்குமாறு சில சந்தர்ப்பங்களில் இந்தியா கோரிய போதிலும் போருக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தது.
இறுதிக் கட்டப் போரின் புலிப் போராளிகள் சரணடைவதனை இலங்கை அரசாங்கமோ அல்லது இந்தியாவோ விரும்பவில்லை என நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாலைதீவு சார்க் உச்சிமாநாட்டுக்கு இலங்கை அதிரடிப் படையினர் பாதுகாப்பு.
மாலைதீவில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டுக்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும், இலங்கையின் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு திட்டமொன்று அமுல்படுத்தப்படுகிறது.
மாலைதீவின் அட்டு நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களினதும் மாநாடு நடைபெறும் இடத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இரு படையமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக மாலைதீவில் பணியாற்றும் இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினர்.
'மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து தூதுக்குழுவினரும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர். தவறில்லாத பாதுகாப்புத் திட்டத்திற்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அச்சுறுத்தல் மதிப்பாய்வு தொடர்பான பல நடவடிக்கைகளை நாம் நடத்தியுள்ளோம்' என அவர் கூறினார்.
மாநாடு இடம்பெறும் இடத்திற்கு வருபவர்களும் வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டிற்கு முன்னர், துறைமுகம், விமான நிலையம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பான பல பயிற்சித் திட்டங்களை இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டதாக ஹவீரு இணையத்தளம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
மாலைதீவில் மஹிந்த ராஜபக்ச - மன்மோகன் சிங் சந்திப்பு.
மாலைதீவில் இன்று ஆரம்பமாகவுள்ள 17 வது சார்க் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அச் சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றம், இந்திய அரசாங்கத்தினால் வடக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே மீள்குடியேற்றம் மங்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இச் சந்திப்பின் மூலம் முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்!- எட்டு பேர் காயம்.
களனி பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞானபீட மாணவர் குழுக்கள் இடையே இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட மோதலில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 3 முறைப்பாடுகள் களனி பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த களனி பொலிஸார்  இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது காயமடைந்த எட்டுப் பேரில் ஐவர் ராகம வைத்தியசாலையிலும், மூவர் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 இந்நிலையில் இம்மோதல் குறித்து களனி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். 
பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி மகிந்தவுடன் பேச்சு! இரு நாடுகளின் உறவுகளை விஸ்தரிக்க இணக்கம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா ஹிலானியும் இன்று மாலைதீவின் அட்டு நகரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பல்வேறு துறைகளில் குறிப்பாக, வர்த்தகம், பாதுகாப்பு, கலாசாரம் மக்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவற்றில் இரு தரப்பு நாடுகளும் தமது உறவுகளை விஸ்தரிப்பு செய்வதாக இரு நாட்டின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மக்களின் நன்மை கருதி வர்த்தக பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் சார்க் அமைப்பை மேலும் வினைத்திறனாக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சீனித் தொழிற்சாலை சுவீகரிப்பு! அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்வேன்!- பா.உ தயா கமகே.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தமது செவனகல சீனித்தொழிற்சாலையை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக வர்த்தகரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்
இச்சட்டம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் அதன் பின் சர்வதேச நீதிமன்றிற்குச் செல்ல தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இத்தொழிற்சாலை 2002ஆம் ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்ட போது, தான் அதைக் கொள்வனவு செய்யதாகவும் இதற்கான ஒப்பந்தத்தின் படி 700 ஊழியர்களை மீண்டும் பணிக்குச் சேர்த்ததுடன் 4500 கரும்பு உற்பத்தியாளர்களிடமிருந்து கரும்பை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் உடன்படிக்கையை மதித்து நடந்தேன். அரசாங்கம் 469ஹெக்டயர் நிலத்தை இருவருடங்களுக்கு முதல் இக்கம்பனிக்கு வழங்க தீர்மானித்திருந்தது. அது நடைபெறாததால் நான் நீதிமன்றம் சென்றேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஏப்ரல் மாதம் அதில் கையெழுத்திட்டார். நான் ஒப்பந்தத்திலுள்ளதை உடனடியாகச் செய்த போது அரசாங்கம் அதற்கு 9 வருடங்களை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் இந்த சீனித் தொழிற்சாலை முதலீட்டு சபையுடன் செயெ்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தான் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம். இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது. ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.
இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன.
இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.
சர்வதேச கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்.
சர்‌வதேச கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகளை ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தேர்ந்தெடுத்துள்ளது.
சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி ஹிசாஷி ஒவாடா உள்ளிட்ட 4 பேர் புதிதாக நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
9 ஆண்டுகள் காலம் பதவி வகிக்க உள்ள இந்த நீதிபதிகளை ஐ.நா., அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த நீதிபதிகள் தேர்ந்தெடுப்பிற்கு உகாண்டா மற்றும் செனகல் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் மனைவியாக இருப்பதற்கு தைரியம் வேண்டும்: மிஷல் ஒபாமா.
அதிபர் மனைவியாக இருப்பது ஒன்றும் லேசான விஷயம் அல்ல, அது கூட பயப்பட வேண்டியது தான் என்று மிஷல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அந்த விழாவில் மேரிலேண்ட், வாஷிங்டன் மற்றும் வெர்ஜினாயாவைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவர் கல்லூரிக்கு போக பயமாக உள்ளது என்று மிஷலிடம் தெரிவித்தார்.
அதற்கு மிஷல் கூறியதாவது, எப்பொழுதும் தைரியமாக இருக்க வேண்டும். எதற்காகவும் பயப்படக் கூடாது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். அதிபர் மனைவியாக இருப்பதும் பயமுறுத்தும் விஷயம் தான். ஏனென்னறால் அவர் இழுத்த, இழுப்புக்கெல்லாம் குடும்பத்தினர் செல்ல வேண்டியுள்ளது என்றார்.
ஜேர்மனியிலிருந்து பிரிட்டன் படைகள் தாய்நாடு திரும்புகின்றன.
கடந்த 15 ஆண்டுகளாக ஜேர்மனியில் தங்கியிருந்த சுமார் 20,000 பிரிட்டன் படை வீரர்களை சிக்கன நடவடிக்கை காரணமாக சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு பலகாலமாக பல பொறுப்புகளில் இருந்து வந்த ஜேர்மனிய இராணுவத்தினருக்கு கவலையளிக்கின்றது.
ஐரோப்பிய நிதி நெருக்கடியைச் சீர் செய்யும் முயற்சியில் தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் முதலில் 1800 பிரிட்டனின் படைவீரர்கள் ஜனவரி முதல் தாய்நாட்டுக்குத் திரும்புகின்றனர். பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
2015க்குள் சுமார் பத்தாயிரம் ஜேர்மன் வீரர்களும், 2020க்குள் மீதி வீரர்களும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்படுவர். லெப்டினெண்ட் கர்னல் பில் ஜோன்ஸ் இதுகுறித்து கூறுகையில், கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாக ஜேர்மனியில் இருந்து விட்டேன். இங்கே பல்வேறு ராணுவப்பதவிகளை வகித்தேன். ஜேர்மனியின் பல்வேறு ராணுவத் தளங்களில் பணிபுரிந்தேன். இப்போது ஜேர்மனியை விட்டுச் செல்வது வருத்தமாக இருக்கிறது என்றார்.
மேலும் அவர் ரீண்டாலென் படைத்தளம் காலி செய்யப்பட்டாலும் மிச்சமிருக்கும் பிரிட்டிஷ் படைகள் பீலே பெல்டில் இருந்து செயல்படும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து தான் பிரிட்டிஷ் படைகள் முழுக்க பிரிட்டன் திரும்பும்.
ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர், பிரிட்டன் படைகளைத் திருப்பி அனுப்புவதால் ஆண்டுதோறும் 293 பில்லியன் யூரோ அரசுக்கு மிச்சமாகும் என்றார். அதே சமயம் பிரிட்டன் படையால் ஜேர்மனிக்கு ஆண்டுதோறும் கிடைத்து வந்த 1.3 பில்லியன் வருமானமும் குறைந்து போகும்.
கல்விக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்.
கனடா நாட்டில் மொன்றியல் நகரத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கியூபெக் பல்கலைக்கழகம் கல்விக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
சுமார் இருநூறு ஆயிரம் பேர் மொன்றியல் தெருக்களில் நீண்ட ஊர்வலமாகப் போய் அரசு அலுவலகங்களின் முன் நின்று அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். புதிய கட்டணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
கியூபெக்கின் நிதியமைச்சர் ரேமாண்ட் பகண் நாட்டிலேயே மிகக் குறைவாக இருந்த கியூபெக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு 325 டொலர் வீதம் உயர்த்தியிருப்பதால் பல்கலைக்கழக நிதியைப் பெருக்கலாம், மாநிலக் கடனையும் அடைக்கலாம் என்றார்.
இதனால் 2017ல் முழுநேரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் 3793 டொலர் உயரும். தற்பொழுது உள்ள கட்டணம் 2415 டொலர் மட்டுமே ஆகும். பல்கலைக்கழக நிர்வாகிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கட்டண உயர்வை ரத்துச் செய்ய இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டாசென் மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பெஞ்சமின் ஆடெட் கனடா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கல்விக் கட்டண உயர்வு கல்வி வாய்ப்பைத் தடுக்கின்றது. கல்வி மட்டுமே நல்ல வேலை வாய்ப்பை தர வல்லது. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறது என்றார்.
இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி பெற்றுத்தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பதையும் பெஞ்சமின் சுட்டிக்காட்டினார்.
கடந்த 33 ஆண்டுகளாக கல்விக் கட்டணத்தில் உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இப்போதைய உயர்வினால் கியூபெக் பல்கலைக்கழகங்களில் இருக்கும் 600 டொலர் பில்லியன் தட்டுப்பாடு குறைக்கப்படும் என்று டானியல் சிசியன் தெரிவித்தார்.
மற்ற பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் கியூபெக் பல்கலைக் கழகங்களில் மட்டும் 600 டொலர் பில்லியன் பற்றாக்குறை உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பற்றாக்குறை வளர்ந்து வரும் இந்த நிலையில் தரமான கல்வியை பல்கலைக்கழகத்தால் வழங்க இயலாது.
ஏப்ரல் மாதம் மொன்றியலில் இது போன்றதொரு மாணவர் போராட்டம் நடந்தபோது காவல்துறை கூட்டத்தைக் கலைக்க சில கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்போராட்டத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பாக்லாந்தில் ராணுவப்பயிற்சி மேற்கொள்கிறார் இளவரசர் வில்லியம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜென்டினா தனக்கு அருகில் உள்ள பாக்லாந்தில் தனது படைகளைக் கொண்டு நிறுத்தியது.
பாக்லாந்து தீவானது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் அத்துமீறல் பிரிட்டனுக்கு கோபத்தை வரவழைத்தது. பிரிட்டன் தனது படைகளை அனுப்பி பாக்லாந்து தீவை அர்ஜென்டினாவிடம் இருந்து மீட்டது.
தற்பொழுது பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகமானது தனது இளவரசர் வில்லியமை 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் பாக்லாந்து தீவுக்கு ராணுவ பயிற்சிக்காக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
பிளைட் லெஃப்டினெண்ட் வேல்ஸ் அவரது குழுவினருடன்(search and rescue crew) ஆறு வாரங்களாவது பாக்லாந்து தீவில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் இருப்பார்கள் என்று அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாக்லாந்து தீவைச் சுற்றியுள்ள பனிக் கடலில் சிக்கித் திணறும் மாலுமிகளைக் காப்பாற்றும் பணியில் இளவரசர் தன் 1200 வீரர்களுடன் ஈடுபட போகிறார்.
இந்தக் காலகட்டத்தில்தான் பாக்லாந்து போரின் 30வது நினைவு தினமும் கொண்டாடப்படும். அர்ஜென்டினா நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இளவரசரின் படை பாக்லாந்தில் தங்கியிருக்கும்.
இதுகுறித்து அரச விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிளைட் லெஃப்டினெண்ட் வேல்ஸ்(வில்லியம்) பணி மேம்பாட்டுக்காக பாக்லாந்து செல்கிறார். இது படைச் சுழற்சி முறையில் வரும் சாதாரணமாக ஒரு பயிற்சியாகும் என்றார்.
ரூபனின் ஓவியங்களைத் திருப்பிக் கேட்கும் பெல்ஜியம்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் பவுல் ரூபெனின் ஓவியங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் எடுத்துச் சென்று தனது மியூசியத்தில் வைத்தது. 
பிரெஞ்சு பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது பெல்ஜிய அரசு ரூபனின் ஓவியங்களைத் திரும்பப்பெற ஒரு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துகின்றனர்.
"யூதாஸ்மக்கபேயஸின் வெற்றி" என்ற ஓவியத்தைத் திரும்ப பெற்று டூர்னாய் தேவாலயத்தில் கொண்டுவந்து வைக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதற்காக பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெல்ஜியம் அரசை வலியுறுத்துகின்றனர்.
டூர்னாய் திருச்சபைப் பேராயரின் வேண்டுகோள்படி 1635ல் ரூபன் அந்த ஓவியத்தை வரைந்த போது அவருக்குப் பரிசளிக்க அந்நாட்டின் மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது.
1794ல் பெல்ஜியத்தை ஆக்கிரமித்து இருந்த பிரெஞ்சு படைகள் ரூபனின் மற்ற ஓவியங்களோடு இதையும் சேர்த்து பிரான்சுக்கு கொண்டு போய் விட்டனர்.
1801ல் நெப்போலியன் போனபார்டெ இந்த ஓவியத்தை நாண்ட்டெஸ் நகரத்தின் தெற்கே உள்ள ஒரு முன்சிபல் மியூசியத்திற்கு அனுப்பிவிட்டார்.
இஸ்ரேல் முன்னாள் அதிபருக்கு சிறைத் தண்டனை.
இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோஷி கத்சாவ்(65). இவர் பதவியில் இருந்த போது தனது பெண் உதவியாளரை கற்பழித்ததாகவும், மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து அவர் மீது கடந்த 2009ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 18 மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கத்சாவ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது பெண் உதவியானரை கற்பழிக்கவில்லை என்றும், தங்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் கூறி 246 பக்க மறுப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிராகரித்தார். மேலும், கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்தார்.
அவர் அடுத்த மாதம்(டிசம்பர்) 7ந் திகதி முதல் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஜாக்சன் பயன்படுத்திய படுக்கை ஏலம்.
பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிவேர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
அவருக்கு அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை வழங்கிய குடும்ப டாக்டர் முர்ரேதான் அவரது சாவுக்கு காரணம் என கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தாலும் அவரது பெயரும், புகழும் இன்னும் குறையவில்லை. அவர் பயன்படுத்திய உடைகள் பொருட்கள் போன்றவை ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன. அவற்றை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு கோடிக்கணக்கில் ஏலத்தில் வாங்குகின்றனர்.
இந்த நிலையில் அவர் தான் சாகும் தருவாயில் படுத்து தூங்கிய படுக்கை ஏலம் விடப்பட உள்ளது. அந்த படுக்கை மிகப்பெரிய அளவில் மிகவும் சொகுசு வாய்ந்தது.
அதன் ஏலம் வருகிற டிசம்பர் 17ந் திகதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த மரண படுக்கையுடன் அவர் பயன்படுத்திய நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கையுறை போன்றவையும் ஏலத்தில் வருகிறது.
இணைய மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு.
இணையம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கணணிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விளம்பரம் மூலம் மோசடி செய்து வருமானம் ஈட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்தோனியாவைச் சேர்ந்த விலாடிமிர் சாஸ்ட்சின், டிமுர் கெராஸிமென்கோ, திமித்ரி ஜெகோரோவ், வாலரி அலெக்செஜேவ், கோன்ஸ்டான்டின் போல்டேவ், ஆண்டன் இவானோவ், ரஷியாவைச் சேர்ந்த ஆந்த்ரே டாமி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில் எஸ்தோனியாவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.
இவர்கள் 7 பேரும் உலகம் முழுவதும் 100 நாடுகளில் உள்ள கணணிகளில் இணையம் மூலம் மால்வேர் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி அதன் அமைப்பில் மாற்றம் செய்துள்ளனர். (மால்வேர் என்பது பிற கணணிகளின் செயல்பாட்டுக்குள் ஊடுருவ உதவும் மென்பொருளாகும்.)
இதனால் அமெரிக்காவின் அரசுத் துறைகள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்களை மக்கள் தங்களது கணணியில் இணையம் மூலம் தேடும்போது அவை வேறொரு வணிக ரீதியிலான இணையதளங்களில் தொடர்பு ஏற்படுத்தித் தந்தன.
இதுபோன்ற செயல்முறைகளைப் பயன்படுத்தி அந்த இணையதளங்களில் வெளியாகியிருந்த விளம்பரங்களை பார்க்க வைப்பதன் மூலம் 7 பேரும் விளம்பர நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வருமானம் ஈட்டியுள்ளனர். இந்த வகையில் சட்டத்துக்கு புறம்பாக சுமார் 1 கோடியே 40 லட்சம் டொலர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நியூயோர்க் அட்டர்னி ஜெனரல் பிரீட் பராரா கூறுகையில், இந்த 7 பேரின் செயலால் உலகம் முழுவதும் 40 லட்சம் கணணிகளும், அதில் அமெரிக்காவில் மட்டுமே 5 லட்சம் கணணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மால்வேரை பயன்படுத்தி 2007 முதல் 2011 அக்டோபர் வரை இந்த முறைகேடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்.
பொப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இறுதிநாட்களில் பயன்படுத்திய பொருட்கள், அமெரிக்காவில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாக டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மைக்கேல் ஜாக்சன் தனது இறுதிநாட்களில் பயன்படுத்திய பொருட்களை அடுத்த மாதம் 12ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளோம்.
டிசம்பர் 17ம் திகதி இதற்கான ஏலம் நடைப‌ெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாக்சன் மரணமடைந்த படுக்கை அதிக ஏலத்திற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமிக்கு அருகே வந்து சென்ற விண்கல்.
பூமிக்கு அருகே அதாவது 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் அருகே வந்து விட்டுப் போன விண்கலத்தைக் காண காத்திருந்த நாசா விஞ்ஞானிகள் அந்த விண்கல் இருளாக இருந்ததால் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
அந்த விண் கல்லுக்கு 2005 ஒய்யூ 55 என்று பெயர். இந்த விண்கல்லானது செவ்வாய்க்கிழமையன்று இரவு பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா விஞ்ஞானிகள் பட்டாளம் தயாராக காத்திருந்தது.
ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளால் கூட பார்க்க முடியாத அளவுக்கு விண்கல் இருளாக இருந்ததால் பூமிக்கு அருகே வந்து போனதை பார்க்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த விண்கல்லானது செவ்வாய்க்கிழமை இரவு பூமியிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்கள் அதாவது தோராயமாக மூன்றே கால் லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கி வந்தது.
பூமிக்கு அருகே விண்கல் வந்ததால் அது குறித்து நிறைய தகவல்களை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.
விண்கல் பூமியை நோக்கி வந்த சமயத்தில், நிலவின் வட்டப் பாதையில் அது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.
இதற்கு முன்பு பூமியை நோக்கி ஒரு விண்கல் வெகு அருகே நெருங்கி வந்தது 1976ம் ஆண்டு நடந்தது. அடுத்து 2028ம் ஆண்டு இதேபோல நடக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பூமிக்கு பக்கத்தில் வந்து போன விண்கல்லானது ஒரு ஹெலிகாப்டர் சைசிலானது. கிட்டத்தட்ட 400 மீட்டர் அகலத்தைக் கொண்டது. அட்டக் கரி நிறத்தைக் கொண்டது.
இது ஒரு குறிப்பிட்ட வடிவில் நகராமல் அது இஷ்டத்திற்கு வேறு வேறு திசையில் நகர்கிறது. மிகவும் மெதுவாக நகரக் கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒருமுறைதான் இது நகருகிறது.
இதுகுறித்து நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் சேர்ந்த லேன்ஸ் பென்னர் கூறுகையில், இதுவரையில் பூமிக்கு வெகு அருகே நெருங்கி வந்த ஒரு விண்கல் எது என்றால் அது இதுதான். இவ்வளவு அருகே இதுவரை எதுவும் நெருங்கி வந்ததில்லை என்றார்.
இந்த விண்கல் பூமிக்கு அருகே வந்ததால் அது குறித்த மேலும் பல விரிவான தகவல்களை ஆராய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோன் ஆய்வகத்திலும், பியூர்டரிகோவில் உள்ள அரெக்கிபோ ஆய்வகத்திலும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் விண்கல் பெரும் இருட்டாக இருந்ததால் அதை காண முடியாமல் போய் விட்டது. இந்த இரு ஆய்வகங்களிலும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகள் உள்ளன. ஒலிகளை அனுப்பி அதன் மூலம் இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் உண்மையான வடிவம், விண்கல் எதனால் ஆனது உள்ளிட்டவற்றை ஆராய காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த விண்கல் குறித்து நாசாவைச் சேர்ந்த டான் யோமன்ஸ் என்பவர் கூறுகையில், 2005 ஒய்யூ 55 விண்கல் மிகவும் வித்தியாசமானது. இது விண்கல்லாக இருந்தாலும் கூட இது ஒரு வகையான கிரகமும் கூட. இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கார்பனும் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே மனிதர்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது இந்த விண்கல் என்றார்.
இந்த விண் கல் பூமியில் விழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இது பூமியின் நிலப்பரப்பில் விழுந்தால் 4000 மெகாடன் அளவிலான பெரும் பிரளயம் ஏற்படும்.
மேலும் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நான்கு மைல் நீளத்திற்கும், 1700 அடி ஆழத்திலும் பெரும் பள்ளம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர்.
ஒரு வேளை கடலில் விழுந்தால் விழும் இடத்தில் 70 அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து 2029ம் ஆண்டில் அபோசிஸ் என்ற இன்னொரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி வரப் போகிறதாம். இதுவும் கூட ஒய்யூ 55 போன்ற விண்கல்தான். இதனாலும் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள்.
இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி பூமிக்கு அருகே வந்து செல்லுமாம். பூமியிலிருந்து 29,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நெருங்கி வரும் என்பதால் விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்து 2036ம் ஆண்டிலும் இதே விண்கல் பூமிக்கு அருகே வருமாம்.
கிரீசின் புதிய பிரதமர் தெரிவு.
நீண்ட நாள் குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த கிரீஸ்‌ நாடு கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
இதனையடுத்து ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மற்ற நாடுகள் நிதியுதவி அளிக்க முன்வந்தது. தொடர்ந்து உலக வங்கியும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க நிதியுதவி அளிக்க தயாரானது.
இருப்பினும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்‌க வேலை வாய்ப்புகளை குறைக்க முன்வந்ததால் உள்நாட்டில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டது. இதனால் உள்நாட்டிலும் பிரதமரின் போக்கை கண்டித்து கலவரம் மூண்டது.
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதற்கு முன்ன‌ோடியாக பிரதமர் பதவி வகித்த ஜார்ஜ் பாப்பன்டிரி‌யோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து பல்வேறு குழப்ப சூழ்நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைதலைவர் லூகாஸ் பாப்படீமோஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் விளையாட்டு மைதானம் தான் ஆப்கானிஸ்தான்: முஷாரப்.
இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தற்போது அமெரிக்கா மற்றும் லண்டனில் தங்கியுள்ளார். பாகிஸ்தானில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் பிரதமர் பெனசிர் கொல்லப்பட்ட வழக்கிலும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. எனவே தாயகம் திரும்பினால் கைது செய்யப்பட உள்ளார்.
இதற்கிடையே அவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரிவினைவாதங்களால் அங்கு குழப்ப நிலை காணப்படுகிறது.
அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் ஒளிந்திருந்ததால் அந்நாட்டின் ராணுவப் பாதுகாப்பு சரியில்லை என கூற முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க நான் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்த அதே வேளையில் தலிபான் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது.
தலிபான் தலைவர் முல்லா ஓமர் பாகிஸ்தானில் இருப்பதாகத் தெரியவில்லை. இதையே தான் ஒசாமா பின்லேடன் விஷயத்திலும் கூறினேன். உண்மையிலேயே ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது எனக்குத் தெரியாது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரசாரத்தை இந்தியா செய்து வருகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்களை நான் காட்ட முடியும். காந்தகார், ஜலாலாபாத் ஆகிய இடங்களில் இந்திய தூதரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரசாரத்தை செய்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது.
என்னை கைது செய்யும் சூழ்நிலை காணப்பட்டாலும் அடுத்த ஆண்டு மார்ச் 23ம் திகதி பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்காததற்கு அதிபராக இருந்த நான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.
ஏனென்றால் 2002க்கு பிறகு பாகிஸ்தானில் பார்லிமென்ட் நடைபெற்றது. பிரதமர் இருந்தார். அவர்கள் தான் பாதுகாப்பு விஷயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்துக்கு உதவி புரிய அமெரிக்கா முடிவு.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்திற்கு உரிய உதவி‌களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பாங்காக் உள்பட 25 மாகாணங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பாங்காக்கின் 20 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன. அங்குள்ள 8 மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகரின் மையப்பகுதியில் வெள்ளம் இல்லை என்ற போதிலும், 1 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பெரு மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை வெளியேற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிளிண்டன் கூறியதாவது, அடுத்த வாரம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளேன். தலைநகர் பாங்காங்கில் பிரதமர் இங்லக் ஷினவத்ராவை சந்தித்துப் பேசிய பின்பு தான் எவ்வளவு நிதி வழங்கப்படும் மற்றும் எத்தகைய உதவிகள் வழங்கப்படும் என்று இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 20 பேர் பலி.
சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 20 பேர் பலியானர்.
மேலும் புதைந்த 24 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இவ்விபத்து சிஷூவாங் நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை காலை நடந்ததாக மாகாணத்தின் பேரிடர் பொறுப்பு அலுவலகம் தெரிவித்தது.
சுரங்கத்திற்குள் எரிவாயு தீப்பிடித்து இவ்விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுரங்கத்தில் எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது தெரியவில்லை.
மீட்புப்பணிக்கு 100-க்கும் மேற்பட்ட மீட்புக் குழு வீரர்களும், 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளும் அனுப்பப்பட்டதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் 11.11.11.
இன்றைய தினம் அரிதான தினமாகும். ஆறு ஒன்றினைக் கொண்டு அதாவது 11-11-11 என அனைத்தும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்தநாளினை உலகத்தின் சிறப்பு வாய்ந்த நாளாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய  திகதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த திகதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன.
ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் திகதியை உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர்.
இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
2015ல் ஐஸ்கட்டி முழுவதும் உருகி விடும்: விஞ்ஞானி தகவல்.
2015க்குள் ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ்கட்டி முழுவதும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி பீட்டர் வதம்ஸ் தெரிவித்துள்ளார். 
அவ்வாறு ஐஸ் கட்டி முழுவதும் உருகிவிட்டால் அங்கு வாழும் துருவக் கரடி உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் விரைந்து உருகி வருவது தெரியவந்துள்ளது.
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் உருகி வருவதற்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதே காரணம். சமீபகாலமாக ஐஸ் கட்டி விரைந்து உருகுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் 2030-க்குள் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ், ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030-வரை இருக்காது. அவை நிச்சயம் 2015-க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.
ஹக்கானி குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பாகிஸ்தான் உறுதி.
அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கமான ஹக்கானி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற குழு ஒன்று கராச்சி நகருக்கு வந்துள்ளது. அந்த குழுவைச் சந்தித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, இந்த உறுதியை அளித்துள்ளார்.
எனினும் அதிபரின் இந்த வாக்குறுதி எந்த அளவுக்கு நம்பக்கூடியதாக இருக்கும் என்கிற சந்தேகம் பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க எம்பிக்கள் குழுவின் தலைவர் மைக்கேல் மெக்காலுக்கு இருக்கிறது.
பாகிஸ்தானில் ராணுவத்தின் கைதான் ஓங்கியுள்ளது. எனவே தான் சொன்னதை அதிபர் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்பது மெக்காலின் கருத்து.
சிஐஏ ஏஜெண்டு ஒருவர் இரு பாகிஸ்தானியரை சுட்டுக்கொன்றது, கடந்த மே மாதத்தில் அமெரிக்காவே நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடனை கொன்றது ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பாதித்துள்ளது.
ஹக்கானி தீவிரவாத இயக்கம் அல்கொய்தாவுடன் நெருக்கம் கொண்டுள்ளதாகும். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த இயக்கத்தினர் நடமாட்டம் பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் காணப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு பெருத்த பிரச்னையாக உள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை 2014ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதுமாக விலக்கிக்கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில் மீண்டும் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் ஓங்க வழி ஏற்பட்டுவிடுமோ என்கிற ஐயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நாவில் உயர் பதவி: இந்தியா - சீனா நேரடியாக மோதல்.
ஐ.நா.வில் காலியாக உள்ள உயர் பதவியை கைப்பற்றும் போட்டியில் இந்தியாவும், சீனாவும் நேரடியாக மோத உள்ளன.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கோபிநாதனும் சீனாவின் சார்பில் தற்போ‌தைய சீன தூதர் ஜாங்யானும் களத்தில் மோத தயாராக உள்ளனர்.
ஐ.நாவில் காலியாக உள்ள இந்த பதவிக்கு கடந்த 1977 க்கு பின்னர் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவை பொறுத்த வரையில் கடந்த 2003-ம் ஆண்டில் பதவிவகித்து வந்துள்ளது.
இருப்பினும் தற்போது இந்தியாவுடன் போட்டியிட உள்ளது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் சம பலத்துடன் இருப்பதால் அதிகாரமிக்க இப்பதவியையும் கைப்பற்றுவதில் இருநாட்டு அதிகாரிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பதவிக்கு மோதும் சீன அதிகாரி ஜங்‌யான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலம் இல்லாமல் இருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி ‌‌கேட்டதற்கு வாயைமூடு என்று பதில் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்‌கது.
ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை.
ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இத்தகைய எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
ஈரானுக்கு மேலும் நெருக்கடி தருவது தொடர்பாக பிற வல்லரசு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்துவதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரான், வட கொரியா, சிரியா மீது ஒருங்கிணைந்த தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் கிர்ஸ்டென் கிலிபிராண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாத் அளித்துள்ள பதிலில், ஈரானுக்கு அணுகுண்டு தேவையில்லை. இதை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஈரான் மீது நிர்பந்தம் தொடுப்பதைக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிதிநெருக்கடி குறித்து IMF எச்சரிக்கை.
சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியானே லகார்டே நிதி நெருக்கடியில் உலக நாடுகள் மூழ்கிக் கொண்டிருப்பதனால் ஆசிய நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
அனைத்து நாடுகளும் இணைந்து துணிச்சலான முடிவுகளை எடுக்காவிட்டால் நிதிநிலைமை இன்னும் மோசமாகி பெருத்த சீரழிவு ஏற்படும் என்ற பீஜிங் வந்த கிறிஸ்டியானே லகார்டெ தெரிவித்தார். இவர் யூலை மாதம் IMFன் தலைவரானது முதல் இப்போது தான் முதன்முதலாக பீஜிங்குக்கு வருகை புரிந்தார்.
இந்தப் பத்தாண்டுகளை நிதிநிலை விமர்சகர் “இழந்து விட்ட பத்தாண்டு” என்று தமது பேச்சுகளில் கடுமையாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆசியாவின் பொருளாதாரம் செம்மையாக இருந்தாலும் அங்கும் புயல் வீசக்கூடும் என்று பிரான்சின் முன்னாள் நிதியமைச்சர் எச்சரித்தார். மேலும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் ஆசிய நாடுகள் உறுதியான நிதி கொள்கைகளைப் பின்பற்றி வருவதில் ஐயமில்லை. ஆயினும் அவர்கள் நின்று நிதானித்து புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றார்.
ஆசியாவை நிதிநெருக்கடி தாக்காது என்று கூற இயலாது என்று குறிப்பிட்ட லகார்டே, சென்ற ஆண்டு கணிப்பில் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இது 6.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளிலிருந்து ஆசியா எதிர்பார்த்த பொருளாதார உதவி, தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளில் ஏமாற்றத்தை அளித்ததால் வளர்ச்சி பின்தங்கியது. எனவே உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, செம்மையாக இருக்கும் ஆசியப் பொருளாதாரத்தையும் அசைத்துப் பார்க்கிறது.
யூரோ தேவையில்லை: ஜேர்மன் ஏற்றுமதியாளர் கருத்து.
யூரோ மண்டலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான ஜேர்மன் ஏற்றுமதியாளர்களால் பொதுச் செலாவணியான யூரோ இல்லாமலேயே சமாளிக்க முடியும் என்று தொழில் கூட்டமைப்பின் தலைவர் அண்ட்டோன் போர்னொர் தெரிவித்தார்.
இவர் ஏற்றுமதியாளருக்குத் தேவை சுங்கவரிவிலக்குச் சலுகையே தவிர பொதுச் செலாவணி அல்ல என்று பெர்லினில் தெரிவித்தார்.
அங்கு வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் சங்கத்தில் போர்னெர் பேட்டியளித்தார். யூரோ இல்லாமல் ஜேர்மனியில் வாழ முடியுமா என்ற கேள்விக்கு அவர் “முடியும்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். ஏற்றுமதியாளர் யூரோ இல்லாமல் வாழமுடியும் என்றார்.
ஜேர்மனி யூரோ மண்டல நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில் செப்டம்பரில் வெளிவந்த ஓர் அறிக்கை ஜேர்மனியின் ஏற்றுமதியால் அந்நாட்டில் தொழில் வளம் பெருகியிருப்பதைக் காட்டுகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான ஜேர்மனி செப்டம்பர் மாதத்தில் 91.3 பில்லியன் யூரோவும், ஓகஸ்ட் மாதத்தில் அதை விட 0.9 சதவீதம் அதிகமாகவும் ஏற்றுமதி செய்துள்ளது. கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் இணைந்த பிறகு இதுவே மிக அதிகமான ஏற்றுமதி அளவாகும்.
ஜேர்மனியில் சிறிய, நடுத்தர நிறுவனத்தின் ஏற்றுமதியே அதிகமிருப்பதால் இவற்றிற்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதே நன்மை தரும். செலாவணி யூரோவாக இருப்பதால் நன்மை எதுவுமில்லை.
போர்னெரின் கருத்து ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெலின் கருத்துடன் முரண்படுவதைக் காணலாம். மார்க்கெல் யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடி குறித்து வெகுவாகக் கவலைப்படுகிறார். இந்த நெருக்கடியை சமாளிக்க பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளின் தலைவர்களுடன் கலந்து விவாதிக்கிறார்.
ஆனால் போர்னெர் கூறுகையில், இத்தாலியின் வீழ்ச்சிக்குக் காரணம் அரசு பொது நிதியையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் பலப்படுத்தாததுதான். அதை விடுத்து யூரோ மீது பழி சுமத்துவதால் யாதொரு பயனும் இல்லை என்றார்.
யூரோ பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தால் ஜேர்மன் நிறுவனங்கள் ஒரு நியாயமான நிதிக் கொள்கையை உருவாக்கி தொழிற் சங்கங்களோடு இணைந்து சிந்தித்து, போட்டி மனப்பான்மையுடன் தொழிலில் முன்னேற்றம் காண முயலும்.
யூரோ மறைந்தாலும் ஜேர்மனியில் நிதி நிலையில் ஒன்றும் குறைவு ஏற்படாது. அது வடக்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பின்லாந்து, டென்மார்க் மற்றும் நெதர்லாந்துடன் இணைந்து செயல்படும் என்று கூறினார்.
பெண்களின் உடல்களை திருடி வீட்டை அலங்கரித்த நபர் கைது.
கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து வீடு முழுக்க வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டன. ரஷ்யாவில் வோல்கா ஆற்றை ஒட்டிய பகுதி நிஸ்னி நோவ்கரட். இங்குள்ள கல்லறையில் மர்மமான முறையில் இளம்பெண்களின் உடல்கள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து அப்பகுதியை பொலிசார் ரகசியமாக கண்காணித்தனர். கைரேகைகள், கால் தடங்களை தடயவியல் வல்லுனர்கள் பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோபா, கட்டில், டிவி அருகே, புத்தக அலமாரி அருகே என பல இடங்களிலும் சடலங்களுக்கு மேக்கப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. பேஷன் ஷோக்களில் வருவது போல விதவிதமான தொப்பிகள், ஆடைகள் அந்த உடல்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு 29 உடல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அனாடலி மாஸ்க்வின்(45) என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. வரலாற்று ஆய்வாளரான அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இணையதள முகவரிகள் அழிப்பு.
சீனாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சம் இணையதள முகவரிகளை சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் செயல்பட்டு வரும் இணையதளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் அவைகளின் செயல்பாடுகள் அனைத்தும் அரசங்காத்தின் இணையதள கட்டுப்பாட்டு வாரியம் கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 4 லட்சம் இணையதள இணைப்புகளை சீன அரசாங்கத்திடம் அனுமதி பெறாமல் லிங்குகள் எனப்படும் இணையதள இணைப்புகள் வழங்கி வந்ததை அரசு கண்டறிந்தது.
இதனையடுத்து அனைத்து லிங்குகளையும் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் சட்ட விரோதமாக லி்ங்குகளை பெற்று தந்த சுமார் இரண்டாயிரத்து 400 இண்டெர்நெட் மையங்களுக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது இணையதள லிங்குகளை நெறிமுறைப்படுத்த உத்தரவிட்ட பின்னரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சுமார் 13 மில்லியன் ஓடியோ மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேம்ஸ் முர்டோக்கிடம் மீண்டும் விசாரணை ஆரம்பம்.
பிரபலங்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு செய்திகளை வெளியிட்டதில் இரண்டாவது முறையாக ஜேம்ஸ் முர்டோக்கிடம் பாராளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
அவருடைய தந்தை ரூபெர்ட் ஆரம்பித்த பத்திரிக்கை சாம்ராஜ்யம் இவருடைய காலத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜேம்ஸ் முர்டோக் அவருடைய பத்திரிக்கையில் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் தவறு நடந்தபோது ஏன் அதை நிறுத்தவில்லை, திருத்தவில்லை என்ற வினா எழும்பியது.
ஜேம்ஸ் முர்டோக்கின் முந்தைய வாக்குமூலத்தின் படி, தனக்கு தொலைபேசி ஒட்டுக் கேட்டது, மின்னஞ்சல்களைத் திருடிப் பெற்றது போன்ற எதுவுமே தெரியாது என்பது தான். ஆனால் இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் கால் பந்தாட்ட தலைவருக்குப் பெருந்தொகை கொடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.
டாம் குரோன் மற்றும் கோலின் மைலர் என்ற இருவரும் இப்போது வெளிவராத ஆனால் முன்பு வெளிவந்த நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையில் சட்ட வல்லுநரும் பத்திரிக்கையாசிரியரும் ஆவர். இவர்கள் 2008லேயே முர்டோக்கை இது குறித்து எச்சரித்துள்ளனர்.
கால் பந்தாட்டத் தலைவர் கோடொன் டெய்லரிடம் ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசிக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இதனால் மற்ற பத்திரிக்கையாளரும் இக் குற்றத்தில் பங்கெடுக்கலாம் என்று முர்டோக்கிடம் கூறினர்.
ஜேம்ஸின் தந்தை ரூபெர்ட் யூலை மாதம் நடந்த விசாரனையில் மிகவும் சாதுவாகப் பேசினார். ஆனால் ஜேம்ஸ் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
தகவல்களைத் திருடிப் பெற்றதால் பாதிக்கப்பட்டோர் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்களிடம் நியூஸ் இண்டர்நேஷனர் நிறுவனம் மிகக் கவனமாக இந்த வழக்கைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
எதிர்க்கட்சி உறுப்பினரான பால் ஃபெரேஸி என்பவரும் பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு மூடப்பட்டதும் நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தைத் திறமையாகத் தொடங்கிவிட்டாலும் ஜேம்ஸ் முர்டோக் விசாரணையில் தப்ப முடியாது.
தனக்கு எதுவுமே தெரியாது என்றாலும் அது முடிவான பதில் ஆகாது. இன்னும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். நடந்தது எதுவுமே தெரியாது என்றால் ஏன் தெரியாது என்ற கேள்வி அவர் முன் வைக்கப்படும் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF