Wednesday, November 9, 2011

இன்றைய செய்திகள்.

சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் சுவீகரிப்பது தொடர்பிலான சட்ட மூலத்தை இன்று பிரதமர் டி.எம். ஜெயரத்ன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, குறித்த சட்ட மூலம், அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமையை, பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அதன் பின்னரே, பிரதமர் இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கிடையில் இந்த சட்ட மூலத்துக்கு எதிராக 3 வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, உயர் நீதிமன்றம் இந்த சட்ட மூலம் நீதியானது என தீர்ப்பளித்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், இந்த சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அது தொடர்பிலான கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்!- லக்ஸ்மன் கிரியல்ல.
சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.இலாபம் ஈட்டாத நிறுவனங்களை அரசாங்கம் கையேற்கும் சட்ட மூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், இச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இழக்க நேரிடலாம் என பிக்குகள் அமைப்புக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கம் நிர்வாகம் செய்யும் இரண்டு சீனி உற்பத்திசாலைகளும் நட்டமடைந்துள்ளதாகவும், வருடாந்தம் 300 முதல் 400 மில்லியன் ரூபா லாபமீட்டி வரும் நிறுவனங்களை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.இந்த நடவடிக்கை எமது நாட்டு இளைஞர் சமூகத்திற்கு இழைக்கும் பாரிய அநீதியாக கருதப்பட வேண்டும்.
முதலீட்டாளர்களின் வருகை வீழ்ச்சியடையும் எனவே சட்ட மூலம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலையில், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் சட்ட மூலத்திற்கு ஜாதிக ஹெல உறுமய தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இவ்வைபவம் காலியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந் நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிபன்ன வரை பயணம் செய்வார் எனவம் அவர் தெரிவித்தார்.
இந் நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கான ஆகக்குறைந்த கட்டணமாக 100ரூபா அறவிடப்படும் எனவும் முழுப்பயணத்திற்கும் கார்கள் மற்றும் இலகுவகை வாகனங்களுக்கான கட்டணமாக 400ரூபாவும் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், மினி பஸ்கள் மற்றும் சிறிய லொரிகளுக்கு 800 ரூபாவும் லொரிகள் மற்றும் 6 சக்கர வாகனங்களுக்கு 1200 ரூபாவும் கனரக வாகனங்களுக்கு 2000 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 60 ஆயிரம் வீரர்களை பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை.
இலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் பல்லாயிரம் பேரைப் பிடித்து தண்டிப்பது என்று திட்டமிடப்பட்டிருந்த ஒரு நடவடிக்கையை கைவிட்டு அவர்களை இராணுவத்தில் இருந்து நீக்குவது அல்லது பதிவுகளில் இருந்து அகற்றிவிடுவது என்ற மாற்று நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.இவ்வாறு தப்பியோடியவர்கள் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கையில் கடந்த ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் 10 ஆயிரம் பேர் அளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோர் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனாலும் இராணுவத்தில் காணப்படும் நிலைமை தொடர்பில் அதில் உள்ளவர்கள் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் சிப்பாய்கள் படையில் இருந்து விலகியோடுதல் என்பதும் அதிக எண்ணிக்கையில் நடந்துவந்துள்ளது.
படையிலிருந்து விலகியோடியவர்கள் வன்முறைமிக்க குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகித்து பல தகவல்கள் வெளிவருவதனால் இப்படியான குற்றச்செயல்களினால் இராணுவத்தின் பெயருக்கு களங்கம் வராமல் இருக்க வேண்டும் எனவும், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படாத ஆட்கள் தங்களுடைய தற்போதைய வாழ்க்கையை பிரச்சினையில்லாமல் தொடர இடம்விட வேண்டும் என்றும் நினைத்து இலங்கை இராணுவம் தற்போது இதனை அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தப்பியோடிய 60ஆயிரம் இராணுவ வீரர்களை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை
இலங்கையில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 60 ஆயிரம் பேரை தப்பியோடியோர் பட்டியலில் இருந்து நீக்கிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.தண்டனைக்கு உட்படமாட்டார்கள் என்ற அடிப்படையில் தப்பியோடிய படைவீரர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் 1982 ஆம் ஆண்டு முதல் தப்பியோடிய சுமார் 60 ஆயிரம் படைவீரர்;கள் பணிகளுக்கு திரும்பவில்லை.
இதனையடுத்தே அவர்களை இராணுவத்தினரின் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களில் சுமார் 500 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் குற்றமே செய்யவில்லை என கூறவில்லை! பசில் ராஜபக்ச : விக்கிலீக்ஸ் தகவல்.
நாம் குற்றமே செய்யவில்லை என நான் கூறவில்லை என ஜனாதிபதியின் ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்ஷ அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார பிரிவு உறுப்பினர் ஒருவருடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் எனவும் அமெரிக்காவுடன் சிறந்த இரு தரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாசினால் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விமர்சனங்கள் குறித்து பசில் ராஜபக்க்ஷ அதிருப்தி வெளியிட்டதாக புட்டீனாஸ் குறிப்பிட்டுள்ளார். வார்த்தைப் பிரயோகங்களின் போது அமெரிக்கா மிகவும் நிதானமாக செயற்பட வேண்டியது
அவசியம் எனவும் இலங்கை விவகாரங்களை அமெரிக்க கண்காணித்து வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிய நாடு என்ற போதிலும் இலங்கை பெருமைக்குரிய நாடு எனவும், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கையை நட்பு ரீதியில் அணுக வேண்டுமென அவர் கோரியுள்ளார். விமர்சனங்களை வெளியிடுவதனை தவிர்த்து ஆலோசனை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 'நாம் சுத்தமானவர்கள் என்று நான் கூறவில்லை' என பசில் ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருவதாகவும் இந்தியா இலங்கை விவகாரங்களை கண்காணிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸதர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
காட்டுப் பத்திரிகைகளுக்கு அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி.
காட்டுப் பத்திரிகைகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.காட்டுப் பத்திரிகை விமர்சனங்களுக்கு அஞ்சினால் எந்தவொரு நடவடிக்கையும் செய்ய முடியாது.காட்டுப் பத்திரிகைக்கு அஞ்சினால் முதலில் நானே அஞ்ச வேண்டும், அதிகளவான காட்டுப் பத்திரிகைகள் காணப்படுகின்றன.
இந்த விடயங்களை பெரிதாக பொருட்படுத்தக் கூடாது, சொல்பவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், கேட்பவர்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.தாதிப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீது உளவியல் போரை ஆரம்பித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம்! கொழும்பு ஊடகம்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் மீது உளவியல் போரொன்றை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் அமெரிக்கச் செய்தியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக் களம் சுமார் ஒரு மாத காலமாக அதிகாரபூர்வமற்ற வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு சில செய்திகளை மறைமுகமாக தெரிவித்து வருவதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேரடியான ஆய்வுகளைக் கொண்டிருப்பதோடு, வெளிப் படைத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அடிக்கடி வலியுறுத்தி வருவது இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு உளவியல் போராகும்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இத்தகைய உளவியல் போரொன்றை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கடந்த 03-ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் கூறியிருந்தார்.
அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த விக்ரோரியா நூலன்ட், சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்ற வகையில் இவ்வறிக்கை இருக்க வேணடும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உணவு விஷமாகியதில் 30 இராணுவப் படைவீரர்கள் பாதிப்பு.
உணவு விஷமாகியதில் 30  இராணுவப் படைவீரர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்மலை இராணுவ மொழிப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த படைவீரர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரைத் தவிர்ந்த ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீர பண்டார தெரிவித்துள்ளார்.பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கோத்தபாயவின் பாதுகாப்புப் பிரிவை பல்கலையிலிருந்து உடன் அகற்றுக!- பல்கலை. மாணவர் ஒன்றியம்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, மாணவர்களுக்கு அச்சுறுத்தலான கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவை உடனடியாக நீக்குவதற்கு உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புப் பிரிவின் கீழுள்ள ரத்னா லங்கா என்ற பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அவர் நேற்றுக் கூறியவை வருமாறு:
கடந்த இரண்டாம் திகதி முதல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ரத்னா லங்கா எனப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், உப வேந்தர்கள் ஆகியோர் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் அதிகரிப்பதற்கான வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டாம் திகதி ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதியில் தனித்தனி மாடிகளாகச் சென்று குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 6 மாணவர்கள் மீது வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டது.அதேவேளை, ஆண்கள் விடுதிகளில் நுழைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள், நாளை பெண்கள் விடுதிகளுக்கும் சென்று பிரச்சினை ஏற்படுத்தமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமா?
எனவே, பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இவர்களை உடனடியாக நீக்கி, ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டிருந்த அதிகாரிகளை மீண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உயர்கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றோம்.இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் தெரிவித்துள்ளோம் என்றார்.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மத்திய வங்கியில் வைக்கப்பட்டுள்ளதா? அனுரகுமார எம்.பி. கேள்வி.
இலங்கை மத்திய வங்கியில் கையிருப்பில் இருக்கும் தங்கங்களுக்குள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கமும் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் இருப்பிலுள்ள தங்கத்தின் அளவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, தற்போது 17.34 மெற்றிக் தொன் தங்கமும் இருப்பதாகக் கூறினார்.அனுரகுமார எம்.பி. புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டு யூன் மாதம் வரை மத்திய வங்கிக்கு சொந்தமாக 17.34 மெற்றிக்தொன் தங்கம் இருக்கின்றது.2010 ஆம் ஆண்டு யூன் முதல் 2011 யூன் வரை 51 மெற்றிக் தொன் தங்கம் கொள்வனவு செய்யப்பட்ட அதேவேளை 52.39 மெற்றிக் தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது என தெரிவித்தார்.
மீண்டும் அதிபராக ஒபாமா பதவியேற்பதை மக்கள் விரும்பவில்லை: கருத்துக் கணிப்பில் தகவல்.
வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் ஒபாமா மீண்டும் அதிபராவதற்கு அமெரிக்க மக்களில் பாதிப்பேர் விரும்பவில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக அதிபர் பராக் ஒபாமா கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி விட்டார்.
அதிபர் வேட்பாளராக தான் நிற்பதற்கான நன்கொடை வசூலில் அவர் முழு மூச்சாக இறங்கியுள்ளார். இதற்காக மாகாணங்கள் தோறும் பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் “கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்” பத்திரிகை நடத்திய ஆய்வில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் அவர் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமா மீண்டும் அதிபராவதற்குத் தகுதி உடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.ஆனால் 56 சதவீதம் பேர் அவர் அதிபராக வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். 10 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரும், அமெரிக்க இந்தியருமான ராகவன் மயூர் இதுகுறித்துக் கூறுகையில்,“தனிப்பட்ட நபர்களின் ஆதரவு தான் மிக முக்கியம். அவர்கள் தான் ஒருவர் மீண்டும் அதிபராக வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றனர்” என்றார்.
வேலையில்லாத் திண்டாட்டம் குறையாதது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாதது, விலைவாசி ஏற்றம், கல்விக் கட்டணம் ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கர்கள் அதிபர் ஒபாமா மீதான நம்பிக்கையை சிறிது சிறிதாக இழந்து வருகின்றனர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏமனில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை: 11 தீவிரவாதிகள் பலி.
ஏமனின் பாதுகாப்புப்படையினர் நடத்திய வேட்டையில் 6 அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.அரேபிய நாடான ஏமனில் அல்கொய்தா அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக்கோரி கடந்த 9 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஏமனின் தெற்கு பகுதியானஜின்சிபர் நகரில் அல்கொய்தாவினர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப்ப‌டையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 6 அல்கொய்தாவினர் கொல்லப்பட்டதாகவும், இதில் சில பாதுகாப்புப்படையினர் காயமடைந்ததாக செய்தி நிறுவனம் ஒன்றி தெரிவிக்கிறது.முன்னதாக கடந்த சனியன்றும் பாதுகாப்புப்படையினர் நடத்திய வேட்டையில் 5 அல்கொய்தாவினர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் 11 அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடைசி நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட கடாபி.
கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபி யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்த நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவரது பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடாபியின் உயர் பாதுகாப்பு அதிகாரி மசூர் தாவ் சிஎன்என்-இடம் கூறியதாவது, சிர்டே நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கடாபி உணவுக்கு கூட கஷ்டப்பட்டார். ஏதோ கிடைத்ததை வைத்து வாழ்ந்தார். அங்கு தன் பெட்டியில் வைத்திருந்த புத்தகங்களை வாசித்து பொழுதைப் போக்கினார்.
மாட மாளிகையில் சகல வசதியுடன் வாழ்ந்த கடாபி கடைசி காலத்தில் மின்சார வசதி இன்றி ஒரு தொலைக்காட்சி கூட இல்லாமல் இருந்தார்.போராளிகள் தான் இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்ததும் அவர் பதட்டமாக இருந்தார். அவருக்கு பயம் வந்துவிட்டது என்று தெரிந்தது. சிர்டேவில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான ஜாரேப் என்னும் கிராமத்திற்கு தப்பித்துச் செல்ல விரும்பினார்.
தனது கடைசி நாட்களை, உயிரை பிறந்த மண்ணில் விட ஆசைப்பட்டார் போலும். நான் ஏன் கடாபியுடன் சேர்ந்தேன் என்று வருத்தப்படுகிறேன். ஆனால் காலம் சென்று வருத்தப்பட்டு என்ன பயன் என்றார்.மிஸ்ரதாவில் உள்ள சிறையில் இருக்கும் மன்சூருக்கு லிபியா பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள் கூட தெரியுமாம். அதனால் அவரை பிளாக் பாக்ஸ் என்றே கடாபியின் ஆட்கள் அழைத்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு அபு சலிம் சிறை படுகொலை தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர்.புகுஷிமா அணு உலையும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு வெளியானது. அதை குளிர்விக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே, பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 222 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக கடலில் வழக்கத்துக்கு மாறாக மிக உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி ஏற்படும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு.
கடந்த ஆண்டு பிரிட்டனில் இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 97 சதவீதம் அதிகரித்து இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டிரேட் யூனியன் காங்கிரஸ்(TUC) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 18 முதல் 24 வரை வயதுடைய வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டும் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இவர்களின் எண்ணிக்கை 9,91,000 ஆக இருந்தது. வேலை தேடுவோர் பெறும் உதவித் தொகையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பதால் அண்மையில் அதிக எண்ணிக்கையில் இளைஞருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.இந்தத் தகவலை வெளியிட்ட டிரேட் யூனியன் காங்கிரஸின் செயலர் பிரென்டான் பார்பெர், இன்னும் சிறிது காலத்திற்கு இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் நீடிக்கும் என்றார்.
வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்ட கனடா விமானப் போக்குவரத்து ஊழியர்கள் ஏமாற்றம்.
கனடாவில் பல கோரிக்கைகளை முன்வைத்து விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.ஏர் கனடா யூனியன் என்ற இந்த ஊழியர்களுக்கான அமைப்பில் 6800 விமானிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்ற மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களால் மறுக்கப்பட்ட விஷயங்களே இந்த முறையும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக CUPEயின் தலைவர் பவுல் மாய்ஸ்ட் தெரிவித்தார்.
CIRB(கனடா தொழில்துறை தொடர்பு வாரியம்) அதிகாரி எலிசபெத் மேக் ஃபெர்சன் கூறுகையில், புதிய ஒப்பந்தம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகும் என்றார். இவர் தான் CIRB தரப்பில் மத்தியஸ்தராக இருந்து யூனியனிடம் பேசினார்.
தொழில்துறை அமைச்சரான லிசா ரெய்ட் ஊழியர்களால் மறுக்கப்பட்ட விடயங்கள் ஒப்பந்தத்தில் மீண்டும் இடம் பிடித்ததற்கு முக்கிய காரணம், அவர்களின் சங்கத்தினர் அவற்றை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதுதான் என்றார்.சங்கத் தலைவர் ஜனநாயக முறைப்படி ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவர் ஏற்றுக்கொண்ட விடயங்கள் அனைத்தும் ஊழியர்களும் ஏற்றுக் கொண்டதாகவே கருதப்படும்.
CIRBயின் மத்தியஸ்தர் மேக் ஃபெர்சன், இந்த தற்காலிய இரண்டாவது ஒப்பந்தத்தில் ஏர் கனடா ஊழியர்களுக்கு சில சலுகைகள் கிடைத்திருப்பதாகக் கூறினார்.சங்கத்தினர் திறமையாகப் பேசி பல சலுகைகளைப் பெற்றுவிட்டனர் என்றார். ஊழியர் சங்கத்தின் 73 சதவீதத்தினர் இந்த இரண்டாவது ஒப்பந்தம் குறித்து வாக்களித்ததில் 65 சதவீதம் பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனால் தொழில்துறை அமைச்சர் CIRB க்கு ஒப்பந்தத்தை அனுப்பி வைக்கும் முன்பே மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.ஏர் கனடா குறைந்த கட்டணத்தில் விமான சேவை நடத்த விரும்புகிறது. அதைப் போலவே குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறது.
ஆனால் யூனியன் தலைவர் பவுல் மாய்ஸ்ட் கூறுகையில், ஏர் கனடா தரமான நிறுவனத்தை நடத்த விரும்பினால் தன்னுடைய பணியாளர் சக்தியை வளப்படுத்த வேண்டும். சிறந்த திறமையான பணியாளரை நியமித்து நல்ல ஊதியம் வழங்க வேண்டும். இப்போது உருவாகியுள்ள ஒப்பந்தம் பணியாளருக்கு சலிப்பையும் விரக்தியையும் குறைவாக சம்பளம் தருகிறார்கள் என்ற வருத்தத்தையும் அளிக்கும். இதனால் அவர்கள் மனநிறைவுடன் பணிபுரிய இயலாது என்றார்.மீண்டும் விமானிகளுடன் கலந்து ஆலோசித்து இந்த ஒப்பந்த விதிகளை குறித்து மறு ஆய்வு நடத்தப் போவதாக CUPE தெரிவித்தது.
அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து ஈரானுக்கு ஜேர்மன் எச்சரிக்கை.
பொதுமக்களுக்கு பல ஆக்கப் பணிகளுக்கெனத் தேவைப்படும் அணுசக்தியை அழிவுப் பணிக்கு ஆயுதங்களாகச் செய்து குவிப்பதை எதிர்க்கும் உலக நாடுகள் ஆறினுள் ஜேர்மனியும் இணைந்துள்ளது.ஈரான் நாடு மீண்டும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக ரகசியத் தகவல் கசிவதால் ஜேர்மனி முழுமுனைப்புடன் ஈரானைக் கண்டிக்கிறது.
சர்வதேசக் கருத்துடன் இசைந்து செல்லுமாறு ஈரானை ஜேர்மனி வலியுறுத்துகிறது. தன்னிடம் அணு ஆயுதம் எதுவும் இல்லை என்பதை ஈரான் உறுதி செய்ய வேண்டும். இதுவே அந்நாட்டின் பாதுகாப்புக்கும் சர்வதேசப் பாதுகாப்புக்கும் ஏற்றதாகும் என்று செய்தித் தொடர்பாளர் ஆண்டிரியாஸ் பெஷ்கே தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் வெகுசீக்கிரமே நடக்கலாம் என்று இஸ்ரேலியர் அதிபர் ஷிமோன் பெரெஸ் எச்சித்துள்ளது பற்றி ஆண்டிரியாஸ் பெஷ்கேயிடம் கேட்டதற்கு, இஸ்ரேல் அவ்வாறு எச்சரித்ததன் உள்நோக்கம் தெளிவாகின்றது.
ஈரானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் தரும் அச்சவுணர்வை இஸ்ரேலிய அதிபரின் வார்த்தைகள் உறுதி செய்கின்றன. இந்த அச்சம் குறித்துத் தான் ஜேர்மனியும் ஈரானிடம் கேள்வி கேட்பதாகத் தெரிவித்தார்.சர்வதேச அணுசக்தி முகமையின்(IAEA) அறிக்கை செவ்வாய், புதன்கிழமைகளில் வெளிவரலாம். அந்த அறிக்கையில் ஈரான் சட்டத்துக்கு விரோதமாக ஏவுகணைகள் தயாரிப்பதையும், அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதையும் குறித்து விளக்கமாக அறியலாம்.
AFP என்ற செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மேனாட்டு அரசியல்வாதி கூறுகையில், ஈரான் அணு ஆயுத உற்பத்திக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நிறைய ஆதாரங்களை IAEAயின் அறிக்கை எடுத்துக் காட்ட முடியும் என்று தெரிவித்தார்.இந்த அறிக்கை இஸ்லாமிய நாடுகளின் மீது மேலும் பல மேலை நாடுகள் கண்டனக் குரல் எழுப்ப உதவும். இஸ்லாமிய நாடுகளின் அணு ஆயுதக் குவிப்பு தடுக்கப்படும்.
மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு மருத்துவர் தான் காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு.
உலகப் புகழ்பெற்ற பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ந் திகதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மைக்கேல் ஜாக்சன் பல தடவை முகமாற்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து இருந்தார். அதனால் ஏற்பட்ட வலிக்காக புரோபோபோல் என்ற சக்தி வாய்ந்த மயக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
பொதுவாக இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த மாத்திரையை மிக குறைந்த அளவில் பயன்படுத்துவர். ஆனால் மைக்கேல் ஜாக்சனுக்கு அவர் மரணம் அடைந்த அன்று குடும்ப டாக்டர் முர்ரே அளவுக்கு அதிகமாக புரோபோபோல் மாத்திரை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொட ரப்பட்டது.அதில் மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்கு டாக்டர் முர்ரே அளவுக்கு அதிகமான புரோபோபோல் மாத்திரை கொடுத்ததால்தான் அவர் இறந்தார். எனவே டாக்டர் முர்ரே கொலை குற்றவாளி என புகார் தெரிவிக்கப்பட்டது. இதை முர்ரே மறுத்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு 6 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 49 பேர் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் டாக்டர் முர்ரேதான் கொலை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அளவுக்கு அதிகமாக அவர் கொடுத்த மாத்திரைதான் மைக்கேல் ஜாக்சனின் உயிரை பறித்தது என நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த குற்றத்துக்கான தண்டனை விவரத்தை வருகிற 29ந் திகதி அறிவிப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர் முர்ரேயின் கையில் விலங்கு பூட்டப்பட்டு அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் முர்ரேவுக்கு குறைந்தது 4 வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மருத்துவம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
நேற்று நடந்த கோர்ட்டு விசாரணையை மைக்கேல் ஜாக்சனின் தாயார் காத்ரின், தங்கை ரெப்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை கேட்டதும் மவுனமாக கண்ணீர் விட்டு அழுதனர்.
மேலும் கோர்ட்டுக்கு வெளியே கூடியிருந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் தீர்ப்பை கேட்டதும் பொங்கிவந்த அழுகைக்கு இடையே மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையே தீர்ப்பு குறித்து மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மெயின் கருத்து தெரிவித்துள்ளார். நீதி காப்பாற்றப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் எங்களுடன்தான் இருக்கிறார் என்றார்.
சீன ஓவியருக்கு விதிக்கப்பட்ட வரி பாக்கி: மக்கள் உதவி.
சீனாவின் பிரபல ஓவியரான அய் வெய் வெய்(54) அரசுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிக்காக சீன மக்கள் அவருக்கு பல்வேறு வழிகளில் பணத்தை அனுப்பி வருகின்றனர்.சீனாவின் பிரபல ஓவியரும், கட்டட வடிவமைப்பாளரும், பேச்சுரிமை ஆர்வலருமான அய் வெய் வெய் கடந்த ஏப்ரலில் திடீரென காணாமல் போனார்.
அப்போது உச்சக்கட்டத்தில் இருந்த அரபுலகப் புரட்சி சீன மக்களுக்கும் தெரிய வந்து அவர்களும் போராட்ட முயற்சியில் இறங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கதி கலங்கிய சீன அரசு கணக்கற்ற சமூக ஆர்வலர்களை திடீரென பொலிஸ் மூலம் தூக்கிக் கொண்டு போய் ரகசிய இடங்களில் சிறை வைத்தது.
அப்படி சிறையில் 81 நாட்கள் அடைக்கப்பட்டார் வெய். ஜூன் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் வரி ஏய்ப்பு செய்தார் என குற்றம் சாட்டப்பட்டார்.இதையடுத்து அவருக்கு வரித் துறை அலுவலகம் அனுப்பிய நோட்டீசில் அவர் 24 லட்சம் டொலர் வரி பாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் இணையதளம், வங்கிகள் மூலம் அவருக்கு பணத்தை அனுப்பி வைத்தனர். பலர் அவரது வீட்டு வளாகத்தினுள் காகிதத்தால் செய்யப்பட்ட விமானம், படகு போன்றவற்றினுள் பணத்தை வைத்து எறிந்துள்ளனர்.
அவரது வீட்டில் உள்ளவர்கள் அப்படி தினசரி பல காகிதங்களை சேகரித்து அவற்றில் இருந்து பணத்தையும் சேகரித்து வருகின்றனர். இதுவரை 18 ஆயிரத்து 829 பேர், 8 லட்சத்து 30 ஆயிரம் டொலர் பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளனர்.பலர் அவருக்கு மொத்தமாக ஒரு தொகையை அனுப்புவதாகத் தெரிவித்த போது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மக்கள் மத்தியில் இருந்து தனக்கு ஆதரவு திரள வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15ம் திகதிக்குள் அவர் தனது வரிப் பணத்தைக் கட்டியாக வேண்டும். எனினும் அதுகுறித்து வெய் எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்களின் நிதியுதவி குறித்து அவர் கூறுகையில்,“இவை வெறும் பணம் அல்ல. நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கான மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகள். இதற்கு நான் உண்மையிலேயே பாக்கியம் செய்திருக்க வேண்டும். மக்களின் ஆதரவால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன்” என்றார்.
வெடிகுண்டு தாக்குதல்கள்: நைஜீரியாவில் உஷார் நிலை.
நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதையடுத்து நைஜீரியா முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள டமாடுரு நகரில் கடந்த 5ம் திகதி போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 150 பேர் பலியாயினர்.இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் அந்நாட்டில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அபுஜாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிக்கையில், அந்நகரில் உள்ள பிரபல ஹொட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். அதனால் குறிப்பிட்ட ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களை அமெரிக்க பயணிகள் தவிர்த்து விட வேண்டும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.இதையடுத்து நைஜீரியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அபுஜாவில் மட்டும் மசூதிகள், சர்ச்சுகள், ஹோட்டல்கள் என பல இடங்களில் 13 ஆயிரம் பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிதி பற்றாக்குறை: அமைச்சர்களின் சம்பளத்தை முடக்க பிரதமர் முடிவு.
நாட்டின் நிதி பற்றாக்குறை காரணமாக அதிபர் நிகோலஸ் சர்கோசி மற்றும் அவரின் அமைச்சர்களுக்கு சம்பளத்தை முடக்கப் போவதாக பிரான்ஸ் பிரதமர் பிரான்காய்ஸ் பிலான் அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் பிரான்ஸ் பாதித்துள்ளது. அதனால் அந்நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் அல்லது குறைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் நிதி பற்றாக்குறை 2016ம் ஆண்டு வாக்கில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை அதிபர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் நிறுத்தப்படும்.இதேபோன்று நாட்டின் நிதி நிலையை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்களில் தலைவர்கள் குறிப்பாக தொழிலதிபர்களும் மாதச் சம்பளம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் பிரான்காய்ஸ் பிலன் கேட்டுக்கொண்டார்.
யூரோ கடன் நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகும் அபாயம்.
யூரோ மண்டலத்தில் அடுத்ததாக கடன் நெருக்கடியில் சிக்கும் நாடாக இத்தாலி உருவாகியுள்ளது. அந்நாட்டின் கடன் பத்திரங்களுக்கான மதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது.
இதனால் இத்தாலியின் கடன் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வளர்ச்சி மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதி இன்றி அவதிப்படும் அபாயம் எழுந்திருக்கிறது.யூரோ மண்டலத்தில் அயர்லாந்து, போர்ச்சுகல், கிரீசை அடுத்து தற்போது இத்தாலியும் கடன் நெருக்கடி விளம்பில் நிற்கிறது.
அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் பொதுக் கடன் 120 சதவீதமாக உள்ளது. கிரீசில் இது 150 சதவீதத்தையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நிதிப் பற்றாக்குறையை கணிசமான அளவில் குறைப்பதற்கான இத்தாலியின் நடவடிக்கைகளை சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்) கண்காணிக்க வேண்டும் என சமீபத்தில் நடந்து முடிந்த ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் பேசிய இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கேட்டுக் கொண்டார்.
அதற்கு யாரும் செவிசாய்த்த அறிகுறி காணோம். இதற்கிடையில் இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி விலகப் போவதாகத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இன்று இத்தாலி பார்லிமென்ட்டில் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான மசோதா மீதான ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF