Sunday, November 13, 2011

இன்றைய செய்திகள்.

ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கடத்தும் மையமாக இலங்கை! தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கடத்தும் மையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என இலங்கையின் தேசயி அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை நேற்றுத் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்கள் கொழும்மையும் மாலைதீவின் தலைநகர் மாலேயையும் இடைத்தங்கல் நிலையங்களாக பயன்படுத்துவதாக அச்சபை தனது வருடாந்த அறிக்கையில் தெரிவிததுள்ளது.
கடந்த ஐந்து வருடகாலத்தில் பெருமளவான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பிறவுன் சுகர் அல்லது தென்மேற்காசியா ஹெரோயின் எனப்படும் ஒருவகை ஹேரோயின் அதிகமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்படுவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இக்காலப்பகுதியில் 58 வெளிநாட்டவர் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்களில் 25 பாகிஸ்தானியர், 6 இந்தியர், 6 மாலைதீவு நாட்டவர், 4 ஈரானியர் அடங்குவதுடன் ஏனையோர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.2010ம் ஆண்டில் மாத்திரம் 25 வெளிநாட்டவர் 55 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 3.978 கிலோகிராம் கோகேயின் எனப்படும் போதைப்பொருள் கடத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையர் ஒருவர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தியாவில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.2010ம் ஆண்டு மொத்தமாக 31,091பேர் போதைப்பொருள் கடத்திய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆளும் தரப்பினரின் பின்னால் இருந்தே பாதாள உலகக் கோஷ்டி செயற்படுகிறது! ஜோன் அமரதுங்க.
ஆளும் தரப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் இருந்தே பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்கள் செயற்படுகின்றனர். இவ்வாறு  நேற்று பாராளுமன்றத்தில் பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க குற்றஞ்சாட்டினார்.
யுத்தம் முடிந்துவிட்ட நிலையிலும் நாட்டில் தொடர்ந்தும் மனிதப் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துச் செல்கின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் பிரதமரிடம் கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே பதில் எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர தொடர்பிலான விசாரணை அறிக்கை இதுவரையிலும் வெளியிடப்படாமை அதிர்ச்சியளித்திருப்பதாகவும் "நாட்டில் யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் குற்றச்செயல்கள் மிக வேகமாக அதிகரித்து வருவதோடு அது சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தினூடாக பல்வேறு தருணங்களில் தான் அறிவித்துள்ளதாகவும் ஆனால் எதுவிதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.பாதாள உலகக் கோஷ்டிகளை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் பாதாள உலகத் தலைவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளின் பின்னால் மறைந்திருந்து செயற்படுகின்றனர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் - ஜனாதிபதி மகிந்த.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரேனும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவரையும் அரசாங்கம் பாதுகாக்காது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முதலில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமரின் கோரிக்கைக்கு அமைய அந்நாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் உள்ளகப் பிரச்சினை குறித்து வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்துவது நன்மை ஏற்படுத்தாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய வெளிநாட்டு விஜயத்தை ஜனாதிபதி விமர்சனம் செய்துள்ளார்.நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட இணையத் தளங்களை மீளவும் இயங்க அனுமதிப்பது குறித்து அரசாங்கம் கவனம்.
முடக்கப்பட்ட இணையத்தளங்களை மீளவும் இயங்க அனுமதிப்பது குறித்து அராசங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் இணைய தளங்களை மீளவும் இலங்கையில் பிரசுரம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் எதிராக சேறு பூசும் வகையில் சில இணையத்தளங்கள் இயங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.இதன் காரணமாகவே குறித்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சமாதான முயற்சிகளின் போது நோர்வேயிடம் மிலிந்த மொரகொட 60 மில்லியன் குரோனர்களை பெற்றுள்ளார்!
1997-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், நோர்வே இலங்கைக்கு 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதிகளில் மிலிந்த மொரகொடவின் நிதியம் மாத்திரம் நோர்வேயிடம் இருந்து 60 மில்லியன் நோர்வே குரோனர்களை பெற்றுள்ளது.இதனை நோர்வேயின் நோராட் என்ற முகவர் அமையம் வழங்கியதாக இலங்கையின் சமாதான முயற்சிகளில் தோல்வி தொடர்பில் நோர்வே அரசாங்கம் நேற்று வெளியிட்ட மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதிகள், இலங்கை அரசாங்கம், அரச சார்பற்ற அமைப்புகள், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த நிதிகளில் பெரும்பாலானவை இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புகள் மத்தியில் உரிய வகையில் பகிரப்பட்டதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகருமான மிலி;ந்த மொரகொடவின் அமைப்பு மற்றும் இந்திய ஹொரைசன்-சர்வேட்டிரா ஆகியவற்றுக்கு அதிக நிதிகள் வழங்கப்ப்ட்டுள்ளன. அதில் மிலிந்த மொரகொடவின் நிதியம் மாத்திரம் நோர்வேயிடம் இருந்து 60 மில்லியன் நோர்வே குரோனர்களை பெற்றுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகித்த மிலி;ந்த மொரகொட, பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிட்டமையை நோர்வேயின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு நோர்வேயின் அரசாங்கம் 300.000 மில்லியன் நோர்வே குரோனர்களையும், இலங்கை அரசாங்கத்துக்கு 70.000 குரோனர்களையும் வழங்கியுள்ளது

அதேபோன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்துக்கு 18.000 மில்லியன் குரோனர்களை நோர்வே வழங்கியதுடன், இலங்கையின் சர்வவோதயம் மற்றும் சேவா லங்கா அமைப்புகளுக்கும் அதே அளவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நோர்வேயின் மீளாய்வு அறிக்கை வெளியிடும் நிகழ்வில் உரையாற்ற்pய அவர் சமாதான முயற்சிகளின் போது குறிப்பிடத்தக்க இடைக்கால நோக்கங்கள் உரிய பயனை தந்ததாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகளின் தோல்வி குறித்த மீளாய்வு அறிக்கையை, Bergen இல் உள்ள சிஎம்ஐ எனப்படும் கிரிஸ்டியன் மிச்சலென் நிறுவனம் (Christian Michelen Institute) இலண்டனில் உள்ள SOAS  கற்கை நெறி நிறுவனம் என்பன தயாரித்துள்ளனஇந்தநிலையில் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு நோர்வே செல்வாக்கை பயன்படுததியிருக்கலாம் என்று இந்த நிறுவனங்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளன
பத்திரிக்கையாளர்களால் பார்வையிடப்பட்ட புக்குஷிமா அணுமின் நிலையம்.
ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்திற்குள், நேற்று முதன் முதலாக பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புக்குஷிமா அணுமின் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆறு உலைகளில், நான்கு பெரிதும் பாதிக்கப்பட்டன.இவற்றில் மூன்று உலைகளில் இருந்த எரிபொருட்கள் உருகிவிட்டன. பத்திரிகையாளர்கள் அவற்றை நேரில் பார்வையிட அனுமதி கேட்டபோது, கதிர்வீச்சு அதிகளவில் இருந்ததால் பாதுகாப்பு கருதி அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில் புக்குஷிமா அணுமின் உலைகளில் இருந்து வெளியான கதிர்வீச்சு குறைந்ததையடுத்து, கடந்த 11ம் திகதி சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு ஒன்றை, புக்குஷிமாவுக்கு ஜப்பான் அரசு அனுப்பி வைத்தது.பத்திரிகையாளர்களுடன் டோக்கியோ எலக்ட்ரிக் கம்பெனி அதிகாரிகளும் சென்றனர். இவர்கள் அனைவரும் ஒரு பஸ்சில் ஏறி, அனைத்து அணுமின் உலைகளையும் பார்வையிட்டனர். பாதுகாப்பு கருதி இவர்களுக்கு, உலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அணியும் பாதுகாப்பான உடைகள் தரப்பட்டன.
தாய்லாந்தின் புதிய பிரதமரானார் பெண் தொழிலதிபர்.
ஜனவரி 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு விழாவில், சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவத்ரா, 44, கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவின், கிழக்கு நாடுகள் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அவரது வருகை அமையும் எனக் கருதப்படுகிறது.
தாய்லாந்தின் சிக்கலான சூழல்களுக்கிடையில், அந்நாட்டின் அரசியலை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளார் யிங்லக் சினவத்ரா. இவர், முன்னாள் பிரதமர் தட்சிண் சினவத்ராவின் இளைய சகோதரி. தட்சிண் சினவ்தரா, இவருக்கு 18 வயது மூத்தவர். எஸ்.சி.அசட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், அட்வான்ஸ்டு இன்போ சர்வீசஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அதிபர்.
தாய்லாந்தில் துவக்கக் கல்வியை முடித்த யிங்லக், தனது அண்ணனைப் போல அமெரிக்காவின் கென்டகி மாகாண பல்கலைக் கழகத்தில், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். அதன் பின் நாடு திரும்பி, அண்ணனின் நிறுவனங்களில் நிர்வாக இயக்குனராக பணியாற்றத் துவங்கினார்.
கடந்த 2006ல் பிரதமராக இருந்த தட்சிண் சினவத்ராவின் ஊழல் ஆட்சி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 2006, செப்டம்பர் 19ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் தட்சிண் சினவத்ரா துபாய்க்கு தப்பியோடினார். பொதுத் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன் நடந்த இந்தப் புரட்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக, ஊழல், வாரிசு ஆதிக்கம், தனியார் நிறுவனங்களின் அரசியல் தலையீடு ஆகியவை முக்கியமாக சுட்டப்படுகின்றன. ராணுவப் புரட்சிக்குப் பின் 2007ல் நடந்த பொதுத் தேர்தலில், தட்சிண் சினவத்ராவின் மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் ஐந்து கட்சிக் கூட்டணி ஆட்சி அமைத்தது.
இக்கூட்டணியும் ஊழலில் சிக்கியதால், 2008ல், குடியரசுக் கட்சியின் தலைவரான அபிஜித் வெஜ்ஜாஜிவா பிரதமராகப் பொறுப்பேற்றார். தாய்லாந்தின் வரலாற்றில் இளைஞர் ஒருவர் பிரதமரானது அதுவே முதன் முறை. எனினும், நிலைத்த அரசியல் சூழல் அங்கு இடம் பெறவில்லை. ராணுவப் புரட்சியின் எதிர்ப்பாளர்களான, "சிவப்புச் சட்டைகள்' என்ற "சர்வாதிகாரத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி'யினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மக்கள் சக்தி கட்சியும், தட்சிண் சினவத்ராவின் தாய் ராக் கட்சியும், அரசியல் சாசன கோர்ட்டால் கலைக்கப்பட்டன. 2008, டிசம்பர் 3ம் தேதி, பினி தாய் கட்சி துவக்கப்பட்டது. பினி தாய் கட்சியின் தலைவராக, யிங்லக் தான் பொறுப்பேற்க வேண்டும் என எம்.பி.,க்கள் வலியுறுத்திய போது, தான் ஈடுபட்டுள்ள தொழிலையே தொடர விரும்புவதாக யிங்லக் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 2008ல் கட்சித் தலைவராக யோங்யுத் விச்சைதித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2009 செப்டம்பர் வரை, கட்சியின் முக்கிய நடவடிக்கைகளில் எதிலும் அதிக ஆர்வம் காட்டாத யிங்லக், நவம்பர் முதல் கட்சியில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். யிங்லக் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் காட்டவில்லை. அவரது இந்நிலைப்பாடு, 2011, ஜனவரி வரை தொடர்ந்தது. 
இந்நிலையில் இந்தாண்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. கடந்த மே 16ல் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், யிங்லக் தலைவராக வேண்டும் என ஓட்டளித்தனர். இதையடுத்து யிங்லக், பினி தாய் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த இரண்டாவது மாதம், அதாவது ஜூலை 3ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், அவரது கட்சி மொத்தமுள்ள 500 இடங்களில், 265 இடங்களைக் கைப்பற்றியது.
கடந்த 2005ல் தட்சிண் சினவத்ராவின், தாய் ராக் கட்சி பெற்ற வெற்றிக்குப் பின், இப்போது பினி தாய் கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்றிருக்கிறது. யிங்லக், தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். அரசியலில் முன் அனுபவம் எதுவும் இல்லாதது அவரது பெரும் குறையாகக் கருதப்படுகிறது. 2006க்குப் பின், நான்கு அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இனியாவது நிலையான ஆட்சி அமையுமா என்ற மக்களின் ஏக்கத்தை அவர் நிறைவேற்றி வைக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
தொழிலதிபராக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த யிங்லக், 80 நாட்களுக்குள் தாய்லாந்து அரசியலின் உச்சக்கட்டத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். அவரது பின்புலத்தில், அவரது அண்ணன் தட்சிண் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. துபாயில் இருந்து தட்சிண் ஆட்டி வைக்கும் பொம்மையாக யிங்லக் கருதப்படுகிறார். பிரதமர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தாய்லாந்தின் பெரும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளமும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களும் நிறைந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் யிங்லக் உள்ளார்.
தாய்லாந்தின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் முக்கிய இடம் உண்டு. அப்பட்டியலில் இப்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சீனாவுடன் கடல் எல்லைத் தகராறு கிடையாது. புதிய அரசின் கொள்கை என்ன என்பது இனிமேல் தான் தெரிய வரும். தாய்லாந்து அரசியல் நிபுணர்கள், யிங்லக்கின் அரசியல் பிரவேசத்தை வாரிசு அரசியலாகவே கருதுகின்றனர். தெற்காசிய நாடுகளின் அரசியலில், ஆண், பெண் அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலில் இருப்பதாலேயே தாங்களும் அரசியலுக்கு வருகின்றனர். தனது குடும்பத் தேவைக்காகவே யிங்லக்கும் அரசியலுக்கு வந்திருக்கிறார்' என்பது அவர்கள் வாதம்.
சீனாவில் இணையத்தை ஆதாரமாக காட்சி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட தடை.
இணையம், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.சீனாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அரசுக்கு எதிராக பல செய்திகள் இடம்பெறுவது குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீன சுரங்கத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்று சமீபத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்ற செய்திகள், இணையம், டுவிட்டர் போன்றவற்றில் வந்த செய்திகளை ஆதாரமாக காட்டி பத்திரிகைகளில் வெளிவருவது தெரிந்தது. அந்த செய்திகளில் உண்மை தன்மை இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து இணையம், டுவிட்டரில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராயாமல் அவற்றை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடக் கூடாது என்று சீன தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் சர்ச்சைக்குரிய செய்திகளை சேகரிக்கும் போது, பேட்டிகளையும் அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும். தவறான செய்திகளுக்கு மன்னிப்பும், சரியான செய்திகளையும் உடனே பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மதிக்காத மீடியாக்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தவறான செய்திகளால் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் சமூக, பொருளாதாரமும் கெடுகிறது என்றனர்.ஏற்கனவே ஆயிரக்கணக்கான இணையதளங்களை சீன அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தைவானில் பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை.
வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்க தைவான் அரசு முடிவு செய்துள்ளது.தைவானில் வயதான பெற்றோரை கவனிக்காமல் மகன் அல்லது மகள்கள் கைவிடுவதாக ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆண்டுதோறும் 65 வயதுக்கு அதிகமான 2,000க்கும் மேற்பட்ட பெற்றோர் தைவானில் கைவிடப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.வயதான பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பெற்றோரை கவனிக்காமல் ஒதுக்கும் மகன் அல்லது மகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோரின் மாத செலவுக்கு சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்குவது அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் பெற்றோரின் பராமரிப்புக்கு ஒரு பெருந்தொகை வைப்பு நிதியாக வழங்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லாய் ஷிபோ தெரிவித்தார்.
லிபியாவில் அத்து மீறி செயல்பட்ட நேட்டோ படைகள்: விசாரணைக்கு உத்தரவு.
லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபியை எதிர்த்து புரட்சிப் படையினர் சண்டையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய நேட்டோ படைகள் அத்துமீறி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. லிபியாவில் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர் கடாபி.
அவருக்கு எதிராக உள்நாட்டில் புரட்சி வெடித்தது. புரட்சி படையினருக்கு ஆதரவாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளை சேர்ந்த நேட்டோ படைகளும் சண்டையில் ஈடுபட்டன.கடாபி ராணுவத்துக்கும், புரட்சி படை-நேட்டோ படைகளுக்கும் கடும் மோதல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நேட்டோ படையினரின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும் நேட்டோ வீரர்கள் அத்துமீறி லிபியாவில் செயல்பட்டுள்ளதாக பல நாடுகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் நேட்டோ படை வீரர்களின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் நேட்டோவில் இடம்பெற்ற வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்படிதான் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நேட்டோ படையினர் லிபியாவில் செயல்பட்டனர் என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் படைவீரர்கள் தினம் அனுசரிப்பு.
நவம்பர் பதினோறாம் நாளன்று உலகமெங்கும் உலகப்போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.கனடாவில் ஆப்கானிஸ்தான் போரில் இறந்த வீரர்களுக்கும் இந்நினைவு நாளில் நினைவிடங்களில் பாப்பி மலர்களை வைத்து மரியாதை செலுத்தினர்.
ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், தளபதி டேவிட் ஜான்ஸ்டனும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இக்கூட்டத்தில் “ஓ கனடா” என்ற பாடல் இசைக்கப்பட்டது. அடுத்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்பு தலைவர்கள் பேசினர். தம் நண்பர்களுக்காக உயிர் நீப்பதை விடச் சிறந்த தியாகம் எதுவும் இல்லை என்று தேவாலயத் தலைவர் வீரர்களின் தியாகத்தைப் பாராட்டினர்.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டுமக்கள் சிறப்பான எதிர்காலத்தைப் பெற கனடாவின் படைவீரர்கள் தம் இன்னுயிரை ஈந்து தலிபான்களுடன் போரிட்டனர். இன்று ஆப்கானிஸ்தான் சிறப்பான நிலையில் இருப்பதற்கு கனடா வீரர்களும் காரணம் என்று பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்தார்.இறந்து போன 155 வீரர்களின் பெயர்களையும் வாசித்தார். அவர்களின் நினைவாக 155 மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.
ஆப்கானிஸ்தானில் இப்போது தங்கியிருக்கும் வீரர்களில் ஆயிரம் பேர் இந்த ஆண்டின் இறுதியில் தாய்நாடு திரும்பிவிடுவர். 900 பேர் மட்டும் அங்கேயே தங்கியிருந்து ஆப்கன் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பர் என்று தகவலையும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.உலகப்போர்களில் ஈடுபட்ட வீரர்களின் வீரத்துக்கும் ஆப்கானிஸ்தானில் தற்பொழுது போர்ப்பயிற்சி அளித்து வரும் வீரர்களின் வீரத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று கனடா பிரதமர் கூறினார்.
ஒட்டாவா கூட்டத்தைப் போல கனடா முழுவதும் பல்வேறு நினைவிடங்களில் நினைவுநாள் கூட்டம் நடந்தது. போர் தவிர புயல் மீட்புப் பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கும் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.ஹேரிபேக்ஸ் என்ற இடத்தில் சீயன் புயல் ஏற்படுத்திய சேதத்திலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றிய அரும்பணியில் தம் இன்னுயிர் நீத்த இளம் வீரர்களின் தியாகம் நினைவு கூறப்பட்டது.
வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கி சூடு.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகைக்கு அருகில் அமெரிக்க நேரப்படி இரவு 9.40 மணிக்கு திடீரென மர்ம ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்கு கமாண்டோக்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அனாதையாக ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கி இருந்தது. அவற்றை வீரர்கள் கைப்பற்றினர். அத்துடன் மர்ம நபர்கள் வெள்ளை மாளிகையின் மேற்கு பக்கம் நோக்கி 2 வாகனங்களில் வேகமாக சென்றதையும் கவனித்துள்ளனர்.ஆனால் வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை அருகே உள்ள சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகப்படும் ஆசாமி கடைசியாக வாஷிங்டனில் உள்ள ரூஸ்வெல்ட் பாலத்தின் மீது வாகனத்தில் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் நடத்தி வருகிறோம்.துப்பாக்கிச் சூடு நடந்த போது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா இல்லை. அவர் ஹவாய் தீவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஜேர்மனியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: புதிய நாஜி படையினருடன் தொடர்பு.
ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக புதிய நாஜிப் படையினர் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.இறைச்சிப் பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு வந்து குண்டுகளை வெடிக்கச் செய்தும், கொள்ளையடித்தும், சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் கொலை செய்தும் திரும்பியுள்ளனர்.
பொலிஸாரைத் தாக்கி அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை திருடியுள்ளனர். சிதைந்து போன கட்டங்களில் புதைந்து கிடக்கும் துப்பாக்கிகளையும் திருடியுள்ளனர்.இந்தச் சம்பவங்கள் 2000 முதல் 2006 வரை ஆறு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இறந்து போன ஒன்பது பேரில் எட்டுப்பேர் துருக்கியப் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் மட்டும் கிரேக்கர். பட்டப்பகலில் இக்கொலைகளை நியூரெம்பெர்க் முதல் ரோஸ்டோக் நகரம் வரை உள்ள இறைச்சித் திண்பண்டக் கடைகளில் செய்துள்ளனர்.
இத்தனை கொலைகளுக்கும் இடையிலான நூலிழைத் தொடர்பாக இருப்பது சைலன்சர் பொருத்தப்பட்ட செக் நாட்டுப் பிஸ்டல் ஒன்று தான். இந்த வாரம் இந்தத் துப்பாக்கி சிவிகாவு அடுக்குமாடி வீடுகளின் அருகே கிடந்தது. இதன் பக்கத்தில் வேறு ஐந்து கைத்துப்பாக்கிகளும் ஒரு இயந்திரத் துப்பாக்கியும் இருந்தன.
1998 ஜனவரி மாதம் தூரிங்கா ஹிமாத்ஷுஸ் நடத்திய குழாய் வெடிகுண்டு ஒன்றின் போது இது பிடிபட்டது. அந்தக் குழுவினரிடம் நடத்திய விசாரணையில் தான் நியோ நாஜிப் படையினர் இக்குழுவினருடன் இணைந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தக் கொலைகளை மூவர் செய்துவருவதாக ஜேர்மன் காவல் துறையினர் கருதுகின்றனர். அதில் இருவர் ஆண்கள் ஒருவர் பெண் ஆவர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF