Tuesday, November 29, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சவூதியில் பலவந்தமாக ஆணி ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவருக்கு ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில், சவூதி அரேபிய டமாம் மத்திய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவரின் உடலில் உள்ள ஏழு ஆணிகள் தற்போது சத்திர சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரப் நிவ்ஸ் செய்திதாள் தகவல் வெளியிட்டுள்ளது. இவருடைய உடலில் இருந்து ஏழு ஆணிகள் வந்தமாக ஏற்றப்பட்டுள்ளதாக அரப் நிவ்ஸ் செய்திதாள் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 22 வயதான பாலசுப்ரமணியம் சசிக்கலா என்பவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அவற்றை ஏற்றியவர்கள் யார் என்பது குறித்து தம்மால் குறிப்பிடமுடியாமல் உள்ளதாகவும் தெரிவித்ததாக அரப் நிவ்ஸ் செய்திதாள் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுப்பணிகளில் படையினரின் ஈடுபாடு இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகும்! மக்கள் புரட்சி வெடிக்கவும் வாய்ப்புள்ளது! ஐ.தே.க.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையிலேயே இராணுவத்தினரை வீதியில் இறக்க வேண்டும். எனினும் அவ்வாறான நிலை இல்லாதபோதிலும் பொதுப்பணிகளுக்கென படையினரை ஈடுபடுத்தியிருப்பது இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார்.
ஒரு நாட்டில் சட்ட ஆட்சி வீழ்ச்சியடையும்போது மக்கள் புரட்சி வெடிக்கும். வெளிநாடுகளில் இது இடம்பெற்றிருக்கின்றது. இத்தகைய நிலை இலங்கையிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே ஜோசப் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ரூபா பெறுமதி குறைக்கப்பட்டிருப்பதால் எரிபொருளின் விலை அதிகரிக்கும். இதுதான் உண்மை நிலையாகும். எரிபொருள் விலை அதிகரிக்கும்போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். எனவே எந்த விதத்தில் பார்த்தாலும் பொதுமக்கள் மீதே சுமைகள் சுமத்தப்படுகின்றன.
இவ்வாறு பொது மக்களின் தலைகளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டுத் தான் வரவு செலவுத் திட்டத்தில் சிறப்புக்கள், நிவாரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி உண்மைகளை மூடிமறைக்க முயற்சிக்கப்படுகின்றது.இது போன்று தான் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு விடயம் அமைந்திருக்கின்றது. மேலும் படையினன் மற்றும் பொலிஸானது மூன்றாவது பிள்ளைக்கு ஒரு இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்படும் என்று அவர்களை அரசு ஏமாற்றியிருக்கின்றது.
இன்று இராணுவத்தினர் வீதியில் இறக்கப்பட்டுள்ளனர். அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தால் தான் இராணுவத்தினரை வீதிகளில் இறக்க முடியும். ஆனால் இன்று அவசரகாலச் சட்டம் இல்லை. அதற்கான தேவையும் எழுந்திருக்கவில்லை. இருப்பினும் படையினரை பயன்படுத்தி வீதி வேலைகள், துப்புரவு வேலைகள், மரக்கறி வியாபாரம் ஆகியவற்றை அரசாங்கம் மேற்கொள்வது பொருத்தமற்றதாகும்.
வெளிநாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அது இங்கும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. சட்ட ஆதிக்கம் சீர்குலையும் பட்சத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும். இன்று சட்டம் முறையாக செயற்படுவதில்லை. இராணுவம் பொலிஸாரும் சொந்த தேவையின் நிமித்தம் பயன்படுத்தப்படுகின்றனர். எனவேதான் பொலிஸார் மீதும் நாட்டின் சட்டத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.
பாரத லக்ஷ்மனின் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தமது கடமையில் இருந்து தவறியிருக்கின்றனர். பொலிஸார் தமது கடமையை செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.  மக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையிழப்பதற்கு பாரத லக்ஷ்மனின் கொலைச் சம்பவம் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் நல்ல உதாரணங்களாகும்.
இந்த கொலையுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்புபட்டிருக்கின்றார். எனினும் அவர் வெளிநாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் குறித்து எமது உறுப்பினர் இந்த சபையில் கேள்வியெழுப்பிய போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று ஆளும் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.அத்துடன் நீதிமன்றம் குறித்த எம்.பி. யை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது. எனினும் பொலிஸார் தமது கடமையை நிறைவேற்ற முடியாது காணப்படுகின்றனர் என்றார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பாரிய தீ விபத்து.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இன்று பாரிய தீவிபத்து ஒன்று எற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ள இத்த விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு கரிததுண்டுகளை எடுத்துச் செல்லும் குழாயிலே மேற்படி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தினால் இதுவரை எவருக்கும் ஆபத்து இல்லை எனவும் அனல் மின்நிலையத்தின் சேத விபரங்கள் குறித்து எதுவும் கூறமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திகள் அனைத்தும் தற்சமயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில மணிநேரத்தில் நிலைமை வழமைக்கு திரம்பிவிடும் எனவும் இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவின் வைத்தியசாலை கட்டில் பதிவேடு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வைத்தியசாலை கட்டில் பதிவேடு புலனாய்வுப்பிரிவினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நரம்பியல் வைத்திய நிபுணர் மகேஷி விஜேரட்னவினால் இந்தஅறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 
நீதவான் பிரசன்ன அல்விஸினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கு தொடர்பான விசாரணைகளில் தமது கட்சிக்காரர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் எனவும் சந்தேக நபர் அல்ல எனவும் துமிந்த சில்வாவின் சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 
பாரதவின் ஆதரவாளர்கள் அளித்த சாட்சியங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கட்டில் பதிவேட்டு அறிக்கையை துமிந்தவின் சட்டத்தரணிக்கு வழங்கக் கூடாது என பாரதவின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சபையில் குழப்பம் விளைவித்த பிரதியமைச்சருக்கு பாராளுமன்றம் செல்லத் தடை.
2012 வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பின் போது பாராளுமன்றில் குழப்பம் விளைவித்த பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தன ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு சபாநாயகர் தடை விதித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதியினால் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.அன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து வருத்தமடைவதாகவும் சபாநாயகர் சாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவைக் கைது செய்வோம் - குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையின் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாட்டில் இல்லாதததால் அவரை கைது செய்ய முடியவில்லை எனவும் அவர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இரகசிய பொலிஸார் இன்று  நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
துமிந்த சில்வாவின் உடல் நலத் தகுதி குறித்து ஆராய்ந்து வருவதாக இரகசிய பொலிஸார் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பதில் பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர தெரிவித்துள்ளார். மேலும் துமிந்த சில்வாவை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் நாடு திரும்பியதும் சட்ட மா அதிபரின் ஆலோசனைபடி நீதிமன்றின் உத்தரவு செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை மீறிச்செயற்பட்டேன்- போக்குவரத்து அமைச்சர்.
தெற்கு அதிவேக பெருந்தெரு அங்குரார்ப்பணம் செய்ததன் பின்னர் மணித்தியாலத்திற்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தியதாக அமைச்சர்   தெரிவிர்துள்ளார்.
நெடுஞ்சாலை திறப்பு விழாவின் பின்னர் கொழும்பு திரும்பிய போது தாம் இவ்வாறு 180 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம ஒப்புக் கொண்டுள்ளார். எனினும்,அதிவேக பெருந்தெருவின் அதிகபட்ச வேகம் 100 கிலோ மீற்றர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் என்ற அதிக பட்ச வேகத்தில் பயணம் செய்ய முடியும் என வீதியின் பராமரிப்பு முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். 
குறிப்பிட்ட வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பயணம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை,அதிக வேகத்தில் பயணம் செய்வோரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட ரக மோட்டார் கார்களை இறக்குமதி செய்துள்ளதுடன் விசேட காவல்பிரிவு ஒன்றையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நேட்டோ படைத் தாக்குதல்: சீனா கடும் கண்டனம்.
பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது நேட்டோ படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல் குறித்து பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர், சீன வெளிவிவகாரத் துறையுடன் உரையாடினார்.இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும். நேட்டோ படைகளின் அத்துமீறல் குறித்து உண்மையான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், நேட்டோ படைகள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது. பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷா முகமது குரேஷி சமீபத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலிருந்து விலகி முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து சிந்து மாகாணம் கோட்கி நகரில் நடந்த தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியின் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது முகமது குரேஷி பேசியதாவது: பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் ஆட்சியில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
அவரது அமைச்சரவையில் நான் அமைச்சராக பணியாற்றியுள்ள காரணத்தினால், எனக்கு இது குறித்து மிக நன்றாகவே தெரியும் என்றார்.ஆனால் இதை பாகிஸ்தான் அரசு கடுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து வெளிவிவகார செய்தி தொடர்பாளர் தெக்மினா சஞ்ஜுயா கூறுகையில், குரேஷியின் கருத்து ஆதாரமற்றது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இந்த விடயத்தில் அரசு மிகவும் கண்டிப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பொருளாதார வீழச்சி: கருத்துக்கணிப்பில் தகவல்.
பிரிட்டனின் பொருளாதார நிலை குறித்து அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களிடம் நாட்டின் பொருளாதார நம்பிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இப்ஸோஸ் மோரி என்ற நிறுவனம் பிரிட்டன் மக்களிடம் அந்நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் 20ம் திகதி வரை 18,682 பேரிடம் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.இதில்  11 சதவீத பொதுமக்கள் மட்டுமே பிரிட்டனின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் தங்கள் நாட்டு பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றே கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேபோல் இத்தாலி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 8 சதவீதம் பேரும், பிரான்சில் 6 சதவீதம் பேரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.பொருளாதார நம்பிக்கை மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதலில் சவுதி அரேபியாவும், இரண்டாவதாக இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் முதற்கட்ட பொதுத் தேர்தல்: அதிகபட்ச ஓட்டுப்பதிவு.
எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் நேற்று(28.11.2011) முதன் முறையாக நாடாளுமன்றத்திற்கான முதற்கட்ட பொதுத் தேர்தல் துவங்கியது.தேர்தல் நடந்த இடங்களில் அதிகபட்ச வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். எகிப்தில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய மக்கள் புரட்சி, பெப்ரவரி மாதம் 18 நாட்கள் நடந்தது.
பெப்ரவரி மாதம் 11ம் திகதி அப்போதைய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் சினாய் தீபகற்பத்திற்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார். தொடர்ந்து ராணுவ உயர்மட்டக் கவுன்சில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தது. ஆனால் பல காரணங்களைச் சொல்லி இழுத்தடித்தது. இறுதியில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் ராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த வாரம் முழுவதும் மக்கள் எகிப்தில் தலைகநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் நடக்க சில நாட்களே உள்ள நிலையில் நிகழ்ந்த இந்தப் போராட்டம் எகிப்தில் மீண்டும் குழப்பம் நேரிடுமோ என்ற கவலையை ஏற்படுத்தியது.
எனினும் திட்டமிட்டபடி நேற்று பாராளுமன்ற முதற்கட்ட தேர்தல் துவங்கியது. எகிப்தின் 27 மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் இத்தேர்தல் நடந்தது. காலை முதலே மக்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களிக்கத் துவங்கினர்.
நிர்வாகக் கோளாறால் வாக்கெடுப்பு சற்று தாமதமாகத் துவங்கியது என்றாலும் பல பகுதிகளில் அதிகபட்ச சதவீதத்தில் வாக்குகள் பதிவாகின.ஒரு வாக்காளர் மூன்று வாக்குகள் அளிக்க வேண்டும் என்பதால், வாக்களிப்பதில் பல சிக்கல்கள் தோன்றின. இதுகுறித்து மக்கள் பல இடங்களில் புகார் தெரிவித்தனர். மேலும் தேர்தல் தொகுதிகள் பிரிப்பும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 14ம் திகதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அடுத்தாண்டு ஜனவரி 3ம் திகதியும் நடக்க உள்ளன.நாடாளுமன்றத்தின் கீழவையில் மொத்தமுள்ள 508 இடங்களுக்கு இத்தேர்தல் நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்தாண்டு ஜனவரி 10 வரை நடக்கும் இத்தேர்தலின் இறுதி முடிவுகள், அதே மாதம் 13ம் திகதி வெளியிடப்படும்.
இதையடுத்து 270 உறுப்பினர்கள் கொண்ட மேலவை எனப்படும் ஷூரா அவை தேர்தல் அடுத்தாண்டு ஜனவரி 29ம் திகதி துவங்கி மார்ச் மாதம் வரை நடக்கும். தொடர்ந்து அடுத்தாண்டின் மத்தியில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அமையும் அரசு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள எட்டரை கோடி மக்கள் தொகையில், ஐந்து கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதற்கிடையில் தாரிர் சதுக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும்படியும், ராணுவ ஆட்சி உடனடியாக பதவி விலகக் கோரியும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் பலி.
ஈராக்கில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் நகரிலிருந்து வடக்கே 20 கி.மீ தொலைவில் தாஜி நகரில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இங்குள்ள சிறையில் போர் கைதிகள், அல்கொய்தா பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று ஒரு மினி பேருந்து ஒன்றில் பயங்கர வெடிபொருட்களுடன் வந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்தினான். இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியானவர்களில் 11 பேர் சிறை காவலர்கள் எனவும், 4 பேர் சிறைக்கைதிகளை பார்க்க வந்த பொதுமக்கள் எனவும் பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.
ஈராக்கில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் ஆட்சி வீழ்ந்த பிறகு கடந்த பத்து ஆண்டுகளாகவே அமெரிக்க படைகள் முகாமிட்டு வந்தனர்.தற்போது படிப்படியாக விலகிக் கொண்ட போதிலும் பயங்கரவாத தாக்குதல்கள் குறையவில்லை. கடந்த அக்டோபர் மாதம் வரையில் இதுவரை 161 பாதுகாப்புப்படையினர் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு: குவைத் நாட்டில் நாடாளுமன்றம் கலைப்பு.
குவைத் நாட்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.வளைகுடா நாடான குவைத் நாட்டின் பிரதமராக ஷேக்-நஸீர் முகமது அல்- அகமது ஷபா(71) உள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் பிரதமர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் ஊழல் மூலம் அரசுப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்து நேற்று(28.11.2011)மாபெரும் பேரணி நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை சமாளிக்க மன்னர் ஷேக்-ஷபா அல்-அகமது அல்-ஷபா உயரதிகாரிகளின் அவசரக்கூட்டதை கூட்டினார். பின்னர் பிரதமர் பதவியிலிருந்து நஸீர் முகமது உடனடியாக விலமாறும், பின்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யுமாறும் நாடாளுமன்றத்தை கலைக்குமாறும் உத்தரவிட்டார்.இதனை முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். பொதுத்தேர்தல் நடக்கும் வரை நாடாளுமன்றம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
நேட்டோ தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும்: பென்டகன்.
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் நடத்திய வான் தாக்குதல்கள் உலக அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 26ம் திகதி அதிகாலை பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.
இச்சம்பவம் ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜியார்ஜ் லிட்டில் கூறுகையில், நேட்டோ படை தாக்குதல் குறித்து விரிவான விசார‌ணை நடத்தப்படும்.தற்போதுள்ள சிக்கலான நிலையில் பாகிஸ்தான்- அமெரிக்க உறவுகள் குறித்து நான் கருத்து ‌சொல்ல விரும்பவில்லை. அமெரிக்காவின் மத்திய படைபிரிவு தலைவர் தலைமையிலான குழு விரிவான விசாரணை நடத்தும் என்றார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு.
தேர்தலை புறக்கணிக்கக்கோரிய ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த ஜனநாயக ஆதரவாளர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அகமது மன்சூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் ஐக்கிய அரபு எமிரேட் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை விமர்சித்தும், வளைகுடா தலைவர்களை கண்டித்தும், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலை புறக்கணிக்கக் கோரியும் வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் உச்ச நீதிமன்றம் அகமது மன்சூருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் அவரது ஆதரவாளர்களுக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கி, இவர்கள் மேல்முறையீடு செய்யவும் தடை விதித்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் 40-வது தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதை ‌முன்னிட்டு தண்டனை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி ஷேக் கலிபா பின்-ஜியாத் அல்நெஹ்யான் பொதுமன்னிப்பு வழங்கினார்.இத்தகவலை அரசு வழக்கறிஞர்கள் உறுதி செய்தனர். இதை‌யடுத்து அவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலையாகி விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக தண்டனை பெற்றவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் துப்பாக்கி சூடு: 23 பேர் பலி.
சிரியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாயினர்.சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக கூறி அராப் லீக் சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(28.11.2011) நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதில் 2 குழந்தைகள் உட்பட 23 பேர் இறந்தனர். மேலும் சிலரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.போராட்டத்தின் போது இடையில் புகுந்த தீவிரவாதிகள் சுட்டதில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா - அமெரிக்கா எல்லைப்பகுதியில் புதிய பரிசோதனைத் திட்டம்.
கனடா தனது எல்லைப்பகுதியில் புதிய கட்டுப்பாட்டுகளை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.இந்த கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின் கடல், வான், தரை வழியாக வரும் எந்தப் பயணியும் அமெரிக்காவைச் சேர்ந்த எல்லைக் காவல் படையினரால் சோதனை செய்யப்பட்ட பின்பு தான் கனடாவின் எல்லைப்பகுதியைக் கடக்க முடியும். இதற்காக 32 அம்ச எல்லைக் காவல் திட்டம் தயாராகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அடுத்தவாரம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெரும் கையெழுத்திடவுள்ளனர்.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்டு, கனடாவைச் சேர்ந்த எந்த நபரும் அமெரிக்கா போக வேண்டும் என்றால், வீட்டு முகவரி, பிறந்த நாள், கடவுச் சீட்டு விபரம், பயண விபரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.இந்த 32 அம்சத் திட்டம் எல்லைச் சோதனை தவிர வேறு சில அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலில் மூழ்கிய மாலுமிகளை இளவரசர் வில்லியம் காப்பாற்றினார்.
கடலில் மூழ்கிய கப்பலில் உயிருக்குப் போராடிய இரண்டு மாலுமிகளை இளவரசர் வில்லியம் காப்பாற்றிக் கரை சேர்த்தார்.ராயல் ஏர் ஃபோர்ஸ் என்ற விமானப்படையில் பயிற்சி பெறும் பிரிட்டன் இளவரசர் இரண்டாவது முறையாக இருவரைக் காப்பாற்றியுள்ளார். இவரும் இன்னும் மூவரும் இணைந்த மீட்புக் குழு ஹெலிகொப்டரில் பறந்து சென்று பெரிய அலையில் சிக்கியதால் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து இருவரைக் காப்பாற்றினார்.
ஸ்வான்லாந்து என்ற இந்தக் கப்பல் 81 மீற்றர் நீளமுடையது. 3000 டன் சுண்ணாம்புக் கல்லை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள லாண்டுல்ஸ் துறைமுகத்திலிருந்து வைட் தீவில் உள்ள கோவெஸ் துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் வேல்ஸ் கடற்கரைக்கு அப்பால் பத்து கிலோ மீற்றர் தொலைவில் அலைக்கழிக்கப்பட்டது.ஹெலிகொப்டர்களும் உயிர்காக்கும் படகுகளும் அந்தக் கடல்பகுதியில் சுமார் 300 சதுர மைல் பரப்பில் சுற்றி வந்து, மூழ்கிய எட்டு ரஷ்ய மாலுமிகளைத் தேடியது. ஒருவரில் உடல் மட்டும் கிடைத்தது. இருள் சூழ்ந்துவிட்டதால் எஞ்சிய ஐந்து பேரைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் இதுபற்றிக் குறிப்பிடும் போது, வில்லியம் அங்கிருந்த இராணுவ விமானத்தில் துணை விமானி என்ற பொறுப்பிலிருந்து தேடினார். இப்போது மீட்புப்பணி முடிந்து விமானப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டார் என்றார்.மேலும் இதற்கு முதல் நாள் மாலை குளிரில் விரைத்துப் போன ஒரு பெண்ணை இளவரசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். அந்தப் பெண் கடலில் நீந்திய வேளையில் உள்ளே மூழ்கி நிறைய தண்ணீரை குடித்து விட்டாள். அவரை உயிர்காக்கும் படகில் கரைக்குக் கொண்டுவந்து பின்பு இளவரசர் தம் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் என்றார்.
பாகிஸ்தான் மாஜி வெளிவிவகாரத்துறை அமைச்சர் இம்ரான் கான் கட்சியில் இணைந்தார்.
பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை முன்னாள் அமைச்சர் ஷா மமூத் குரேஷி, இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சியில் இணைந்ததால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் 2013ம் ஆண்டு சுதந்திரமான வெளிப்படையான பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் யூசுப் ரசா கிலானி அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் வெளிவிவகாரத்துறை முன்னாள் அமைச்சர் குரேஷி, இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சியில் நேற்று இணைந்தார். இதனால் இம்ரான் கான் கட்சிக்கு பலம் கூடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சமீபத்தில் குரேஷி விலகினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.அதன்பின் கட்சி தலைவரும், பாகிஸ்தான் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி மற்றும் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.சிந்து மாகாணத்தில் செல்வாக்கு மிக்க குரேஷி, கோட்கி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேற்று பேசினார். இதில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது குரேஷி பேசுகையில், இம்ரான் கான் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன். பாகிஸ்தானில் ஊழல் பெருகிவிட்டது, நிர்வாகம் உருப்படியாக நடக்கவில்லை. விலைவாசி உயர்ந்துவிட்டது. ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானியை பதவியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF