Tuesday, November 8, 2011

இன்றைய செய்திகள்.

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்த தீர்மானம்.
நாட்டிலுள்ள சகல முச்சக்கர வண்டிகளிலும் கட்டண  மானிகளை பொருத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தமது விருப்பத்திற்கு ஏற்றவகையில் கட்டணங்களை அறவிடுவதன் காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரத்தில் கட்டண மானிகளை பொருத்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகளில் பயணத்தை ஆரம்பிக்கும் போதே கட்டணத்தை பேசிக்கொள்ள வேண்டுமென பயணிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்கள் இதுவரையில் உயர்த்தப்படவில்லை என சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளுடனான போருக்கு ஐ.தே. கட்சி ஆதரவு வழங்கவில்லை! கோத்தபாய குற்றச்சாட்டு.
விடுதலைப்புலிகளுடனான போருக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ச தெரிவித்தார்.
நோர்வேயின் நடுநிலையான போர்நிறுத்த உடன்பாட்டையும் போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐ.தே.க. தலைவர், இராணுவ மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்­ச அரசாங்கம் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொது மக்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த கருத்து தொடர்பாக பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போரு க்கு பிந்திய அபிவிருத்தி திட்டங்கள், விருத்தியடைந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகள், தீவிரவாத தாக்குதல் அச்சமின்றி வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் கண்களுக்கு தெரியவில்லை.
பிரதான எதிர்க்கட்சியாக ஐ.தே.க இருந்தாலும் போருக்கு ஆதரவு வழங்கவில்லை. இராணுவ வழிமுறையின் மூலம் விடுதலைப் புலிகளை மண்டியிடச் செய்ய முடியும் என்று ஐ.தே.க. நம்பவில்லை.
நான்காவது கட்ட ஈழப் போர் நடந்த காலத்திலோ அல்லது போருக்கு பின்னரோ இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐ.தே.கவினாலோ அல்லது அவராலோ வெளியிடப்பட்ட எந்தவொரு அறிக்கையாவது ரணில் விக்கிரமசிங்கவினால் காட்ட முடியுமா?தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் பொறுப்புக் கூறும் விவகா ரம் தொடர்பாக ஐ.தே.கவின் நிலைப் பாட்டை வெளி ப் படுத்த முடியுமா?
ஐ.தே.கவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் தமது மரபுவழி போர்ப்பலத்தை அதிகரித்துக் கொண்ட விபரங்கள் வெளியாகிவிடும் என்று ரணில் விக்கிரமசிங்க அச்சம் கொண்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கப்பல் கப்பலாக புலிகள் ஆயுதங்களையும், வெடி பொருட்களையும், கருவிகளையும் கொண்டு வந்து இறக்கிய போது ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆலோசகர்களும் எங்கே போயினர்? இராணுவ விவகாரங்களில் ஐ.தே.கவின் வழிகாட்டல் போன்று முட்டாள்தனமாக நாம் இருக்கமுடியாது.
நந்திக் கடலோரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை முடித்துவிட்டோம். 12 ஆயிரம் புலிகளை கைது செய்தோம்.பெருந் தொகையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், கருவிகளைக் கைப்பற்றினோம்.
பிரபாகரனுக்கு பின்னர் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனைக் கைது செய்து புலிகளின் ஒரு கப்பலையும் கைப்பற்றியுள்ளோம். நாம் இவற்றையெல்லாம் சாதித்துள்ள நிலையிலும் அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புலிகளின் பின்னால் நிற்கின்றது.
போருக்கு ஆதரவளிக்காத ரணில் விக்கிரமசிங்கவும், அவரது கட்சியும் எப்போதும் எமது முயற்சிகளைக் குறைத்தே மதிப்பிடுகின்றனர். கேலி செய்கின்றனர். 1990ல் இரண்டாவது ஈழப் போர் தொடங்குவதற்கு முன்னர் ஐ.தே.க நிர்வாகத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிதி குறித்து அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புலிகளின் வானொலிக்கான கருவிகளுக்கு செலுத்தப்பட்ட சுங்கத் தீர்வை உள்ளிட்ட சில பரிமற்றங்கள் குறித்த ஆவண சாட்சியங்கள் அரசாங்கத்திடம் உள்ளன.போரின் போது நடந்து கொண்ட விதம் காரணமாக பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறும் உரிமையை ஐ.தே.க. இழந்து விட்டது என்றும் கோத்தபாய ராஜபக்ச­ கூறியுள்ளார்.
60 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன - ஐ.தே.க குற்றச்சாட்டு.
60க்கும் மேற்பட்ட அரச மற்றும் அரசத்துறையின் பங்கைகொண்ட நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கும் போது இலாபத்தில் இயங்கும் தனியார் வர்த்தகங்களை அரசாங்கம் கையேற்பது ஜனநாயக விரோத செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.60க்கும் மேற்பட்ட இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்பதை விட நட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பெற்றோலிய கூட்டுத்தானம், துறைமுகம் மின்சாரசபை என்பவற்றை கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில் அரசாங்கம் தமது அரசியல் நலன் மற்றும் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி மக்கள் விரோத செயலை மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காவல்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர பா.உ.
நாட்டின் காவல்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலைமையை அடைந்துள்ளது. காவல்துறையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.அரசியல்வாதிகளும் மோதிக் கொள்கின்றனர்.  துப்பாக்கிப் பிரயோகம் நடத்திக் கொள்கின்றனர்.
நாட்டின் சட்டத்தை சிலர் கையில் எடுத்துச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். காவல்துறை சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டதன் விளைவுகளே இந்த மோசமான நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- ஜீ.எல்.பீரிஸ்.
பிராந்திய நாடுகளின் பயங்கரவாதத்தை அகற்ற சார்க் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த வாரம், மாலைதீவு அடு நகரத்தில் இடம்பெறவுள்ள 17வது சார்க் உச்சி மாநாட்டிலும், அதன் தலைவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துமே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளான நாடுகளாக திகழ்வதாக தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ், அந்த பிரச்சினையில் இருந்து மீள சிறந்த யுக்தியினை பிரயோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரச தொழில் நிலையற்றது! பத்திரிகைகளில் வெளிவரும் தொழில் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!- உயர்கல்வி அமைச்சர்.
உலகில் அரச தொழிலானது நிலையானது அல்ல எனவும் வீட்டிற்கும், சமூகத்திற்கும் பாரமாக இளைஞர்கள் இருப்பதை விடுத்து, கிடைக்கும் தொழில் வெற்றிடங்களுக்கு  விண்ணப்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றிய போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.உலகில் எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் அரச சேவையாளர்கள் ஒரு சதவீதத்தினரே இருப்பதாகவும், இளைஞர், யுவதிகள் சிரமம் பாராது செய்தித்தாள்களில் வெளியாகும் தொழில் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்து அதன் குறைநிறைகளை பாராது, தொழில்களில் ஈடுபடுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிடைக்கும் தொழிலில் கூடிய அனுகூலங்களை எதிர்பார்க்காது ஆரம்பத்தில் கடின உழைப்புகளை வெளிக்காட்டுமாறும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, சர்வதேச ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் அரச தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு சதவீதமானவர்களே தொழில் புரிகின்றனர்.
எனினும். இலங்கையில் அந்த தொகை 14 சதவீதமாக இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.அதேபோன்று இலங்கையில் இருந்து ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதாக கூறும், போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் அங்கு தனியார் துறை தொழில்களிலேயே ஈடுபடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திருமலையில் கடல்வழி விமானசேவை அறிமுகம்.
உல்லாசப்பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக ஸ்ரீலங்கன் விமான சேவையானது கடல்வழி விமான சேவை ஆரம்பிக்கவுள்ளது. இதன் பரீட்சார்த்த சேவையானது, இன்று காலை கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெல்கம்பே ஹோட்டல் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பெயரில் இந்த பரீட்சார்த்த சேவை மேற்கொள்ளப்பட்டது.காலை 10.30 ற்கு  கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானம் காலை 11.16 மணிக்கு திருகோணமலை உட்துறைமுகக் கடற்பரப்பில் தரை இறங்கியது.
திருமலைக்கும் நாட்டின்  ஏனைய பிரதான நகரங்களுக்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச  சுற்றுலாப்பயணிகளின் பயண நேரத்தை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கடல் விமான சேவை தொடங்கப்படுவதாக விமான சேவை நிறுவனத்தின் விமான வாடகை சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் சஞ்ஜீவ ஜெயதிலக  தெரிவித்தார்.இந்த விமான சேவையின் ஊடாக ஒரு தடவையில் 15 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் பயணத்திற்கான ஒரு வழிக் கட்டணம் 15,000 ரூபாவாக இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஐந்து செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன – அரசாங்கம்.
இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் ஐந்து  செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்டவர்களின் கீர்த்திக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையை அடுத்தே இந்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ பி கனேகல தெரிவித்துள்ளார்.எனினும் ஊடக அமைப்புகள் இந்த செயலை கண்டித்துள்ளன.
இலங்கையின் சட்டப்படி, அரசியல்வாதிகளை விமர்சிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. எனினும் ஊடகம் ஒன்றுக்கு எதிராக அபகீர்த்தி குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.லங்கா இ நியூஸ்.கொம், ஸ்ரீலங்காமிரர்.கொம், ஸ்ரீலங்கா காடியன்.கொம், பப்பராசிகொசிப்9.கொம்,லங்காவேநியுஸ்.கொம் ஆகிய ஐந்து இணையத்தளங்களுமே முடக்கப்பட்டுள்ளன.
குறித்த செய்தி இணையத்தளங்கள், குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் அமைச்சர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்ச்சித்து வந்தவை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சியான ஐ.ம.சு. முன்னணியில் பிளவு.
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை எழுந்துள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் கடந்த 31 ம் திகதி மேற்கொண்ட தீர்மானம் ஒன்றுக்கு முன்னாள் மாநகர பிரதி முதல்வர் ஆசாத் சாலி உட்பட்ட சிலர் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்தே இந்த நிலை தோன்றியுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் முதல் அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது மாநகரசபையின் நிதிக்குழு உட்பட்ட 16 நிலையியற்குழுக்களின் கட்டுப்பாட்டை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமது பொறுப்பில் ஏற்க நடவடிக்கையை எடுக்கும் என்று தெரியவந்துள்ளது
இதன் காரணமாக முதல் அமர்வில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் எழுந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான தீர்மானத்தை கடந்த 31 ம் திகதி மாநகரசபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொண்டபோது அதனை ஆசாத் சாலி உட்பட்டவர்கள் எதிர்த்தனர்.அத்துடன் மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவரான மிலிந்த மொரகொட தமது அதிகாரியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ஏ டி சிறிசேனவை நியமித்தமையையும் ஆசாத் சாலி ஆட்சேபித்தார்.
இந்தநிலையில் குறித்த யோசனைகளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மாநகரசபையில் முன்வைக்குமானால் ஆசாத் சாலி மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதவளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஆசாத் சாலி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கடசியில் இருந்தே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி தாவியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட கும்பல் கைது.
வாகன கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட கும்பலை செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை பரிசோதகராக கடமையாற்றி வரும் நபர் ஒருவரே இந்த வாகனக் கொள்ளைக் குழுவினை வழிநடத்தியுள்ளார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.இந்தக் கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகராலய வாகனமொன்றையும் குறித்த நபர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.காவல்துறை தலைமையகத்தில் கடமையாற்றிய பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரத லக்ஸ்மன் படுகொலையுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் சரண்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.ரேல்பாரே சஞ்சீவ என அழைக்கப்படும் பிரபல பாதள உலகக் குழு உறுப்பினரே இவ்வாறு சரணடைந்துள்ளனர்.இவருடன் சங்க என்னும் மற்றுமொரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரும் சரணடைந்துள்ளார்.
மனித படுகொலைகள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் குறித்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு புளுமெண்டல் வீதி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு குறித்த நபர்கள் குற்றச் செயல்களை மேற்கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.காவல் நிலையத்தில் சரணடைந்த இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரானுக்கு உதவி புரிந்த ரஷ்யா, பாகிஸ்தான் விஞ்ஞானிகள்.
அணு ஆயுதத் தயாரிப்புக்கான முக்கிய தொழில்நுட்பங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் விஞ்ஞானிகளிடம் இருந்து ஈரான் பெற்றுள்ளது.இதன் மூலம் அது எந்நேரமும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தருணத்தில் உள்ளது. இந்நிலையில் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை அந்த மண்டலத்தை பெரும் அபாயத்திற்குள்ளாக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானின் ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த அறிக்கையை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி(ஐ.ஏ.இ.ஏ) இன்று அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில தகவல்களை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை ரஷ்யாவின் வியாச்செஸ்லாவ் டானிலென்கோ என்ற விஞ்ஞானியும், பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானும் அளித்துள்ளனர்.
அணு ஆயுதத் தயாரிப்புக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது புளுட்டோனியம் தேவை. ஆர் 265 ஜெனரேட்டர் என்ற கருவியில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து நிகழ்த்தப்படும் செயல் முறையின் மூலம் அணுத்தொடர் விளைவு உருவாகும்.இதில் இருந்து பெறப்படும் சக்தி மூலம் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். ஆர் 265 ஜெனரேட்டர் தயாரிப்பு என்பது மிகக் கடினமான ரகசியமான தொழில்நுட்பம் கொண்டது.ரஷ்ய விஞ்ஞானி டானிலென்கோ 1990களில் ஈரான் விஞ்ஞானிகளுக்கு ஆர் 265ஐ தயாரிப்பது குறித்த தகவல்கள், ஆராய்ச்சிகளை அளித்துள்ளார். அவர் ஐந்தாண்டுகள் ஈரானில் இருந்து அவர்களுக்கு கற்பித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.ஏ.இ.ஏ பிரதிநிதிகள் டானிலென்கோவிடம் நடத்திய விசாரணையில் அவர் மின்சாரத் தயாரிப்புக்குத் தேவையான அளவிற்கு மட்டுமே அத்தொழில்நுட்பத்தை ஈரான் விஞ்ஞானிகளுக்கு கற்பித்ததாகத் தெரிவித்துள்ளார். ஈரானில் டானிலென்கோவின் நடவடிக்கைகள் குறித்த எவ்வித ஆதாரங்களும் ரஷ்யாவிடம் இல்லை.சில வடிவமைப்பு வேலைகளுக்கான கணித சூத்திரங்கள், குறியீடுகள், வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கிடைத்துள்ளன. கூடுதல் உதவிகள் பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானிடம் இருந்து ஈரான் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலய்ன் ஷூப்பே கூறியதாவது: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை அந்த மண்டலத்தையே பெரும் அபாயத்திற்குள்ளாக்கும். ஒருவேளை ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு ராணுவ குறிக்கோளுடன் இருக்குமானால் ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது.
எனினும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை எவ்வகையிலாவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அந்தத் தாக்குதல் அந்த மண்டலத்தையே ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விடும். இஸ்ரேல் முதலில் தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை.
ஐ.ஏ.இ.ஏ அறிக்கை வெளியான பின் ஈரான் மீது ஐ.நா பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருமானால் பாதுகாப்புக் கவுன்சில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ எனப்படும் மறுப்பாணையைப் பயன்படுத்தி தடைத் தீர்மானத்தை தோல்வியுறச் செய்து விடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.
தீர்மானம் தோற்கும் பட்சத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பல தடைகளை தன்னிச்சையாக ஈரான் மீது விதிக்கும். அதன் பின் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.வை இழுக்கும்.ஈரான் மீதான தாக்குதல் குறித்து எகிப்து அரசின் அல் அக்பர் செய்திப் பத்திரிகைக்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் ஈரான் அமைதியான பணிகளுக்காகத் தான் அணுசக்தி உற்பத்தியில் இறங்க விரும்புகிறது.
இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளிடம் இல்லாத ராணுவ பலம் எங்களிடம் மட்டுமே உள்ளது. ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறோம். அதனால் இஸ்ரேல், மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவை எதிர்கொள்ள நாங்கள் தயார்.அமெரிக்கா எங்களைக் கண்டு பயப்படுகிறது. எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பதவி விலகுகிறார் கிரீஸ் பிரதமர்.
கிரீசில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நேற்று ஒரு வழியாகத் தீர்வுக்கு வந்தது. பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, பிரதமர் பதவி விலகினால் தான் கூட்டணி ஆட்சி குறித்து பேசவே முடியும் என தெரிவித்தது.
இதையடுத்து அதிபர் கரலோஸ் பப்போலியாஸ் முன்னிலையில் பிரதமர் பப்பண்ட்ரீ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்டோனிஸ் சமாரஸ் இருவரும் பேசினர். அதில் பப்பண்ட்ரீ தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ், எதிர்க்கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க 2012 பிப்ரவரி 19 ல் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இத்தேர்தல் ஓராண்டு முன்னதாகவே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட M5 விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள்.
M5 பெருவழிச்சாலை விபத்தில் எம்மா பார்ட்டன் என்ற பெண் சிக்கி கோமாவில் இருக்கிறார். அவரருகே அவரது உடன்பிறந்த சகோதரி இறந்து கிடக்கிறார். விபத்தில் உயிரிழந்த 7பேரில் எம்மாவின் தந்தையும் சகோதரியும் அடங்குவர். இவர்கள் தவிர ஓய்வு பெற்ற ஒரு தம்பதி மற்றும் சில லொரி ஓட்டுனர்களும் உண்டு. 
ரக்பி கிளப்பின் அருகெ நடந்த வாண வேடிக்கை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல் தறையினர் சந்தேகப்படுவதால், அந்த ரக்பி கிளப்பினரிடம் உள்ள தீயணைப்பு தடுப்பு முறைகள் பற்றி விசாரித்து வருகின்றனர்.மூன்று நாய்களோடு காரில் பயணம் செய்த ஒரு குடும்பம் தீப்பிடிக்கும் முன்பு தாங்கள் தப்பித்தது பற்றி விளக்கினர். கோமாவில் இருக்கும் இளம்பெண் எம்மா அதரவற்றோர் நிலையத்தின் பாதுகாவலராக இருந்தார். அன்பும் பாசமும் நிறைந்தவர். அவரை விட்டுச் சிறிதும் அகலாமல் அவரது துணைவர் கிரிஸ் இருக்கிறார். இவர்கள் மிகவும் அன்பான தம்பதியர். இவர்களைப் பார்த்து இவர்களின் நண்பர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
எம்மாவின் தந்தை சக்கர நாற்காலியில் இருந்தவாறு தன் வாழ்க்கையை நகர்த்தி வந்தார். எம்மாவின் சகோதரி மேகி போன்ற அன்பான பெண்ணைப் பார்க்க இயலாது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.பமீலா, அந்தேனி ஆடம்ஸ் என்ற வயதான தம்பதியினர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் டவுண்டனில் இருந்த தங்கள் மகள் வீட்டிற்கு மகளையும் பேரப்பிள்ளைகளையும் சந்தித்து விட்டுத் வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது.
73 வயது ஆடம்ஸ் தூய மார்க் தேவாலயத்தில் காலை ஆராதனையை நடத்தவதற்காக மனைவியுடன் புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். இவரது மருமகன் ஃபில் தனது பேஸ்புக்கில் இவர்களது மரணச் செய்தியைத் தெரிவித்தார். நண்பர்கள் இது பற்றி தெரிவிக்கையில் இவர்கள் மிகவும் அன்பான தம்பதியினர். ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். தங்களுக்குப் பிரியமானவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஓய்வு நேரங்களில் தோட்டவேலையில் ஈடுபடுவர். இவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கின்றது என்றார்.
இறந்தவர்களில் ஒருவரான லொரி டிரைவர் டொரி பிரிஸ் (55) பிரிஸ்டோல் நகரத்தைச் சேர்ந்தவர். இவருடைய மரணத்துக்கு அவரது மகள் ஜெசிகா டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். இந்த டிரைவரின் தாயார் ஜேன் (78) பிரிஸ்டோலில் வாழ்கிறார். இவரும் தன் மகன் ஓட்டிச் சென்ற லொரியை நெருப்பு சூழ்ந்ததைக் கேள்விப்பட்டு வேதனையில் மூழ்கினார். டிவிட்டரில் தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
கார்ன்வாலில் இருந்த லொரியை ஓட்டிவந்த வேறு மூன்று ஓட்டுனர்களும் இந்த விபத்தில் தீக்கிரையாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்கள் சேம்வர்த் சகோதரர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கேலிங்டன் டெப்போவிலிருந்து இவர்கள் லொரியை ஓட்டிவரும் வேளையில் இந்தக் கொடிய விபத்தில் சிக்கினர். இவர்களோடு வேலை பார்த்து வந்த கிறிஸ் டாம்லின்சன், ஆண்டவர் தன் சக பணியாளர்கள் மூவரையும் ஆசிர்வதிக்குமாறு டிவிட்டரில் பிரார்த்தித்துள்ளார்.
கார்லோஸ் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை தொடங்கியது.
பாரிஸ் நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று 1980ல் ஆரம்பத்தில் கார்லோஸ் என்பவன் நடத்திய நான்கு குண்டு வெடிப்புக்களின் வழக்கு விசாரணை இப்போது தொடங்கியுள்ளது. வெனிசுலாவில் பிறந்த கார்லோஸ் குண்டு வெடிப்புக்களுக்கு திட்டம் தீட்டி செயல்படுவதில் அபார மூளைபடைத்தவன்.
இவன் முப்பதாண்டுகளுக்கு முன் பிரான்சில் நான்கு முறை குண்டுவெடிப்புக்களை நடத்தியுள்ளான். கார்லோஸின் இயற்பெயர் இல்லிச் சமிரெஸ் சாங்கெஸ். இவன் 1975ல் லெபனான் நாட்டின் சட்டத்திற்குப் புறம்பான தகவலாளியாக இருந்ததிற்காகவும் இரண்டு பிரெஞ்சு பாதுகாப்பு அதிகாரிகளைக் கொன்றத்திற்காகவும் 1977ல் இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக பாரிசின் தென் பகுதியில் உள்ள லா சாண்ட்டே சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்தான். திங்கட்கிழமை பாரிஸ் நகரத்தில் ஜஸ்டின் பேலஸில் தீவிரவாதத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் 62 வயது கார்லோஸ் சாங்கோஸ் தான் நடத்திய குண்டு வெடிப்புக்களுக்காக குற்றவாளிக்கூண்டில் நின்றான்.
இவன் ஒரு காலத்தில் தீவிர இடதுசாரி என்று கருதப்பட்டான். இவனுடைய குண்டு வெடிப்புக்களால் 17 பேர் உயிரிழந்தனர், 150பேர் படுகாயமற்றனர். இந்தக்குண்டுவெடிப்புக்களை இவன் தனக்காக தன் சுயநலத்திற்காகவே நடத்தினான். இவனுடன் சிறையில் இருந்த காம்சேட் நெருங்கிய தோழன் புருனோ பிசகுஎட்டும் இவனது காதலி மகதலெனா கோப்பும் ஒரு கார் நிறைய வெடி பொருட்களை எற்றிக் கொண்டு வந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
இவர்களை விடுவிக்க இவன் 1982 மார்ச் மாதத்தில் முதல் குண்டு வெடிப்பை நடத்தினான். பாரிசில் இருந்து டோ லோஸ் நகரத்தின் தென் பகுதிக்கு செல்லும் விரைவு ரயில் வண்டியில் இவன் நடத்திய இந்தக் குண்டு வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர். நண்பனையும் காதலியையம் சிறையிலிருந்து மீட்க விரும்பி இவன் நடத்திய இந்தக் குண்டு வெடிப்புக்கு இவனது International Terrorist Friends Of Carlos என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
1982ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பை நடத்டதினான். இவனுடைய தோழன் பிரசகுஎடடும் காதலி கோப்பும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அல்-சதான் அல்-அராபி என்ற பத்திரிகை அலுவலகத்திற்கு வெளியெ குண்டு வெடிக்கச் செய்தான், இதில் ஒருவர் மரணமடைந்தார் பலர் காயமுற்றனர். மூன்றாவது நான்காவது குண்டு வெடிப்புக்கள் 1983ல் நிகழ்த்தப்பட்டன.
1983ஆம் அண்டின் புதுவருடப்பிறகு முந்தைய இரவில் மார்செயில்ஸ் நகரத்திலிருந்து பாரிசுக்குச் செல்லும் அதிவேக TGV ரயில் வண்டியில் கார்லோஸ் நடத்திய குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அடுத்த குண்டு வெடிப்பு மார்செயில்ஸ் ரயில்வே நிலையத்தில் கார்லோசால் நடத்தப்பட்டது. இதில் 2 பயணிகள் இறந்து போயினர். இதற்கு Organisation for the Arab Armed Struggle என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இவ்வாறு கார்லோஸ் நடத்திய நான்கு குண்டு வெடிப்பு வழக்குகளுக்கும் இப்போது நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF