Thursday, November 10, 2011

இன்றைய செய்திகள்.

சம்பூர் அனல் மின்நிலைய ஒப்பந்தம்! இறுதிநேரத்தில் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு!
திருகோணமலை மாவட்டம், தமிழ்மக்கள் வாழ்ந்த பிரதேசமான சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும் நேற்று இலங்கை வர ஏற்பாடாகியிருந்தது.ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்த நிலையில் இறுதிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது எனத் தெரிகிறது.
ஒப்பந்தம் கைச்சாத்திடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளிவரவில்லை. ஆனால் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் முன்வைத்த முக்கியமான ஆட்சேபனைகளே இதற்குப் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், ஒப்பந்தம் கைச்சாத்திடல் இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டமை இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனத் தெரிகிறது.
எவ்வாறாயினும், இதுகுறித்தான நிலைமையை தெளிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சார்க் நாடுகளின் மாநாடு மாலைதீவில் நடைபெறும்போது அதில் கலந்துகொள்ள வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விரிவாக எடுத்துக் கூறுவார் எனத் தெரியவருகிறது.இதற்காக மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையும் ஜனாதிபதி மாலைதீவு கூட்டிச் செல்லவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இலங்கை பாலைவனமாக மாறக் கூடிய அபாயம்– சரத் பொன்சேகா.
இந்த நாடு பாலைவனமாக மாறக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்கப்பூரில் உள்ள அரச வைத்தியசாலையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அதுமட்டுமன்றி உலகக் குழுக்களை வழி நடத்தும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெரும் பொருட் செலவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சட்டங்களை இயற்றி அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது. இதுதான் மெய்யான தேசப்பற்று என்று கூறிய இவர் வெற்றி உண்டாகட்டும். என்றும் இந்த நாட்டு பற்று என்றாவது நாட்டை பாலைவனமாக மாற்றிவிடும் என்று தெரிவித்தார்.இந்த நாட்டை சுரண்டி ஒன்றுமில்லாமல் ஆக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றிருந்த போது அவர் செய்தியாளர்களுக்கு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்.
நாட்டில் நட்டமடையும் சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் 76 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 46 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 76 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
சொத்துக்களை சுவீகரிக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக மல்வத்த பீடாதிபதி உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த சட்ட மூலம் தொடர்பில் சர்வதேச ரீதியாக முறைப்பாடு செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் அஷ்ரப் நகரின் ஒரு பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அஷ்ரப் நகரில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியெறுமாறு அரசஅதிகாரிகள் இன்று உத்தரவிட்டமையால் அரசஅதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்மிடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அஷ்ரப் நகரின் குறித்த பகுதிக்கு வனபரிபாலனதுறை அதிகாரிகள், இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர்  உள்ளிட்ட பலரும் விஜயம் மேற்கொண்டனர்.
குறித்த காணி அரசாங்கத்திற்கு சொந்தமானவை என தெரிவித்த வனபரிபாலன சபை அதிகாரிகள்  இங்கு வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.பல வருடங்களாக இக்காணிகளில் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் அதற்குரிய காணி அனுமதிப்பத்திரம் தம்மிடம் இருப்பதாகவும் அப்பிரதேசவாசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் போது, காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் தம்மால் தவறுதலாக வழங்கப்பட்டதாகவும் அதனை உடனே இரத்துச் செய்துவிடுவதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகதியில் முகாம்களை அத்துமீறி அமைப்பதாக நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் அஷ்ரப் நகர்ப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவில் வீதி நிர்மாணத்திற்கு இலங்கை நிதியுதவி! மஹிந்த அடிக்கல் நாட்டினார்.
நாளை ஆரம்பமாகவுள்ள 17ஆவது சார்க் மாநாட்டில் பங்குகொள்வதற்காக இன்று முற்பகல் மாலைதீவு சென்றடைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ இலங்கையின் நிதி உதவியுடன் மாலைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்கான அடிக்கல்லை இன்று மாலை நாட்டி வைத்துள்ளார்.4.5 கிலோமீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாணத்திற்கு  10 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மாலைதீவில் உள்ள  மரோதா பகுதியில் அமைக்கப்படவுள்ள இவ்வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அப்பகுதியிலுள்ள மக்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின்போது, ஜனாதிபதியுடன் சென்ற இலங்கை அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க ஆகியோருடன், வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ராஜ் ராஜரட்ணத்துக்கு 9கோடியே 28 லட்சம் டொலர்கள் அபராதம் விதிப்பு.
நிறுவனங்களின் இரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்க வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணத்திற்கு 9 கோடியே 28 லட்சம் டொலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார்.தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு காரணமாக தான் படாத பாடுபட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
கிரிமினல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலாக ஒரு கோடி டொலர்கள் அபராதம் செலுத்துமாறும், முறைகேட்டின் காரணமாக சம்பாதித்த 5 கோடியே 40 லட்சம் டொலர்களை திரும்ப செலுத்துமாறும் ராஜரட்ணம் ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ரக்கோஃப் அவர்கள், அமெரிக்க நிதி ஒருங்குபடுத்தினர்களுக்கு சாதகமாக முடிவு செய்துள்ளார்.
ஒரு தனி நபருக்கு எதிராக வழங்கப்பட்ட மிகவும் பெரிய அபராதமான இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, இந்தத் தொகையை விட ராஜரட்ணம் சம்பாதித்தது மிகவும் அதிகம் என்று கூறியுள்ளார்.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான அபராதமாக ராஜரட்ணம் தற்போது ஒட்டு மொத்தமாக 15 கோடியே 60 லட்சம் டொலர்களுக்கும் அதிகமாக செலுத்தியாக வேண்டும்.உட் தகவல்களை பெற்று சட்டவிரோதமாக செய்யும் வணிகம் குறித்து தண்டிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களில் ராஜ் ராஜரட்ணமும் ஒருவராவார்.
குழந்தையை கழிவறையில் வீசிய மருத்துவர்கள் பணிநீக்கம்.
சீனாவில் இறந்ததாக நினைத்து குழந்தையை கழிவறையில் போட்ட கொடுமை ஒரு மருத்துவமனையில் நடந்துள்ளது.இதையடுத்து ஒரு மருத்துவர், 2 நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டாங் மாகாணம் போஷன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு லியு டாங்மெய் என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியோடு வந்தார்.
ரத்தப் போக்கும் இருந்தது. இதையடுத்து அவருக்கு அவசரமாக பிரசவம் பார்க்கப்பட்டது. பிறந்த குழந்தை அசைவின்றி கிடந்தது. மூச்சுவிடவோ, அழவோ இல்லை.தோல் நீல நிறத்தில் இருந்தது. குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கருதினர். இதையடுத்து லியுவின் உறவினர்களிடம், லியுவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது இறந்து விட்டது என்று கூறினர். முறையான நடவடிக்கைகளை பின்பற்றாமல் குழந்தையை துணியில் சுற்றி கழிவறை அறையில் போட்டுவிட்டனர்.
குழந்தையை பார்க்க வேண்டும் என்று லியுவின் தங்கை கேட்டார். அரை மணி நேரம் கழித்து, ஒரு கவரில் சுற்றி குழந்தையை தந்தனர். அதை பிரித்து பார்த்த போது, கை கால்கள் அசைந்தன. உயிர் இருப்பது தெரிந்தது.அதோடு குழந்தை ஆண் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டது. அலட்சியமாக நடந்ததால் மருத்துவர்கள், 2 நர்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளை பிரித்து மருத்துவர்கள் சாதனை.
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளை பிரித்து மருத்துவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.இச் சகோதரிகளின் பெயர் மரியா மற்றும் தெரசா ஆகும். இவர்கள் டொமினிகன் குடியரசுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சத்திர சிகிச்சையானது சுமார் 20 மணி நேரம் நடைபெற்றது.
இந்த சிகிச்சையை வெர்ஜினியா பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. தலைமை மருத்துவரான டேவிட் தலைமையில் 6 மருத்துவர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
வெற்றிகரமாக இச்சிகிச்சை முடிந்தவுடன் தலைமை மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், இக்குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக உள்ளனர். 20 வயது வரை நல்ல உடல்நலத்துடனும், எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் வாழ்வர் என உறுதி அளித்தார்.
இத்தாலியில் கடும் நிதி நெருக்கடி: பதவி விலகுகிறார் சில்வியோ பெர்லுஸ்கோனி.
இத்தாலி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலக முன் வந்துள்ளார் சில்வியோ பெர்லுஸ்கோனி.அயர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் நாடுகளைத் தொடர்ந்து தற்போது இத்தாலியும் கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் பொதுக் கடன் 120 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.
இதையடுத்து கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இத்தாலிக்கு உதவ முன் வந்த யூரோ மண்டல நாடுகளின் தலைவர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர். அதில் நாட்டின் செலவுகளைக் குறைக்க பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதியுதவி குறையும் என்பதாலும், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் அதை ஏற்க ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியினரும் மறுத்து வந்தனர்.இந்நிலையில் இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக சில மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாத வரை இத்தாலிக்கு நிதியுதவி கிடைக்காது என யூரோ மண்டல நாடுகள் அறிவித்துவிட்டன.
இதையடுத்து இந்த மசோதாக்களை நிறைவேற்ற பெர்லுஸ்கோனி ஒப்புக் கொண்டுவிட்டார். அதே நேரத்தில் மசோதாக்கள் நிறைவேறிய பின் ஆட்சியில் தொடர்ந்தால் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாவது நிச்சயம் என்பதால் பதவி விலகவும் முன் வந்துள்ளார்.அடுத்த சில வாரங்களில் பொருளாதார சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு அவர் பதவி விலகுவார் என்று இத்தாலி அதிபர் ஜார்ஜியோ நபோலின்டனோ அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பெர்லுஸ்கோனியின் அரசு தப்பியது. அந் நாட்டு நிதிநிலையை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெறும் 308 ஒட்டுகளுடன் நிறைவேற்றப்பட்டது.அரசு பிழைக்க 316 ஓட்டுக்கள் அவசியம் என்ற நிலையில் எதிர்க் கட்சிகள் ஓட்டெடுப்பை புறக்கணித்ததால் 308 ஓட்டு வாங்கினாலும் அரசு தப்பியது.
அவர்கள் வந்து எதிராக வாக்களித்திருந்தால், மசோதா தோற்கடிக்கப்பட்டு நேற்றே அரசு கவிழ்ந்திருக்கும். நிலைமை மிக மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் ஆட்சியிலிருந்து விலகிவிட பெர்லுஸ்கோனி முன் வந்துள்ளார். நேற்று முன் தினம் வரை அவர் பதவி விலக மாட்டேன் என்று அடம்பிடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெர்லுஸ்கோனி பதவி விலகப் போகிறார் என்ற செய்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது. டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு அதிகரித்ததோடு கச்சா எண்ணெய் விலையும் கூட வீழ்ந்தது.நாடு பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தபோதும் கூட தனது உல்லாச கேளிக்கைகளை பெர்லுஸ்கோனி குறைத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் தனது விருந்தில் பங்கேற்க அழகிகளுக்கு ரூ.13 கோடி வரை அவர் செலவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெண்கள் பள்ளிகளை குறிவைத்து தகர்க்கும் தலிபான்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் - பாக்துங்கவா மாகாணம் மார்தான் மாவட்டத்தில் பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது.
இப்பள்ளி கட்டிடத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் தலிபான் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.வெடிகுண்டு சத்தம் கேட்டு மக்கள் அச்சமடைந்தனர். இந்த பள்ளி, அப்பகுதியில் பெண்களுக்காக உள்ள ஒரே உயர்நிலைப்பள்ளி ஆகும்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் பெண்கள் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெண்கள் பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில வருடங்களில் வடமேற்கு பகுதியில் 1200 பள்ளிகளை தீவிரவாதிகள் அழித்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சர்தார் ஹூசைன் தெரிவித்திருந்தார்.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல்.
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்த எரிகல் 400 மீற்றர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது. அதற்கு 2005 ஒய்.யூ.55 என பெயரிடப்பட்டுள்ளது.
அது 3 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. மெல்ல பூமியை நோக்கி வரும் அந்த எரிகல் தற்போது சந்திரனை நெருங்கி உள்ளது.வருகிற வியாழக்கிழமை வானத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதை வெறுங் கண்களால் பார்க்க முடியும்.
மேலும் இந்த எரிகல் பூமியை தாக்காது. அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1976ம் ஆண்டு ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்தது.அதன் பிறகு தற்போது ஒரு ராட்சத எரிகல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த எரிகல் 2028ம் ஆண்டில் பூமியை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் விதியை மாற்றி அமைத்த நவம்பர் 9.
ஜேர்மனியின் வரலாற்றில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் தினமாக நவம்பர் 9ம் திகதி அமைந்துள்ளது.
1923ல் நவம்பர் ஒன்பதன்று அடால்ப் ஹிட்லர் தலைமையில் நாஜிப் படைகள் மூனிச் நகரத்தில் புகுந்தன. 1938ல் அதே நவம்பர் ஒன்பதன்று இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 41 ஆண்டுகள் கிழக்கு, மேற்கு என்று பிளவுபட்டுக் கிடந்த ஜேர்மனி 1989ல் நவம்பர் மாதம் ஒன்பதாம் நாள் மீண்டும் இணைந்தது.
மன்னராட்சி ஒழிந்தது: ஜேர்மன் நாட்டில் 1918ல் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி தோன்றியது. சோசலிசக் குடியரசுத் தலைவர் ஃபிலிப் ஸ்கீடேமன் இரண்டாம் வில்லியம் கெய்சர் என்ற மன்னரின் ஆட்சி ஒழிந்ததை பறைசாற்றினார்.பெர்லின் நகரத்து ரீக்ஸ் டாக்கின் பால்கனியில் நின்றவாறு விடுதலைப் பேருரையாற்றினார். புதிய ஜனநாயகம் மலர்ந்தது குறித்து விளக்கினார்.
அவர் கூறுகையில், உழைப்பாளிகளே, போர் வீரர்களே இன்றைய நாளின் வரலாற்றுச் சிறப்பு குறித்து அறிந்து மகிழ்வீர். இதுவரை எந்த வரலாற்றிலும் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. கணக்கிட முடியாத அரும்பெரும் பணிகள் நம் முன்னே இருக்கின்றன.இனி எல்லாமே மக்களால் நடக்கும், மக்களுக்காக நடக்கும். உழைப்பாளிகளுக்கு எதிராக எதுவும் நடக்காது. ஒன்றுபடுங்கள் நம்பிக்கையோடிருங்கள், கடமையைச் செய்யுங்கள். பழைய நாற்றமெடுத்த மன்னராட்சி சிதைந்துவிட்டது. புதிய ஜேர்மன் குடியரசு நீடுழி வாழ்க என்றார்.
ஆரம்பத்தில் ஜேர்மன் குடியரசில் மக்களாட்சி நடத்துவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வலது – இடது சாரிக் கட்சியினர் மக்களாட்சித் தத்துவதத்தை உடனே விலக்கி வைக்கத் துடித்தனர்.ஆனால் 1923ல் நாஜிப் படை உள்ளே நுழைந்தது, பத்தாண்டுகளுக்குப் பிறகு உலகின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் உலகப்போரை நடத்தியது.
எரிந்து சாம்பலான யூதவழிபாட்டுக் கூடங்கள்: இரண்டாம் உலகப் போர் முறையாக 1938 நவம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் ஆரம்பிக்கும் முன்பே ஜேர்மனியில் யூதர்களின் வழிபாட்டுக் கூடங்கள் நாஜிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. யூதர்களின் தொழிற்கூடங்கள் அபகரிக்கப்பட்டன. 1942ல் இனப்படுகொலை தொடங்கும் முன்பே ஆங்காங்கே யூதர்கள் கொல்லப்பட்டுவந்தனர்.
26000 யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர். நூறுபேர் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை “உடைந்த கண்ணாடியின் இரவுப் பொழுது” என்று குறிப்பிட்டனர். அந்த நிகழ்ச்சியே பின்னர் நடக்கவிருந்த பேரழிவுக்கான சோதனை முயற்சி என்று நாஜிகளின் தொழிற்சங்கத்தின் தலைவர் ராபர்ட் லே குறிப்பிட்டார்.
யூதப் பேரழிவை நியாயப்படுத்தும் வகையில் இவர், யூதர்கள் அழிக்கப்பட வேண்டும், அதுவே எங்களின் புனித நம்பிக்கை என்று உரத்த குரலில் உறுதிபடக் கூறினார்.ஆக யூதப் பேரழிவுக்கு முன்னோடியாக 1938 நவம்பர் ஒன்பது அன்று யூதர்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைப் பறித்து வழிபாட்டுக் கூடங்களைத் தீ வைத்துக் கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தேறியது.
இணைந்த ஜேர்மனி: கிழக்கு ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவை எதிர்த்து பல மாதங்களாக அங்கு போராட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கானோர் ஹங்கேரி வழியாக மேற்கு ஜேர்மன் தூதரகங்களை அணுகினர்.
ஜேர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக் என்று அழைக்கப்பட்ட GDR குடிமக்களுக்குரிய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது.ஒரு நாள் கிழக்கு பெர்லினில் நடந்த சர்வதேச பத்திரிக்கையாளர் மாநாட்டில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியானது.
உடனே மக்கள் அலை அலையாகப் புறப்பட்டனர். அந்த நாளின் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகளே கிடையாது. மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.பெர்லின் சுவரிலிருந்து 1989 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் ஒரு கல்லைப் பெயர்த்தெடுத்ததும் மக்களிடையே இருந்து வந்த போக்குவரத்துத் தயக்கம் முற்றிலும் விலகியது. மக்கள் கடலெனத் திரண்டனர். அலைகடலென ஆர்ப்பரித்தனர். கிழக்கும் மேற்கும் சங்கமமாயிற்று. பிரிந்து கிடந்த ஜேர்மனி ஒன்றாயிற்று.
தலிபான்களை ஒடுக்கும் முயற்சிக்கு Kate எனப் பெயரிட்ட ஆப்கானிஸ்தான்.
தலிபான்களை ஒடுக்கும் முயற்சிக்கு ஆப்கானிஸ்தான் ஒரு புதுப்பெயர் சூட்டியுள்ளது. தங்களுக்கு படைப்பயிற்சி அளித்து வரும் பிரிட்டிஷார் நினைவாக அவர்களது இளவரசி கேட் பெயரை ஆப்கன் தெரிவு செய்துள்ளது.தலிபான்கள் மீது நடத்திய மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு “இளவரசி கேட் தாக்குதல்” (Princess Kate Operation) என்று பெயர் வைத்துள்ளது.
புதுப்பெயர் சூட்டியது குறித்து ஆப்கானிஸ்தான் தேசியப் படையின் தலைவர் அப்துல் வஹீது கூறுகையில், கலகக்கார தலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் பிரிட்டிஷ் படைக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எனவே இந்த முக்கியமான செயற்காட்டிற்கு அவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இளவரசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாங்கள் இந்தப் பெயரைச் சூட்டினோம் என்று விளக்கமளித்தார்.இப்போது நடத்திய தாக்குதலில் எங்களுக்கு வெற்றி கிடைத்ததன் காரணம் இளவரசி கேட்டின் பெயர் அதிர்ஷ்டம் நிரம்பியது என்பதனால் தான். மற்ற வீரர்களோடு நானும் இணைந்து செயல்பட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெயரின் கௌரவத்தைக் காப்பேன் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டதை ஆப்கான் படைத்தலைவர் மகிழ்ந்து கொண்டாடினார்.
350 ஆப்கான் வீரர்களுடன் 60 காவல் துறையினரும் இணைந்து நஹ்ரே சராஜ் மாவட்டத்தில் உள்ள மஜார் பஜார் அருகில் இருந்த தலிபான்களை ஓடஓட விரட்டினர்.இத்தாக்குதல் திரைஃபில்ஸ் என்ற இரண்டாம் பட்டாளத்தைச் சேர்ந்த நூறு பிரிட்டிஷ் ஆலோசகர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆயினும் ஆப்கானிஸ்தான் தேசியப் படையே முழுபலம் பெற்று விட்டதால் பிரிட்டிஷின் ஆலோசனை அதிகம் தேவைப்படவில்லை.
அவுஸ்திரேலியாவில் கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்.
காற்றில் கரியமில வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் முக்கிய மசோதா அவுஸ்திரேலியாவில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது.உலகளவில் கரியமில வாயு அதிகளவில் வெளியிடும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. உலகளவில் அதன் பங்கு 1.5 சதவீதமாக உள்ளது.
கரியமில வாயு அதிகரிப்பால் உலகளவில் பருவ நிலை மாற்றம் உருவாகிறது. இது அதிக வெள்ளம், அதிக வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு மூல காரணமாக அமைகிறது. அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி சமீபத்தில் கடும் வெள்ளத்தாலும், மேற்குப் பகுதி கடும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க முடியும் என்ற நோக்கத்தில் "தி க்ளீன் எனர்ஜி ஆக்ட்" என்ற மசோதா கடந்த மாதம் பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று செனட்டில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. 36 வாக்குகள் இதற்கு ஆதரவாகவும், 32 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. வரும் 2012 ஜூலை 1ம் தேதி முதல் இம்மசோதா அமலுக்கு வரும்.அதிகளவில் கரியமில வாயுவை வெளியிடும் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெளியிடும் கரியமில வாயுவுக்கு ஒரு டன்னுக்கு 23.80 டொலர் என்ற வீதத்தில் வரி கட்ட வேண்டும்.
இந்த வரி ஐரோப்பாவில் ஒரு டன்னுக்கு 8.70 முதல் 12. 60 டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்கு விவசாயம், வனம் ஆகியவை விலக்கு. அரசு நிர்ணயிக்கும் அளவு கரியமில வாயுவை வெளியிடும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் வழங்கப்படும்.சந்தை நோக்கிலான வர்த்தகத் திட்டம் 2015 முதல் அமலுக்கு வரும். 2020க்குள் வெளியிடப்படும் கரியமில வாயுவில் 16 கோடி டன் வாயுவைக் குறைக்க வேண்டும்.
இந்த மசோதாவின் வரி விதிப்பால் நிலக்கரிச் சுரங்கங்கள், விமான நிறுவனங்கள், உருக்கிரும்பு வார்ப்பு நிறுவனங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.இந்த மசோதாவால் வேலை வாய்ப்பு குறையும், அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்தாலும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் மசோதாவை வரவேற்றுள்ளனர்.
துருக்கியில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்.
துருக்கி நாட்டில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள ஹோ‌ட்டல் ஒன்றின் கட்டடம் சேதமடைந்தது. இந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் துருக்கி நாட்டின் மீடியாக்கள் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலநடுக்கத்தின் போது சுமார் 600க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தற்போது மீண்டும் அதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல் துறைக்கு நோபல் பரிசு பெற்றவர் காலமானார்.
இயற்பியல் துறையில் நோபல் பரிசுப் பெற்ற நார்மன் ராம்சே(96) தூங்கிக் கொண்டிருக்கும் போதே காலமானார்.அணு மற்றும் அணுவின் மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக அவருக்கு 1989ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடன் மேலும் இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.ராம்சேவின் கண்டுபிடிப்பின் உதவியால் அணுக் கடிகாரம் உருவாக்கப்பட்டது. இது மிகவும் துல்லியமாக செயல்படும் திறன் கொண்டது.
ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் இயற்பியல் துறை போராசிரியராக 40 ஆண்டுகளுக்கு மேல் அவர் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு மனைவியுடன் அவர் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வந்தார்.இரண்டாவது உலகப் போரின் போது முதல் அணுகுண்டை உருவாக்கும் மன்ஹாட்டன் திட்டத்தில் அவர் பணியாற்றியவர். வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்தில் ராம்சேவின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
சிரியாவில் ராணுவத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 3500 ஆக உயர்வு.
சிரியாவில் அதிபருக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான ராணுவ வன்முறையில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தைத் தயாரித்தது.
அதன்படி சிரிய அரசு கைது செய்துள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். சிரிய தெருக்களில் உள்ள ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும்.இதற்கு சம்மதித்து அதிபர் அசாத் கடந்த 2ம் திகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து கடந்த 5ம் திகதி 550 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.
ஆனால் ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. மாறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் தொடர்கிறது.இந்நிலையில் நேற்று ஐ.நா மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை சிரிய போராட்டத்தில் ராணுவத்தின் தாக்குதலுக்கு 3,500 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் ஒரு பொய்யர்: ஒபாமாவிடம் குறை கூறிய சர்கோசி.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ ஒரு பொய்யர் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி ஒபாமாவிடம் விமர்சித்தது தற்போது வெளியாகியுள்ளது.பிரான்சின் கேன்ஸ் நகரில் சமீபத்தில் ஜி20 நாடுகளின் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் இருந்து பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு கருவிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் கேட்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல மொழிகள் அக்கூட்டத்தில் பேசப்படுவதால் மொழி பெயர்க்கும் கருவிகளும், பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டன. அதற்குரிய ஹெட்போன்களை பத்திரிகையாளர்கள் காதில் மாட்டிக் கொண்டால் தலைவர்கள் பேசுவது அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.
கூட்டத்தின் போது அரங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்கோசி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். ஒபாமாவிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த சர்கோசி,"இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து நான் இனி ஒன்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. அவர் ஒரு பொய்யர்” என்றார்.இதற்கு பதிலளித்த ஒபாமா,"உங்களுக்கு வேண்டுமானால் அவர் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால் நான் அவருடன் தினசரி உரையாடுகிறேன்” என்றார்.
மேலும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கும் ஓட்டெடுப்பில் பிரான்ஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததைப் பற்றி ஏன் தன்னிடம் முதலில் தெரிவிக்கவில்லை எனவும் ஒபாமா, சர்கோசியிடம் கேட்டார்.இந்தப் பேச்சுவார்த்தையை பத்திரிகையாளர்கள் ஒரு சிலர் மட்டும் முதலில் கேட்டுவிட்டனர். அப்போது பலருக்கும் ஹெட்போன்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பின்னர் எப்படியோ இத்தகவல் வெளியில் கசிந்துவிட்டது. இந்த உரையாடல் இஸ்ரேல் மீதான மேற்குலகின் நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
தலாய்லாமாவின் கூட்டத்திற்கு சீன அரசு தடை.
மங்கோலியாவில் புத்த மத தலைவர் தலாய்லாமா நடத்த இருந்த கூட்டத்திற்கு சீன அரசு தடை விதித்தது.திபெத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என உலகம் முழுவதும் வசிக்கும் திபெத்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் சீன அரசு திபெத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என அறிவித்து வருகிறது. மேலும் திபெத்தியர்களுக்‌கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவந்த திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா திரும்பி வரும் வழியில் மங்கோலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அங்கு வசிக்கும் திபெத்திய மக்களிடையே பேச விரும்பினார்.இதற்காக மங்‌கோலியா தலைநகர் உலன்பாடோரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கும் சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் தடை உத்தரவு போட்டுள்ளது.
இது குறித்து மங்‌கோலியா போக்குவரத்து துறை அமைச்சர் பட்டுல்காஹால்ட்மா என்பவர் நிருபர்களிடம் கூறியதாவது: மங்கோலிய தலைநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை தலாய்லாமா ‌பேசுவதாக இருந்தது.இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காரணம் மைதானத்தை சீன அரசு கட்டிதந்துள்ளது. இதனையடுத்து மற்றொரு இடத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தலாய்லாமா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.
கனடாவில் ஆக்கிரமிப்பு போராட்டத்துக்கு வரவேற்பு.
வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவிலிருந்து கனடா வரை பரவியது. கனடாவில் பெரும்பாலானோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.
கனடா மக்களிடம் நானோஸ் தொலைபேசி ஓக்டோபர் 20 முதல் 24 வரை சர்வே ஒன்றை நடத்தியது.இதில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் பின்வருமாறு, கனடா மக்களில் பத்தில் ஏழு பேருக்கு போராட்டம் பற்றித் தெரிந்திருந்தாலும் 58 சதவீதம் பேர் மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
முப்பது வயதுக்குக் கீழே உள்ள இளைஞர் மத்தியில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது. ஆதரவாளர்கள் இந்தப் போராட்டம் சரியான காரணத்துக்காக நடத்தப்படுகிறது. இன்னும் இது குறித்த விழிப்புணர்வு பெருக வேண்டும். இளைஞர்கள் உறுதியாக நின்று ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கருதுகின்றனர்.வேறு சிலர் இந்தப் போராட்டம் குறித்து பேசும்போது ஏழை பணக்கார வேறுபாடு விரிந்து கொண்டே போகிறது. உற்பத்தி நிறுவனங்களின் பேராசை பெருஞ்சிக்கலை ஏற்படுத்துகிறது என்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக சுமார் எட்டு நகரங்களில் ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். பொருளாதார வேறுபாடு குறித்து இப்போராட்டத்தை துல்லியமாக வரையறுக்கப்படவில்லை.கூடாரத்தில் 23 வயதுப் பெண் ஒருவர் கூடுதலாக போதை மருந்து சாப்பிட்டதால் இறந்து போனது முதல் இப்போராட்டம் கூடுதலாக மற்றவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிமன்ற ஆணைக்கு அரசு காத்திருக்கிறது. கியூபெக், விக்டோரியா நகரங்களில் அரசு கூடாரங்களைக் காலி செய்யுமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 4 மருத்துவர்கள் பலி.
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிறுபான்மையினரான இந்து மத டாக்டர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.பாகிஸ்தானின் சிந்து மாநிலம் ஷிகார்புர் மாவட்டத்தில் உள்ளது தாலுகா சாக் கிராமம். இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் வசிக்கின்றனர்.அங்குள்ள மருத்துவமனைகளை குறி வைத்து நேற்று மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 4 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. அவர்களை காக்க வேண்டியது அரசின் கடமை. தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மேலும் இந்துக்கள் படுகொலை குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி சிந்து மாநில அரசுக்கு சர்தாரி உத்தரவிட்டுள்ளார். தாக்குதல் நடந்த கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கும்படி, சிந்து மாநிலத்தை சேர்ந்த இந்து மத எம்.பி. ரமேஷ்லாலை சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் கல்லறைகளில் இருந்து உடல் உறுப்புகள் திருட்டு.
பாகிஸ்தானில் புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் கதாப் மற்றும் ஷோரப் கோத் நகரங்கள் உள்ளன.அங்குள்ள இடுகாட்டில் 40 கல்லறைகள் இடிக்கப்பட்டு அவை தோண்டப்பட்டிருந்தன. தோண்டப் பட்டவைகளில் பெரும்பாலானவை குழந்தைகளின் கல்லறையாகும். அதில் இருந்த உடல்கள் சிதைக்கப்பட்டிருந்தன. எனவே அவை பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் மாயமாகி இருந்தது. அவற்றை யாரோ திருடிச் சென்றுள்ளனர். எதற்காக இந்த காரியத்தில் ஈடுபட்டனர் என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த சிந்து மாகாண கவர்னர் இஷ்ரத் உல் எபரத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதற்கிடையே கல்லறைகள் தோண்டப்பட்ட விவகாரம் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. எனவே ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். உடல் உறுப்புகள் திருடப்பட்டவர்களின் ஆன்மாவுக்கு பிரார்த்தனை செய்தனர்.
அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபடும் ஈரான்: ஐ.நா அறிக்கை.
ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக இதுவரையில் அதிகாரபூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற விஷயம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் ஈரானின் இந்த நடவடிக்கை மேலை நாடுகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள் சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது: இஸ்லாமியக் குடியரசு நாடுகள் சில அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ளன.
இதற்காக மறைமுகமாக தேவையான உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்வது, உயர் வெடிப்பொருள் சோதனை கருவிகள், டெட்டனேட்டர்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.மேலும் கணணி உதவியுடன் அணுகுண்டுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இவை அனைத்துமே அணு குண்டு சோதனைக்கு முந்தைய நடவடிக்கைகளாகும்.
மேலும் ஏவுகணையில் வைத்து செலுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ஈரானிடம் உள்ள ஷாகாப் எனும் ஏவுகணையில் இவை வைத்து செலுத்தப்பட உள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும் எனவே இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் கூறியுள்ளார்.
இதனிடையே ஈரானின் அணு ஆயுத தாக்குதலை முறியடிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் வானொலி மூலம் நிகழ்த்திய உரையில் ஈரான் மீது எவ்வித புதிய பொருளாதார தடை எதையும் ஐக்கிய நாடுகள் சபை விதிக்காது என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகில் உள்ள இஸ்ரேலின் அனைத்து நட்பு நாடுகளும் இது தொடர்பாக மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நடவடிக்கைகள் எனில் அது ராணுவ நடவடிக்கையா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முறியடிக்கும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.இதனிடையே ஐக்கிய நாடுகள் அணு சக்தி அமைப்பு வெளியிட்ட தகவலை ஈரான் செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அமைப்பு, புலனாய்வு அமைப்புகள் அளித்த தவறான தகவல் மற்றும் உபயோகமற்ற புகைப்படங்களின் அடிப்படையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இங்குள்ள உருக்கு கன்டெய்னரில் அணு ஆயுதம் சார்ந்த கருவிகள் இருப்பதாக அது கருதுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தூதர் கருத்து: அணுசக்தியைப் பயன்படுத்தும் விஷயத்தில் தங்களுக்குள்ள உரிமையை ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு தூதர் அலி அக்ஸர் சோல்டனே தெரிவித்துள்ளார்.ஆக்கபூர்வ பணிகளில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன்(ஐஏஇஏ) ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF