Wednesday, November 23, 2011

இன்றைய செய்திகள்.

கொழும்பு வெலிக்கடை சிறை 2013ஆம் ஆண்டில் இடம்மாற்றம்.
வெலிக்கடை சிறைச்சாலையை 2013 ஆம் ஆண்டளவில் கொழும்பிலிருந்து இடம் மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சுமார் 2000 கைதிகள் தற்போது மஹர மற்றும் வடறுக்க சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் தற்போது 4000 க்கும் அதிகமான கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக, மஹர மற்றும் வடறுக்க சிறைச்சாலைகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் வெலிக்கடைச் சிறைச்சாலையிலே தண்டனை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மனிதவள அபிவிருத்தியில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்.
மனிதவள அபிவிருத்தியில் தெற்காசிய வலயத்தில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள அபிவிருத்தி அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
187 உலக நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கைக்கு அமைய இலங்கை மனித வள அபிவிருத்தியில் 97 ஆவது இடத்தை வகிக்கின்றது.
அயல் நாடுகளான இந்தியா 134 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 145 ஆவது இடத்திலும் உள்ளன.பங்களாதேஷிற்கு 146 ஆவது இடமும், நேபாளத்திற்கு 157 ஆவது இடமும் கிடைத்துள்ளன.இதனைத் தவிர பூட்டான் 141 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 172 ஆவது இடத்திலும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டம் வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள அபிவிருத்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த தெளிவாக எம்மை ஏமாற்றிவிட்டார்!-விரிவுரையாளர் சங்கம்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (21.11.2011) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் அரசாங்கம் உறுதி அளித்தது போன்று தமக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை இது தொடர்பாக கலந்துரையாட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் உயர்மட்டக் குழு கூடவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். 
அக்கூட்டத்தின் போது, எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அளித்த வாக்குறுதியை அடுத்தே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர் தாம் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யுத்தக்குற்றம் தொடர்பில் தகவல் திரட்ட சரத்பொன்சேகாவை சர்வதேசம் பயன்படுத்தும் என இலங்கை அஞ்சியது!-விக்கிலீக்ஸ் தகவல்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சர்வதேச சமூகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடுமென இலங்கை கருதியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான தகவல் வளமாக, பொன்சேகாவை பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதனால், பொன்சேகாவின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்திருந்த குறிப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் இதனை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி நடத்திய சந்திப்பின் போது இந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவிடம் தகவல்கள் திரட்ட முயற்சிக்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது. 
அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேகாவிடம் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி தகவல்கள் திரட்டினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாரிய விரிசல் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா அமெரிக்கா விஜயம் செய்திருந்த போது தன்னார்வ அடிப்படையில் தகவல்களை வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேகாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியை நோக்கி தண்ணீர் போத்தல் வீசியவரை உடனடியாக கண்டுபிடிக்கவும்!- ஐ.தே.க. எம்.பி..
நாட்டின் தலைவரான ஜனாதிபதியை நோக்கி சபைக்குள் தண்ணீர் போத்தலை வீசியவர் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் கோக்கை விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாலித்த ரங்கே பண்டார எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
மஹிந்த சிந்தனை இந்நாட்டில் தினம் தினம் மனித உரிமைகளை மீறி வருவதாக நாம் அடிக்கடி கூறிவருவது தற்போது நிரூபணமாகி இருக்கின்றது.
வரவுசெலவுத்திட்டம் இந்த சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று இந்த பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி நிறைந்து காணப்பட்டது.இதன்போது வெளிநாட்டுத் தூதுவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என அனைவரும் இருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆளும் தரப்பினரால் எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இது இவ்வாறிருக்க வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்த நிதியமைச்சர் இந்நாட்டின் தலைவராக இருக்கின்றார். அவர் ஆளும் கட்சிக்கு மட்டும் ஜனாதிபதி இல்லை. இலங்கைத்தீவுக்கே இவர் தான் ஜனாதிபதி.
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டாலும் யுத்தத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய தலைவராக ஜனாதிபதி திகழ்கின்றார். அவ்வாறானவரை பாதுகாப்பது எமது கடமையாகும்.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வரும்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் கலரிக்கு வரும்பட்சத்தில் அவர்கள் பேனாவைத் தவிர வேறு எந்தவொரு பொருளும் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.அதேபோல் பார்வையாளர் கலரிக்கு வரும் ஒவ்வொருவரும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் சோதனையிடப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதியை நோக்கி தண்ணீர்போத்தல் வீசப்பட்டது. ஆனால் ஜனாதிபதி கூறுகையில் கலரியில் இருந்து தண்ணீர் போத்தல் வீசப்பட்டதாக காணப்படுகிறது.அது பற்றி விசாரியுங்கள் என்று கூறினார். உண்மையில் அந்த தண்ணீர் போத்தல் கலரியில் இருந்து தான் வீசப்பட்டதா என்பது தெரியாது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தமை மலையைப் பிளந்துவிடும் என்ற அளவில் நிவாரணம் கிடைக்கும் என்றே நம்பிக் காத்திருந்தனர். ஆனால் அது எறும்புகளைக்கூட கொன்றுவிட்ட சோடிக்கப்பட்ட பொய்யான திட்டமாக அமைந்து விட்டது.  அது மிகவும் அலங்காரமாக சோடிக்கப்பட்ட பொய்யானதும் வெறுமையானதுமான திட்டம் என்றே அமைந்து விட்டது.
நாட்டு மக்களின் கனவுகள் கலைக்கப்பட்டுவிட்டன. அரச ஊழியர்களுக்கு 10 வீத சம்பள அதிகரிப்பு என்று கூறியது பாரிய பொய்யாகும்.வரவுசெலவுத்திட்டம் என்ற பெயரில் நாட்டு மக்களையும் 10 வீத சம்பள உயர்வு என்ற பெயரில் அரச ஊழியர்களையும் அரசாங்கம் கழுதைகளாக்கி விட்டது. அத்துடன் ஓய்வூதியக்காரர்களையும் இத்திட்டம் ஏமாற்றியிருக்கின்றது என்றார். 
இலங்கை நாணய மதிப்பு 3 சதவீதத்தினால் குறைப்பு! வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பு.
இலங்கை நாணயம் இன்று 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை  பாராளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார்.இதையடுத்து மத்திய வங்கி ஆளுனரிடம் கேள்வி எழுப்பிய போதே, ரூபாவின் மதிப்பு இன்று 3 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா வரையான ஆசிய நாடுகளைப் பின்பற்றி இலங்கையும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இலங்கையுடன் போட்டியிடும் நாடுகள் தமது நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும் நிலையில், ஏற்றுமதித் துறைக்கு ஏற்படும் பின்னடைவை ஈடுசெய்ய இலங்கை ரூபாவின் மதிப்பை 3 வீதத்தினால் குறைக்குமாறு மத்திய வங்கியிடம் கோருவதாக ஜனாதிபதி நேற்று கூறியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இன்று தொடக்கம் இலங்கை நாணயம் 3 வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்படவுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.நாணய மதிப்பிறக்கத்தை அடுத்து இலங்கையில் இன்று காலை ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 113.50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.
தென் சீன கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மாயம்.
தென் சீன கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று 21 ஊழியர்களுடன் திடீரென காணாமல் போனது.தென் சீன கடல் பகுதி எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. இந்த பகுதியில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற பல நாடுகள் எண்ணெய் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.தென் சீன கடல் பகுதி முழுக்க முழுக்க சீனாவுக்கு சொந்தமானது. அங்கு மற்ற நாடுகள் தலையிடுவதை சீனா பொறுத்துக் கொள்ளாது என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவின் பினாங்கு துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரம் டன் சரக்குகளுடன் கப்பல் சென்றது. தென் சீன கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.உடனடியாக அந்த பகுதியில் ஹாங்காங், வியட்நாம் கடல் படை பாதுகாப்பு படையினர் தேடினர். எனினும் கப்பல் அந்த பகுதியில் காணவில்லை. ஆனால் கப்பலில் வேலை செய்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மற்ற 21 ஊழியர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
இவர்களில் தென் கொரியாவை சேர்ந்த 9 ஊழியர்களும் அடங்குவர். கப்பலில் இருந்து 4 ஊழியர்கள் மட்டும் எப்படி வெளியில் வந்தனர் என்பது மர்மமாக உள்ளது. கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் கூறுகையில், கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எகிப்தில் மக்கள் போராட்டம்: அமைச்சர்கள் பதவி ராஜினாமா.
எகிப்தில் ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டது.எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோசினி முபாரக் மக்கள் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ராணுவம் வெளியிட்டது.
இதில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கடந்த 3 நாட்களாக தாகிர் சதுக்கத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் எகிப்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராணுவப் புரட்சியை தடுக்க கோரி அமெரிக்காவுக்கு ரகசிய கடிதம்: ஹக்கானி மறுப்பு.
பாகிஸ்தானில் ராணுவப் புரட்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவுக்கு ரகசியக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி மறுத்துள்ளார்.பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதைத் தடுக்க அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என்றும் ஹுசைன் ஹக்கானி ரகசியக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஹுசைனின் கடிதத்தை அமெரிக்க முன்னாள் தலைமை ராணுவத் தளபதி அட்மிரல் மைக் முல்லனிடம் அளித்ததாக அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் தெரிவித்திருந்தார். இப்பிரச்னை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹுசைனிடம் இருந்து கடிதம் வந்ததை மைக் முல்லனும் ஒப்புக்கொண்டுள்ளார். இதை ஹுசைன் மறுத்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மன்சூர் இஜாஸிடமிருந்து கடிதத்தைப் பெற்று, அதை மைக் முல்லனிடம் நான் அளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ரகசியக் கடிதம் அளித்ததற்கான ஆதாரங்களை லண்டனில் உள்ள பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரிடம் அளித்துள்ளதாக இஜாஸ் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு திருப்பி அழைக்கப்பட்ட ஹுசைன் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரியை ஞாயிற்றுக்கிழமை 2 முறை சந்தித்துப் பேசினார்.அப்போது ரகசியக் கடிதத்துக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதில் தனது கையெழுத்து இல்லை. அந்தக் கடிதம் தனது கவனத்துக்கும் கொண்டு வரப்படவில்லை என்று அவர் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஹக்கானி கூறுகையில், என் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான நடவடிக்கையை ஹுசைன் மேற்கொண்டிருக்க மாட்டார் என்றும், எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும் அதிபர் கருதுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் அந்தக் கடித்ததை யார் எழுதியது. யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டது என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனப்படுகொலை வழக்கில் கெமரூச் மீதான விசாரணை துவங்கியது.
கம்போடியாவை கதிகலங்க வைத்த கெமரூச் தலைவர்கள் நடத்திய இனப்படுகொலை வழக்கு ‌நேற்று துவங்கியது.இதில் மூன்று முக்கிய தலைவர்கள் மீதான விசாரணை நடந்தது. 20ம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை சம்பவம் கம்போடியா நாட்டில் அரங்கேற்றியுள்ளது.
1970-களில் ஆட்சி செய்த கொடுங்கோலன் போல்போட் கெமரூச், தனது ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக கண்ணில் பட்ட அப்பாவிகள், பொதுமக்கள் என ஏறத்தாழ 1 லட்சத்து 70 ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தார். இது உலகினை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த இனப்படுகொலை குறித்த வழக்கு நேற்று தலைநகர் போனனேபென் கோர்டில் துவங்கியது. ஐ.நா.வின் பின்னணியில் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயம் இந்த வழக்கினை விசாரித்து வருகிறது.
நீதிபதி நீல்நெளன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் தற்போதுள்ள கெமரூச் தலைவர்களான நெளவான்செயா(85), கியூவ்சம்பான்(80), ஐயாங்‌- சர்ரே(86) ஆகியோர் மீது சொந்த நாட்டு மக்களை சித்ரவதை செய்து கொன்றது, இனப்படுகொலை, மதகுற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது.மேலும் இந்த வழக்கின் முக்கிய தலைவரான போல்போட் கெமரூச் கடந்த 1998-ம் ஆண்டு இறந்தார்.
வால் ஸ்டிரீட் போராட்டம்: மிளகு ஸ்பிரே அடித்து மாணவர்கள் சித்ரவதை.
அமெரிக்காவில் வால் ஸ்டிரீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முகத்தில் பொலிசார் மிளகு ஸ்பிரே அடித்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியயோர்க் நகரில் உள்ள வால் ஸ்டிரீட்டில் ஆயிரக்கணக்கானோர் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.வங்கிகளின் அடாவடி, தொழிலதிபர்களின் ஆதிக்கம், வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நியூயோர்க் பொலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு மூலம் போராட்டக்காரர்களை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம்(20.11.2011) போராட்டம் நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பலரை பொலிசார் பிடித்து கைகளை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களை வரிசையாக உட்கார வைத்து அவர்கள் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து கொடுமைப்படுத்தினர். இந்த காட்சியை பலர் தங்களது கைபேசியில் படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் லிண்டா கடேஹி கூறுகையில், பொலிசாரின் இந்த நடவடிக்கை உறைய வைக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் மாணவர்களை பொலிசார் கொடுமைப்படுத்தியதற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேராசிரியர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர்.இதற்கிடையில் பொலிசாரின் சட்ட திட்டங்கள்படிதான் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அத்துமீறல் எதுவும் இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.
குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்க வேண்டாம்: ரகுமான் மாலிக் வேண்டுகோள்.
தீவிரவாத செயல்களில் ஈடுபட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு கல்வி கற்று கொடுங்கள் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.தீவிரவாத தாக்குதல்கள், தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஏழை சிறுவர்களை தலிபான் தீவிரவாதிகள் தேர்ந்தெடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மிர்புர் மாவட்டம் இஸ்லாம்கர் நகரில் பாஸ்போர்ட் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியதாவது: தீவிரவாதிகள் வன்முறையை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும். தீவிரவாத செயல்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு கல்வி கற்று கொடுங்கள்.
அதிபர் சர்தாரியின் முயற்சியில் இப்போது பாகிஸ்தானில் சிறுவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளாக மாறுவது குறைந்துள்ளது. பாகிஸ்தான் இளைஞர்கள் தற்கொலை படை தாக்குதலுக்கு குண்டுகள் நிறைந்த ஜாக்கெட் அணிவதை விடுத்து, கையில் புத்தகங்கள், பேனாக்களை வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது என்றார்.இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் அப்துல் மஜீத்தும் பங்கேற்றார்.
ஈரான் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.
ஈரானின் நிதி மற்றும் அணுசக்தி துறைகளின் மீது கனடா புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற தகவலை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டு தெரிவித்துள்ளார்.ஈரானின் மத்திய வங்கி உட்பட வேறு பல வங்கிகளோடும் எந்தவித நிதிப் பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று கனடா தடை விதித்துள்ளது.
ஈரானில் இருக்கும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தம் தாய்நாட்டில் உள்ள தன் உறவினர்களுக்கு பணம் அனுப்பலாம். இது தவிர கனடா நாட்டினர் எவரும் ஈரானோடு எந்த தொழில் தொடர்பும் வைக்கக்கூடாது என்று கனடா தெரிவித்துள்ளது.பொருளாதார நடவடிக்கைக்கான சிறப்புச் சட்டத்தின்படி கனடாவை சேர்ந்தவர்கள் ஈரானில் உள்ள 47 தனிமனிதர் மற்றும் 279 நிறுவனங்களோடு தொடர்பு இல்லாமல் தங்களுக்குள் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
ஈரானிய புரட்சிக் காவல்படையின் தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ள கனடா முறித்துக் கொள்ள விரும்புகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் சர்வதேசச் சமூகத்தோடு ஈரான் இசைந்து வராததேயாகும்.அணுசக்தி உற்பத்தியிலும் உள்ளுர் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதிலும் ஈரான் சர்வதேசக் கருத்துக்களை அலட்சியப்படுத்துகிறது.கனடாவின் இந்த நடவடிக்கைகளுக்கு புதிய ஜனநாயக் கட்சியின் வெளியுறவுத் துறை விமர்சகர் ஹெலினா லேவர்டீர் ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் கனடா தன் பழைய நட்புநாடுகளோடு மட்டுமின்றி சீனா, ரஷ்யா போன்ற நாடுகளோடும் புதிதாக நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த மாதம் கனடா கட்டுப்பாடுகளை விதித்த ஐந்து ஈரானியரில் நால்வர் இஸ்லாமிய புரட்சிப் படையைச் சேர்ந்தவர் ஆவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஐ.நா.பாதுகாப்புக் குழு நான்கு முறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதுதவிர கனடாவும் 2010ம் ஆண்டு யூலை மாதம் கூடுதலாகப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
இவ்வாறு புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குக் அடிப்படைக் காரணம் சர்வதேச அணு சக்தி அமைப்பு, ஈரான் ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கின்றது என்று நம்புவதே ஆகும். இன்னும் இவ்வாறான தயாரிப்புகளை ஈரான் செய்து வருவதாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த ஈரான் தான் அமைதி நாடியே அணுசக்தி முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தது.ஈரான் நாடு உலக பொருளாதார அமைப்பிலிருந்து தான் பிரிந்து விடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் ஈரானில் அணுசக்தி ஆய்வு மூலமாக கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற முயல்கின்றது என்று அமெரிக்காவின் நிதித் துறை தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிக்கு உதவுகின்ற தனிமனிதர்கள் மற்றும் பதினோரு அமைப்புகள் மீதும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் பெட்ரோ ரசாயணத் தொழிற்சாலைகளை மீது தாம் ஏற்கெனவே விதித்திருந்து கட்டுப்பாடுகளை விரிவாக்கியுள்ளது.உலக நிதியமைப்பில் இருந்து ஈரானின் மத்திய வங்கியை விலக்கி விடும் முயற்சியையும் அமெரிக்கா செய்கின்றது. எண்ணெய் விலை உயர்வு அமெரிக்காவையும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. இதற்கு தீர்வு காணவும் இந்நாடுகள் முயன்று வருகின்றன.
திங்கட்கிழமையன்று பிரிட்டன் தனது நிதி நிறுவனங்களை ஈரானிய நிதி நிறுவனங்களோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையிட்டது. ஈரானிய எண்ணெய் நிறுவனங்களோடு தொடர்பு வேண்டாம் என்று நேரடியாக பிரிட்டன் தெரிவிக்கவில்லை.
யூரோ பத்திரத்தால் கடன் தீராது: ஜேர்மனி கருத்து.
யூரோ மண்டல நாடுகளில் யூரோ பத்திரங்களை விற்பதால் அவற்றின் கடன் சுமை குறையப்போவதில்லை என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெலின் செய்தித் தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.இந்த யூரோ பத்திரங்களை விற்பது பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர் கூறியதாவது, கடனைத் தீர்க்க உருப்படியான ஒரு வழிமுறை கண்டறிய வேண்டும். பிரச்னையை அதன் ஆணி வேரோடு களைய விடாமல் இந்த யூரோ பத்திர விற்பனை நம்மைத் தடுத்துவிடும்.
இதுவரை கடனைக் குறைக்க ஆலோசிக்கப்பட்ட எந்த நடவடிக்கை குறித்தும் பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவில்லை. யூரோ பத்திரங்களை விற்பது குறித்தும் பொதுமக்கள் அறியவில்லை. திடீரென்று இவற்றை அறிமுகப்படுத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பதை எவரும் ஆலோசிக்கவில்லை.எனவே யூரோ பத்திரங்களை விற்பதை விட வேறு இரண்டு விடயங்களில் ஐரோப்பிய அதிகாரிகள் கவனம் செலுத்தலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நெருக்கடியைத் தீர்க்க முதலாவதாக அதன் உறுப்பினர் நாடுகளை நிதி நிலைப்பாட்டிற்கு உரிய பாதையில் வழி நடத்த வேண்டும். இரண்டாவதாக மெர்க்கெல் கூறுவது போல அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு மற்றும் வளர்ச்சிக்காக இதுவரை உருவாக்கிய ஒப்பந்தங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். யூரோ பத்திரத்திற்குப் பதிலாக நிலைப் பத்திரங்களை(Stability Bonds) உருவாக்கலாம் என்றார். கடன் கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு.இத்தாலியின் பிரதமர், பிரான்ஸ் அதிபர் ஆகியோரோடு ஜேர்மன் பிரதமரும் நடத்த இருந்த கூட்டம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராததால் அந்தக் கேள்விக்கு சீபெர்ட் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
யூரோ மண்டலத்தின் முக்கிய நாடாக விளங்கும் ஜேர்மனியின் கடன் இன்னும் சில ஆண்டுகளுக்குக் குறைய வாய்ப்பில்லை என்று மத்திய வங்கி திங்கட்கிழமை தெரிவித்தது.பல ஆண்டுகளாக கடன் GDPயில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்து வருவதாக பண்டெஸ்வங்கி தனது மாத அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனியில் முதியோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வருவாய் குறைந்து பராமரிப்புச் செலவு கூடுகிறது. இதனாலும் நாட்டின் கடன் சுமை கூடும்.மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணில் சென்ற ஆண்டு 83.2 சதவீதமாக இருந்த கடன் இந்த ஆண்டு 81.1 சதவீதமாக குறைந்து உள்ளது. முதல் அரையாண்டுக் கணக்கில் இந்த ஆண்டு 1 சதவீதப் பற்றாக்குறை குறைந்து இருப்பதாக பண்டெஸ் வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நிச்சயம் பாகிஸ்தான் திரும்பி விடுவேன்: முஷாரப்.
வருகிற 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பாகிஸ்தானுக்கு வந்து விடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீபின் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சியை பிடித்த முன்னாள் தளபதி பர்வேஸ் முஷாரப் 2001ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார்.அதன் பின்பு 2009ல் பதவி விலகியதும் அவர் மீது புதிய அரசு பல வழக்குகளை தொடர்ந்தது. அந்த வழக்குகளில் இருந்து சிக்காமல் தவிர்க்க லண்டனுக்கு தப்பி சென்றார்.
அங்கு தங்கியிருந்தபடி பாகிஸ்தானில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். விரைவில் தாயகம் திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக முஷாரப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் சிந்து மாநிலத்தின் ஐதராபாத் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் முஷாரப் நேற்று கைபேசியில் உரையாற்றினார். அப்போது முஷாரப் கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதம், வறுமை, பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மோசமான காலகட்டத்தை பாகிஸ்தான் கடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் சரி செய்தாக வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 23ம் திகதி பாகிஸ்தான் திரும்ப உறுதியாக உள்ளேன் என்றார்.
AAA தகுதியை இழக்கும் பிரான்ஸ்.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து கடன்சுமை அதிகரிப்பதாலும் பொருளாதார வளர்ச்சி குறைவதாலும் அதன் AAA தகுதியை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.
பொது நிதிப் பற்றாக்குறையும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் பிரான்ஸ் நாட்டின் AAA தகுதியைக் காப்பாற்ற இயலாமல் தடுக்கின்றன. இன்னும் மூன்று மாதத்தில் இந்த நிலை ஏற்படும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மோசமாகி வரும் பிரான்சின் பத்திரச் சந்தையும், அரசாங்கத்தின் கடன் நெருக்கடியும் யூரோ மண்டலம் முழுக்கப் பரவி வருகின்ற கடன் தொல்லையும் AAA தகுதிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரக் கணக்குப்படி ஜேர்மனி தன் நீண்டகாலக் கடனுக்குக் கட்டும் தொகையைப் போல பிரான்ஸ் இரண்டு மடங்கு தொகை கட்டுவதால் 100 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கும் போது ஒரு ஆண்டுக்கு மூன்று பில்லியன் யூரோ அதிகரிக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
பல தொழில் முதலீட்டாளர்கள் பிரான்சின் AAA தரம் குறைந்து வருவதை ஊகித்ததால் அடுத்த ஆண்டில் பொருளாதார நெருக்கடி தோன்றும் என்று கருதுகின்றனர்.தற்போதைய சூழலில் பிரான்சின் தகுதி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என ஒலிவியல் பிஸிமேனா குறிப்பிட்டார். மற்ற AAA தகுதி நாடுகளை விட பிரான்சின் பொதுநிதி நிலை மிக மோசமாக இருக்கின்றது மேலும் மத்திய வங்கியின் ஆதரவும் இதற்குக் குறைந்து விட்டது என்றும் தெரிவித்தார்.
தலிபான் தீவிரவாதிகளுடனான சமரச பேச்சுவார்த்தை தொடக்கம்.
பாகிஸ்தான் அரசுடன் தலிபான் தீவிரவாதிகள் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர். அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன.அதற்கு பழி வாங்குவோம் என்று அல்கொய்தா தீவிரவாதிகளுடன் மிக நெருக்கமான தெரிக் தலிபான் தீவிரவாதிகள் கூறினர்.
அதன்பின் பாகிஸ்தானிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அமெரிக்க வீரர்கள் அமெரிக்கர்களை குறி வைத்து ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்க படையினரும் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் வன்முறையை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதன்படி பாகிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சு நடத்த தலிபான்கள் முன்வந்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். மேலும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வருவது மிக கடினம்.எனினும் இந்த பேச்சு தொடக்கம்தான். முதல் கட்டமாக பழங்குடியின மக்கள் வசிக்கும் தெற்கு வசிரிஸ்தான் பகுதி பிரச்னை பற்றி மட்டும்தான் பேச்சு நடத்துவோம்.இதில் வெற்றி கிடைத்தால் மற்ற பழங்குடியின பகுதிகள் பற்றியும் பேசுவோம் என்று தலிபான் கமாண்டர் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF