Friday, February 24, 2012

NEWS OF THE DAY.

பொன்சேகா மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவரைக் காப்பாற்றத் தயார்!– சம்பிக்க.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவரைப் பாதுகாக்கத் தயார் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா வேறும் ஓர் குற்றச் செயலுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டால் அரசாங்கம் பொன்சேகாவை பாதுகாக்கும்.நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது.இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்கம் இடமளிக்காது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
687 பேரின் தொலைபேசி உரையாடல்களை அரசாங்கம் இரகசியமாக செவிமடுக்கின்றது.
இலங்கையில் 687 பேரின் தொலைபேசி உரையாடல்களை அரசாங்கம் இரகசியமாக செவிமடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.124 ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் உரையாடல்களையும் அரசாங்கம் இரகசியமாக செவிமடுக்கின்றது.
சீன தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரின் n;தாலைபேசி உரையாடல்களும் இரகசியமாக செவிமடுக்கப்படுகின்றது.தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதற்காக பாரியளவில் பணம் செலவிடப்படுகின்றது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்,
இதேவேளை, உலகின் பல நாடுகள் இவ்வாறு புலனாய்வுத் தேவைகளுக்காக தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக செவி மடுப்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.இவ்வாறு தகவல்களை திரட்டுவதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விலையேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷிராந்தி ராஜபக்சவை இணையுமாறு பெண்கள் அமைப்பு அழைப்பு.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான தமது போராட்டத்தில் முதல் பெண்மணியான ஷிராந்தி ராஜபக்சவை இணையுமாறு பெண்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இப்பெண்கள் அமைப்பானது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஆகியோருடன் இன்னும் பல பெண்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அமைப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான தமது போராட்டத்தில் முதல் பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷவை இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது.தமது அரசியல், சமயம், இனம் என்பவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு பெண்ணும் இந்த இயக்கத்தில் சேரவேண்டுமென இந்த இயக்கத்தின் தலைவியான விசாக தர்மதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
சடுதியான இந்த விலை அதிகரிப்புகள் மக்கள் வயிற்றிலடிப்பதாகும் என அனோமா பொன்சேகா கூறினார்.தனது கணவனின் ஓய்வூதியம் பறிக்கப்பட்டுள்ளதால் தனக்கு வருமானம் ஏதும் இல்லையெனவும் இதனால் வாழ்க்கை செலவு அதிகரிப்பின் நெருக்குவாரத்தை தன்னால் விளங்க முடிகின்றது என அவர் கூறினார்.
மண்ணெண்ணெய் விலையேற்றம் பற்றி கடல்தொழிலாளர்களின் மனைவியர்கள் என்னிடம் கூறியபோது அவர்களின் சோகத்தை என்னால் காணமுடிந்தது.நாம் ஏன் அமைதியாக இருக்கின்றோம். நாம் துணிந்து பேச வேண்டிய காலம் வந்துவிட்டது' என அவர் கூறினார்.
பாண் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு.
நாடு முழுவதும் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கையில் எரிபொருள் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக சங்கம் விடுத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் படிப்படியாக உயர்ந்து செல்வதால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
27ம் திகதி கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது!– இனாமலுவே சுமங்கல தேரர்.
எதிர்வரும் 27ம் திகதி கோமாளித்தனமான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது என தம்புள்ளை இனாமலுவ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள 27ம் திகதி இலங்கையில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கோமாளித்தனமான செயலாகும்.
உண்மையில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகவே இந்தத் திட்டத்தை கருத வேண்டும்.இவ்வாறான நகைச்சுவைகளினால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை மேலும் ஓரம் கட்டப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.எனவே, புத்திக் கூர்மையுடனும், சாணக்கியத்துடனும் இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும் என சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்திருந்தார்.
இறுதிப் போரில் 9000 பேர் பலி!- இலங்கை அரசாங்கம் அறியத்தரும் முதலாவது புள்ளிவிபரம்!
இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியக்கிடைத்திருக்கிறது.
இவற்றில் 7,000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும்.இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் செவ்வி கண்டு இந்த தகவல்களை வெளியிட்டிருந்தனர்.இந்த மரணங்களின் புள்ளி விபரம் மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவை.
அந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் - அதாவது போரின் இறுதி நாட்களில்- 7400 பேர் ''பிற'' என்று கூறப்படும் காரணத்தினால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு அவர்களது இறப்புக்கான காரணம் கூறப்படவில்லை.அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை செய்தோ இறக்கவில்லை ஆகவே அவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம்.
இறுதிப் போரின் இரத்தக்களரி இடம்பெற்ற முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.மேலும் 2009 ஆண்டு முழுவதிலுமாக 2600 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இந்த இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ''சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்'' என்று ஒப்புக்கொண்டதுடன் இது ஒத்துப் போகிறது.
ஐநா ஆரம்பத்தில் கணித்த எண்ணிக்கையுடன் இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை ஒத்துப்போகிறது. ஆனால் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட 40,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டதில் இருந்து இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.அதேவேளை பிறிதொரு நிகழ்வாக ஐ.நா.வின் மூத்த அதிகாரியான லூயிஸ் பிரச்செட் அவர்களால், இலங்கையின் இராஜதந்திரியான சவேந்திர சில்வா ஒரு ஐ.நா. ஆலோசனைக்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டமை குறித்து ஐ.நா.வுக்கான இலங்கையின் குழு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிய நாடுகளால் இந்தக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சவேந்திர சில்வாவை விலக்கி வைப்பதில் ஐநா உயர் அதிகாரி ''அராஜகமாக, சகிக்க முடியாத '' வகையில் நடந்துகொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.சவேந்திர சில்வாவால் தலைமை தாங்கப்பட்ட இராணுவ பிரிவு, ஐ.நா.வின் குழுவினால், போர் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிப்பு!
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து, இன்று குருநாகலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டம், குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி தொழுகை முடிந்ததுடன் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது.அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தினை எதிர்த்து, ஆளும் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான் ஒரு அப்பாவி: முபாரக்.
நான் ஒரு அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை என எகிப்தின் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.எகிப்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதனால் இராணுவத்தினர் போராட்டக்காரர்களை தாக்கியதில் 900-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் முபாரக் பதவி விலகினார். அதன் பின் இவர் மீது ஊழல், கொலை மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டு கெய்ரோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையில் ஜனாதிபதியின் சார்பில் அவரது வக்கீல் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.அதில், என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நான் ஒரு அப்பாவி, எகிப்து நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று முபாரக் தெரிவித்துள்ளார்.
யூரோ நாடுகளில் பொருளாதார பின்னடைவு.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் இந்த ஆண்டில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கணித்துள்ளது.அண்மைய காலங்களில் நிதிச் சந்தைகள் மந்தமடைந்து வருகிறது என தகவல்கள் வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இந்த ஆண்டு யூரோ நாடுகளின் பொருளாதாரம் 0.3 சதவீதம் சுருங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவான ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.யூரோ நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி என்பது சிறிய அளவிலானது என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஓலி ரெயின், அவை ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய ஆணையம், யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதாரம் 0.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணித்திருந்தது.இதனிடையே பிரெஞ்சு வங்கியான கிரெடிட் அக்ரிகோல், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் நான்கு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கிரேக்கத்தின் கடன் நெருக்கடியின் காரணமாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கிரெடிட் அக்ரிகோல் தெரிவித்துள்ளது.
ஏழை நாடான மியான்மரில் திடீர் பொருளாதார மாற்றம்.
இராணுவ ஆட்சியால் உருக்குலைந்து போன் மியான்மர் நாட்டில் தற்போது அதிவேக மாற்றம் காணப்படுகின்றது.காரணம் கடந்த சில மாதங்களாகத்தான் அங்கே சற்று ஜனநாயகத்துடன் மக்கள் வாழ ஆரம்பித்திருக்கின்றனர். பொருளாதாரத்தை வளத்தை மக்கள் விரும்புகின்றனர்.ஆசியா கண்டத்தில் நோயுற்ற நபர் என்று வடகொரியாவை எல்லோரும் அழைப்பர். அதைவிட மோசமாக எப்போதும் அன்னிய உதவியை எதிர்பார்த்து ஏழை நாடாக பேசப்படுவது மியான்மர் ஆகும்.
மியான்மருக்கும், சீனாவுக்கும் இடையே தொடர்பு அதிகம், இரு நாடுகளும் 2000 கி.மீ எல்லைக் கோட்டைக் கொண்டிருப்பவை. தற்போது மியான்மரின் ஜனாதிபதியாக இருக்கும் தீன்செய்ன் அதிக அளவு சீனாவுடன் அதிக உறவு பூண விரும்பவில்லை.அவர் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த பொருளாதார வளர்ச்சிக் கருத்தரங்கில் பேசிய பேச்சுகள் இதைப் பிரதிபலித்தன. தவிரவும் மியான்மரில் மைஸ்டோன் அணை கட்ட, சீனா 15 ஆயிரம் கோடி வரை நிதி உதவி தர முன்வந்ததை, ஜனாதிபதி தீன்செய்ன் ஏற்கவில்லை என்பது இதை வலுவூட்டுகிறது.
மியான்மரில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களைப் பொருளாதார அளவில் வலுவாக்க சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் உதவுமா என்ற கேள்வி அங்கே எழுந்திருக்கிறது.எல்லா நாடுகளும் சந்திக்கும் உணவுப் பொருள் பணவீக்கம் தற்போது மியான்மரை வாட்டுகிறது. வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகமும் இல்லை என்று கூறி கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்காலத்தில் காணப்படாத அக்கறை இப்போது அங்கே புதிதாக முளைத்திருக்கிறது.
எல்லா நாடுகளும் தாராளப் பொருளாதாரமயத்தைப் பின்பற்றி வசதியைப் பெருக்கும் போது மியான்மர் ஏன் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற கேள்வி தான் இம்மாற்றத்திற்கு காரணம்.மியான்மரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் ஏராளமாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் எட்டு நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய்க்கான எண்ணெய் துரப்பணப் பணிக்கான டெண்டர்களை அரசு வழங்கியது.
சர்கோசிக்காக பதவி விலகிய பெண் அமைச்சர்.
பிரான்சின் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்காக பெண் அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவதையொட்டி ஏப்ரல் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் அவர் போட்டியிடுவதால், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.இந்நிலையில் பிரான்ஸ் சுற்றுச்சூழல் துறையை நிர்வகிக்கும் பெண் அமைச்சர் நதாலி கொஸ்சிஸ்கோ பதவியை திடீரென்று ராஜிமானா செய்வதாக அறிவித்துள்ளார்.இவர் ஜனாதிபதி சர்கோசிக்கு செய்தி தொடர்பாளராக பணியாற்றுவதற்காக பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு.
சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “உலக மாநாடு” துனிஷியாவில் நடைபெறவுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.இப்போராட்டத்தில் போராட்டக்காரர்களை இராணுவம் கொன்று குவிக்கிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா அறிவித்துள்ளது.
சமீபத்தில் சிரியாவின் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் சிரியாவுக்கு எதிரான உலக மாநாடு துனிஷியாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு கூட்டமைப்பு நாடுகள் உட்பட 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த பகுதிகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வது குறித்து விவாதிக்கப்படும்.மேலும் சிரியாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் கோபி அன்னான் சிரியாவின் தூதுவராக நியமிக்கப்படுவார். இவர் ஐ.நா பொதுச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலில் ஒரே நாளில் மட்டும் 50லிருந்து 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு .
ஆப்கானிஸ்தானத்திலிருந்து போர் விமானங்களை பிரான்ஸ் திரும்பப் பெறுகின்றது.கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் தனது படைகளை திரும்ப பெற்று வருகிற பிரான்ஸ், எதிர்வருகிற 2013ம் ஆண்டிற்குள் மொத்த இராணுவத்தையும் திரும்ப பெற்று விடும் என்று பிரான்ஸ் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.மேலும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த ஃஹர்ஃபாங் ரக ஆளில்லா போர் விமானங்கள் இரண்டை, தனது நாட்டுக்குத் திரும்பப் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்த விமானத்தை இயக்குகின்ற 40 பேரும் தனது நாட்டுக்குத் திரும்பி விடுவார்கள் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு படைவீரர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டதால் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தனது படைகளைத் திரும்பப் பெற முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த சிறுவர்கள் அனாதைகளாக அலையும் அவலம்.
பிரிட்டன் நாட்டிற்கு புகலிடம் தேடி வந்தவர்களில் பல குழந்தைகள் அனாதைகளாக இருக்கின்றனர் என சிறுவர் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.தன் நாட்டை இழந்து உதவி கேட்டு பிரிட்டனுக்கு புகலிடம் நாடி வந்த குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் உணவும், குடியிருக்க வீடும் இன்றி அலைகின்றனர்.இதுகுறித்து பிரிட்டனின் தொண்டு நிறுவனம் கூறுகையில், தங்களிடம் உதவி கேட்டு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இன்னும் எத்தனை சிறுவர்கள் ஆதரவற்ற நிலையில் தெருவில் திரிகின்றனர் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் கூறியது.
இந்த தொண்டு நிறுவனம் இலண்டன், மிட்லாண்ட்ஸ் மற்றும் வடபகுதிகளில் மட்டுமே பணிகளை செய்வது குறிப்பிடத்தக்கது.தொண்டு நிறுவனத்தின் கொள்கை இயக்குநர் என்வெர் சாலமோன் கூறுகையில், இந்தச் சிறுவர்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகின்றனர் என்றார். மேலும் பிரிட்டனின் எல்லை முகமைக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் இவர்களைப் பாதுகாக்கும் கடமை உண்டு என்றார்.
புலம் பெயர்ந்தோருக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதிக முக்கியத்துவம் தருகிறது. இருப்பினும் சிறுவர்கள் நலத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை.எனவே தான் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இருட்டில் வாழ்கின்றனர் என்று கூறிய சாலமோன் அரசு உடனடியாக இந்தச் சிறுவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
வளர்ப்பு நாய் பிறந்து 2 நாட்களேயான குழந்தையை கொன்ற பரிதாபம்.
கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள அல்பெர்ட்டா மாகாணத்தில் வசிக்கும் ராப் மற்றும் ரோண்டா ஃபிராடெட் தம்பதியினர் நாய்களைத் தொழில்ரீதியாக வளர்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 13ம் திகதி அன்று ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடந்த தினத்தன்று குழந்தை அழுது கொண்டிருந்தது, எனவே அழுத குழந்தையை  சமாதானப்படுத்துவதாக நினைத்து, தன் குட்டிகளை கவ்வியிழுத்து தன்னிடம் அணைத்து வைப்பது போல குழந்தையின் தலையை பிடித்து அந்த நாய் கவ்வியிழுத்தது. இதனால் அந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மறுநாள் இறந்தது.
குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில், எங்களது வளர்ப்பு நாய் என்ன நினைத்து இந்த செயலை செய்தது என்று தெரியவில்லை. தற்போதைய நிலைமையில் நடந்ததை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இனி எங்கள் துயரத்தை ஆற்றி நாங்கள் அமைதி பெற வேண்டும் என்றனர்.ஏர்டிரீ நகராட்சியின் தலைவரான டேரில் போபரான் கூறுகையில், விலங்கு நடத்தை சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நாயின் நடத்தை மதிப்பிடப்படும். பின்பு நாயைப் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
அமெரிக்காவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து: 7 பேர் பலி.
அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில் உள்ள யுமா என்ற இடத்தில் கடற்படையில் பணியாற்றும் விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதில் கோப்ரா வகை ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி விழுந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.வானிலை மோசமாக இருந்த காரணத்தால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் இதே போன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு பெண்களின் உடல் உறுப்புகளை வெட்டி நரபலி.
தான்சானியா நாட்டில் 6 பெண்களின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து நரபலி என்ற பெயரில் மந்திரவாதி பூஜை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய நவீன உலகில் ஆப்பிரிக்க மக்கள் மந்திரவாதிகளை நம்புவது வழக்கமாகவே உள்ளது. இதனால் அங்கு மக்களை மந்திரவாதிகள் எளிதில் ஏமாற்றிவிடுகிறார்கள்.மேலும் நோய் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதை விட மந்திரவாதிகளிடம் செல்வதையே மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி உள்ளனர்.மேலும் அந்த பெண்களை துண்டு துண்டாக வெட்டி அவர்களின் உறுப்புகளை எடுத்து சென்று இந்த பூஜைகளை செய்து இருக்கிறார்கள்.
மனித உறுப்புகளை வைத்து பூஜை செய்தால் பணக்காரர்கள் ஆகலாம் என்ற நம்பிக்கை தான்சானியாவில் பலரிடம் உள்ளது. அவர்கள் மந்திரவாதிகளை அமர்த்தி பெண்களை கொன்று பூஜை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.இந்த விடயம் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
நவீன நாஜிக்கும்பலால் கொல்லப்பட்டவர்களுக்கு அரசின் நினைவஞ்சலி.
ஜேர்மனியில் நவீன நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு பெர்லின் மாநகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.நாடு முழுவதும் இவர்களுக்கு நண்பகலில் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கலந்து கொண்டார்.கடந்த 2000ம் ஆண்டு முதல் 20006ம் ஆண்டு வரை தேசிய சோசலிச ரகசிய அமைப்பான NSU ஜேர்மனியர் அல்லாதவர்களைத் தேடிப் பிடித்து கொலை செய்து வந்தது. இதில் இறந்து போன ஒன்பது பேரும் சிறு வியாரிகள்.
இதில் எட்டு பேர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர், ஒருவர் கிரேக்கர். இவர்கள் தவிர இந்தக் கும்பலால் ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கும்பலைச் (NSU) சேர்ந்த மூவர் திட்டமிட்டு இந்த இனப்படுகொலையைச் செய்துள்ளனர் என்பதை அறிந்த பிரதமரும், பொதுமக்களும் மிகவும் வருந்தினர்.கெண்டார் மென்மார்க்ட் சதுக்கத்தில் உள்ள கான்செர்ட் ஹவுஸில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இந்த இனப்படுகொலை நம் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இறந்துபோன பத்துப்பேர் நினைவாக பத்து மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. பிரதமர் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். இன்று இங்கு நீங்கள் வந்திருப்பது எவ்வளவு மனவேதனையானது என்பதை நான் உணர்கிறேன் என்று கூறி தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.ஜேர்மனியில் உள்ள துருக்கியின் தூதுவரான கெனான் கோலட் கூறுகையில், அரசு இந்த நினைவுக் கூட்டம் நடத்தியதைத் தான் வரவேற்பதாகவும், 1990ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே நடந்து வந்த இனவெறிக் கொலைகளைப் பற்றி இப்போதாவது அரசியல் தலைவர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்ததாகவும் வருந்திக் கூறினார்.
பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின் கொலை: சிரியா மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு.
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மேரி கால்வினுக்கு உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவரது சக ஊழியர்கள் அவரை தைரியமான போர்க்கள நிருபர் என வர்ணித்துள்ளனர்.பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கூறுகையில், சிரியாவில் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியாவில் ஏற்படும் உண்மையான இழப்புக்களை வெளி உலகிற்கு அறிவித்து விட்டு இரு பத்திரிக்கையாளர்களும் மரணித்து விட்டனர் என தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அழுத்துங்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சொக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனை: பரிதாபமாக உயிரிழந்த சிறுமி.
சொக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனையாக நிற்காமல் 3 மணி நேரம் ஓடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அவளது மாற்றான் தாய் ஜெசிகா மே ஹார்டின்(27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட்(47) ஆவர்.கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி சவன்னா சொக்லேட் சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.
ஓடி, ஓடி கலைத்த சிறுமி இறுதியில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ஜெசிகா மற்றும் ஜாய்ஸை கைது செய்தனர். சவன்னாவை மிரட்டி ஓடச் செய்தார்களா அல்லது அடித்து ஓட விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF