Sunday, February 19, 2012

NEWS OF THE DAY.

வெளிநாட்டு வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் கடமைகளில் ரக்னா லங்கா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனம் வெளிநாட்டு வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரக்னா லங்கா என்ற பாதுகாப்பு நிறுவனம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் மற்றும் அரேபிய கடற் பகுதிகளில் பயணம் செய்யும் வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இந்த பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக ஆயுதங்களுடன் குறித்த பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கப்பல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடற் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 200 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு கப்பலிலும் இரண்டு முதல் மூன்று உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தருக்கு தலா ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட உள்ளது. முன்னாள் படையதிகாரிகளே இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இல்லை! ஓய்வு பெறத் தீர்மானம்.
இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உரிய முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால் ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.கனிஸ்ட நிலைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் கடும் அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உரிய தகுதிகளைக் கொண்டிருந்தும் கிரமமான முறையில் தமக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 80 ஆயிரம் உத்தியோகத்தர்களுக்கு உரிய முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. இவ்வாறு இழைக்கப்பட்டுள்ள அநீதியினால் பொலிஸ் திணைக்களம் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கடைநிலை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக, 22 ஆண்டு சேவையை பூர்த்தி செய்த பலர் தமக்கு ஓய்வு வழங்குமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளனர்.
2006ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கடைநிலை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.பதவி உயர்வுகள் தொடர்பில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாமையினால் பலர் தொடர்ந்தும் ஒரே பதவியை வகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொருட்கள் சேவைகளுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடும்.
இலங்கையில் பொருட்கள் சேவைகளுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடும் என நிதி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்தின் கடன் தொகையை குறைப்பதற்கு வரி அறவீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டால் அதன் சுமையை நுகர்வோரே பொறுப்பேற்க நேரிடும்.இதன்படி பொருட்கள் சேவைகளுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பேக்கரி உற்பத்திகள், பால் மா உள்ளிட்ட பலவற்றின் விலையை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரயில் கட்டணங்களும் உயர்த்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகரில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் சாப்பு சட்டம்.
கல்முனை மாநகரில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் சாப்பு சட்டம் தமிழ் வர்த்தகர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக பதவி அமர்ந்திருக்கும் மேயரால் கொண்டு வரப்பட்டிருக்கும் இச்சட்டமானது, கல்முனை மாநகரின் மருந்து மற்றும் ஹோட்டல் கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் வெள்ளி கிழமைகளில் திறக்க கூடாது என்றும் அதை மீறி திறக்கும் பட்சத்தில் பொலிசாருடன் இணைந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து, கல்முனை தமிழ் வர்த்தகர்கள் இச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு குறித்த தினத்தில் தங்களது வர்த்தகத்தை மேற்கொள்வதற்குரிய அனுமதியை கல்முனை மாநகர சபை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமையல் எரிவாயுவின் விலைகளும் அதிகரிக்கப்படுமாம்.
சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்குமாறு இரண்டு நிறுவனங்களினால் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் எரிவாயுவின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இப்போது 12.5 கிலோகிராம் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்றின் விலை 2,060 ரூபா விற்கப்படும் நிலையில் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தினையடுத்து 2500 ரூபா வரை புதிய விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா கடத்திய விமானப்படை வீரர் கைது.
அனுராதபுரம் விமானப்படை முகாமில் கடமையாற்றிய விமானப் படை வீரர் ஒருவர் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விமானப்படை வீரரிடமிருந்து நான்கு கிலோ கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வெல்லாவாய பிரதேசத்திலிருந்து கஞ்சா கடத்தியுள்ளதாக, வட மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சமாதானம் இல்லையேல் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது: ஜனாதிபதி.
நாட்டில் சமாதானம் இல்லையென்றால் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அபிவிருத்திக்கும் சமாதானத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நாட்டில் மீண்டும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எனது பிரதான இலக்காகும் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் உள்ளிட்ட கசப்பான அனுபவங்களை நாம் மறந்து விட வேண்டும். சில தரப்பினரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக நேரத்தை விரயப்படுத்த தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
போர்க்குற்றச்சாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்ள இலங்கையிலிருந்து பாரிய குழு ஜெனீவா பயணம்!
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில்- பெரியதொரு அணியை இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.இலங்கைக்கெதிராக எடுக்கப்படும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக எடுத்துள்ள அதிகாரபூர்வ முடிவை அடுத்து, ஜெனிவா கூட்டத்தொடருக்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழு 52 பேர் அடுத்தவாரம் பயணமாகவுள்ளனர்.இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுக்கு அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களேயான நிலையில், இதனை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற வாதத்தையே இவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கிம், றிசாத் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
நாட்டில் பாரியளவு போராட்டம் வெடிக்கும்!- புலனாய்வு பிரிவினர்.
நாட்டில் பாரியளவில் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தை விடவும் மோசமானதாக இந்தப் போராட்டங்கள் அமையக் கூடும் என புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்திற்கு வழி கோலும் எனவும் இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடையக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.கட்சி பேதமின்றி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பிரஜையின் தந்திரத்தினால் மாட்டிக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி! கட்டுநாயக்க விமானநிலையத்தில் சம்பவம்.
எழுபது இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் வந்திறங்கிய இந்தியப் பிரஜையின் தந்திரமான செயற்பாட்டினால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியொருவர் கையும்மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிங்கபூரிலிருந்து நேற்று மாலை இலங்கை வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்தியப் பிரஜையொருவர் கொண்டு வந்த ஒரு கிலோ 62 கிராம் நிறையுடைய தங்க நகைகளடங்கிய பொதியை தந்திரோபாயமாக கட்டுநாயக்காவில் உள்ள பாதுகாப்பு அதிகாரியொருவரிடம் கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
குறித்த அதிகாரி அதனை எடுத்து வரும் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா ஒரு இலட்சம் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் 33 தங்க மாலைகள், 45 வளையல்கள், 67 பென்டன்ட்கள் இருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கனடாவை நேசிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்.
கனடாவை நேசிக்கும் நாடுகளைப்பற்றி கடந்த இருபது ஆண்டுகளாக நடத்து வந்த புதிய ஹலப்(Gallup) ஆய்வின் முடிவில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு 93 சதவீதம் மக்கள் கனடாவை நேசித்தனர்.இதனை அடுத்து கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த புதிய ஹலப்(Gallup) ஆய்வில் 96% பேர் கனடாவை நேசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டு கேல்கரியில் உள்ள குழாய் எரிவாயு திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தடைவிதித்தாலும் இரண்டு நாடுகளிடையே தொழில் ஒப்பந்தங்களில் சில பிரச்னைகள் இருந்தபோதிலும் அமெரிக்க மக்களின் அன்பு குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.கனடாவின் சுற்றுப்புறச் சூழல் துறையின் அமைச்சரான பீட்டர் கெண்ட், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், கனடா உலக வெப்பமயமாதலை எதிர்ப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்த சில மணிநேரங்கள் கழித்து இந்த ஹலப்(Gallup) ஆய்வு முடிவு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் பாதுகாப்புச் செயலரான ஜேனட் நேப்போலிட்டானோவிடம், பஃபலோவின் அமைதிப்பாலத்தை சோதனைச் சாவடியாக அறிவிக்குமாறு வலியுறுத்தியதற்கு கனடா எதிர்ப்பு தெரிவித்தது.அந்தப் பாலம் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே அங்கு சோதனைச் சாவடி அமைக்கக் கூடாது என்றும் கனடாவின் டெமாக்ரட்டிக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரையான் ஹிக்கின்ஸ் வலியுறுத்திக் கூறினார்.
இது போன்ற கருத்து வேறுபாடுகள் இரண்டு நாடுகளுக்கிடையே இருந்த போதிலும், கனடாவை அமெரிக்க மக்கள் விரும்ப காரணம், கனடாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. மேலும் கனடிய மக்கள் அமெரிக்க தூதரகங்களை ஒருபோதும் தாக்கியதும் இல்லை ஏவுகணைகளை அனுப்பியதில்லை.போதைக் குற்றங்களால் அல்லது வேறு அமைப்புசார்ந்த குற்றங்களால் பிரச்னை எதுமில்லை. எனவே அமெரிக்க மக்கள் உண்மையாகவே கனடாவை நேசிக்கின்றனர்.
கனடாவை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலிய மக்கள் 93 சதவீதமும் பிரிட்டன் நாட்டு மக்கள் 90 சதவீதமும் நேசிக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மக்கள் 10 சதவீதமும், வடகொரிய மக்கள் 13 சதவீதமும், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் 14 சதவீதம் என மிகக் குறைவாகவே கனடாவை நேசிக்கின்றனர்.கியுபா நாட்டு மக்கள் 1996 ஆம் ஆண்டு 10 சதவீதம் மட்டுமே நேசித்தாலும் பின்பு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு 36 சதவீதமாகி தற்பொழுது 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹைதி ஜனாதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்.
ஹைதி நாட்டு ஜனாதிபதி மைக்கேல் மார்டெல்லி மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஜனாதிபதி மார்டெல்லி நேற்று முன்தினம் நண்பகலில் தனது மாளிகையிலிருந்து சாம்ப்ஸ் டி பிளாஸ் என்ற இடத்துக்கு பாதுகாவலர்களுடன் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அருகிலுள்ள ஹைதி பல்கலைக்கழகத்தில் பதுங்கியிருந்த சிலர், அவர் மீது கருங்கற்களை வீசி எறிந்துள்ளனர். ஜனாதிபதி தன் மீது கற்கள் படாதவாறு குனிந்து தப்பித்துக் கொண்டார் என்று ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உடன் வந்த பாதுகாவலர்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியவர்களை எச்சரித்துள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.பாதுகாவலர்கள் மார்டெல்லியை பாதுகாப்புடன் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் மாளிகையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் மீண்டும் நடந்தே சென்றார் ஜனாதிபதி.
ஹைதி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ள முடியாது. மார்டெல்லி இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர்.இது தொடர்பாக ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலகிலேயே சீனாவில் தான் பள்ளிக் குழந்தைகள் புகைபிடிப்பது அதிகரிப்பு.
உலகிலேயே சீனாவில் தான் 30 கோடிக்கும் அதிகமான நபர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இவர்களில் வளரிளம் பருவத்தினர் தான் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சீன அரசின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் ஹூவாங் ஜீபூ வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர் புகை பிடிக்கின்றனர். புகை பிடிக்கும் பழக்கமே இல்லாமல், ஆனால் புகை பிடிப்பவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுபவர்கள் மட்டும் 74 கோடிப் பேர்.
புகையிலை தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் சீனாவில் 12 லட்சம் பேர் இறக்கின்றனர். அதேநேரம் புகை பிடிக்கும் பழக்கத்தில் சிக்கும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டில் சீன புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பு 800 பள்ளிகளில் புகையிலைப் பழக்கம் தொடர்பான ஆய்வுகளை நடத்தியது. இதில் இவற்றில் 2 சதவீதம் பள்ளிகள் மட்டுமே புகைப் பழக்கம் இல்லாத சூழல் கொண்டதாக இருந்தன.புகைப் பழக்கம் இல்லாத சூழல் கொண்ட பள்ளிகளான இவையும், 100க்கு 60 புள்ளிகள் மட்டுமே வென்றன. 83.63 சதவீதம் பள்ளிகள் இதில் 40க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றன. பீஜிங், ஜெங்ஜோவூ மற்றும் காய்பெங் ஆகிய நகரங்களில் தேசிய அளவில் புகைப் பழக்கம் இல்லாத 30 வகையான பள்ளிகளை இந்த அமைப்பு தொடங்கியுள்ளது.
ஈரான் விவகாரம்: ஒபாமாவின் ஆலோசகர் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த தாய்லாந்து தலைநகர் பாங்காங் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான டாம் டோனிலோன் அவசர பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டு செல்கிறார்.அங்கு அவர் 2 நாட்கள் தங்கி இருந்து ஈரான், சிரியா விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஈரான் நாடு சமீபத்தில் அணு உலையில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது என்றாலும் அணு உலை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அந்த நாடு அறிவித்துள்ளது.இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சற்று நிதானிக்க வைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் உள்நாட்டு கலவரம் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே ஈரான், சிரியா நாடுகளின் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க சிறப்பு தூதர் ஆலோசிப்பார் என தெரிகிறது.
ஹாண்டுரஸ் தீ விபத்து: பலியானவர்களின் உடல்களை அடக்கும் பணி தொடக்கம்.
மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுரசில் உள்ள சிறையில் நடந்த மோசமான தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்தது.மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இருவர் பலியானதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 356லிருந்து 358 ஆனது.இந்நிலையில் பலியானவர்களின் சடலங்களை எரியூட்டும் பணி தொடங்கியது.
போராட்டத்தை ஒடுக்க புது வித வழி.
இணையம் மூலம் உருவாகும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக புதுவித தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் நூற்றுக்கணக்கான அரசு எதிர்ப்பாளர்களின் கணணிகள் பழுதடைந்திருக்கின்றன.
ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளர்கள் ஒருவித வைரஸ் மூலம் எதிர்ப்பாளர்களின் இணைய முகவரிகளை களவாடுகின்றனர். இந்த முகவரி மற்றும் கடவுச்சொற்களை உபயோகித்து சாட்டிங் செய்கின்றனர்.சாட்டிங் செய்யும் நபர்களுக்கு நண்பர்கள் போன்று பழகி, பிறகு வைரஸ்களை அவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். எனவே இந்த வைரஸ் மூலம் கணணி பாதிப்புக்குள்ளாகிறது.
இத்தகைய வைரஸ்கள் டிசம்பர் 6 மற்றும் ஜனவரி 16ந் திகதி முதல் இறக்கிவிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பெண்மணி இத்தகைய வைரஸை சந்திக்க நேர்ந்ததை விவரித்து கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக சிரியாவுக்கு ஜனவரி மாதம் சென்றிருந்தேன்.அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை ஸ்கைப் வழியாக சாட்டிங் செய்ய அழைத்தேன். என்னுடன் பேசியது அரசுக்கு ஆதரவானவர் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
சில நாட்களுக்குப் அரசுக்கு எதிரானவர்கள், நான் சாட்டிங் செய்த நபர் தடுப்புக் காவலில் இருப்பதாகக் கூறினர், கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.இப்பொழுதும் சிரிய அரசு மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ளன. மென்பொருள் பொறியியலாளர் ஒட்மானுக்கு மற்றும் ஒரு அனுபவம், பேஸ்புக் லோகோவை அனுப்பி திறந்து பாருங்க.. ஒன்றுமில்லை என்ற மெசேஜ் வேற இணைத்திருக்கின்றனர்.
சந்தேகப்பட்ட ஒட்மான், இந்த வைரஸை கலிபோர்னியாவுக்க்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார். அப்போது அது வைரஸ் என உறுதி செய்யப்பட்டது.brute என்று பெயரிடப்பட்ட வைரஸுக்கு அர்த்தம் வேற வைச்சிருக்காங்களாம். அரசு அடக்குமுறையை வெளிப்படுத்தத்தான் இத்தகைய வைரஸாம்.இணையத்தை வைத்து கலகம் மட்டும் விளைவிக்க முடியுமா? அதே கலகத்தை அதே சாதனம் மூலம் அடக்கவும் முடியும் என்கிறார்கள்.
இராணுவத்தின் அட்டூழியத்தால் சிரியாவில் போராட்டம் நீடிப்பு.
சிரியாவில் பொதுமக்கள் மீது இராணுவம் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் போராட்டம் வலுவடைந்துள்ளது.அரபு வளைகுடா நாடுகளின் ஒன்றான சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டம் கலவரமாக மாறி இதுவரை 7 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவில் நடைபெற்று வருகிற போராட்டத்தை நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இருப்பினும் கலவரம் நீடித்துக்கொண்டிருக்கிறது.தற்போது ஜனாதிபதி தேர்தல் நடத்தி அதன் பிறகு புதிய அரசியல் சட்டம் இயற்றுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு வருகிற 26ம் திகதி நடைபெற உள்ளதால், இதை போராட்டக்காரர்கள் எதிர்த்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் தலைநகர் டமாஸ்கலில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில், 3 பேர் பலியானார்கள். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று டமாஸ்கலில் நடந்தது.ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலம், ஜனாதிபதி அசாத் அரண்மனை அருகே சென்ற போது ஜனாதிபதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டன.
அப்போது இராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் சீன தூதர் ஷாய்ஜன் முன்னிலையில் நடந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், ஜனாதிபதி அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இதற்கிடையே இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இறைச்சிகளில் ஈகோலி நோய்த்தொற்று அபாயம்.
கனடாவில் விற்கப்படும் இறைச்சிகளில் ஈகோலி தொற்றுநோய் அபாயம் உள்ளது என கனடாவின் உணவுப் பரிசோதனை முகாம் தெரிவித்துள்ளது.மேலும் பீஃப் பர்கர் மற்றும் பீஃப் ஸ்டீக்கெட்டீஸ் போன்றவற்றில் ஈகோலி பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது.
பீஃப் பர்கர் மற்றும் ஸ்டீக்கெட்டீஸ் சாப்பிட்டதினால் ஒருவர் நோயுற்று சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இக்காரணத்தினால் ஒண்டோரியாவில் உள்ள நியுஃப்ட் கிளாசிக்ஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் பீஃப் உணவுப் பொருட்களை மேற்கு கனடா, மணிடோபா, ஒண்டோரியா மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் புதிய ஜனாதிபதி தெரிவு.
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் பதவி விலகியதையடுத்து, புதிய ஜனாதிபதியாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் போதகர் ஜோவாக்கிம் கௌக்(Joachim Gauck) தெரிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது குறித்து பிரதமர் மெர்கெல் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இவருடைய கிறிஸ்தவ குடியரசு ஒன்றியக்கட்சிக்கு(CDU) தனிப்பெரும்பான்மை உள்ளது.இதன் சகோதரக் கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றியம்(CSU) மற்றும் விடுதலை ஜனநாயகவாதிகள்(FD) கட்சியும் இணைந்து ஜனாதிபதியை  தெரிவு செய்ய வேண்டும்.
ஆனால் அனைத்துக்கட்சியினரும் ஆதரிக்கும் ஒருவரை ஜனாதிபதி பதவியில் நிறுத்த மெர்க்கெல் விரும்புவதால், எதிர்கட்சிகளைச் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கிழக்கு ஜேர்மனியின் போதகர் ஜோவாக்கிம் கௌக் மீது அனைத்துக் கட்சியினருக்கும் நம்பிக்கை இருப்பதால், இவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கையால் பனிப்போர் ஏற்படும் அபாயம்: பிரிட்டன் எச்சரிக்கை.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கையால் புதிய பனிப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரான் ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்களைத் தயாரித்து அவற்றைப் பாதாளக் கிடங்கில் பதுக்கி வைப்பதால் ஈரானைப் பார்த்து மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அணு ஆயுதத் தயாரிப்பைத் தொடங்கிவிடும்.
எனவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அணு ஆயுதங்களைத் தயாரித்தால் உலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு இந்த தயாரிப்பு ஆபத்தாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ஈரான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போவதாகவும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், அணு ஆயுதத் தயாரிப்பில் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், எங்களுடைய ஃபோர்டோ அணுசக்தி மையத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் அணு ஆயுதத் தயாரிப்பு நிலையம் என்று தவறாகக் கருதுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்கானில் கடும் குளிர்: 40 குழந்தைகள் பலி.
ஆப்கானில் தற்போது நிலவி வரும் கடும் குளிருக்கு 40 குழந்தைகள் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நேட்டோ படையினரின் தாக்குதல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நாட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.தலிபான் தாக்குதல்களால் 20 ஆயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி தலைநகர் காபூலில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த முகாம்களில் பெரும்பாலானவை அடிப்படை வசதிகள் கூட இல்லாதவை. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்த ஆண்டு அங்கு கடும் குளிர் வாட்டி வருகிறது.கடந்த மாதம் மட்டும் இந்தக் கொடும் குளிருக்கு 40 பேர் பலியாகியுள்ளனர் எனவும், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் எனவும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குலாம் சக்கி கர்கர் நூருக்லி தெரிவித்தார்.
சிரியா- சீனா திடீர் சந்திப்பு: சிரியாவை நோட்டமிடும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்.
சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சிரியா ஜனாதிபதி அசாத்தை சீன வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சிரியாவில் மக்கள் மீது ஜனாதிபதி அசாத்தின் இராணுவம் நடத்தி வரும் வன்முறை அராஜகங்களுக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிரியா நிலவரத்தை நேரில் அறிவதற்காக சீன வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ஜாய் ஜுன் தலைநகர் டமாஸ்கஸ் சென்றார்.அங்கு சிரியா வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் பைசல் மெக்தத்தை சந்தித்து பேசிய பின் ஜனாதிபதி அசாத்தையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து ஜுன் அளித்த பேட்டியில், சிரியாவில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேநேரம் ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நாடாளுமன்ற தேர்தல்கள் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என நம்புகிறோம் என்றார்.ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை தடையாணை(வீட்டோ) மூலம் முறியடித்த சீனா தற்போது சிரியாவின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரித்துள்ளது.
ஆனால் இந்த வாக்கெடுப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. தேர்தல் நடக்கும் 26ம் திகதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.இதற்கிடையில் சிரியாவில் அசாத் இராணுவம் எத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகிறது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை திரட்டும் வகையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் சிரிய வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு எதிர்காலத்தில் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறி அல்ல எனவும், இராணுவம் மற்றும் அசாத் நிர்வாகம் இடையே நடக்கும் தகவல் தொடர்பை இடைமறித்து கேட்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறார் எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: போர் மூளும் அபாயம்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில் பனிப் போரை உருவாக்கும் என பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், அந்நாட்டின் ஷாகித் காண்டி மற்றும் கார்க் ஆகிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானிய கடற்படைத் தளபதி ஹபீபுல்லா சயாரி இது குறித்துக் கூறுகையில், கடந்த 1979ம் ஆண்டில் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் இரண்டாவது முறையாக ஈரான் போர்க் கப்பல்கள், மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன. இந்த நடவடிக்கை அண்டை நாடுகளுக்கு ஈரானின் வலிமை, நட்பு மற்றும் அமைதி விருப்பத்தை வெளிக்காட்டும் என்றார்.
எனினும் எத்தனை கப்பல்கள் மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தொடங்கினால் மத்திய ஆசியாவில் பிற நாடுகளும் அதற்கு ஆசைப்படும். இதனால் அந்த மண்டலத்தில் பனிப் போர் ஏற்படும் என்றார்.
இதற்கிடையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது. அதை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது.ஹோர்முஸ் நீரிணை சர்வதேசத்திற்கு உரியது. அதை மூடுவதற்கு ஈரான் முயன்றால் அதைத் தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒசாமாவை பாதுகாப்பாக பாகிஸ்தானில் தங்க வைத்த ஐ.எஸ்.ஐ: அதிர்ச்சித் தகவல் வெளியீடு.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த போது அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஒசாமா பாகிஸ்தானில் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில் அவர் அங்கு பதுங்கி இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அபோதாபாத்தில் அதுவும் இராணுவ பயிற்சி கல்லூரி அருகே பின்லேடனை தங்க வைத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத்துறை தான் என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் டேவிட் இக்நாசியஸ் ஒரு கட்டுரை எழுதிள்ளார்.
அந்த கட்டுரையில் அபோதாபாத்தில் பின்லேடன் பாதுகாப்பாக தங்குவதற்கு பாகிஸ்தானின் உளவுத்துறை மாளிகை கட்டிக் கொடுத்தது. அதற்காக சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலை நிபுணர் பணியில் அமர்த்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நடந்த போது பர்வேஷ் முஷாரப் ஜனாதிபதியாக பதவி வகித்தார். தற்போதைய இராணுவ தலைமை தளபதி கயானி உளவுத்துறை தலைவராக இருந்தார்.பின்லேடனுக்கு தேவையான உதவிகளை முஷாரப் உத்தரவின் பேரில் தான் உளவுத்துறை தலைமை அதிகாரி பிரிக் இஜாஷ் ஷா செய்து வந்துள்ளார்.
பாகிஸ்தான் அபோதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். அதற்கு முன்பு அவர் எங்கு தங்கி இருந்தார் என்ற விவரம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதுகுறித்து விசாரணை நடத்தினால் பல அதிரடி தகவல்கள் வெளியாகும் என்றும் இக்நாசியஸ் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF