Sunday, March 13, 2011

இன்றைய செய்திகள்.

2 நாளில் 168 தடவை நிலஅதிர்வு: ஜப்பானில் மீண்டும் பூகம்பம் அபாயம்? மக்கள் கடும் பீதி.

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி தாக்கி அந்த நாட்டையே நிலைகுலைய செய்துள்ளது. பூகம்பம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.9 புள்ளியாக இருந்ததாக முதலில் கூறப்பட்டது. இப்போது துல்லியமாக கணக்கிட்டதில் பூகம்பத்தின் சக்தி 9 புள்ளிகள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. முதல் பூகம்பம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டபடி உள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் 168 தடவை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது 2 புள்ளிகள் அளவில் இருந்து 6 புள்ளிகள் வரை உள்ளது. இன்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. எனவே பெரிய பூகம்பம் ஏற்படலாம் என்று கருதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் ஜப்பான் நாடு முழுவதுமே இந்த பீதி உள்ளது. எனவே மக்கள் வீட்டுக்குள் படுத்து தூங்கவே பயப்படுகின்றனர்.

ஜப்பானில் தற்போது கடும் குளிர் வீசி வருகிறது. குளிரையும் பொருட் படுத்தாமல் தெருக்களில் பலரும் தூங்குகின்றனர். சுனாமி பாதிப்பு கடுமையாக உள்ள பகுதிகளில் இன்னும் சரியாக மீட்பு பணிகள் நடக்கவில்லை. மீட்பு பணி ஏற்பாட்டை சரியாக செய்யவில்லை என்று ஜப்பான் பிரதமர் மீது மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

பிரதமர் மீது குறை கூறி பலரும் கருத்து வெளியிட்டனர். ஜப்பான் மீட்பு பணிக்கு அருகில் உள்ள தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் நிவாரண குழுக்களை அனுப்பி உள்ளது. அமெரிக்கா 2 விமான தாங்கி கப்பலை அனுப்பி இருந்தது. இங்கிலாந்து 63 தீயணைப்பு வீரர்கள் மற்றும் டாக்டர்கள் அடங்கிய மீட்பு குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 50 நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளன.



இலங்கையில் பேஸ்புக் நிறுத்தப்படுமா?

இலங்கையில்சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒருசிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும், பண மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், மிரட்டல் போன்ற முறைபாடுகள் கிடைக்கபெற்றுள்ளதகவும், இம்முறைபாடுகளில் அதிகமாக போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அக்கணக்கினை தடுத்து நிறுத்துவதற்காக அவ்வாறான கணக்குகள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் தேவையற்ற சுய தரவுகளை இடுவதனையும் தெரியாத நண்பர்களை இனைத்துக்கொள்ளுவதையும் தவிர்ப்பதன் மூலம் இவற்றிலிருந்து ஓரளவேனும் தப்பித்துக்கொள்ளலாம்.



வடஆபிரிக்கா, மத்திய கிழக்கில் பரவும் கிளர்ச்சிகள், ஜப்பானிய பேரழிவுகளால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு.

வடஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கொழும்பு தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் விசாரிக்க முனைந்த போது- அதுபற்றி எழுத வேணடாம் என்றும் தம்மை மேற்கோள்காட்ட வேண்டாம் என்றும் அவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர். ஆனால் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்காவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் பாரிய பாதிப்புகள் ஏதும் இல்லை“ என்று அவர் கூறியுள்ளார்.

லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்று வழிகளிலேயே- ஒட்டகங்கள் மூலம் அவற்றை அனுப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

“ எகிப்தின் அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவுக்கு அதிக பாதிப்பில்லை.

வடஆபிரிக்க நாடுகளுக்கு கென்யாவே பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும் நாம் ஆரம்ப பின்னடைவையே சந்தித்துள்ளோம்.“ என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன.

இந்த அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி வருமானம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜோர்தான், சிறிலங்காவின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கிளர்ச்சிகள் நடைபெறும் எகிப்து, லிபியா, ஈரான் போன்ற நாடுகள் ஆண்டு தோறும் 10 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான தேயிலையை சிறிலங்காவிடம் வாங்குபவையாகும்.

அதேவேளை, ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் சுனாமி அழிவுகளாலும் சிறிலங்காவின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. சிறிலங்காவுக்குக் கிடைத்து வரும் வெளிநாட்டுக் கடனுதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஜப்பானில் இருந்தே கிடைக்கிறது. 2009ம் ஆண்டு வரை சிறிலங்காவின் பிரதான உதவி வழங்குனராக ஜப்பானே இருந்து வந்தது. கடந்த ஆண்டில் தான் அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. ஆனாலும் ஜப்பான் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

அங்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகளால் சிறிலங்காவுக்கான உதவிகள், திட்டங்களில் ஜப்பான் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அழிவுகள் சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

அதேவேளை, வடஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளும், ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவும், சிறிலங்காவில் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட அழிவுகளும் குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 




பெண்டகன் வடிவில் அமையவுள்ள இராணுவத் தலைமையகம்!

அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வடிவில் இராணுவத்தின் புதிய தலைமையகம் 53 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. இதற்கான நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது. 

இராணுவ, விமான மற்றும் கடற்படைத் தலைமையகங்களை கொழும்பு புறக்கோட்டையில் இருந்து அப்புறப்படுத்தி பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள அகுருகொடைக்கு மாற்றப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை பொலிஸ் தலைமையகம் நுகேகொடை மீரிஹான பிரதேசத்திற்கு மாற்றப்படவுள்ளது.

ஆயுதங்கள் வாங்கிய கடனை அடைக்க நிலத்தை சீனாவுக்கு விற்கிறது ?

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள நிலத்தை கொள்வனவு செய்ய முன்வந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் யுத்தத்தின் போது இலங்கைக்கு தாக்குதல் விமானங்களை வழங்கிய சீன நிறுவனமும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

காலிமுகத்திடலில் ஐந்து நட்சத்திர விடுதிகளை அமைப்பதற்காக விண்ணப்பம் வழங்கிய நிறுவனங்களில் சீன நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன தேசிய வான் தொழில்நுட்ப இறக்குமதி - ஏற்றுமதி நிறுவனமே 125 மில்லியன் டொலர்களை வழங்கி காலி முகத்திடலின் ஒரு பகுதி நிலத்தை கொள்வனவு செய்துள்ளது. 

காலிமுகத்திடலில் அமைக்க திட்டமிட்டுள்ள விடுதியில் இருந்து பெறப்படும் வருமானத்தைக் கொண்டு நவீன முறையில் முப்படைத் தலைமையகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற போரின்போது இந்த நிறுவனமே தாக்குதல் விமானங்களையும், ராடர்களையும், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களையும் வழங்கியுள்ளது.

லங்கா வைத்தியசாலையின் பங்குகள் இந்தியாவிற்கு விற்பனை!!

அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா வைத்தியசாலை (அப்பலோ வைத்தியசாலை) இன் 28.6 வீத பங்குகள் கொழும்பு பங்குச் சந்தை மூலம் இந்திய நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 

ஆரம்பத்தில் லங்கா வைத்தியசாலை இந்தியாவின் அப்பலோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன்பின்னர் அரசாங்கத்தின் வசமானது. அரச சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடியாது என கூறும் அரசாங்கம் தற்போது லங்கா வைத்தியசாலையை இந்தியாவிற்கு விற்றுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த மல்வின்தர் சிங் மற்றும் சிவேந்தர் சிங் ஆகிய இரு கோடீஸ்வரர்களுக்கும் சொந்தமான Fortis Global Healthcare நிறுவனம் லங்கா வைத்தியசாலையின் 28.6வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது.

சுனாமியின் கோரத் தாண்டவத்தால் மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக மாறி முற்றிலும் அழிந்து விட்ட சென்டாய் நகரம்!

ஜப்பான் சுனாமிக்கு அங்குள்ள சென்டாய் நகரம் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய துறைமுக நகரான இங்கு 10 லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் இப்போது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமானோர் சுனாமிக்கு பலியாகி உள்ளனர். 

பூகம்பம் ஏற்பட்டு அடுத்த சில வினாடிகளிலே இங்கு சுனாமி தாக்கி விட்டது. இதனால் மக்களால் சுதாரித்து தப்பிக்க கூட முடியவில்லை.இந்த நகரில் பெரும்பாலான வீடுகள் பூகம்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவே கட்டி இருந்தனர். ஆனால் பெரும் சக்தியுடன் தாக்கிய சுனாமி அந்த வீடுகளை அப்படியே பெயர்த்து எடுத்து தரைமட்டமாகி விட்டது. 

இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து விட்டன. அல்லது வெடித்து நிற்கின்றன. எனவே அந்த வீடுகளில் மறுபடியும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்டாய் நகரமே முற்றிலும் அழிந்து விட்டது போலவே காட்சி அளிக்கிறது.தெருக்கள் முழுவதும் சுனாமியில் இழுத்து வரப்பட்ட பொருட்கள் சிதறி கிடக்கின்றன. சேறும், சகதியுமாக உள்ளது. எனவே தெருக்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை. சுனாமி அலை கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்துள்ளது. 

துறைமுகத்தில் இழுத்து அடித்து வரப்பட்ட கண்டெய்னர்கள் கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை உள் பகுதிக்குள் வந்து கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் கார்கள் குவியல், குவியலாக கிடக்கிறது. சுனாமியில் அடித்து செல்லப்பட்டவர்கள் உடல்கள் கடலில் மிதக்கின்றன. பல உடல்கள் கடற்கரையில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் 1300 உடல்களை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர். 

வீடுகளை இழந்தவர்கள் சுனாமி பாதிப்பு ஏற்படாத புறநகர் பகுதிகளில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்களோ, குடிநீரோ கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை. தகவல் தொடர்புகளும் இல்லை. இதனால் ஊரில் உள்ள தங்கள் உறவினர்கள் கதி என்ன ஆனது என்று கூட தெரியாமல் தவிக்கின்றனர். மறுபடியும் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். 

ஏன் என்றால் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விட்டன. வீடுகள் இடியாமல் இருந்தாலும் அங்கு செல்லும்பாதை முழுவதும் இடிபாடுகள் நிறைந்து கிடப்பதால் வீடு களுக்கு செல்ல முடிய வில்லை. 

சென்டாய் நகரம் தற்போது மக்கள் வசிப்பதற்கே தகுதியற்ற இடமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் சென்டாய் நகரில் குவிந்துள்ளனர். ஆனால் சேதம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை. மீட்பு பணிக்கு தேவையான எந்திரங்களை கொண்டு செல்லவும் சிரமமாக இருப்பதால் மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. 

வெளி இடங்களில் இருந்து எந்த வாகனமும் ஊருக்குள் வர முடியவில்லை. சாலைகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. சுனாமியில் அடித்து வரப்பட்ட கார்களும், இடிபாடுகளும் சாலைகளை அடைத்து கிடக்கின்றன.

பூமி அச்சில் இருந்து ஜப்பான் 8 அடி நகர்ந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் சக்தி கொண்டதாக இருந்தது. உலகில் இதுவரை ஏற்பட்ட பெரிய பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும். பூகம்பத்தால் பூமிக்கு வெளியே ஏற்பட்ட பாதிப்புகளை கட்டிடங்கள் இடிந்தது, சுனாமி தாக்குதல் போன்றவற்றால் உணர்ந்து இருக்கிறோம்.

ஆனால் பூமிக்கு உள்ளேயும் பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக புவியியல் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். ஜப்பான், நியூசிலாந்து, அலாஸ்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிக்கும் பசிபிக் கடலில் பெரும் பகுதியும் பூமியின் டெக்டானிக் தட்டு பகுதியில் அமைந்துள்ளன.

ஜப்பான் பூகம்பத்தால் இந்த பகுதி பூமி அச்சில் இருந்து 18 மீட்டர் தூரம் விலகி விட்டதாக புவியியல் விஞ்ஞானி சென்சூ சென் கூறியுள்ளார். பூகம்பம் டெக்டானிக் தட்டில் 400 கிலோ மீட்டர் நீளம் 160 கிலோ மீட்டர் அகலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.ஜப்பான் தலைநகரம் டோக்கியோ மற்றும் ஹோன்சு மாகாணத்தை உள்ளடக்கிய பிரதான தீவு 8 அடி விலகி விட்டதாக அமெரிக்க புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹண்ட் கூறியுள்ளார். இந்த பூகம்பம் பூமி நில பகுதிக்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 19 � பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!
பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.






கடாபியின் விமானக் குண்டு வீச்சிலிருந்து தப்பிய பரபர நிமிடங்கள்! விளக்குகிறார் பிரபல பத்திரிகையாளர்.

லிபியாவில் இடம்பெற்று வரும் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற சன் குழுவுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை அவர்கள் விவரித்துள்ளனர்.


ராஸ் லானுப் என்ற பிரதான எண்ணெய் ஏற்றுமதித் துறைமுகத்துக்கு அருகில் தான் இந்தப் பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர்கள் குழு ராஸ் லானுப் துறைமுகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் நின்ற போது அவர்களுக்கு மேலாக சீறிப்பறந்த கடாபியின் யுத்த விமானம் அதிலிருந்து ஏவுகணைகளை விசியது.ஒலிவர் ஹாவி என்ற செய்தியாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் அன்று காலையில் சில போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசியிருந்தோம். 


இந்தத் துறைமுகத்தின் மீது சரியாக இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனைச் சுற்றி 15 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள எல்லாமே பஸ்பமாகிவிடும் என்று ஒரு தொலைக்காட்சி நிபுணர் கூறியது எனது நினைவுக்கு வந்தது.

சூரிய ஒளியின் பின்னணியில் அந்த குண்டு வீச்சு விமானத்தை அண்ணாந்து பார்ப்பது கூட கஷ்டமாகத்தான் இருந்தது. உடனடியாக எனது முகத்தை மணலுக்குள் புதைத்துக் கொண்டேன். ஒரு சில நிமிடம் எனது உடம்பு மூளை எல்லாமே ஸ்தம்பித்துப் போய்விட்டன. நான் இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் வெறும் தூசு மண்டலம் தான் எனக்குத் தெரிந்தது. குண்டு போடப்பட்டது என்று சன் படப்பிடிப்பாளர் டேன் சரிட்டி கத்தியதும் எனது காதுகளில் விழுந்தது.

விசர்நாய் கடாபி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் குண்டு வீசிவிட்டானா என்று என் மனம் குமுறியது. ஆனால் அந்த இக்கட்டிலும் கிளர்ச்சிப் படையினர் துணிச்சலோடு செயற்பட்டனர். அவர்கள் எம்மை நொக்கி ஓடி வந்து எம்மைப் பற்றி அக்கறையோடு விசாரித்தனர்.

வீசப்பட்ட குண்டில் அதிர்ஷ்ட வசமாக வெடிக்கும் பொருள்கள் எதுவும் இருக்கவில்லை. ஒருவேளை அந்த விமானிக்கே தெரியாமல் அதை விமானத்தில் பொருத்திய தொழில்நுட்பவியலாளர் அதில் தேவையானவற்றை இணைக்காமல் விட்டிருக்கவும் கூடும். கிளர்ச்சிப் படையினர் மீது அனுதாபத்தில் இவ்வாறு செய்திருக்கலாம். எவ்வாறாயினும் இது ஒரு கடுமையான எச்சரிக்கை. வேண்டுமானால் அந்த எண்ணெய் களஞ்சிய இலக்கைத் தாக்கியிருக்கலாம்.

அவ்வாறு தாக்கியிருந்தால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டம்.எப்படியோ வீசப்பட்ட குண்டின் விளைவாக நகரின் பிரதான பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF