Monday, March 14, 2011

ஒரு மாகாணத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் தெரியவந்துள்ளது.


டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஜப்பான் 8 அடி தூரத்துக்கு நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒரு மாகாணத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் தெரியவந்துள்ளது. மிகவும் வசதியான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாதுகாப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்றனர்.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி 8.9 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம், அதன் விளைவாக பயங்கர சுனாமி ஏற்பட்டது. இதில், புக்குஷிமா, மியாகி மற்றும் ஐவேட் ஆகிய மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. யூரேஷியன், பசிபிக், வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்றிணையும் இடத்தின் மேற்பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. 
இதனால், இந்த கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது அல்லது இடிக்கும் போது அங்கு நிலநடுக்கம் ஏற்படும். இது ஜப்பானில் வழக்கம் தான். ஆனால், சமீபத்திய பயங்கர நிலநடுக்கம், ஜப்பானை 8 அடி நகர்த்திவிட்டதாக, அமெரிக்க புகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை செயற்கைக்கோள் வரைபட உதவி கொண்டு நிரூபித்தனர்.
8 அடி நகர்ந்த ஜப்பான்: அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் எர்ல் இதுகுறித்து கூறியதாவது: சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஒட்டு மொத்த ஜப்பான் தீவே 8 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த 8 அடி என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நகர்வு, பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் திட்டுகளின் மோதலால் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் திட்டு, வட அமெரிக்க கண்டத் திட்டின் மேற்குப் பகுதியின் மீது மிக வேகமாக மோதியதால், இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல்களால் தான் நிலநடுக்கம் உருவாகிறது. மேலும் இந்த இரு கண்டத் திட்டுகள் இடையிலான மோதலால், ஆண்டுக்கு 3.3 அங்குல நகர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வை, கணினி அடிப்படையிலான புவியியல் தகவல் முறைமை (ஜி.எஸ்.ஐ.,) மூலமான வரைபடத்திலும் நாம் தெளிவாக பார்க்க முடியும். இவ்வாறு பால் எர்ல் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் பேர் பலி: மியாகி மாகாணத்தில் உள்ள மினாமிசன்ரிக்கு என்ற நகரைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை புக்குஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில், இறந்தவர்களின் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
ஐவேட் மாகாணத்தில், ரிக்குஜென்டாகடா நகரில் 5,000 வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 3,80,000 ஆயிரம் மக்கள் ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம்பேர் மின்சாரம் இன்றியும், 14 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மின்பாதிப்பு : மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இம்முறை ஜப்பானை புரட்டிய பூகம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சு அபாயம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியிருக்கிறது. ஜப்பானில் மொத்தம் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன. 
அவற்றில் 11 பூகம்ப பாதிப்பு பகுதியில் இருந்ததால், மொத்த மின் உற்பத்தியில் 30 சதவீதம் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கிழக்கு ஜப்பான் பகுதிகளில் முன்பைப் போல மின்சாரம் தருவதற்கு இன்னும் பலநாட்கள் ஆகும். தொடர்ந்து 25 சதவீத மின் வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் தற்போது தங்கியுள்ளனர். போதாக்குறைக்கு, இரவுநேரத்தில் அதிக குளிரும் வாட்டி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் முழு அளவில் சேதத்தைக் கண்டறிய முடியவில்லை. செண்டாய் நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் பிடித்துள்ள தீயை அணைக்கும் முயற்சி, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இன்னும் தீ அணைந்தபாடில்லை. அந்நகர் முழுவதும், சுனாமி கொண்டு வந்த சகதி மற்றும் குப்பைகளால் நிறைந்துள்ளது. இங்கு குப்பைகளை அகற்றுவதை விட தற்போது பிணங்களை அகற்றும் பணி மட்டுமே முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும், மூன்று மாகாணங்களிலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. 
பிரதமர் நவோட்டோ கான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த பேரழிவைக் கடந்து விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கடந்த 65 ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத மிக மோசமான சீரழிவு இது' என்று தெரிவித்துள்ளார். மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF