Saturday, March 12, 2011

இன்றைய செய்திகள்.

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்:
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஆழிப்பேரலை (சுனாமி) உருவாகியுள்ளது.8.9 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆழிப்பேரலைகள் உருவாகியுள்ளது. 

கட்டிடங்கள், வாகனங்கள், கப்பல்கள் போன்றன அடித்துச் செல்லப்பட்டுள்ளன என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதன. ஆழிப்பேரலை 10 மீற்றர் உயரத்திற்கு மேலெழுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றன.






பாடசாலை நேரத்தை நீடிக்கும் திட்டமில்லை: ஜனாதிபதி

அரசாங்கப் பாடசாலைகள் இயங்கும் நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிப்பதற்கான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில், மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு உரையாற்றுய ஜனாதிபதி,
”அரசாங்க பாடசாலைகள் இயங்கும் நேரத்தை பிற்பகல் 3 மணிவரை அரசாங்கம் நீடிக்கப்போவதாக சில கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. அதில் உண்மையில்லை. நாம் அத்தகைய தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் விரும்பினால் அவர்கள் இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளமுடியும்” எனத் தெரிவித்தார்.

"எனக்கென்றால் இன்னும் சுதந்திரம் இல்லை" - ஜனாதிபதி

யுத்தம் நிறைவடைந்து இருவருடங்கள் கடந்த நிலையில் நாட்டு மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை தன்னால் இன்னும் அனுபவிக்க முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது:- 
இன்று நீங்கள் சரியான சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு அனுபவித்தாலும் எனக்கு இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை. 

நான் இங்கிலாந்து சென்றதும் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிக்கின்றனர். நான் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றிவளைத்தனர். இவ்வாறுதான் என் நிலையுள்ளது. எப்போதும் சுதந்திரமாக கதைக்க இடமிருந்த ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழக உரையாடலை பயந்து நிறுத்திக் கொண்டனர். இன்று இந்த நாட்டிற்குள் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதில்லை. இவர்கள் வெளிநாட்டில்தான் தகவல் பெறுகின்றனர். 

மனித உரிமைகள் இல்லை என வெளிநாட்டில் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். சர்வதேச நீதிமன்றிற்கு எம்மை அழைத்துச் செல்வதுதான் அவ்களின் நோக்கம். எதிர்கட்சிகளின் கடமை இன்று இதுவாகத்தான் உள்ளது. இதற்கு இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அணு உலைகள் பாதிப்பால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம்! ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்.

ஜப்பான் பூகம்பம், சுனாமியால் அணு உலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன அங்குள்ள புகுசிமா மாவட்டத்தில் 5 இடங்களில் அணு உலைகள் இருந்தன. இந்த 5 அணு உலைகளுமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு அணு உலையில் அதிக அளவில் கடல் நீர் புகுந்து விட்டது. 

இதனால் அணு உலை குளிர்படுத்தும் அமைப்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதில் இருந்து அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே அந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 3000 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டு உள்ளனர். 

அதே போல மற்ற அணு உலைகளிலும் கசிவு ஏற்படலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு உள்ளது.அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 5 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் பெரிய அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசுபிக் கடலை அண்டிய சுமார் 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, நியூசிலாந்து தைவான், பெரு, சிலி அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார். இதேவேளை ஹவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று இந்தோனேசியா நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கணக்குமிகுதியை காட்டும் புதியவகை கிரடிட் கார்டுகள்!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும்.மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை பெட்டரி (மின்கலம்) மூலம் இயங்குகிறது.
இந்த பெட்டரிகள் (மின்கலம்) 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.புதிய கிரடிட் கார்டின் வருகைக்குப்பின்னர் இனிமேல் கிரடிட் கார்ட் கொள்ளையர்களுக்கு இலகுவாக பணத்தை திருட முடியாதாம்.
அதாவது தனிப்பட்ட இரகசிய குறியீட்டை வழங்கிய பின்னரே இதன் திரை செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை “சிடி வங்கி” புதிய வகை 2ஜி கார்டை வெளியிட்டுள்ளது.இது காந்த அமைப்பு கொண்ட கீலம்.இதில் பொத்தான்கள் அமைந்துள்ளன.உலகளாவிய ரீதியில் 1.7 பில்லியன் மக்கள் கிரடிட் கார்டை பாவிக்கிறார்களாம்.

சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் மார்ச் 19ல் பேரழிவுகள் ஏற்படும்? வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை.3
ஜப்பானை நேற்று மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல் தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.
உலகின் அதி புத்திசாலி பெண்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினை விட தனது விவேக மட்டம் அதிகமானது என்று கூறுகின்றார் 11 வயதான ரெய்னி விக்டோரியா.விவேக மட்டச் சோதனையில் இவர் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது பொதுத் தொடர்புத் தத்துவத்தை நிறுவிய பௌதிக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும்.
சில வாரங்களுக்கு முன் இந்த விவேகப் பரிசோதனை இடம் பெற்றுள்ளது. அதில் தனது மகள் பெற்ற முடிவை நம்ப முடியாமல் உள்ளதாக 44 வயதான தாய் எலிஸன் தெரிவித்துள்ளார்.இணையத்தளங்கள் வாயிலாக விவேக மட்ட அளவு பற்றி தேடிப் பார்த்த போது தான் இது ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட அதிகமானது என்பதைத் தெரிந்து கொண்டதாக இவர் மேலும் கூறினார்.
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸின் விவேக மட்டம் 160. பிரிட்டனின் சிறந்த புத்திசாலி எனப்படும் ஸ்டீபன் ஹோகிங்கின் விவேக மட்டமும் இதே அளவு தான். சராசரி விவேக மட்டம் 100 ஆகும்.
ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு
ஜப்பானை புரட்டிப் போட்டு நிலை குலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணுமின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவை ஒட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்,"சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்தப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை  குளிர்விக்க செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரி வர செய்யவில்லை. இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியா மற்றும் ஹவாய் தீவுகளில் சுனாமி தாக்குதல்
ஜப்பானில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலின் எதிரொலியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஹவாய் தீவு ஆகிய பகுதிகளிலும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
7 அடி உயரம் வரை எழுந்த கடல் அலைகளால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சுனாமி தாக்குதலால் கலிபோர்னியாவின் கப்பல் நிறுத்துமிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது.மேலும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக ஹார்வர்ட் பல்கலைகழகம் தேர்வு.
உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்‌க‌லைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்க‌லைகழகம், கலிப‌ோர்னியா பல்க‌லைகழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்க‌லைகழகங்களும் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக உலகளவில் கல்வித் துறையி்ல் சிறந்து விளங்கும் 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்ய கனடா, ஜேர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 131 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 388 கல்வி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் பின்னர் அவற்றில் இருந்து 45 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து 10 பல்க‌லைக்கழகங்கள் தேர்வாகின. இதில் மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் முதலிடம் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முஷாரப்பை ஒப்படைக்க இங்கிலாந்து மறுப்பு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2008 ம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணியின் போது படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த முஷாரப் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்காததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.எனவே அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் முடிவு செய்து லண்டனில் தங்கியிருக்கும் முஷாரப்புக்கு வாரண்ட் அனுப்பியது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
எனவே அவருக்கு கைது வாரண்ட் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணைக்காக அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்து அரசிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.அதற்காக பாகிஸ்தானின் தூதரக அதிகாரி இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன் வெல்த் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அதை ஏற்க இங்கிலாந்து மறுத்து விட்டது. பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கைதிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் எதுவும் இல்லை.
எனவே தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் முஷாரப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க முடியாது என மறுத்து விட்டது. இருந்தும் அவரை பாகிஸ்தானுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது.
நாட்டை மீட்பதற்கான நேரம் வந்து விட்டது: கடாபி மகன்
லிபியாவில் தற்போது நிலவரம் தலைகீழாக மாறி வருகிறது. எதிர்ப்பாளர்கள் வசம் இருந்த இரு முக்கிய நகரங்கள் கடாபி ராணுவத்திடம் வீழ்ந்து விட்டன.
எதிர்ப்பாளர்களின் தலைமையிடமான கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசியை நோக்கி கடாபி ராணுவம் முன்னேறி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் லிபியா மீதான நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
கடாபி ராணுவத்துக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான சண்டையில் டிரிபோலி அருகில் உள்ள ஜாவியா நகரம் போர்க்களமானது. நேற்று கடாபி ராணுவத்தின் கடுமையான குண்டுவீச்சுக்கு இரையான அந்நகரம் இறுதியில் எதிர்ப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க ராஸ் லுனுப் நகரில் இருந்த எதிர்ப்பாளர்கள் கடாபி ராணுவத்தின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பி ஓடினர். இதனால் அந்நகரமும் கடாபி வசம் வந்து விட்டது.
இதையடுத்து கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் வெளியிட்ட அறிக்கையில்,"இது நாட்டை மீட்பதற்கான நேரம். விரைவில் பெங்காசியைக் கைப்பற்றுவோம். லிபியர்கள் யாரிடமும் தோற்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் நிலவரம் மோசமாகி வருவதை உணர்ந்த பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால அரசின் தலைவர் அப்துல் ஜலீல், லிபிய விவகாரத்தில் தலையிடும்படி ஐரோப்பிய நாடுகளைக் வலியுறுத்தியுள்ளார். விரைவில் அதன் மீது போர் விமானங்கள் பறக்கத் தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கடாபியின் எதிர்த் தரப்பை பிரான்ஸ் நாடு அங்கீகரித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இரண்டும் லிபியா மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு கடாபி அரசு சட்ட விரோதமானது என்று அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலைமை புலனாய்வுத் துறைத் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் லிபியா பற்றி விரிவாக ஆராய்ந்து வருகிறார். அவர் நேற்று அளித்த பேட்டியில்,"நிலவரம் இப்படியே தொடருமானால், கடாபி விரைவில் வென்று விடுவார்" என்று கூறியுள்ளார்.லிபிய விவகாரத்தில் அன்னிய ராணுவத் தலையீட்டை மறுத்துள்ள ஆப்ரிக்க யூனியன் லிபியாவுக்கு ஐந்து பேர் கொண்ட குழு விரைவில் அனுப்பப்படும் என்றும், அக்குழு பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று அறிவித்துள்ளது.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் பிராந்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே நேட்டோ நடவடிக்கை எடுக்கும் என்று அதன் பொதுச் செயலர் போக் ராஸ்முசன் தெரிவித்துள்ளார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF