Monday, March 21, 2011

இன்றைய செய்திகள்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாதாம்! திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவி தொடர்பாகவோ அல்லது ஏனைய பதவிகள் தொடர்பிலோ இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறாது என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

இன்றைய செயற்குழுக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்வது மற்றும் தேர்தலில் தோல்வி கண்ட சபைகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல்களே நடைபெறவுள்ளன என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு முதல் முஸ்லிம் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்!

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்  தேர்தல் மூலம் கிழக்கின் முதல் முஸ்லிம் பெண் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராவும் இலங்கையின் வரலாற்றில் 50 வருடங்களின் பின் முஸ்லிம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகவும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  தெரிவுசெய்யப்பட்ட சல்மா ஹம்ஸாவே இந்த பெருமையை பெற்றுள்ளார். 

இவர் காத்தான்குடி நகர சபை தேர்தலில் 1,235 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கல்வியமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளராக செயற்பட்ட இவர், பெண்களின் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமாவார். 

கிழக்கு மாகாணம் காத்தான்குடியை சேர்ந்த இவர் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன், 1950ஆம் கொழும்பு மாநகர சபைக்கு ஆயிஷா ரவூப் உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் தெரிவுசெய்யப்பட்டார். அதே நேரம் இவர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினரும் ஆவார்.

யாழ். வடமராட்சியில் சுனாமிப் பீதியினால் மக்கள் ஓட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சுனாமி பீதியால் மக்கள் வீடுகளை விட்டு தறிகெட்டு ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சுனாமி பீதியினால் அங்குள்ள கடல் கரையை அண்டிய ஏராளமான மக்களே இவ்வாறு ஓடியதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவித்தார். ஜப்பானில் பயங்கர சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்னரும் கடந்த 19 ஆம் திகதி சந்திரன் பூமியை நெருங்கியதாலும் பொதுவாக மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மோ்வின் சில்வாவின் ஊடக அதிகாரி ஊடகவியலாளரொருவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
அமைச்சர் மோ்வின் சில்வாவின் ஊடக அதிகாரி சிங்களப் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து நன்றாக அடிவாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பான செய்தி சேகரிப்புப் பணியின் போதே பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதற்கான செய்தி  சேகரிப்பிற்கான தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் பயணத்தின் போது நிகழ்ந்துள்ளது.
கச்சதீவு திருவிழா தொடர்பான செய்தி சேகரிப்பிற்கென ஊடகவியலாளர்கள் கடற்படையின் வழித்துணையுடன் அழைத்துச் செல்லப்பட்ட போது அமைச்சர் மோ்வின் சில்வாவின் ஊடக அதிகாரியும் அதனுடன் இணைந்து கொண்டுள்ளார்.
அதன் போது ஏற்பட்ட வாக்குவாதமொன்றின் போதே சிங்கள தேசியப் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் அவரை நையப்புடைத்துள்ளார். அதனைக் கடற்படையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தவிர தடுக்க முன்வரவில்லை என்று உடனிருந்த ஊடகவியலாளர்கள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.
புத்தளம் அனல்மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படவுள்ளது.
புத்தளம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நிலக்கரியைக் கொண்டு இலங்கையில் மின்சாரம் தயாரிக்கவுள்ள முதலாவது செயற்திட்டம் இதுவாகும். இதன் முதற்கட்டம் மூலமாக 300  மெகாவொட் மற்றும் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் ஆரம்பித்த பின் 600 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்வலுக்கட்டமைப்புக்கு வழங்கப்படும்.
அதற்கேற்ப 2014ம் ஆண்டில் 900 மெகாவொட் மின்னுற்பத்தியை அடையும் இலக்கு நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவிருந்த பிரஸ்தாப அனல் மின் நிலையம், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பால் கடைசியில் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்மாணப்பணிகளுக்கென சீன அரசாங்கம் 455 மில்லியன் அமெரிக்க  டொலர்களை கடனாக வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் 5300 மில்லியன் ரூபாவினை செலவழித்துள்ளது.

யப்பான் அணு உலை வெடிப்பால் குடிநீர், பாலில் அணுக்கதிர் வீச்சுப் பாதிப்பு! நிபுணர்கள் எச்சரிக்கை.

ஜப்பானில் அணு உலை வெடித்ததால் பால் மற்றும் குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி பேரலைகள் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த இயற்கை பேரழிவுகளில் சிக்கி இதுவரை 18,600 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 7320 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

11 ஆயிரத்து 330 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்கியத்தில் டோக்கியோவுக்கு வடகிழக்கில் உள்ள புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் உள்ள 4 அணு உலைகள் வெடித்தன. எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. இருந்தும் அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறி அப்பகுதியில் பரவி வருகிறது.

புகுஷிமா அணு உலைப்பகுதியில் 30 கி.மீ. பரப்பள வில் வசிக்கும் பொது மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு தங்கியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே டோக்கியோ நகரில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களிலும் அணு கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது புகுஷிமாவின் முதல் அணு உலை வெடித்ததில் இருந்து வெளியான கதிர் வீச்சு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கதிர்வீச்சு பாதித்துள்ள பால், கீரை, குடி நீர் போன்றவை எங்கிருந்து வருகிறது, அவை எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதை கண்டறியும்படி சுகாதாரத்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது. 

முடிந்தவரை கதிர்வீச்சு பாதித்த உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தாமல் சாதாரண முறையில் விளக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எடானோ தெரிவித்துள்ளார். 

டோக்கியோ நகருக்கு கவா மதா நகரில் உள்ள பண்ணைகளில் இருந்துதான் பால் கொண்டு வரப்படுகிறது. அதில் கதிர்வீச்சு உள்ளதா என கண்டறிய பலத்த சோதனை நடத்தப்பட்டு அதன்பிறகே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மும்பை தாக்குதல் தீவிரவாதி: கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்த அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதி கசாப் மீது மும்பை தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். தூக்கு தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.கசாப் தற்போது மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளில் ஜெயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் நடவடிக்கையாக கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நகல் ஹோலி பண்டிகையின் முதல் நாளான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கசாப்பிடம் வழங்கப்பட்டது.

கசாப்பின் வக்கீல் பர்கானா ஷா, யாகூப் சைக் ஆகியோர் ஜெயிலுக்கு சென்று ஜெயில் அதிகாரிகளை சந்தித்து தீர்ப்பு நகலை வழங்கினார்கள். ஜெயில் அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டு கசாப்பிடம் வழங்கினார்கள்.

1000 பக்கங்கள் கொண்ட உத்தரவு நகல் 5 பாகங்களாக இடம் பெற்று இருந்தது. அதை கசாப் பெற்றுக் கொண்டான். கசாப் தூக்கு தண்டனையை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளான். அப்பீல் செய்வதற்கு வசதியாக இந்த தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் கசாப் வக்கீல்கள் மூலம் அப்பீல் மனுதாக்கல் செய்யப்படுகிறது. அங்கு மனு தள்ளுபடியானால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப வாய்ப்பு அளிக்கப்படும். ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு தண்டனை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF