Sunday, March 27, 2011

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு.


அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அவ்வாறானதோர் பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் "சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் மௌனமொழியில் கணணியுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு வந்த போதும் இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் வாய்ப் பேச்சு மூலம் கணணிகளை இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக ஆராய்ச்சிகள் சீ-டோக்(C-Dac) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் குறித்த முயற்சிக்காக இந்திய மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சு நிதியுதவி அளித்துள்ளது.
பேசும் கணணிகளை தயாரிக்கும் பணிகள் இரண்டு முறைகளில் செயற்படுத்தப்படவுள்ளதாக சீ-டோக்(C-Dac) ஐச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஹேமந்த் தர்பாரி தெரிவித்துள்ளார். வாய்மொழியிலிருந்து எழுத்துரு முறையிலும், எழுத்துருவிலிருந்து ஒலிவடிவிக்கு மாற்றும் முறையிலும் பிரஸ்தாப கணணி செயல்பட உள்ளது.
கணணி பயனாளிகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பேசும் போது கணணியில் உள்ள மென்பொருள்கள் வாய்மொழி வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை ஒலிவடிவில் தெரிவிக்கின்றன.
இத்தகைய கணணிகள் கிராமப் பகுதிகளில் அதிகளில் பயன்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கு ஏற்ப கணணி விசைப்பலகைகளை வடிவமைக்க முடியாமையே அதற்கான காரணமாகும்.தற்போது ஆங்கிலம், ஹிந்தி, உருது, வங்காளி ஆகிய மொழிகளில் இந்த வகையான கணணிகள் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF