Friday, March 11, 2011

இன்றைய செய்திகள்.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தல்! மஹிந்தர் திடசங்கற்பம்

2017ஆண்டுக்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் அதற்கு முதல் தேர்தல் நடத்தப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

பொதுத்தேர்தல் 2016ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்றும் யாருக்காவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என விருப்பம் இருந்தால் அவர்கள் 2016ஆம் ஆண்டுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாகவும் அதிலும் தானே வெற்றிபெறுவேன் என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களுக்கு தன்னைத்தவிர தலைமை தாங்க கூடிய எவரும் இப்போது நாட்டில் இல்லை என தெரிவித்தார்.



இஸ்ரேலிய கிபிர் விமானங்களை வாங்குவதில்லை - சிறிலங்கா விமானப்படை முடிவு.

இனிமேல் இஸ்ரேலிடம் இருந்து கிபிர் போர் விமானங்களை வாங்கும் எண்ணம் இல்லை எனறு சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் கடந்த 1ம் திகதி கம்பகாவில் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விமானங்களுக்குப் பதிலாக புதிய கிபிர் விமானங்களை வாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

“சிறிலங்கா விமானப்படையிடம் போதியளவு போக்குவரத்து விமானங்களும், போர் விமானங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதால், சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களின் தேவை குறைந்து விட்டது“ என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கிபிர் விமானங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தை அடுத்து சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்துள்ளது.விமானப்படையிடம் உள்ள அனைத்து கிபிர் விமானங்களினதும் தொழில்நுட்பத் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவற்றைப் பறக்க அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிபிர் போர் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட எயர் வைஸ் மார்சல் கபில ஜெயம்பதி தலைமையிலான உயர்மட்ட விசாரணைக்குழு தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இந்தக் குழுவினர் விபத்துக்குள்ளான விமானங்கள் விழுந்த இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.விபத்துக்குள்ளான கிபிர் விமானங்களின் அனைத்துப் பாகங்களும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் விபத்துக்குள்ளான கிபிர் விமானங்களுடனான தகவல் தொடர்புகள், கட்டுப்பாட்டுக் கோபுர தகவல் பரிமாற்றங்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் அறிக்கை இன்னும் சில வாரங்களில் சிறிலங்கா விமானப்படைத் தளபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.




ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடுவதை இலங்கை நிறுத்த வேண்டும்! இந்தியா கண்டனம்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியிருப்பது எந்தவித ஆதாரமற்ற தகவல் என்றும் இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என, இந்திய வெளியுறவு துறையின் பேச்சாளர் சிறிவிஷ்ணு பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்கிறோம். இது தொடர்பான தகவல் எதையும், இந்தியாவுடன், இலங்கை பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, ஊகத்தின் அடிப்படையில் ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை, சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார். 

இதேவேளை தமிழக காவல்துறை ஆணையாளர் லத்திகா சரணும் சிறிலங்கா தலைமையை அமைச்சரின் கூற்றை முற்றாக மறுத்திருந்தார். இலங்கையின் பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கூற்றுத் தொடர்பாக இந்தியா உத்தியோகபூர்வமாக தமது மறுப்பையும் ஆட்சேபனையும் தெரிவித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளும் இலங்கை அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளன.

ஜப்பானை கடுமையாகத் தாக்கியுள்ள ஆழிப்பேரலை!

ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ஒபாமாவை மிஞ்சிய சீன அதிபர்!

உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில் சீனா அதிபர் ஹீஜிந்தாவோ முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி விட்டு சீன அதிபர் முந்தி உள்ளார். ஒபாமா 2-வது இடத்தில் இருக்கிறார்.

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா 3-வது இடத்திலும் ரஷிய பிரதமர் புதின் 4-வது இடத்திலும், போப் ஆண்டவர் 5-வது இடத்திலும் உள்ளனர்.  இந்தியகாங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி 9-வது இடத்தை பிடித்து உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் 18-வது இடத்தில் இருக்கிறார். இந்திய தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, லட்சுமி மித்தல் ஆகியோரும் இதில் இடம் பிடித்து உள்ளனர். 

முகேஷ் அம்பானி 34-வது இடத்திலும், லட்சுமி மித்தல் 44-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் பின்லேடனும் இருக்கிறார். அவர் 57-வது இடத்திலும், தாவூத் இப்ராகிம் 63-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கயானி 29-வது இடத்தில் இருக்கிறார்.

பேஸ்புக் கோடீஸ்வரர்கள்!

2011ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.பேஸ்புக்கோடு தொடர்புடைய ஏழு பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுகர்பேர்க் இந்தப் பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

இவரின் சொத்துப் பெறுமதி 13.5 பில்லியன் டொலர்கள். கடந்தாண்டின் நான்கு பில்லியன் பெறுமதியிலிருந்து இது 238% அதிகரித்துள்ளது. பேஸ்புக் இணை ஸ்தாபகர் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் 420வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்துப் பெறுமதி 2.7 பில்லியன் டொலர்கள். இவருக்கு வயது 26.

இவர்தான் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் வயதில் இளையவர். மேலும் முதற் தடவையாக இவர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர்களோடு சேர்த்து பேஸ்புக்குடன் தொடர்புடைய ஏழு பேர் இம்முறை உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

9 வயதிலேயே புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உள்ள பிரிட்டனின் நகரம்!
பிரிட்டனின் மிகவும் பின்தங்கிய நகரில் ஒன்பது வயதிலேயே புகை பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்து விடுவதாக தேசிய ரீதியான கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. இதை விட மிகச் சிறிய வயதில் புகை பிடித்தவர்களும் இங்குள்ளனர். விளையாட்டுக்காக பாட்டன் பாட்டி பழக்கியதால் மூன்று வயதிலேயே புகை பிடித்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது. தென் வேல்ஸ்ஸில் உள்ள மேர்திர் டிட்பில் தான் இந்த நகரம்.

இங்கு மிகக் குறைந்த வேதனத்துக்கு தொழில் செய்பவர்களும், நலன்புரிக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்பவர்களும் தான் அதிகம் உள்ளனர்.
தனது ஆய்வின் போது இரண்டு மற்றும் மூன்று வயதில் புகைப் பிடித்தவர்களையும் தான் சந்தித்ததாக ஆய்வாளர் டிரேஸிபோவன் கூறுகின்றார். அவர்களின் பெற்றோர்களே இவர்களை விளையாட்டாக சிகரட் பிடிக்க வைத்துள்ளனர்.

கோழிகளுக்கு மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உண்டு: ஆய்வுத் தகவல்.

கோழிகள் அதிக உணர்வு பூர்வமானவை. மிகுந்த பாசம் கொண்டவை. துயர் ஏற்படும் நேரத்தில் வருந்தும் குணம் கொண்டவை. இந்த வருத்தங்களை மாற்றங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றன.இந்த விடயங்கள் தற்போது முதன் முறையாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. பறவைகளில் மற்றவைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இந்த ஆற்றல் இருப்பது இது சம்பந்தமாக ஆராய்ந்த விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காரணம் பறவைகளால் மற்றவற்றின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம் என்பது இப்போது தான் முதற்தடவையாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது விலங்குகளுக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது.
தற்போது கோழிகளுக்கும் அது இருப்பது தெரியவந்துள்ளதால் அவற்றின் மூளையின் செயற்பாட்டைப் பற்றி மேலதிகமாக ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.கோழிகளை வைத்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஆய்வுத்துறை மாணவர் ஜோ எட்கார் தலைமையிலான குழுவினரே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.கோழிகள் இவ்வாறு ஒன்றின் துன்பத்தைக் கண்டு மற்றொன்று உணர்ச்சி வசப்படும் போது அதன் இருதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. கண்களில் உஷ்ணம் குறைகின்றது என்றெல்லாம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மனி துருப்புகளால் பெண் சுட்டுக் கொலை: ஆப்கானிஸ்தான் கண்டனம்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ஜேர்மனிய துருப்புகள் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை சுட்டுக்கொன்றது. இன்னொருவர் காயமடைந்தார் என ஆப்கானிஸ்தான் பொலிசார் கூறினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள குண்ட்டுஸ் மாகாணத்தில் உள்ள சகார் தாரா மாவட்டத்தில் புதன் அன்று ஜேர்மனி துருப்புகள் மீது தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஜேர்மனி வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.இந்த தாக்குதலில் ஒர் பெண் உயிரிழந்தார். குண்ட்டுஸ் மாகாண ஜேர்மனி துருப்புகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டின்ன்ட் கர்னல் க்ளாஸ் கெய்ர் கூறுகையில் துருப்புகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்றார்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக முகாமிட்டுள்ள சர்வதேச துருப்புகளால் பொது மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது என்கிற குற்றச்சாற்று உள்ளது. இந்த பெண் உயிரிழப்பு அந்த குற்றச்சாற்றுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.வான்படைத் தாக்குதல் ஒன்றில் 9 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அயல்நாட்டு துருப்புகளின் யு.எஸ் கமாண்டர் ஜெனரல் டேவிட் பெட்ராஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
லிபிய போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பிரான்ஸ்.
லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக புரட்சியாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
லிபியா போராட்டக்காரர்கள் தலைமையையும் பிரான்ஸ் முறைப்படி அங்கீகரித்துள்ளது. லிபியா புரட்சியாளர்கள்களுக்கு அங்கீகாரம் அளித்த முதல் தேசமாகவும் பிரான்ஸ் உள்ளது. கடாபியின் சர்வாதிகாரத்தில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்து ஆயுத ஏற்றுமதி தடை, கடாபியின் உறவினர்கள் சொத்துகளை முடக்குதல், கடாபி குடும்பத்தினர் பயணிக்க தடை என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. லிபியாவில் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளவர்கள் இடைக்கால மாற்ற தேசிய கவுன்சிலை உருவாக்கி உள்ளனர். இந்த தேசிய கவுன்சிலுக்கு பிரான்ஸ் அங்கீகாரம் அளித்துள்ளது.
வியாழக்கிழமையன்று பிரான்ஸ் ஜனாதிபதி நிகோல்ஸ் சர்கோசி மற்றும் இடைக்கால மாற்ற தேசியக் கவுன்சிலின் 2 பிரதிநிதிகள் சந்தித்து பேசிய நிலையில் பிரான்ஸ் தனது அங்கீகாரத்தை அளித்துள்ளது. பிரான்ஸ்க்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் என புரட்சியாளர்கள் கூறினர்.
சொந்த நாட்டு மக்கள் மீதே மனித உரிமை மீறலை கடைபிடிக்கும் கடாபியின் நடவடிக்கையை கண்டித்து லிபியா வான்வெளி மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 4 அயல்நாட்டு அமைச்சர்கள் பிரங்கல்ஸ் நேற்று ஆலோசித்தனர்.



பூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்: நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு


அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப் போகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது.
அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992 ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும், சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன. வரும் பௌர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவை விட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும்.
அடுத்த மாத பௌர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். சூப்பர்மூன் என்ற இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இமெயில்கள் பரவி வருகின்றன.
வானில் அதிசயங்கள் நிகழும் போது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும் பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது.
கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ம் ஆண்டில் சூப்பர்மூன் ஏற்பட்ட போது அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை டிரேசி என்ற சூறாவளி புரட்டிப் போட்டதாகவும், 1974 ல் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சந்திரன் மிக அருகில் வருவதால் ஏற்படும் வானிலை மாற்றங்களால், பூமியில் வெப்பம் தணியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கோடைகால வெப்பத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
முஸ்லீம் சமூகத்தினரால் எப்போதும் பிரச்சனை இருந்ததே இல்லை: அமெரிக்கா
அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தீர்வுக்கு வழி காண்பதில் நமக்கு உதவுவோராக உள்ளனர். அவர்களால் பிரச்சனை இல்லை என வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜெய்கார்னே கூறியுள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லீம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது.இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெய்கார்னே கூறியதாவது: அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களாக உள்ளனர். அதனால் அவர்களின் உதவியுடன் நாம் தீவிரவாத பிரச்சனையை எளிதில் களைய முடியும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அமெரிக்க முஸ்லீம்கள் நமக்கு உறுதுணையாக இருப்பரே அன்றி அவர்களால் பிரச்சனை இருக்காது. தீவிரவாத பிரச்சனையில் காங்கிரஸ் சபை அக்கறை காட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம்.இது முக்கியமான பிரச்சனை என்றும் நம்புகிறோம். இவ்வாறு ஜெய்கார்னே கூறினார். கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

12 நாள் பயணத்துக்கு பிறகு டிஸ்கவரி ஓடம் தரை இறங்கியது !

அமெரிக்காவில் டிஸ்கவரி விண் வெளி ஓடம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று இருந்தது. 12 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அதில் 6 விண்வெளி வீரர்கள் வந்தனர்.
 
டிஸ்கவரி ஓடத்துக்கு இது கடைசி பயணமாகும். 27 ஆண்டுகளாக டிஸ்கவரி ஓடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மிகவும் பழைதாகி விட்டதால் இனி இதை பயன்படுத்தாமல் அருங்காட்சியகத்தில் வைப்பது என்று முடிவு எடுத்தனர். அதன்படி டிஸ்கவரி ஓடம் இனி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
 
27 ஆண்டில் “டிஸ்கவரி ஓடம் 39 தடவை விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளது. முதன் முதலில் 1984-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி விண்வெளிக்கு சென்றது. இதுவரை 246 பேரை விண்வெளிக்கு ஏற்றி சென்றுள்ளது. விண்வெளியில் மொத்தம் 365 நாட்கள் இருந்துள்ளது. 5830 தடவை பூமியை சுற்றி வந்துள்ளது. 23 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.


லிபியா அதிபர் கடாபி வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்.

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சி படையினர் கடாபிக்கு 72 மணி நேரம் கெடு விதித்து இருந்தனர்.
இந்த கெடு நாளையுடன் முடிகிறது. இதனால் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தலைநகரம் திரிபோலிக்கு 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாவியா நகரம் புரட்சி படையினர் கட்டுப் பாட்டில் இருந்தது. அங்கிருந்து திரிபோலி நகரை நோக்கி புரட்சி படையினர் முன்னேறி வருகின்றனர்.
அவர்கள் தலைநகரை நெருங்க விடாமல் தடுக்க ராணுவ விமானம், ஹெலிகாப்டர் மூலம் சரமாரி குண்டு வீசினார்கள். ஆனால் அதையும் மீறி புரட்சிபடை முன்னேறி வருகிறது. தற்போது புரட்சி படையிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள் உள்ளன. அவற்றின் மூலம் அரசு படையினரை தாக்கி வருகின்றனர்.
இவை தவிர மற்ற பகுதிகளில் இருந்தும் தலைநகரை நோக்கி புரட்சி படைகள் நகர்ந்து வருகின்றன. இதற்கிடையே கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் பரவி உள்ளன. கடாபி வழக்கமாக பயன்படுத்தும் "பால்கான் 900" என்ற விமானம் எகிப்தில் இருந்து புறப்பட்டு கிரீஸ் வழியாக சென்றது.
இதை கிரீஸ் உறுதிபடுத்தி உள்ளது. இந்த விமானத்தில் கடாபி தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த விமானம் எங்கு சென்றது? அதில் கடாபி சென்றாரா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
சீன நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு.
சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 134 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் 1264 வீடுகள் இடிந்துள்ளதாகவும், 17658 வீடுகள் பெருத்த சேதம் அடைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 127100 பேர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF