Tuesday, March 15, 2011

இன்றைய செய்திகள்.

3ஆம்  அணு உலை வெடித்தது: ஜப்பானில் அச்சம்

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில், நேற்று காலையில் மூன்றாம் எண் அணு உலை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் எண் அணு உலையில், "கோர்' எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஜப்பான் மிக மோசமான அணு கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புக்குஷிமா டாய் இச்சியில் ஆறு உலைகளும், டாய் இனியில் நான்கு உலைகளும் செயல்படுகின்றன. டாய் இச்சியில் ஒன்றாம் எண் அணு உலை, கடந்த 12ம் தேதி வெடித்தது. அதையடுத்து, மூன்றாம் எண் அணு உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன.தொடர்ந்து, உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக, போரிக் அமிலம் கலந்த கடல் நீர் அதிகளவில் உலைக்குள் செலுத்தப்பட்டது. ஆனால், நீர் செலுத்தப்படும் வேகத்தை விட வெப்பம் பல மடங்கு வேகமாக அதிகரித்தது. இதனால், உலை எந்நேரமும் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.நேற்று காலை ஜப்பான் நேரப்படி 11 மணியளவில், உலையின் வெளிப்புறச் சுவர் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மற்ற 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சரவை தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, "அணு உலை மற்றும் அதன் உட்புற சுற்றுச்சுவர் ஆகியவை எவ்வித சேதமும் அடையவில்லை. காற்றில் கலந்த கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது' என்று தெரிவித்தார்.

அதேநேரம், காற்றின் திசையால், கதிர்வீச்சு, புக்குஷிமாவுக்கு வடக்கில் உள்ள ஒனகாவா அணு மின் நிலையம் வரை பரவியது. இதனால், ஒனகாவா நிலையத்தில் அணு மின் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புக்குஷிமாவில் இருந்து 160 கி.மீ., தொலைவு வரை கதிர்வீச்சு கசிந்திருப்பது கண்டறியப்பட்டது.இந்த அணு உலை வெடிப்புகளால் ஏற்படும் பாதிப்பு எந்தளவில் இருக்கும் என்பது குறித்து, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய அணுசக்தி நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.ஆபத்தில் இரண்டாம் எண் அணு உலை: இதற்கிடையில், டாய் இச்சியின் இரண்டாம் எண் அணு உலையில் நேற்று குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதனால், உலையில் வெப்பம் அதிகரித்து, "கோர்' கம்பிகள் பாதிக்கு மேல் உருகியதாகத் தகவல்கள் வெளியாயின.

வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, வெளியில் இருந்து நீர் உள்ளே செலுத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இரண்டாம் எண் அணு உலைக்கான நிபுணர்கள், ""கோர்' கம்பிகள் உருகின என்ற செய்தியைப் புறக்கணிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த இரண்டு வெடிப்புகளில், அணு உலையில் வெப்பம் அதிகரித்ததால், ஹைட்ரஜன் வாயு உருவாகி, அது வெளியில் உள்ள இரண்டாம் நிலை சுற்றுச்சுவரை தகர்த்து வெளியே வந்திருக்கிறது.இச்சம்பவத்தில், முதல் நிலைச் சுற்றுச்சுவர் சேதம் அடையவில்லை.ஆனால், இரண்டாம் எண் உலையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும், "கோர்' கம்பி எனப்படும் அணு மின் உற்பத்திக்கான மூலப்பொருள் உருகி விழும் நிகழ்ச்சி, மிகப் பெரும் விபரீதத்தையும். நீண்ட காலத்துக்கு மோசமான விளைவையும் ஏற்படுத்தும்.இரு உலைகளில் இருந்து கதிர்வீச்சு கலந்த நீர் மற்றும் நீராவி வெளியேற்றம் பல மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்குமென, ஜப்பானிய, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் கருதுகின்றனர்.

பீதியில் உலக நாடுகள்: இதுவரை மின்சார உற்பத்திக்கு அணு மின் உலை கட்டுமானத்தைப் பரிந்துரை செய்த நாடுகள் எல்லாம் இப்போது ஜப்பானில் அணு மின் உலையின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை அடுத்து பீதியில் ஆழ்ந்துள்ளன. பின்லாந்து நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து அணு மின் உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. மிக விரைவில் அடுத்த அணு மின் உலை ஒன்று நிறுவத் திட்டமிட்டிருந்த சுவிட்சர்லாந்து, அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தன் பகுதியில் அணு கதிர்வீச்சு அபாயம் வராமல் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.



2ஆம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு! 3 ஆவது நாளாக மீண்டும் உலுக்கிய பூகம்பம்.
ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.


சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது.இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.


தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர். பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.


நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.

இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட் டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது. ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது.





அமெரிக்காவின் மேற்குக் கரையோரப் பகுதியில் சுனாமி தாக்குதல்.

ஜப்பானிய நிலநடுக்க அனர்தத்தின் பின் அமெரிக்காவின் மேற்குப் புறத்திலும் சுனாமி அலைகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.கலிபோர்னியா மாநிலத்தின் கிரஸ்கண்ட் நகரில் இரண்டு மீற்றர்கள் உயரம் வரை சுனாமி அலைகள் உருவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட முன்பே அங்கிருந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டிருந்ததனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.ஆயினும் கட்டிடங்கள் மற்றும் மரங்கள் சிற்சிறு சேதங்களுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சுனாமி தாக்கத்தை எதிர்பார்த்து அமெரிக்காவின் மேற்குக் கரையோர நகரங்கள் பலவற்றில் மக்கள் முன்னெச்சரிக்கையாக நகர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன்.
கடுமையான கட்டுப்பாடு விதித்த தாய் மீது ஆத்திரம் கொண்ட 14 வயது சிறுவன் துப்பாக்கியை எடுத்து தாயின் தலையில் சுட்டு கொலை செய்தான்.மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்டேசி லிசன்பி(47). இவர் ஒரு கணித ஆசிரியர். இவர் டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
அபாயமான நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டவரப்பட்டதாகவும், மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட சிறுவன் ஆசிரியர் ஸ்டேசியின் இளைய மகன் ஆவார்.சட்டச் காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அந்த சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது வீட்டில் வேறு யாரும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை குறித்து சிறுவனிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது அவன் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிச் சென்றதாகவும், என்னால் அவனை பிடிக்க இயலவில்லை எனவும் தெரிவத்தான்.
ஆனால் சிறுவன் கூறியது போல அந்த இடத்தில் வேறு எந்த நபரும் ஓடியதற்கான அடையாளங்கள் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.சந்தேகம் கொண்டு சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்த போது,"தனது பெற்றோர் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் கொல்லப்படவுள்ளதாக குறிப்பிட்ட சிறுவன் கூறினான்" என அவர்கள் தெரிவித்தனர்.
உலக வரலாற்றினை புரட்டி போட்ட டிவிட்டர்.
அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி, மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி, அதிபரை பதவி விலக்கோரி மக்கள் கிளர்ச்சி ‌என ஆப்ரிக்‌கா, மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்கியது சமூக வலை தளமான டிவிட்டர். இந்த சமூக வலை தளம் துவங்கி தனது 5 வது ஆண்டினை நிறைவு செய்கிறது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி துவங்கப்பட்டது.

இன்று உலக தலைவர்கள் தங்களது கருத்துக்கள், சிந்தனைகளை பரப்ப சிறந்த இணையதளமாக டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். தற்போது 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் டிவிட்டரை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. தினமும் 140 மில்லியன் வாசகர்கள் 140 கேரக்டர்களில் குறுந்தகவல்களை டிவிட்டரில் பயன்படுத்துகின்றனர்.கடந்த 2010 ம் ஆண்டு 25 மில்லியன் மக்கள் டிவிட்டரை பயன்படுத்தியுள்ளனர். 100 மில்லியன் நிறுவனங்கள் டிவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளன. சான்பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த ஜாக்தூர்சே என்பவரின் மூளையில் உதித்தது டிவிட்டர் என்ற சமூக வலை தளம்.இதன் இணை நிறுவனரும் இவரே அமெரிக்காவின் ஒடியோ மாகாணத்தில் போடோகேஸ்டிங் நிறுவனத்தில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது சக ஊழியர்களான பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ‌டிவிடர் என வலைதளத்தினை துவக்கினர். பின்னர் இத‌னை கடந்த 2007 ம் ஆண்டு டிவிட்டர் என பெயரிட்டனர்.

இன்ற உலக நாடுகளில் டிவிட்டரின் சமூக வலைதளத்தின் வாயிலாக வெளிவரும் கருத்துக்களால் தான் எகிப்து, ஓமன், ஏமன், அல்ஜீரியா, துனீசியா,லிபியா போன்ற நாடுகளில் அரசுக்கெதிராக புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாயின. இதனாலேயே மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன்பே சில நாடுகள் இணையதளத்தினை முடக்க முயன்றன.தற்போது சீனாவில் மல்லிகை புரட்சி துளிர்விட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களும் மூலக்காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையில் பிரபல பாப்பாடகர் லேடி கஹா தனது டிவீட்டர் கணக்கில் 8.78 மில்லியன் நண்பர்களை இணைத்துள்ளார்.

இது குறித்து டிவிட்டர் நிறுவனர்கள் ஜாக்தூர்சே, பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூறியதாவது: டெக்ஸ்ட் மெ‌சேஸ்களை பரிமாறிக் கொள்வதற்காக வேடிக்கையாக டிவிட்டரை துவங்கினோம். ஆனால் இன்றுடன் கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது அந்நாட்டு மக்களிடம் உடனுக்குடன் தகவல்களை பெற பேரூதவியாக இருந்தது. சர்வாதிகார ஆட்சியினால் இருண்டு போய்கிடந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தின் திறவுகோலாக டிவிட்டர் இருந்துள்ளது என்றனர்.

ஆயுத இறக்குமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்த இந்தியா!

ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.உலகிலேய ஆயுத தள வாட இறக்குமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக, இந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2006 - 10ம் ஆண்டில் நடந்த ஆயுத சப்ளையில், சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஓன்பது சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது. இதில், ரஷ்யாவில் இருந்து தான் அதிகபட்சமாக 82 சதவீத ஆயுதங்கள் சப்ளையாகியுள்ளது. சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை அதிக இறக்குமதி செய்ததில், இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகள் உள்ளன. 

இந்தியா ஓன்பது சதவீதம், சீனாவும், தென்கொரியாவும் ஆறு சதவீதம், பாகிஸ்தான் ஐந்து சதவீதம்.இதில் போர் விமானங்கள்,போர் கப்பல்களும் அடங்கும்.இதற்கு முந்தைய 2000 - 2005ம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது. 

இந்தாண்டை விட கடைசி ஐந்தாண்டில் ஆயுத இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 71 சதவீதம் போர் விமானங்களே இடம் பிடித்துள்ளன. வரும் ஆண்டுகளிலும், இந்தியா தான் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும். ஆயுதங்கள் விமானங்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஆர்டர்களை புக்கிங் செய்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்களை சந்திக்கும் பொருட்டும், மேலும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை போட்டி போட்டு ஆயுதங்களை குவிக்கிறது.

இந்த நிலையில் அதற்கு இணையாக இந்தியாவும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, இந்த ஆய்வுகளை வெளியிட்ட மையத்தின் சீமோன் மெஸ்மென் தெரிவித்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டுகளை விட 40 சதவீதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம் ஆயுத இறக்குமதிக்கே போய்விடும். போருக்கான ஜெட் விமானங்கள் 126ம், 200 ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் அடங்கும். 

சீனாவின் ஆயுத இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம், உள் நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முழுவீச்சில் இறக்கிவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் வெற்றி பெற வில்லை.உலகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. சர்வதேசஅளவில் பல்வேறு நாடுகளுக்கு சப்ளையாகும் ஆயுதங்களில் 30சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யா, ஜெர்மனியும் உள்ளன.
சனத் ஜயசூரியவைத் தேற்றும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த.

முன்னாள் கிரிக்கட் வீரரும், ஆளுங்கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவைத் தேற்றும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.அரசாங்கத்தின் அண்மைக்கால போக்குகள் காரணமாக அதிருப்தியடைந்திருந்த சனத் ஜயசூரிய, கடந்த நாட்களில் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டார்.
இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தலில் எந்தவொரு பிரசாரக் கூட்டத்திலும் பங்கு கொள்ளாத அவர், தான் தலைமைப் பதவி வகிக்கும் மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களையும் தொடர்ச்சியாக புறக்கணித்திருந்தார்.அதன் காரணமாக அவரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவியினின்றும் அகற்றுவதற்கான முயற்சிகள் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவ்வாறான பின்புலத்தில் கடந்த சனிக்கிழமை மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
அதற்கும் சனத் ஜயசூரிய சமூகமளித்திருக்கவில்லை. அவர் தன் பாட்டில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.அதனையடுத்து கூட்டத்தை முடித்துக் கொண்டவுடன் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ நேரடியாக சனத் ஜயசூரியவின் வீட்டுக்கே தேடிச் சென்றுள்ளார். அவரை தேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களின் பின் அவருக்கு விருப்பமானவர்களை தலைவர் பதவிகளுக்கு நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆயினும் ஜனாதிபதி மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தரும் வாக்குறுதிகளில் அறவே நம்பிக்கையில்லை என்று தெரிவித்திருக்கும் சனத் ஜயசூரிய,  உலகக் கிண்ண வாக்குறுதி போன்று இம்முறையும் ஜனாதிபதி வாக்குமாறு செய்யும் பட்சத்தில் அரசாங்கத்தை விட்டும் ஒதுங்கி விட தயங்கப் போவதில்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
பென்டகனின் செயலை விமர்சித்தவர் ராஜினாமா.
விக்கி லீக்ஸ் இணைய தளத்துக்கு, ராணுவ ரகசியங்களை அளித்த அமெரிக்க வீரர் பிராட்லி மேனிங்கை சிறையில் நிர்வாணப்படுத்திய பென்டகனின் செயலை விமர்சித்த, அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர் க்ரோலே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.விக்கி லீக்ஸ் இணைய தளம், பல்வேறு நாடுகளின் ரகசியங்களையெல்லாம் அம்பலப்படுத்தியது. இந்த வரிசையில் அமெரிக்க ராணுவ ரகசியங்களையும் இந்த இணைய தளம் வெளியிட்டது. அமெரிக்க வீரர் பிராட்லி மேனிங் என்பவர் மூலம் ராணுவ ரகசியங்கள் கசிந்தது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள பிராட்லி மேனிங் வாரத்தில் ஒரு நாள் நிர்வாணமாக தூங்க வேண்டும், என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது.


"பென்டகனின் இந்த செயல் முட்டாள்தனமானது, கேலிக்குரியது'என, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியும், பொது விவகாரத்துறை துணை அமைச்சருமான பி.ஜே. க்ரோலே விமர்சனம் செய்திருந்தார். அமைச்சரின் இந்த விமர்சனத்துக்கு ஒபாமா நிர்வாகம் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து க்ரோலே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்றுக் கொண்டார். இவருக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பாளர் மைக்கேல் ஹேமர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF