Tuesday, March 22, 2011

இன்றைய செய்திகள்.

மன்னாரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது! மக்கள் அச்சத்தில்!!

இன்று மன்னார், பேசாலை, நடுக்குடா, தலைமன்னார் மற்றும் பழைய பாலத்தடி ஆகிய பிரதேசங்களில் கடல் நீர் கிராமத்தினுள் உட்புகுந்துள்ளது.மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசக் கடலில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் கடுங்காற்றும் வீசி வருகின்றது. இதனால் இன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர்.

கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படும் நேரத்தில் கடுங்காற்றுடன் கடல் நீர் கிராமத்தில் உட்புகுவதனால் கடல் கரையை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கடல் நீர் உட்புகுந்தினால் பழைய பாலத்தடியில் குடும்பத்துடன் வந்து தங்கி மீன்பிடித்தொழில் ஈடுபட்ட நாற்பது தென்னிலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் சுனாமித் தாக்கம், இலங்கையின் மட்டக்களப்பில் நிலத்தடி நீர் வெளியேறியமை, சுப்பர்மூன் நிகழ்வு போன்ற உலகில் இடம்பெறும் இயற்கை மாற்றங்களால் மக்கள் மத்தியில் பீதி நிலை அதிகரித்துக் காண்ப்படுகிறது.

மட். ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு அருகில் திடிரென நிலத்தில் இருந்து வந்த தண்ணீர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகில் நீர்க்குமிழிகள் தோன்றுவது தொடர்பில் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறி வருவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி ஏ.எம்.எம்.ஹசீரை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்திரன் பூமியை நெருங்கிவந்தபோது வாயு மண்டலத்தில் ஏற்பட்ட அமுக்க நிலைமை காரணமாக நிலத்தின் கீழ் உள்ள நீர் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாகவே இந்த நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறிவருவதுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றது.எனினும் இந்த நிலைமை காரணமாக எதுவித இயற்கை அனர்த்தங்களும் ஏற்படாதெனவும் இது தொடர்பில் கொழும்பு நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசீர் தெரிவித்தார்.
உடல் நிலை மோசமானதையடுத்து சரத் பொன்சேகா தேசிய மருத்துவமனையில் அனுமதி.
உடல் நிலை மோசமானதையடுத்து சரத் பொன்சேகா கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.சிறைச்சாலையின் வசதியின்மை மற்றும் நுரையீரல் கோளாறுகள் என்பன காரணமாக இதற்கு முன்பும் ஒரு தடவை சரத் பொன்சேகா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தார்.
ஆயினும் மீண்டும் அவரது உடல் நிலை மோசமானதையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமை குறித்து தெரிய வந்திருந்த நிலையில்  சுகம் விசாரித்தறிந்து கொள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.
அந்தமான், பிலிப்பின்ஸ், தைவானில் நிலநடுக்கம்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸ், கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தைவானில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.பிலிப்பின்ஸில் வடக்கு கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுமானியில் 6.4 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. சுனாமி அபாய எச்சரிக்கையும் இல்லை. எனினும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலுக்கு அடியில் சுமார் 50. கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தலைநகரை உலுக்கியது தைவானில் தலைநகர் தைபேயில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் வந்து நின்றனர்.ரிக்டர் அளவுமானியில் 5.5 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் உயிரிழப்பு, பொருள்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அந்தமானில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் சனிக்கிழமை இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 என்ற அலகில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்படவில்லை.
கடாபியின் மகன் மருத்துவமனையில் இறந்தாக தகவல்.
கடாபியின் ஓர் மகனான ஹமீஸ் கடாபி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அமெரிக்க படைகள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன. இதில் லிபியாவில் உள்ள திரிபோலியின் கடாபியின் அலுவலகத்திலும், கடாபி உறவினர்கள் வசிக்கும் இடத்தை கூறி வைத்து தாக்குதல் நடத்தினர்.

அதில் கடாபியின் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் இடிந்து விழுந்தது.அங்கு அப்பொழுது இருந்த கடாபி மகன் ஹமீஸ் மற்றும் கடாபியின் உறவினர்களும் தீ, இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.இதில் தீயில் படுகாயம் அடைந்த ஹமீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .
ஜப்பானிய கதிர்வீச்சு கனடாவுக்கு பரவியது.
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரை பகுதியில் மிக சிறிய அளவு கதிர்வீச்சு உள்ளது என கனடா சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.ஜப்பான் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவல் காரணமாக இந்த கதிர்வீச்சு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ளது. இது அபாயகரமான அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானில் இந்த மார்ச் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு மின்நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. இந்த கதிர்வீச்சு பரவல் ஜப்பானையடுத்து உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடற்கரை பகுதிகளிலும் சிறிய அளவு அதிகரித்துள்ளது.
இது குறித்து கனடா சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் காரி ஹோலப் கூறுகையில்,"கதிர்வீச்சு நிலை எதிர்பார்த்த அளவிலேயே உள்ளது. கனடாவில் மழை பொழியும் போது ஏற்படும் கதிர்வீச்சு அளவே தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சால் கனடியர்கள் உடலுக்கு அபாயமில்லை" என்றார்.
கதிர்வீச்சை கண்காணிக்க கடந்த வாரம் இறுதியில் கனடா சுகாதாரத்துறை மேற்கு கடலோரப்பகுதிகளில் மேலும் கடலோர கண்காணிப்பு மையங்களை நிறுவியது. ஜப்பான் கதிர்வீச்சு தாக்கம் பெருமளவு இல்லாத போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.கதிர்வீச்சு பாதிக்காமல் இருக்க பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் மூக்கை மூடிக்கொள்ளும் துணியை அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.
மாளிகையில் விமானத்தை மோதவிட்டு கடாபி மகனை கொலை செய்த விமான ஓட்டுநர்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கக் கூட்டு படைகள் இறங்கியுள்ளன.இது அதிபர் கடாபிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரது ராணுவம் நிலை குலைந்து ஓட்டம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடாபியின் மகன் கிளர்ச்சியாளர்களின் தற்கொலைக்கு பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடாபியின் 6 வது மகன் ஹாமிஸ். இவர் ராணுவத்தில் 32 வது படை பிரிவில் பணிபுரிந்தார். இவர் பாப் அல் அஷிஷியாவில் உள்ள ராணுவ குடியிருப்பில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டின் மீது ஒரு ஜெட் விமானம் மோதி நொறுங்கியது.இதில் ஹாமிஸ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விமானத்தை கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட விமானி ஒருவர் இயக்கி உள்ளார்.
அவர் ஹாமிசை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வீட்டின் மீது விமானத்தை மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை லிபியா அரசு மறுத்துள்ளது. இது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.
லிபியாவைத் தொடர்ந்து சிரியாவிலும் போராட்டம் வெடித்தது.
கடந்த மாதம் பெப்ரவரி துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களை மக்கள் தாக்கினர். அச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கலவரம் வலுவடைந்தது.
நேற்று 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேரா நகருக்கு வரும் ரோடுகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தேரா நகரின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்தபடி போராட்டக்காரர்களின் நடவடிக்கையை கண்காணித்தது.இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாத் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தனர். 

மேலும் அதிபர் ஆசாத்தின் உறவினர்களுக்கு சொந்தமான 2 டெலிபோன் நிறுவனங்களுக்கும் தீ வைத்தனர். போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் தேரா நகரில் இயங்கும் இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சிரியா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஜப்பான் நில அதிர்வினால் பாரியளவு காப்புறுதி தொகையை வழங்க நேரிடும் : சுவிஸ் ரீ
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாரியளவு காப்புறுதி தொகைகளை செலுத்த நேரிட்டுள்ளதாக சுவிஸ் ரீ நிறுவனம் அறிவித்துள்ளது.பாரிய இயற்கை அனர்த்தங்களினால் குறைந்தபட்சம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிடலாம் என உலகின் முதனிலை மீள் காப்புறுதி நிறுவனமான சுவிஸ் ரீ தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், சரியான புள்ளி விபரங்களை வெளியிட முடியாது எனவும் இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அணு ஆலையினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து மீள் காப்புறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வாகனங்களுக்கு கல்லெறி தாக்குதல்.
அரபு லீக்கின் செயலாளருடனான கலந்துரையாடலுக்காக எகிப்து சென்றிருந்த ஐக்கிய நாடுகள்  செயலாளர் நாயகத்தின் வாகனங்களுக்கு எகிப்தில் கல்லெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.தாக்குதல் காரணமாக கலந்துரையாடல் நடைபெற்ற கட்டிடத்தின் பின்வாசல் வழியாகவே அவர் உள்ளே நுழைய நோ்ந்துள்ளது.
பலம்பொருந்திய அரபு லீக் ஆனது லிபியாவில் விமானப் போக்குவரத்துத் தடை வலயத்தை அமுல்படுத்த உதவியதன் மூலம் லிபியாவின் பொதுமக்களை பாதுகாக்க உதவியதாக பான் கீ மூன் பிரஸ்தாப கலந்துரையாடலின் பின் கருத்துத் தெரிவித்துள்ளார்.லிபியாவின் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அரபு லீக் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படும் என்று அரபு லீக்கின் பொதுச்செயலளார் அபூ மூஸா தெரிவித்துள்ளார்.
அதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மீதான கல்லெறித் தாக்குதல் காரணமாக அவரது கலந்துரையாடலின் நேரம் சுருக்கப்பட்டதாக, குறுகிய நேர கலந்துரையாடலே நடைபெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.
லிபிய குண்டுவீச்சின் தாக்கம்: பெங்காசி நகரம் எரிகிறது
லிபியா மீதான ராணுவ நடவடிக்கையின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு கடாபியின் வீடு அருகே நடந்த போர் விமானங்களின் குண்டு வீச்சில் வீட்டின் வெளிப்பகுதி சுவர் இடிந்து தரைமட்டமானது.
மேலும் டிரிபோலியில் இருந்து பெங்காசி வரையிலான வான்வெளிக் கட்டுப்பாடு அமெரிக்க கூட்டுப் படைகளின் வசம் வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவின் பல்வேறு நகரங்கள் மீது கடந்த இரு நாட்களாக அமெரிக்க கூட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கி வருகின்றன.
தலைநகர் டிரிபோலியில் கடாபியின் குடியிருப்புக்கு மிக அருகில் இருந்த ராணுவத்தலைமையகக் கட்டடம் ஒன்றின் மீது நேற்று முன்தினம் கூட்டணி போர் விமானம் ஒன்று குண்டு வீசி தாக்கியது. இதில் மூன்று மாடிக் கட்டடம் தரைமட்டமாகியது.
பலத்த பாதுகாப்பு நிறைந்த அக்கட்டடத்தில் யாரும் இறந்ததாக தகவல் இல்லை. அப்போது கடாபியும் அங்கு இல்லை. லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் அளித்த பேட்டியில்,"இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். இப்பகுதியில் உள்ள கடாபியின் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையில் தாக்குதல் நடந்துள்ளது" என்று குறை கூறினார்.
இது குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்,"கடாபியின் கட்டடம் மீதான தாக்குதல் முட்டாள்தனமானது. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானப்படி நாம் செயல்படுவது தான் முக்கியம்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் கார்ட்னே கூறுகையில்,"எங்களது இலக்கு கடாபி அல்ல. லிபிய மக்களுக்கு எதிராகச் செயல்படும் அவரது ராணுவம் தான். ஆனால் கடாபியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. எங்களின் இலக்கில் அவர் இருக்கிறாரா, இல்லையா என்று நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
டிரிபோலி, மிஸ்ரட்டா, பெங்காசி, அஜ்தாபியா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடாபி ராணுவம் மற்றும் ராணுவப் படைத்தளங்கள் மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் வழித் தாக்குதல் நடத்தின. பெங்காசித் தெருக்களில் கடாபி ஆதரவு வீரர்கள் சடலம் 14 கிடந்தன.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் இரண்டாவது முறையாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் ஓபரேஷன் ஒடிசி டான் என்ற இந்த ராணுவ நடவடிக்கையில் அரபு நாடான கத்தார், பெல்ஜியம், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
ஜிமெயில் சேவையை சீனா முடக்கிவிட்டது: கூகுள் புகார்
உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்க புகார் தெரிவித்துள்ளது.சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் துனிசியா, எகிப்து போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது.
ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலக புகழ் பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம் சாட்டியுள்ளது.அதுமட்டுமின்றி வி.பி.‌என் எனப்படும் தனி நபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
கொக்கோகோலா குடிக்கும் ஒட்டகம்!
ஒட்டகங்கள் போத்தல்களில் அடைக்கப்பட்ட கொக்கோகோலா குளிர்பானங்களை அருந்துகின்றன என்பது புதுமைதான்.ஆனால் சிறு வயதில் இருந்து பழக்கி எடுக்கின்றபோது இது சாத்தியம் ஆகின்ற விடயமே.

துருக்கி நாட்டவர்கள் ஒட்டகங்களை இவ்விதம் பழக்கி எடுக்கின்றார்கள். ஒட்டகம் ஒன்று போத்தலில் அடைக்கப்பட்ட கொக்கோகோலா குளிர்பானத்தை ஒரு மிடறிலேயே குடித்துத் தள்ளுகின்ற வீடியோ காட்சி இணையங்களில் மிகவும் பிரபலம் ஆகி உள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF