Sunday, March 27, 2011

இன்றைய செய்திகள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் புதிய கூட்டணி?


சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிய கூட்டணியொன்று உருவாக்க இரு கட்சிகளும் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சக்திவாய்ந்த பிரபலமான சர்வதேச நாடொன்றின் மத்தியஸ்தத்துடன் இந்த கூட்டணி உருவாக்கும் முனைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வடக்கு கிழக்கு அரசியல் பலத்தை உறுதி செய்யவும் பேரம் பேசும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் தெரியவருகிறது.
2013 மே மாதம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தோ்தலை இலக்காகக் கொண்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.புதிய கூட்டணி உருவாக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு பொது முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கான பாதுகாப்புக்கட்டமைப்பு குறைக்கப்படவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.அதன் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புக்கான வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் வாகனங்கள்  என்பன தொடர்பிலும் அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பிலும் அறிக்கையொன்றைத் தயார் செய்யுமாறும் அவர் தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இனி வரும் காலங்களில் அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை மட்டுப்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கள் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணங்களை மேற்கொள்வதாகக் கிடைத்த முறைப்பாட்டினையடுத்தே ஜனாதிபதி பிரஸ்தாப நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளார்.
ஐ.தே.கவின் சகல தொகுதி அமைப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.தற்போது தொகுதி அமைப்பாளராக செயற்படுவோர் கட்சியின் வெற்றிக்காக காத்திரமான சேவையாற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் பதவி நியமனங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.ஒழுக்க விதிகளை மீறிய மற்றும் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு தொகுதி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென மேர்வின் சில்வா கோரிக்கை.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றின் ஒழுக்கத்தை செம்மைப்படுத்தி வருவதாகவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன், கொழும்பு நகரை அழகுபடுத்தி வருவதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் காணப்படும் ஒரே பிரச்சினை பிரதமர் பதவிக்கான பிரச்சினைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய வெற்றியீட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்ட வெற்றிக்கும், அபிவிருத்திப் பணிகளுக்கும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை, பிரதமர் பதவிக்காக சில முக்கிய அமைச்சர்கள் இரகசியமாக போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹபரணையில் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சு
ஹபரணை காட்டுப்பகுதியில் இராணுவ தொடரணி மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.இது தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசாரங்களில் ஒன்று என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் 5 படைவீரர்கள் பலியானதுடன் ஒரு அதிகாரி காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.எனினும் இதனை மறுத்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இது சமாதான மற்றும கிழக்கின் அபிவிருத்தியை முறியடிக்கும் பிரசாரமாக இருக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நோயாளிகளின் விபரங்களை கணினி மயப்படுத்தும் திட்டம்..

நாட்டில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளிலுள்ள நோயளாகளின் விபரங்கள் கணிணி மயப்படுத்தப்படுத்த தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சு  ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் பரீட்சார்த்த செயல்பாடு கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தவுள்ளோம். இது இப்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது என தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.

அவர் மேலும், இத்திட்டத்தில் நோயாளிகளின் மருத்துவ வரலாறு குறித்து அனைத்து தகவல்களும் கணினி மயப்படுத்தப்படும். ஆலோசனைகளும் தகவல்களும் இதில் உள்ளடக்கப்படும் என தெரிவித்தார்.இத்திட்டம் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் ஈஹெல்த் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையாகும்.

மட்டக்களப்பில் மின்னல் தாக்குதலில் 17 மாடுகள் பலி! யானைத் தாக்குதலில் 13 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் மின்னல் தாக்குதல் காரணமாக 17 மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் யானை தாக்குதல் காரணமாக பல வீடுகள் சேதமைந்துள்ளன. சனிக்கிழமை அதிகாலை யானையின் தாக்குதல் காரணமாக படுவான்கரைப்பகுதியில் 13 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வயல்கள் மற்றும் தோட்டங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திக்கோடை பகுதியில் ஆறு வீடுகளும் தும்பறை பகுதியில் நான்கு வீடுகளும் பண்சேனை பகுதியில் நான்கு வீடுகளும் பாவற்கொடிச்சேனை பகுதியில் இரு வீடுகளும் மாவடிமுன்மாரி பகுதியில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளன. இதேவேளை பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலுவினமடு பகுதியில் நேற்று அதிகாலை சனிக்கிழமை மின்னல் தாக்கியதில் 17 மாடுகள் உயிரிழந்துள்ளன. 

இந்த மின்னல் காரணமாக ஒரு பண்ணையாளரின் பண்ணையில் இருந்த 17 மாடுகளே உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்துள்ள மாடுகளின் பெறுமதி சுமார் 6 இலட்சத்துக்கு மேல் இருக்குமென்றும் பண்ணையாளர் தெரிவித்தார். வெள்ள அனர்த்தம் காரணமாக பல மாடுகள் மடிந்துபோன நிலையில் மிகுதியாகவிருந்த மாடுகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!

ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரும் அணு உலையான புகுஷிமா டாயிச்சி சக்தி மையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நீரில் மீண்டும்  கதிர்வீச்சு (Radiation) அளவு பரிசோதனை செய்யப்பட்டதில் முன்னர் இருந்ததை விட சுமார் 10 மில்லியன் மடங்கு கதிர்வீச்சு தாக்கம் செலுத்தியுள்ளதாக இன்று ஜப்பான் அறிவித்துள்ளது.இச்சோதனை நிலையம் ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு முறை, முன்னர் இருப்பதிலிருந்து அரைமடங்கு தனது குளிர்நிலையை இழந்துவருவதால், கதிர்வீச்சு தாக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளது. 
கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துள்ளது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் இதனால் விழையப்போகும் எதிர்மறையான உடல் ஆரோக்கிய நிலைமைகள் பற்றி எம்மால் எதிர்வு கூற முடியாதுள்ளது என ஜப்பானின், கைத்தொழில் மற்றும் அணி ஆராய்ச்சி பாதுகாப்பு முகவர் நிலையத்தின் அதிகாரி ஹிடேஹிகோ நிஷ்ஹியாமா தெரிவித்துள்ளார்.இதேவேளை அதிகரித்துவரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக ஜப்பானின் கடல் மட்டத்தில் கதிரியக்க தாக்கம் சாதாரண நிலைமையை விட 1,850 மடங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி.

ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700 இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். 


கதிர்வீச்சை தடுப்பதற்காக, ஏராளமான தண்ணீரை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு விரைந்துள்ளது. ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த, அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது. 


அங்குள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கூட பயன்படுத்த முடியாத நெருக்கடிக்கு ஜப்பான் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், புக்குஷிமா அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, கடல் நீரை அணு உலைகளில் பீய்ச்சி அடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடல் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையே இதற்குக் காரணம். இதைத் தொடர்ந்து, ஏராளமான தண்ணீருடன் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, ஜப்பானுக்கு விரைந்துள்ளது. 


இந்த கப்பலில் உள்ள தண்ணீரை, அணு உலைகள் மீது பீய்ச்சி அடித்தால், ஓரளவுக்கு கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மேலும் ஒரு அணு உலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்த உலையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யுகியோ எடனோ கூறுகையில், "அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மிகவும் மோசமான நிலை எதுவும் ஏற்படவில்லை. 


இருந்தாலும், இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். புக்குஷிமாவில் மொத்தம் உள்ள ஆறு உலைகளில், இரண்டு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மற்ற நான்கு அணு உலைகளின் நிலை சற்று மோசமாக உள்ளது' என்றார்.
ரிமோட் மூலம் இயங்கும் செயற்கை மேகங்கள் தயாரிப்பு.
விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இந்த செயற்கை மேகம் 2022 ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி.இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து குளுமையாக வைத்திருப்பதற்காக செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.
இது குறித்து சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் வெயிலை தடுப்பதற்காக செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை "ரிமோட் கன்ட்ரோல்" மூலம் இயக்க முடியும்.இதனால் நாம் விரும்பும் இடத்தில் இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022 ம் ஆண்டில் தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில் செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை ரூ.23 லட்சம். எனினும் இது விற்பனைக்கு வரும் போது இதன் விலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். இவ்வாறு சாவூத் அப்துல் கனி கூறினார்.
ஜப்பானிய கதிர்வீச்சு மேகங்கள் பசுபிக் பிராந்தியமூடாக நகர்கின்றன.
lenticular clouds
ஜப்பானிய அணு உலைகளிலிருந்து வெளியான கதிர்வீச்சின் தாக்கத்துக்குட்பட்ட மேகங்கள் தற்போது பசுபிக் பிராந்தியத்தினூடாக நகர்ந்து கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக தென்னாசிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான அச்சுறுத்தல் நிலை பெருமளவில் நீங்கியுள்ளது.
ஆயினும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான அச்சுறுத்தல் குறித்து இன்னும் எதிர்வு கூறமுடியாத நிலையே காணப்படுகின்றது.இதற்கிடையே அணுக் கதிர்வீச்சு காரணமாக குறைந்தது இன்னும் ஓராண்டு காலம் வரை ஜப்பான் தனது உணவுப் பொருள் ஏற்றுமதியை இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

லிபியாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள பிரிட்டிஷ் படைகள்!

பிரிட்டிஷ் படையினர் லிபியாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ளனர் என்றும், மேலும் நூற்றுக்கணக்கான படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் விஷேட அதிரடிப் படை வீரர்கள் 350 பேர் லிபிய ஜனாதிபதி கடாபியின் படைகளை இலக்குவைத்தே பிரிட்டிஷ் படைவீரர்கள் களம் இறங்கியுள்ளனர். 


பிரிட்டிஷ் படைகள் தரைவழித் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட மாட்டாது என பிரிட்டிஷ் அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகின்ற நிலையில், ஏற்கனவே 350 படை வீரர்கள் லிபியாவுக்குள் ஆழ ஊடுருவி கபடத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நிரூபிக்க தம்மிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக டெய்லி மெயில் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்துக்கு அமைய விமான சூனிய வலயத்தை அமுல் செய்வதற்கான நேசப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படுவதற்கு முன்பே பிரிட்டிஷ் படையினரின் தரைவழி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. 


கடாபிக்கு விசுவாசமான படைகளை எதிர்த்துப் போராடும் லிபியாவின் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் உதவி வருகின்றனர். இங்குள்ள பிரிட்டிஷ் படைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் ஆயுதங்கள் என்பன சைப்பிரஸில் இருந்து விமான மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு அவர்கள் இருக்கும் இடங்களில் போடப்பட்டு வந்துள்ளன. 


ஐந்து தினங்களுக்குள் லிபியாவுக்குள் ஊடுருவத்தக்க நிலையில் சகல விதமான ஆயுத்தங்களுடன் மேலும் 800 பிரிட்டிஷ் படை வீரர்கள் பூரண தயார் நிலையில் உள்ளனர். மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகள் என்ற போர்வையிலேயே இவர்கள் லிபியாவுக்குள் ஊடுருவ உள்ளனர். இதனிடையே லிபியா மீதான தாக்குதல் நடவடிக்கைகளின் பொறுப்பு அடுத்த பல மணித்தியாலங்களுக்குள் நேட்டோ படைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்.
உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.இதனால் அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய் விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஓர் கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது.அதன்படி மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவீதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவீதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர் இது ஒரு சாதாரண கணக்கு தான்.
அதாவது நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். உதாரணமாக ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன் பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனை விட மிக அதிகம். இதே கணக்கை மதநம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
லிபியாவிற்கெதிரான நடவடிக்கை முற்றுப்பெற்றுள்ளது: பராக் ஒபாமா
லிபியாவிற்கெதிரான போர் நடவடிக்கை முற்றுப் பெற்றுள்ளது. அதில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கின்றோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
odyssey dawn(சாகசப் பயணம்) எனும் பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியாவிற்கெதிரான வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் அமெரிக்கா அதிலிருந்து விலகிக் கொள்வதாக திடீரென்று அறிவித்துள்ளது.
நடைபெறவிருந்த மாபெரும் மனித சங்காரத்தை நாங்கள் தடுத்து நிறுத்தினோம் என்று குறிப்பிட்டுள்ள பராக் ஒபாமா சிவிலியன்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உயிர்களை நாங்கள் பாதுகாத்துள்ளோம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பின் பிரகாரம் நாங்கள் லிபியாவில் வெற்றிகரமான முறையில் வான் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையில் தொடர்ந்தும் அமெரிக்காவின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பது முடியாத காரியம் என்று பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ஆயினும் கடாபி போன்ற இரத்த வெறிகொண்டு பொதுமக்களைப் படுகொலை செய்பவர்களுக்கு எதிராக உலக மக்கள் ஒன்று திரண்டு அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதில் நாங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் நாட்டு மக்களும் மனப்பூர்வமாக ஆதரவளித்தால் மட்டும் எதிர்காலத்தில் அவ்வாறான நடவடிக்கையில் பங்கு பற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நிலைமை சீர்குலைந்துள்ள நிலையில் லிபிய யுத்தத்திற்கென ஏராளம் பணத்தை வாரியிறைக்க அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தங்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு பொதுமக்கள் காட்டும் கடும் எதிர்ப்பின் காரணமாகவே லிபியாவிற்கெதிரான நடவடிக்கையிலிருந்து அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக இத்தாலியின் அன்ஸா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நிபந்தனைகளை லிபியா ஏற்றுள்ளது.
லிபியாவில் நிலவும் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆப்பிரிக்க ஒன்றியம் விதித்திருந்து ஐந்து நிபந்தனைகளை லிபியா ஏற்றுக் கொண்டுள்ளது.ஆப்பிரிக்க ஒன்றியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் தொடர்பில் எது வித பேரம் பேசுதல்களும் இல்லாமல் அவற்றை ஏற்றுக் கொள்வதாக லிபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று பன்னாட்டு செய்தி நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
லிபியாவில் உடனடி போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தமது ஒன்றியம் மேற்கொண்டு வருவதாகவும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் ஜீன் பீங்க் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் கடாபிக்கு நெருக்கமான அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலையீட்டின் மூலம் லிபியாவில் பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க தாம் தயாராக இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
லிபியாவிற்கெதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளின் பெறுமதியை பராக் ஒபாமா செலுத்த வேண்டியேற்படலாம்.
லிபியாவிற்கெதிராக செலுத்தப்பட்ட ஏவுகணைகளின் பெறுமதியை அதிபர் பராக் ஒபாமா தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையொன்றை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் வான்பறப்புத்தடை வலயத்தை அமுல்படுத்தும் நோக்ககிலான நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக அமெரிக்கா 112 டோமாஹோவ்க் ஏவுகணைகளை செலுத்தியிருந்தது.ஆயினும் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்புகளின் பிரகாரம் அவ்வாறு டோமாஹோவ்க் ஏவுகணைகள் செலுத்தப்படும் பட்சத்தில் அதற்கென அந்நாட்டுப் பாராளுமன்றமான காங்கிரஸ் இடம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பராக் ஒபாமா அவ்வாறான அனுமதியைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லை.அத்துடன் தற்போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போர்ச் செலவுக்கான நிதி மசோதாவைத் தோற்கடிப்பதற்கு பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.
அத்துடன் காங்கிரஸின் அனுமதியின்றி இன்னோர் நாட்டுக்கெதிரான நடவடிக்கையில் பங்குபற்றியமை மற்றும் முறையான அனுமதியின்றி டோமொஹோவ்க் ஏவுகணைகளை செலுத்த உத்தரவிட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியானது அதிபர் பராக் ஒபாமாவிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரஸ்தாப வழக்கில் பராக் ஒபாமா குற்றவாளியாகக் காணப்படுமிடத்து அமெரிக்க சட்டங்களின் பிரகாரம் ஏவுகணைகளுக்கான பெறுமதியான நூறு மில்லியன் டொலர்கள் அவரிடமிருந்து அறவிப்படப்படுவதற்கான சூழ்நிலை உருவாகலாம் என்று கருதப்படுகின்றது.
இதற்கிடையே நேற்று பிரித்தானியாவில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் லிபியாவிற்கெதிரான போரில் பணத்தை விரயமாக்குவதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற் கொண்டிருந்தனர்.
ஈரானின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க குழு நியமனம்: ஐ.நா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஈரானின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அமெரிக்கா பரிந்துரைத்திருந்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள் 47 இல் இருந்து அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 27 வாக்குகள் கிடைத்துள்ளன.ஏழு நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளன.14 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன.ஆயினும் ஆதரவாக வாக்களித்த மற்றும் எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளின் பெயர்ப்பட்டியலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடவில்லை.
பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் ஈரானில் எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக விசனம் தெரிவித்திருந்தனர்.
எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் ஈரானிய அரசாங்கத்தின் மீது கடும் கண்டனம் தெரிவிக்கும் வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தியிருந்தனர்.ஈரானுக்கெதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு சற்று முன்னர் அந்நாடு கடந்த பல வருடங்களாக எதிர்க்கட்சியினர் மீது சிறைத்தண்டனை மற்றும் தடுப்புக்காவல் தண்டனைகளை தொடர்ச்சியாக விதித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி அய்லின் டொனஹோ (Eileen Donahoe) கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ஈரானின் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையின் பின் பெரும்பாலும் அமெரிக்க தலைமையிலான படைகளின் தலையீடு அந்நாட்டில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரொய்ட்டர் உள்ளிட்ட பன்னாட்டுச் செய்திச் சேவைகள் எதிர்வு கூறியுள்ளன.
பிரித்தானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி.
பிரித்தானியாவில் ஆளும் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொதுச் செலவின குறைப்புக்களை கண்டித்து நடாத்தப்பட்ட மக்கள் கிளர்ச்சி பிரித்தானிய அரசாங்கத்தையும் பொலிசாரையும் நடுங்க வைத்துள்ளது.
பிரித்தானியாவில் 500 ஆயிரம் மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்ட அவ்வேளையில், அம்மக்களுள் குறிப்பிட்ட ஒரு இளைஞர் குழாம் கறுப்பாடைகளுடன் முகங்களையும் மறைத்து, வர்த்தக நிறுவனங்கள் மீது அதிரடியாக காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டது.
இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டபோதிலும் அவர்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.2003 ம் ஆண்டில் ஈராக் போருக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் போராட்டத்துக்கு பின்னர் இந்தப் பேரணியே மிகப் பெரியளவில் நடந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் பொதுப் பணிகளுக்கான செலவினங்களில் மேற்கொள்ளும் குறைப்புக்களை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் மத்திய லண்டன் பகுதியூடாக ஹைட்பார்க் மைதானத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.இப் போராட்டத்தில் சிலர் காவல்துறை வாகனத்தை தாக்கினர். கன்சர்வேட்டிவ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைப்பதற்காக கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
எனவே அதிகரிக்கும் வேலையற்றோர் எண்ணிக்கை, வரிச்சுமை அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்றைய போராட்டங்களில் கலந்துகொண்டனர்.பிரிட்டனில், 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேலையில்லாதோர் வீதம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி தெரிவிக்கையில், பிரிட்டனின் அமைச்சரவை அதிகாரியும் ஆளுங்கட்சி எம்பியுமான பிரான்ஸிஸ் மோட், இந்தப் பொதுச் செலவினக்குறைப்பு தவிர்க்க முடியாதது என்று கூறினார்.அரசாங்கத்தின் பொருளாதாரம் பற்றிய புதிய திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தமது பேரணி தெரியப்படு்த்தும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியில் நிதித்துறைக்குப் பொறுப்பான எட் போல்ஸ், அரசாங்கத்துக்கு மாற்று வழிகள் இருக்கும் போது இந்த செலவின வெட்டுக்கள் தேவையற்றது என்றார்பொது நிதியை ஒழுங்கமைப்பதற்கு இந்த செலவின குறைப்புக்கள் அவசியம் என்று கூறிவரும் அமைச்சர்கள், விமர்சகர்கள் மாற்றுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.




புதிய அணுமின் நிலையத் திட்டங்களை கைவிட மாட்டோம்: சீனா

ஜப்பான் சம்பவத்தின் காரணமாக, புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட மாட்டோம் என்று சீனா அறிவித்துள்ளது.
இத்தகவலை, சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் தலைவர் சன்கின் கூறியுள்ளார். ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகளை குளிரூட்ட இயலாத நிலையில், அவை வெடித்தன. இதையடுத்து டோக்யோ உள்ளிட்ட பகுதிகளில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், "ஜப்பான் சம்பவத்தின் அடிப்படையில் புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட மாட்டோம். ஆனால், முன்பைவிட பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும்" என்று சீன அணுசக்தி கழகத் தலைவர் தெரிவித்தார்.
தற்போது சீனாவில் 13 அணு உலைகள் உள்ளன. இந்நிலையில், புதியதாக 13 அணு உலைகளை அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.புதிய அணு உலைகளுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைப்பதாக மார்ச் 16-ம் தேதி சீன அமைச்சரவை அறிவித்தது. இந்நிலையில், அவ்வாறு நிறுத்தி வைக்க மாட்டோம் என்று சீன அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF