Saturday, March 5, 2011

இன்றைய செய்திகள்.

மின்சார அடுப்பில் எரித்து 3 வயது சிறுவனை கொன்ற தாய்.

அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


இலங்கையில் முதல் தடவையாக விமான சேவை டிப்ளோமா கற்கைநெறி!

விமான சேவை வரலாற்றில் முதல்தடவையாக டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதன்நிமித்தம் விமான நிலையம் மற்றும் இலங்கை விமான சேவைகள் சங்கம் ஆகியன இணைந்து இரத்மலானையில் உள்ள உள்நாட்டு விமானசேவைகள் பயிற்சி நிலையத்தில் இக்கற்கைநெறியை நடாத்தவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 30 பேரைக் கொண்ட குழுவிற்கு செயன்முறைப் பயிற்சியுடன் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்.

லிபிய ஜனாதிபதி கேர்னல் மொஹமூர் அல் கடாபியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் இன்று கலந்துரையாடியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பணிமனை உறுதி செய்துள்ளது.
இதன்போது லிபியா நாட்டில்  சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை லிபிய ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.லிபியாவில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி, கடாபியிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே லிபியாவில் பிரச்சினைகள் ஏற்படின் இலங்கையில் அடைக்கலம் வழங்க தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, செய்தியை அனுப்பியிருந்தார்.இந்த செய்தி தொடர்பில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
ரவூப் ஹக்கீம், அதாவுல்லா அக்கரைப்பற்றில் மோதல்: இராணுவத்தினர் தடியடிப் பிரயோகம்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா அணிகளுக்கிடையிலான அரசியல் மோதலொன்று நேற்று அக்கரைப்பற்றில் நடந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தோ்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டமொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.அதன் போது அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் கூட்டம் இடம்பெற்ற இடத்தை நோக்கி  கற்களை வீசித் தாக்கியதுடன், அருகிலிருந்த பள்ளிவாசல் ஒலிபெருக்கியையும் பயன்படுத்தி கண்டபடி இடையூறு செய்யத் தொடங்கினர்.
பொலிசாரினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது போகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, தடியடிப் பிரயோகம் மூலம் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.அமைச்சர் அதாவுல்லாவின்  ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டிருந்தது. அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு காயங்களேதும் ஏற்படவில்லை.

லிபியாவில் தீவிரமடையும் கலவரம்! போராட்டக் காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


வெள்ளிக்கிழமையான நேற்று காலை திரிபோலி மாவட்டத்தில் தஜோரா என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சுமார் 1500 பொதுமக்கள் தலைநகர் திரிபோலியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். எகிப்து கொடிகளையும், அதிபர் கடாபிக்கு எதிரான பேனர்களையும் ஏந்தியபடி வந்தனர். அதிபர் கடாபி ஆட்சியை விட்டு விலகு என்ற கோஷங்களை எழுப்பினர். 


அவர்களது பேரணி போராட்டம் நடைபெறும் சதுக்கத்தை நெருங்கியது. அப்போது, “கடாபி ஒழிக” தஜோரா உங்களுக்கு சவக்குழி தோண்டும் என்று சுவர்களில் எழுதினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தினர். 


இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுரமும் சிதைந்து ஓடினர். இருந்தும் மீண்டும் ஒருங்கிணைந்து போராட்ட சதுக்கத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். மேலும் குண்டுகளையும் வீசினர். மக்கள் மீதும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இருந்தும் திரிபோலியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 


எனவே, திரிபோலியை தக்க வைத்துக்கொள்ள கடாபி அரசு படா தபாடு படுகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் ஷாரியா நகரை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. 2-வது நாளாக நேற்றும் அந்த நகரம் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்த தாக்குதல் கடாபியின் மகன் தலைமையில் நடந்தது. இவர்களுடன் சேர்ந்து கூலிப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து போராட்டக்காரர்களும் சண்டையிட்டனர். இதனால் கடும்போர் நடந்தது. இருபுறமும் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டக்காரர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது. 


போராட்டக்காரர்கள் தரப்பை சேர்ந்த சீனியர் கமாண்டர் கொல்லப்பட்டார். 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இக்காரணங்களால் ஷாவியா நகரில் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் லிபியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான துணிசியாவுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 


இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக கூறப் படுகிறது. இதற்கிடையே சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவிக்கும் அதிபர் கடாபிக்கு இண்டர்போல் (சர்வதேச போலீஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்மானவர்கள் 15 பேருக்கு ஆரஞ்சு நோட்டீசு (எச்சரிக்கை நோட்டீசு) வழங்கியுள்ளது. ஆனால், அவர்களை வெளியேற விடாமல் கடாபியின் ராணுவம் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தும் சொத்துக்களை முடக்கியும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் 77 கோடி.

இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். 
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 75.21 கோடியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77.11 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 66.65 சதவீதத்திலிருந்து 66.42 சதவீதமாகக் குறைந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்போர் விகிதம் 33.35 சதவீதத்திலிருந்து 33.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும்.
மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு புதிதாக 33 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.87 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோனில் புதிதாக 31லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.73 கோடியாக உயர்ந்தது.
புதிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. வீடியோகான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.89 சதவீதம் சரிந்தது. 10 லட்சம் வாடிக்கையளர்கள் வெளியேறியதில் இப்போது 60 லட்சம் வாடிக்கையாளர்களே வீடியோகானில் உள்ளனர். லூப் டெலிகாம் நிறுவனத்தில் புதிதாக 17,541 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.

கொடிய விஷப் பாம்பு இரையைக் கவ்வும் தத்ரூபக் காட்சிகள்! 

இது அமஸோன் பிரதேசத்துக்குரிய ஒரு வகை கொடிய விஷப் பாம்பு. ஈக்குவேட்டர் காடுகளுக்குள் இவற்றைக் காணலாம். சுமார் 45 நிமிட நேரம் குறிவைத்து தனது இரையை கச்சிதமாகக் கவ்விக்கொண்டது. அவ்வளவு நேரம் காத்திருந்து அதை தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளார் லூயிஸ் பெர்ணாண்டோ எஸ்பின் என்ற படப்பிடிப்பாளர். இவற்றின் போராட்டம் அற்புதமான ஒரு காட்சி என்று அவர் வர்ணித்துள்ளார்.

மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் விலங்கு! 

கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்குகள் ஆபிரிக்க நாடுகளில் பெருமளவு காணப்படுகின்றன. 
நீண்டவால், பின்னங்காலை ஊன்றி நிற்றல் என்பன இவற்றின் சிறப்பம்சங்கள். முழு அளவில் வளர்ந்த இந்த வகை மிருகம் ஒன்று தனது குட்டியையும் தாவிக் கொண்டு கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்டது. தாங்கள் இருக்கும் சூழலில் தங்களுக்குஏதும் ஆபத்து உள்ளதா என்பதை அறிந்துகொள்ளத்தான் இவை இவ்வாறு நிற்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயதான தோமஸ் ரெட்டரத் என்பவர் பொட்ஸ்வானா காட்டுப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். 


தொலைக்காட்சியில் இந்த விலங்குகள் பற்றிய விவரணம் ஒன்றைப் பார்த்த பின், அவற்றின் வாழ்வு முறை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கும், பொட்ஸ்வானாவுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இவற்றைத் தாராளமாகக் காணலாம். இவை 14 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.
 
நாசா அனுப்பிய செயற்கைகோள் கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன.
பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை.
இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை எட்ட முடியவில்லை. ராக்கெட்டும், செயற்கைக்கோளும் பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


எகிப்து அதிபரின் மகன் தற்கொலை முயற்சி.

30 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்து வந்த எகிப்து அதிபர் ஹோஷினி முபாரக் மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை விட்டு விலகினார்.
இந்நிலையில் முபாரக்கின் இரண்டாவது மகன் காமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அல்ஜீரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
காமல் முபாரக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் மில்லியன் டொலர் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன. அவைகளை எகிப்து அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
இதனை தாங்க முடியாததால் கமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முபாரக்கின் மனைவி சுஷானே 250 தங்க கட்டிகள் மற்றும் 3 பில்லியன் அமெரிக்க டொலருடன் பிரெஞ்ச் நாட்டில் தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபிய அதிபர் கடாபி கைது ஆவாரா?


போராட்டக்காரர்கள் வசம் உள்ள லிபியாவின் எண்ணெய் வள பகுதிகளை மீட்க ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் தொடர்ந்தால் கடாபி கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரெகா, அஜ்படியா உள்ளிட்ட பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியை மீட்பதற்காக இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் 12 வது இடத்தில் லிபியா உள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை முறியடிக்கும் வகையில் போராட்டக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் மீதான தாக்குதலை முறியடிக்கவும், கடாபியை பதவியிலிருந்து தூக்கி எறியவும் அந்நாட்டு ராணுவம் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்கு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக கடாபி, அவரது மகன்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கடாபி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் லிபிய அரசு மற்றும் அதிபர் கடாபிக்கு சொந்தமாக உள்ள 1.44 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் திமோதி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதில் அவரது மகன்கள் மற்றும் லிபிய மத்திய வங்கி, முதலீட்டு ஆணையம் உட்பட அரசுக்கு சொந்தமான சொத்துக்களும் அடக்கம்.
கடாபிக்கு சொந்தமான 1.33 லட்சம் கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 11 ஆயிரம் கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் முடக்கி உள்ளோம் என கெய்த்னர் கூறியுள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF