Monday, March 14, 2011

இன்றைய செய்திகள்.

மன்னாரில் எண்ணெய் அகழ்வுகள் ஜூலை முதல் ஆரம்பம்!
மன்னார் கடற்பரப்பில் இவ்வருடம் ஜூலைமாதம் முதல் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானியாவின் கரின் எனர்ஜி நிறுவனத்தின் (Cairn energy) இந்தியக் கிளையான கரின் இந்தியா தெரிவித்துள்ளது. மன்னார் குடாப் பகுதியில் எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 ஆயிரத்து 400 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய ஒரு பகுதி கரின் இந்தியா நிறுவனத்திற்கு 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

ஏனைய இரு பகுதிகளும் இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தில் எண்ணெய்வள ஆய்வுகளை நடத்துவதற்கும், மூன்று எண்ணெய் கிணறுகளை அகழ்வதற்கும் கரின் நிறுவனம் 10 கோடி டொலர்களை முதலிட்டுள்ளது.

இன்னொரு இனத்துடன் எப்போதும் பகைமை பாராட்டி எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது - ஜனாதிபதி.

இன்னொரு இனத்துடன் எப்போதும் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டைப் பிரித்துக்கொண்டு எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேற்று திருகோணமலையில் தெரிவித்தார்.
இன, மத, மொழி, குல மாகாண பேதங்களையும், பகைமை, குரோதங்களையும் மறந்து சகலரும் ஒன்றுபட்டால் தான் நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறினார்.நாம் பிறந்த இந்தத் தாயகத்தைப் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மேம்படுத்துவது எம்மெல்லோரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஒழுங்கு செய்திருந்த மாவட்ட மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொலிஸாரின் அறிக்கை படி இப்போது தேர்தல் தொடர்பான வன்முறைகளும், சண்டைகளும் கட்சிகளுக்கிடையில் இடம்பெறுவது மிகவும் குறைந்து விட்டது. ஆனால், கட்சிக்குள்ளான அபேட்சகர்களுக்கிடையில் தான் அதிக சண்டைகளும், மோதல்களும் இடம்பெறுகின்றன. விருப்பு வாக்குக்காகவே இச்சண்டை இடம்பெறுகின்றது.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தயாரித்து வழங்கிய தேர்தல் முறையின் பிரதிபலிப்புத் தான் இது. ஆளுக்காள் சண்டை பிடித்துக்கொள்ளும் தேர்தல் முறையைத் தான் அவர் எமக்கு வழங்கியுள்ளார்.
எம்மால் எப்போதும் இன்னொரு இனத்துடன் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டை பிரித்துக் கொண்டு வாழவும் முடியாது. அபிவிருத்தி அடையவும் முடியாது.அதனால் இது நாம் பிறந்த மண். நாம் இன, மத, குல, மொழி, மாகாண பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயற்பட்டால் தான் எம்மால் முன்னேற முடியும்.இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். நாம் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு எமது தாயகத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்.
சிலர் எம்மை வெட்டினாலும் பச்சை அல்லது நீலம் அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு என்றபடி கூறுவார்கள். ஆனால், எமது உடம்மை வெட்டினால் சிவப்பு நிற இரத்தம் தான் வரும். என்றாலும் பசிவரும்போது இந்த நிறங்கள் எமக்கு உதவாது.எமது கிராமங்களில் பாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சீரில்லாவிட்டால் நாம்தான் கஷ்டப்பட நேரிடும். துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.
நாட்டில் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்கள் நாமே என்பதை நிரூபித்துள்ளோம். இதனை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டிருக்கின்றன.வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும், பாரிய அபிவிருத்தி இடம்பெறுகின்றது. கிழக்கு அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றோம். இன்று கொழும்பு, மட்டக்களப்பு உட்பட முழு நாட்டுக்கும், துரிதமாக செல்லக் கூடிய வகையில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
திருமலை ஆஸ்பத்திரி ஐநூறு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அன்று இப்பகுதியில் நிலவிய நிலமை இப்போது இங்கில்லை. கடலில் மீன்பிடிக்கவோ, விவசாயம் செய்யவோ இப்போது தடைகள் எதுவும் கிடையாது.
திருமலை மாவட்டம் உட்பட முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். இதன் நன்மைகளை இந்நாட்டு மக்களும், அவர்களது எதிர்கால சந்ததியினரும் அனுபவிப்பர். உங்களை நான் பாதுகாப்பேன்.நான் உங்களது தோழன். உங்களது உறவினன். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் என்னை நம்புங்கள். 17ம் திகதி வெற்றிலை சின்னத்தை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
குவைத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இலங்கைப் பெண் கைது.
குவைத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வியாபாரம் செய்துவந்த இலங்கைப் பெண்ணொருவரை அந்நாட்டுப் பொலிசார் கைது செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.குவைத் நாட்டின் மாபூலா பிரதேசத்தின் கட்டிடமொன்றின் கீழ்த்தளத்தில் பிரஸ்தாப பெண் நடாத்தி வந்த கள்ளச்சாராய நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்த உபகரணங்களுடன் அப்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக அவர் தங்கியிருந்த வீட்டிலும் எட்டு பரல்கள் கள்ளச் சாராயம் வடிக்கப்பட்ட நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அஹ்மதியா பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக அல் அரபியா செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
ஜேர்மனியில் அணு உலை பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆலோசனை.
ஜேர்மனி அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய அதிபர் ஏங்கலா மார்கல் நாட்டில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பியூகுஷிமாவில் உள்ள அணு உலைகள் உருகத் துவங்கியதால் அப்பகுதி மக்களுக்கு உயிர் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்ற அபாயம் ஏற்படாமல் தவிர்க்க ஜேர்மனியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளியன்று 8.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பான் அணு உலைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என மார்கல் கூறினார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் உள்ள அணு உலைகளின் ஆயுட்காலம் குறித்த அரசு திட்டங்களை விவாதிப்பது சரியல்ல என கூட்டத்தில் மார்கல் தெரிவித்தார்.
ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து ஜேர்மனியில் புதிய விவாதத்தை துவக்கி உள்ளது.
புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு.
ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட திகதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது.


அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது.அதேபோன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


சித்ரவதை குறித்த பிரிட்டனின் நிலை: முஷாரப் சந்தேகம்
தமது நாட்டு மக்கள் மீது தீவிரவாதம் என்ற சந்தேகத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என பிரிட்டன் எப்போதும் கூறியது இல்லை பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் கேள்வி எழுப்பி உள்ளார்.பாகிஸ்தான் ஜனாதிபதியாக முஷாரப் 1999 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை இருந்தார். முஷாரப் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அல்கொய்தா மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் ஆவார்.
அல்கொய்தாவுடன் நடந்த மோதலின் போது நடந்த சித்ரவதையை பிரிட்டனின் எம் 15 எந்த அளவு அறிந்துள்ளது என்றும் முஷாரப் கேள்வி எழுப்பி உள்ளார். தீவிரவாத சந்தேகத்தின் பேரில் தமது நாட்டு மக்கள் பிற நாடுகளில் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து பிரிட்டன் தனி ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. பாகிஸ்தானிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் அப்பீல் கோர்ட் நீதிபதி சர் பீட்டர் கிப்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இன்னும் 2 மாதத்தில் இந்த விசாரணை துவங்குகிறது. தீவிரவாத சந்தேக நபர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக தான் ஆட்சியில் இருக்கும் போது பிரிட்டன் எந்த வித எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த மவுனத்தை மறைமுக ஆதரவாக கருதியே தீவிரவாதகள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது என முஷாரப் தெரிவித்தார்.
கடந்த 2002 ம் ஆண்டில் பாகிஸ்தானில் பின்யம் முகமது கைது செய்யப்பட்டார். தீவிரவாத தாக்குதல் சதி செய்ததாக கைது செய்யப்பட்டு குவாண்டமோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்த எத்தியோப்பியர் 8 ஆண்டுகள் பிரிட்டனில் வசித்தார்.சிறையில் இருந்த போது கைகள் கட்டி தொங்கவிடப்பட்டதாகவும், தோல் பெல்ட்டால் அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இது பிரிட்டனின் பாதுகாப்பு சேவைக்கு தெரியும் என்றார். தனது ஒப்புதல் வாக்கு மூலம் கடும் சித்ரவதை காரணமாகவே தரப்பட்டது. அவை சரியல்ல என்றும் பின்னர் தெரிவித்தார்.
ஜப்பானில் இரண்டாவது அணு உலை வெடித்தது.
ஜப்பானின் பியூகுஷிமா அணு உலையில் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது. மேலும் அணு உலையின் மூன்றாவது பிரிவில் இருந்து பழுப்பு நிற புகை வெளிப்பட்டது.ஜப்பானின் வடகிழக்கு கடலோரப்பகுதியில் வெள்ளிக்கிழமையன்று 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இரு இயற்கை பேரிடர்களால் அணு உலை வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டது. சுனாமியில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியது.
அணு உலையை சுற்றியுள்ள 20 கி.மீ தூரம் வரை உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணு உலை கதிர் வீச்சு தாக்கத்திற்கு 160 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஜப்பான் அணு பாதுகாப்பு முகமையின் ரியோ மியாகே கூறுகையில்,"அணு உலையில் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு அணு உலையை பாதிக்குமா என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை" என்றார்.
ஜப்பான் தலைமை கேபினட் செயலாளர் யுகியோ எடானோ கூறுகையில்,"20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார். ஒனகவா பகுதியில் கூடுதலான கதிர்வீச்சு காணப்பட்டதால் அங்கு அவசர நிலையை சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்தது.
இந்த நிலையில் வட கிழக்கு பகுதியில் 3 மீற்றர் உயரத்திற்கு கடல் அலை எழும்பியது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரின் இன்னொரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது பொய்யான எச்சரிக்கை ஜப்பானிய ஆய்வு மையம் தெரிவித்தது.இதற்கிடையே டோக்யோவுக்கு வட கிழக்கே 150 கி.மீ தொலைவில் பயங்கர நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் ஜப்பான் தலைநகரில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இருப்பினும் நிர்வாகத்தினர் சுனாமி அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்க முக்கிய காரணம் இந்தியா, பிரேசில் மற்றும் சீனா தான் என்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.இது குறித்து ஒபாமா கூறியதாவது: எண்ணெய் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. அதே நேரம் வல்லரசுகளாக வளரும் சில நாடுகளின் அதிக தேவை எண்ணெய்ப் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது.
குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவை தான் இன்றைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இப்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிப்போம் என்றார்.
உலகில் அதிக அளவு பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகள் தான் உலக எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்தி வந்தன.இப்போது சீனாவும், இந்தியாவும் வல்லரசுகளாக வளரத் தொடங்கியுள்ளன. எனவே இங்கு வாகனப்பயன்பாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் தேவையும் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம்
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவத்தை கடாபி ஏவி விட்டுள்ளார்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இருந்தும் ராணுவத்துடன் எதிர்ப்பாளர்கள் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.பெங்காசி, ஜாவியா, ராஸ் வனுப் உள்ளிட்ட நகரங்கள் அவர்கள் வசம் இருந்தன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் எதிர்ப்பாளர்களின் கட்டுப் பாட்டில் இருந்த ஜாவியா நகரை கடாபியின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
நேற்று எதிர்பாளர்கள் வசம் உள்ள பிரகா நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் தாக்குதல் நடத்தினர். டாங்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகள் மூலம் சண்டையில் ஈடுபட்டனர். பின்னர் அந்நகரம் கடாபியின் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.
இதை தொடர்ந்து இழந்த பிரகாநகரத்தையும் அவர்கள் மீட்டனர். அதற்கு அடுத்த படியாக எதிர்ப்பாளர்கள் வசமுள்ள பெங்காசி நகரத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக உள்ளனர். இது தலைநகர் திரிபோலிக்கு அடுத்த படியாக லிபியாவின் 2 வது பெரிய நகரமாகும்.
தற்போது கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்கள் பெங்காசி நகரை நெருங்கிவிட்டனர். அந்த நகரமும் விரைவில் ராணுவம் வசம் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அல்ஜிசிரா டெலிவிஷன் அறிவித்துள்ளது.இதற்கிடையே பெங்காசி நகரின் மீது ராணுவம் குண்டு வீச தடை விதிக்கும் படி ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று பேரணி நடத்தினர். அதில் குழந்தைகள், முதியவர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைகளில் எகிப்து கொடி ஏந்தி கடாபிக்கு எதிராக கோஷ மிட்டபடி சென்றனர். குண்டு வீசினால் நாங்கள் கொல்லப்படுவோம். எனவே எங்களுக்கு ஐ.நா சபை உதவ வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆனால் அதை கடாபியின் ராணுவம் கண்டு கொள்ளவில்லை. பெங்காசியை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்கிறது. லிபியாவில் கடாபி தன் மக்களுக்கு எதிராக எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பன்னாட்டு படைகள் மூலம் லிபியாவில் ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இழந்த நகரங்களை மீட்க கடாபியின் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அமெரிக்கா தனது 2 போர்க்கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது. அவை சூயஸ் கால்வாய் வழியாக லிபியா அருகே சென்றன.அந்த போர்க் கப்பல்களில் இருந்தபடியே கடாபியின் ராணுவத்தை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் 12 ஆயிரம் பேர் பலி: மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பான் 8 அடி தூரத்துக்கு நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாகாணத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் தெரியவந்துள்ளது.
மிகவும் வசதியான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாதுகாப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்றனர். ஜப்பானில் கடந்த 11 ம் திகதி 8.9 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம் அதன் விளைவாக பயங்கர சுனாமி ஏற்பட்டது.இதில், புக்குஷிமா, மியாகி மற்றும் ஐவேட் ஆகிய மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. யூரேஷியன், பசிபிக், வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்றிணையும் இடத்தின் மேற்பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது.
இதனால் இந்த கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது அல்லது இடிக்கும் போது அங்கு நிலநடுக்கம் ஏற்படும். இது ஜப்பானில் வழக்கம் தான். ஆனால் சமீபத்திய பயங்கர நிலநடுக்கம் ஜப்பானை 8 அடி நகர்த்திவிட்டதாக அமெரிக்க பூகற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை செயற்கைக்கோள் வரைபட உதவி கொண்டு நிரூபித்தனர்.
அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் எர்ல் இதுகுறித்து கூறியதாவது: சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த ஜப்பான் தீவே 8 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த 8 அடி என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நகர்வு பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் திட்டுகளின் மோதலால் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் திட்டு, வட அமெரிக்க கண்டத் திட்டின் மேற்குப் பகுதியின் மீது மிக வேகமாக மோதியதால் இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல்களால் தான் நிலநடுக்கம் உருவாகிறது.மேலும் இந்த இரு கண்டத் திட்டுகள் இடையிலான மோதலால் ஆண்டுக்கு 3.3 அங்குல நகர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வை கணணி அடிப்படையிலான புவியியல் தகவல் முறைமை(ஜி.எஸ்.ஐ.,) மூலமான வரைபடத்திலும் நாம் தெளிவாக பார்க்க முடியும். இவ்வாறு பால் எர்ல் தெரிவித்துள்ளார்.
மியாகி மாகாணத்தில் உள்ள மினாமிசன்ரிக்கு என்ற நகரைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை புக்குஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில் இறந்தவர்களின் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐவேட் மாகாணத்தில் ரிக்குஜென்டாகடா நகரில் 5,000 வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 3,80,000 ஆயிரம் மக்கள் ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இரண்டரை லட்சம் பேர் மின்சாரம் இன்றியும், 14 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பிரதமர் நவோட்டோ கான் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"இந்த பேரழிவைக் கடந்து விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கடந்த 65 ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத மிக மோசமான சீரழிவு இது" என்று தெரிவித்துள்ளார்.
மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
லிபியாவில் கடாபி படையின் வெற்றிப் பேரணி.
லிபியாவில் இரு வார சண்டைக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் வசமிருந்து மீட்கப்பட்ட ஸாவியா நகரில் சர்வாதிகாரி முகமது கடாபியின் படை வீரர்கள் வெற்றிப் பேரணி நடத்தினர்.
மாவீரர் சதுக்கம் என்று அழைக்கப்படும் நகரின் மையச் சதுக்கத்தை கடாபியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வெற்றியைக் கொண்டாடினர். தலைநகர் திரிபோலியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஸாவியா நகரம் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டது.
இரு வாரங்களுக்கு முன்பு இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். நகரின் மையச் சதுக்கத்தில் முகாமிட்ட அவர்கள் அங்கிருந்தபடியே தலைநகரைக் குறிவைத்தனர். நகரிலுள்ள முக்கிய ஹோட்டலை தலைமையிடமாக மாற்றிக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் அதை ஆயுதக்கிடங்காகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆபத்தை உணர்ந்த கடாபியின் ராணுவம் ஸாவியா நகரில் கிளர்ச்சியாளர்களுடன் கடும் சண்டையிட்டது. முதலில் கடுமையாகத் தாக்கி ராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்த கிளர்ச்சியாளர்கள் சில நாள்களுக்குப் பிறகு ராணுவம் பொழிந்த குண்டுமழைக்கு மத்தியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.கடந்த புதன்கிழமை ஸாவியா நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து முதல் வேலையாக நகரின் மையச் சதுக்கத்தையும், கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலையும் முற்றுகையிட்டனர். வெளிநாட்டு செய்தியாளர்கள் ராணுவ பாதுகாப்புடன் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சதுக்கத்தில் இருந்த சுவர்கள் எல்லாம் குண்டு மழையில் சிதைந்து விட்டன. முழுமையாக ஒரு ஜன்னலைக்கூட விட்டுவைக்கவில்லை. எனினும் சதுக்கத்தில் இருந்த சிறிய கோபுரம் மட்டும் சேதமடையாமல் அப்படியே இருக்கிறது.
ராணுவத்துடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களின் உடல்கள் இந்த சதுக்கத்தில் இருந்த பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. அந்த இடத்தை ராணுவத்தினர் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கினர்.சுவர்களில் கடாபிக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வாசகங்களை அழிக்கும் பணியும் நடந்து வருகிறது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கிளர்ச்சியாளர்களின் கொடிகள் அகற்றப்பட்டு விட்டன.
"கெட்டவர்கள் எல்லோரும் ஓடிப்போய்விட்டனர். அவர்களில் சிலரிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அவற்றை நாங்கள் பறித்துக் கொண்டோம்" என்று ராணுவத்துடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்ட வாலீத் என்பவர் கூறினார். தான் ஒரு மாணவர் எனவும், தாமாக முன்வந்து கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தோளில் அதிநவீன இயந்திரத் துப்பாக்கி ஒன்றை அவர் வைத்திருந்தார்.
முகமது கடாபி இல்லாமல் எங்களால் வாழ முடியாது. லிபியாவுக்கு மட்டுமல்ல ஆப்பிரிக்கா முழுவதுமே அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் என்று உணர்ச்சி வசப்பட்டார். நகர் முழுவதுமே பஸ்கள், கார்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்களில் ஆயுதமேந்திய கடாபியின் ஆதரவாளர்கள் தெருக்களில் வலம் வந்தனர்.
கடாபியை நேசிக்கிறோம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். ஸாவியாவில் நடந்த சண்டையில் இருதரப்பிலும் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டதாக லிபிய வெளியுறவு அமைச்சர் காலேத் கைம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியும் என்றும் அவர் கூறினார். சுமார் 2.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஸாவியா நகரம் தற்போது ஆள்அரவமற்றுக் கிடக்கிறது. பெரும்பாலானவர்கள் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும், சிலர் வீடுகளுக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2ஆம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு! 3 ஆவது நாளாக மீண்டும் உலுக்கிய பூகம்பம் .

ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது. 

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது. இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.

தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர். பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.

 நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது. 

இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.
இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட் டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது. 

ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF