Tuesday, March 8, 2011

இன்றைய செய்திகள்.


முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அராபிய மொழியே சிறந்தது - முஸ்லிம் ஆய்வாளர்

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அராபிய மொழியை தமது சொந்த மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் ஆய்வாளர் எம்.ஐ.எம்.மொஹிதீன் ஒருவர் கோரியுள்ளார். முஸ்லிம் ஆய்வாளரும், மனிதவுரிமை காப்பாளருமான எம்.ஐ.எம்.மொஹிதீன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். "முஸ்லிம்கள் இன்று மொழியால் பிரிக்கப்பட்டுள்ளார். அராபிய மொழியை அவர்கள் சொந்த மொழியாக ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த பிரிவினையை தடுக்க முடியும்" என எம்.ஐ.எம்.மொஹிதீன் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் பெருமளவான முஸ்லிம்கள் தமது தாய்மொழியாக தமிழ்மொழியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மலாயர்கள் தமது வீடுகளில் மலே மொழியை பயன்படுத்துகின்றனர். 

பொஹராஸ் தரப்பினர் குஜராட்டி மொழியை பேசுகின்றனர். மேமன் பிரிவினர் கொச்சி அல்லது உருது மொழியை பேசுகின்றனர். அண்மைகாலமாக செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆங்கிலத்தை தமது குடும்ப மொழியாக பயன்படுத்துகின்றனர். சிங்கள பாடசாலைகளில் பயிலும் நடுத்தர முஸ்லிம்கள் தமது பிரதான மொழியாக சிங்களத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

இவ்வாறு மொழியால் பிரிந்திருக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைவதற்கு குர்-ஆன் எழுதப்பட்ட அராபிய மொழியே சிறந்தது" என முஸ்லிம் ஆய்வாளரும், மனிதவுரிமை காப்பாளருமான எம்.ஐ.எம்.மொஹிதீன் குறிப்பிட்டுள்ளார். ' சோனகர் ' என தமிழும், ' யோன மினிசு ' என சிங்களத்திலும் முஸ்லிம்கள் அழைக்கப்படுவது அவர்கள் அராபியாவில் இருந்து வந்தவர்கள் என்பதன் காரணமாகவே என மொஹிதீன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு வீசா வழங்க மறுக்கும் மேற்கு நாடுகள் பயங்கரவாதிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் வீசா வழங்குகின்றன: ஜனாதிபதி குற்றச்சாட்டு.
அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வீசா வழங்க மறுக்கும் ஒருசில மேற்கு நாடுகள் பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் வீசா வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டுகின்றார்.
பிரான்சின் எஸ்ட்ரபிரின்டே எனும் பத்திரிகைக்கு வழங்கிய நோ்காணலிலேயே ஜனாதிபதி அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொருளாதார நலன்கள் தொடர்பான விடயங்களுக்காகவே வெளிநாடுகளுக்குச் செல்ல வீசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆயினும் ஒரு சில மேற்கு நாடுகள் அவர்களுக்கான வீசாவை நிராகரிக்கின்றன.
அதே நேரத்தில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படக் கூடிய வகையில் அவர்களுக்கு அந்த நாடுகள் வீசா வழங்குகின்றன.இலங்கையில் செயற்படும் தன்னார்வ நிறுவனங்கள் அரசாங்கத்துக்கெதிராக செயற்படாத பட்சத்தில் அவற்றுக்கு வெளிநாடுகள் நிதி வழங்குவதில்லை. அதன் காரணமாக இங்கு செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போலியாக மனித உரிமை மீறல் போன்ற விடயங்களை தூக்கிப்பிடிக்கின்றன.
இலங்கை அரசாங்கமானது விடுதலைப் புலிகளுடான யுத்தத்திற்காக சீனா, இந்தியா  மட்டுமன்றி ஹங்கேரி, ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்தும் ஆயுத தளவாடங்களை பெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஒன்றும் மறைப்பதற்கில்லை.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் அவர்கள் தற்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குத் தப்பிச்சென்று அங்கிருந்து பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.ஆயினும் அவர்களைக் கட்டுப்படுத்த பிரஸ்தாப நாடுகள் தவறி விட்டன என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமலையில் முதலாவது முஸ்லிம் இசுறு பாடசாலை திறந்து வைப்பு.

ஜனாதிபதியின் விசேட ஆலோசனையின்படி மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான புதிய திட்டம் ஒன்று இசுறு என அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் இசுறுத் திட்டத்தின் கீழ் திருமலையில் முதலாவது இசுறு பாடசாலை இன்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோரது பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.

திருமலை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் அமைந்துள்ள சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம் இன்று இசுறு பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.40 மில்லியன் ருபாசளவில் அமைக்கப்பட்ட இந்த பாடசாலையே இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலை ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 65 வீதமான பிரதேசங்களுக்கு மின்சார வசதி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 65 சதவீதமான பிரதேசங்களுக்கு மின்சார வசதிகள் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிற்குட்பட்ட மீள் குடியேற்றப்பட்ட கிரிமிச்சை பிரதேசத்திற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்த பின்னர் அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இதேவேளை, ஏனைய 35 சதவீதமான பிரதேசங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்து. இந்த வருட இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 90 வீதமான பிரதேசங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 8 கிலோ மீற்றர் தூரமான இந்த மின்சார திட்டத்திற்கு 8.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டடுள்ளது. இதில் 150 குடும்பங்கள் நன்மையடைய உள்ளன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமுமே ஆயுத உற்பத்தியில் 'மேலாண்மை' செலுத்துகின்றன.
அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும்.

இவ்வாறு Inter Press Service - IPS இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியபீடத்தை சேர்ந்த Thalif Deen எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.அதன் முழுவிபரமாவது,அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவைகளும் வேகமான வளர்ச்சியினைக் கண்டிருக்கின்றன.

அண்மையில் ஸ்ரொக்கொம்மினைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் [Stockholm International Peace Research Institute - SIPRI] வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின் பிரகாரம், உலகிலுள்ள முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தியாளர்களில் வெறும் 10 உற்பத்தியாளர்கள் மாத்திரமே மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைத் தளமாகக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் எந்தவொரு படைத்தளபாட உற்பத்தியாளரும் இல்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்துஸ்தான் வான்பொறியியல் மற்றும் பாரத் இலத்திரனியல் நிறுவனம் [இந்திய], இஸ்ரேல் வான்வெளித் தொழில்துறை மற்றும் றிபீல் நிறுவனம் [இஸ்ரேல்], மிற்ஸ்சுபிசி கனரக தொழில்துறை மற்றும் கவுசிங்கி கனரக நிறுவனம் [யப்பான்], சாம்சங் [தென்கொறியா], எஸ்.ரி பொறியியல் நிறுவனம் [சிங்கப்பூர்] மற்றும் அசெல்சன் நிறுவனம் [துருக்கி] ஆகிய நிறுவனங்களும் இந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், பயிற்சி விமானங்கள், ஆளற்ற வேவு விமானங்கள், விரைவுத் தாக்குதல் கலங்கள், ஏவுகணைகள், யுத்த டாங்கிகள் மற்றும் இலத்திரனியல் போர் உபகரணங்கள் போன்ற படைத்தளபாடங்களை மேற்குறித்த இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலோ அன்றி ஐரோப்பிய நாடுகளிலோ உள்ள படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்துதான் மேலே குறிப்பிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை மேற்கொள்கின்றன. கூட்டுத் தயாரிப்பாகவோ அன்றில் தொழிநுட்பத் தகவல்களைப் பெற்று மேற்கொள்ளப்படும் உற்பத்திகளாகவோ இவை அமைகின்றன.

அதேநேரம் சீனா தனக்கெனத் தனியான படைத் தளபாட உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. நொறின்கோ என அறியப்படும் சீனாவின் வட தொழில்துறைக் கூட்டுத்தாபனம், சீன வான் தொழில்துறைக் கூட்டுத்தாபனம், சீன கப்பல் கட்டும் தொழில்துறைக் கூட்டுத்தாபனம் போன்ற சீன நிறுவனங்கள் யுத்த விமானங்கள், உலங்குவானூர்திகள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆட்லெறி எறிகணைகள் போன்ற பரந்துபட்ட படைத்தளபாடங்களை உற்பத்தி சென்கின்றன.

இருப்பினும் படைத்துறைத் தளபாட உற்பத்தியில் முன்னணியில் இருப்பது ஐக்கிய அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள நிறுவனங்கள்தான். லுக்கெட் மாட்டின், நோத்றொப் குறுமன், போயின், றேதியொன், அமெரிக்காவின் யுனைற்றெட் ரெக்னோலொஜிஸ், பிரித்தானியாவின் ஏறோஸ்பேஸ் சிஸ்டம் மற்றும் ஐரோப்பிய வான்வழிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் போன்ற படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இதற்குள் அடங்கும்.

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய நிறுவனங்களை முந்திச்செல்லுமா என ஆயுதத் தொழில்துறை வல்லுநரான கலாநிதி சூசன் ஜக்சனிடம் கேட்டபோது, "குறிப்பிட்ட இந்த விடயத்தில் எதிர்வுகூற முடியாது" என்றார். இருப்பினும், 10 ஆண்டுகளின் பின்னர் இந்த நிறுவனங்கள் எவ்வாறிருக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினம். குறிப்பிட்ட இந்த நாடுகளில் நிச்சயமற்றநிலைமை தொடர்வதால் இது உண்மையில் கடினமானது என்றார் அவர்.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தியாளர்களுடன் போட்டிபோடும் ஏனைய நிறுவனங்கள் இவர்களுக்கு இணையாக படைத்தளபாட உற்பத்திகளை வெளியிடுவது என்பது சாவல்நிறைந்தது என ஜக்சன் கூறுகிறார்.

"ஐக்கிய அமெரிக்காவினைப் பொறுத்தவரையில் அது அளவில்பெரிய ஆயுத சந்தையினைக் கொண்டிருப்பதோடு தொடர் கொள்வனவிலும் ஈடுபடுகிறது. ஆதலினால் ஏனைய படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆயுத தளபாட விற்பனையினை அதிகரித்தாலும் கூட அவர்கள் அமெரிக்க ஆயுதச் சந்தையினைத் தமதாக்காவிட்டால் முன்னேறமுடியாது" என ஜக்சன் கூறுகிறர்.

2009ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், உலகின் முன்னணியிலுள்ள 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் ஆயுத விற்பனை குறிப்பிட்ட ஆண்டில் 14.8 பில்லியன் அதிகரித்து 401 பில்லினைத் தொட்டிருந்தது. ஸ்ரொக்கொம்மைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தினால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஆயுத தளபாட விற்பனையானது எட்டு சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்கா படைத்துறைசார் தளபாடங்களுக்காகவும் படைத்துறைசார் சேவைகளுக்காகவும் அதிக நிதியினை ஒதுக்குவதுதான் இதுபோல ஐக்கிய அமெரிக்காவில் அயுத விற்பனை அதிகரித்துச் செல்வதற்கான பிரதான காரணம். ஐக்கிய அமெரிக்காவினது படைத்தளபாட மற்றும் படைத்துறைசார் சேவைகளுக்கான சந்தையில் ஐரோப்பிய நாடுகள் சில காலூன்றியிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனத்தினை அதிகரிப்பதன் ஊடாக ஆதாயம் தேடிக்கொள்கின்றன.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம் உலகில் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் 45 அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றன. அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும்.

முதன்மையாகவுள்ள இந்த 100 நிறுவனங்களில் 33 நிறுவனங்கள் பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகளிலேயே உள்ளன. வருடாந்தம் 120 பில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனையில் ஈடுபடுகின்றன. இது அனைத்துலகின் மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 30 சதவீதமாகும். மேற்கு ஐரோப்பிய அயுத உற்பத்தின நிறுவனங்களில் முதன்மையான 26 நிறுவனங்கள் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலேயே இருக்கின்றன.

இந்திய வான்வெளி நிறுவனத்திற்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தந்தம் எத்தனை நாளைக்குத்தான் இருக்கும் என்பது தொடர்பான சந்தேகத்தினை அமெரிக்கா வெளியிட்டிருப்பதாக கடந்த வாரம் லண்டனிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 11 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா 126 தாங்குதல் வானூர்திகளைப் பெறவுள்ளது.

ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய நாடுகள் தொடர்பாக ஜக்சனிடம் கருத்துக்கேட்டபோது, இஸ்ரேலின் படைத்தளபாடத் தொழில்துறையானது அதிகம் அமெரிக்கச் சந்தையிலேயே தங்கியிருக்கிறது என்றார்.

இருப்பினும் ஆளற்ற வேவு விமானங்கள் விற்பனையில் இஸ்ரேல் அனைத்துலக ரீதியில் தனக்கென ஒரு இடத்தினைத் தக்கவைத்திருக்கிறது எனத் தொடர்ந்தார் ஜக்சன். "இஸ்ரேல் பலதரப்பட்ட படைத்தளபாடங்களை உற்பத்தி செய்துவருகின்ற போதும் அனைத்துலக ஆயுத சந்தையில் அதனது ஆளற்ற வேவு விமானங்கள்தான் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன" என அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி.

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது. இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

லிபியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்: ஒபாமா.
லிபியாவில் போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் நகரங்களை மீண்டும் தன் வசப்படுத்துவதில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது.
எனவே அவரது ஆதரவு ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எண்ணை வளம் மிக்க துறைமுகம் நகரமான ராஸ் லனூப் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
2 வது நாளாக நேற்று அந்நகரின் மீது பறந்து ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்கின. பதிலுக்கு போராட்டக்காரர்களின் புரட்சிப்படையும் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ராணுவம் குண்டு வீசியதில் 2 குழந்தைகள் பலியாகினர். இதற்கிடையே தலைநகர் திரிபோலியை நோக்கி புரட்சிப்படை முன்னேறி வருகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுவடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடாபியின் ராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் ஆதரவு அதிகாரிகள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார். புரூசெல்ஸ் நகரில் பன்னாட்டு ராணுவத்தின் கூட்டம் நடந்தது. அதில் லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கு மேலும் ரூ.68 கோடி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஒபாமா தெரிவித்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே கடாபியின் ராணுவத்துக்கு எதிராக போராடும் புரட்சி படைக்கு ஆயுத உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் கமாண் டோக்களை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு தலிபான்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்க இது போன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே முறை லிபியாவிலும் கடைபிடிக்கப்பட உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்காசியில் போராடும் புரட்சி படைக்கு சவுதி அரேபியா ஆயுதம் வழங்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சவுதிஅரேபியா மன்னர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இருந்தும் அவருடன் அமெரிக்கா பேசி வருகிறது.
எகிப்தில் ரகசிய ஆவணங்கள் அழிப்பு.
எகிப்தில் அதிபருக்கு எதிரான கலவரத்தின் போது அரசு ரகசிய ஆவணங்களை அழித்து விட்டதாக 47 பாதுகாப்பு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எகிப்தில் அதிபர் ஹோஸினி முபாரக்கிற்கு எதிராக 17 நாட்கள் பொது மக்கள் கிளர்ச்சி செய்தனர். மக்களின் எதிர்ப்பிற்கு பணிந்த அதிபர் பதவி விலகினார்.
அரசுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது 11 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. அப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பணிப்பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலவரத்தின் போது நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு, குடிமக்கள் கண்காணிப்பு மற்றும் அவசரகால சட்டம் குறித்த ரகசிய ஆவணங்கள் காணமால் போயின.
இது குறித்த விசார‌ணையில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புப்  படைப்பிரிவி‌னைச் சேர்ந்த 47 பாதுகாப்புப் படை அதிகாரிகள் தான் அரசின் சட்ட திட்டங்களை மீறி பதவியினை தவறாக பயன்படுத்தி ஆவணங்களை தீயிட்டு அழித்துள்ளது தெரியவந்துள்ளது.இதன் பேரின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் 10,000 வீடுகள் முற்றிலும் சேதம்.
நியூசிலாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிறிஸ்ட்சர்ச் நகரில் 10,000 வீடுகள் மீண்டும் புதுப்பிக்க இயலாத வகையில் உருக்குலைந்து போனதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 25 ம் திகதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரம் பெரும் சேதத்திற்குள்ளானது.166 பேர் பலியானதாக இதுவரை அறிவிக்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 200 ஐத் தொட்டு விடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய 49 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தேவை என்று அந்நாட்டு நிதித்துறை கணக்கிட்டுள்ளது.
நேற்று இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் ஜான் கீ கூறியதாவது: கிறிஸ்ட்சர்ச் நகரில் வாய் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்கள் சிதைந்து விட்டன. மொத்தம் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.இவற்றில் 10,000 வீடுகள் மீண்டும் கட்ட முடியாத அளவுக்கு அழிந்து விட்டன. நகரின் பல பகுதிகளில் வீடுகள் கட்ட முடியாத அளவுக்கு நிலம் மாறிவிட்டது. வண்டல் அதிகரித்ததும் நீர்மட்டம் மாறியதால் பெருமளவுக்கு சதுப்பு நிலமாக மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF