Thursday, February 24, 2011

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன: விஞ்ஞானிகளின் பதில்கள்.


தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் "மரபணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சர்வதேச ஆய்வுக் குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறுகிறது.
ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான டி.என்.ஏ யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும்.
தற்போது அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ் நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில் குரோமோசோம் 20 ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த ஜீன் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்களின் கண்டுபிடிப்பு தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF