Tuesday, February 22, 2011

இன்றைய செய்திகள் 22/02/2011

உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு.

உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது.இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது.

மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்.இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை.மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிகையால் அடையாளம் காணப்பட்டு இருப்பவை வருமாறு:-

01) Harare - Zimbabwe
02) Dhaka - Bangladesh
03) Port Moresby - Papua New Guinea
04) Lagos - Nigeria
05) Algiers - Algeria
06) Karachi - Pakistan
07) Douala - Cameroon
08) Tehran - Iran
09) Dakar - Senegal
10) Colombo - Sri Lanka

400 இலங்கை அகதிகளை கனடாவுக்கு அனுப்பத் தயாராகும் கடத்தல்காரர்கள் - புலனாய்வு அதிகாரிகள் ஒட்டாவாவுக்கு தெரிவிப்பு.


400 ற்கும் அதிகமான இலங்கை அகதிகள் மற்றும் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தயாராகி வருவதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் கனடிய அரசுக்குக் கூறியுள்ளனர்.
தென்கிழக்காசியாவிலிருந்து கப்பலை அனுப்பத் தயார்ப்படுத்துவதாக புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளதாக ஒட்டாவா சிற்றிசன் பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்காசிய துறைமுகமொன்றிலிருந்து இரு படகுகளில் வெவ்வேறாக அனுப்பப்படவுள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியாக் கரைக்கே அனுப்பத் தயாராகிவருவதாகவும் உயர்மட்ட அரசு வட்டாரம் தெரிவித்ததாக சிற்றிசன் மேலும் குறிப்பிட்டிருக்கிறது.
அவர்கள் இன்னமும் கப்பலைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் கப்பலை அமர்த்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கப்பலும் 200 தொடக்கம் 300 பேரை ஏற்றிச் செல்லக்கூடியதாக இருக்கத்தக்கதாக அவற்றை அமர்த்துவதற்கு அவர்கள் முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அறிந்தவை இந்த இரண்டுமாகும். அதிகமாகவும் இருக்கக் கூடும். சில பயணிகள் கப்பலுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி நாளை இலங்கை வருகை.
வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி் ஜெனரல் அப்துல் முபீன் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம்  செய்யவுள்ளார்.இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பிற்கிணங்வே வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரதமர் டீ.எம். ஜயரத்தின, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், முப்படைகளின் பிரதானிகள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.வங்க தேசத்தின் இராணுவத் தளபதிக்கு வரவேற்பு வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான மரியாதை அணிவகுப்பொன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
லிபியாவில் ரத்த ஆறு ஓடும்: கடாபி மகன் கொதிப்பு.
லிபியா தலைவர் கர்னல் முவாம்மர் கடாபி(68) தப்பி ஓடி விட்டதாகவும், நாட்டின் கிழக்கு பகுதிகளில் சில நகரங்கள் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லிபியாவைத் துண்டாடுவதற்கு பிரிவினை சக்திகளை எதிர்த்து கடைசி நிமிடம் வரையிலும் நாம் போராடுவோம். இல்லையெனில் இங்கு ரத்த ஆறு தான் ஓடும் என்று கடாபியின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவில் கடந்த சில நாட்களாக அதன் தலைவர் முவாம்மர் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த இரு நாட்களாக இந்த ஆர்ப்பாட்டங்கள் மேலும் வலுத்து வரும் நிலையில், எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் பெங்காசி நகரில் உயர்ந்த கட்டடங்களில் இருந்த ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன் தினமே நாட்டின் கிழக்கு பகுதியில் சில நகரங்களை மக்கள் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்கள் சூறையாடப்பட்டன. தென்கொரிய நிறுவனம் ஒன்று சூறையாடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: லிபியா, துனிசியாவோ, எகிப்தோ அல்ல. நம் தலைவர் கடாபி தான் இப்போது ராணுவத்தை வழி நடத்துகிறார். நாங்கள் இத்தாலிக்கோ, துருக்கிக்கோ ஓடிப் போய்விட மாட்டோம்.
இந்த நாட்டைத் துண்டாட சில குழுக்கள் காத்திருக்கின்றன. பெங்காசியில் ஒரு குழு தனி அரசு அமைத்துள்ளது. அல் பெய்டாவில் ஒரு குழு இஸ்லாமிய எமிரேட் அமைத்துள்ளது. இன்னொரு தனி நபர் "டர்னா இஸ்லாமியக் குடியரசு" என்று அறிவித்துள்ளார். இந்த சிறு குழுக்கள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. இவர்களுக்கு மேற்கத்திய ஊடகங்கள் துணை நிற்கின்றன.
நாட்டின் அரசியலில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது உண்மை தான். நாம் ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தினால் உள்நாட்டுப் போர் தான் உருவாகும். ரத்த ஆறு ஓடும். கடைசி ஆணும், பெண்ணும் இருக்கும் வரையிலும் நாம் போராடுவோம். இன்று அரசியல் சீர்திருத்தம் குறித்து மக்கள் காங்கிரஸ் கூடி விவாதிக்கும். இவ்வாறு சயீப் தெரிவித்தார்
நேற்று முன்தினம் இரவில் டிரிபோலி உள்ளிட்ட நகரங்களில் கடாபி லிபியாவில் இருந்து வெளியேறி வெனிசுலாவுக்கு ஓடிப் போய்விட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். ஆனால் நேற்று காலையில் மக்களிடையே உரையாற்றிய கடாபி மகன் அவர் லிபியாவில் தான் உள்ளார் என்று தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சூடான் அதிபர்.
எகிப்து எழுச்சியை தொடர்ந்து வட ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலி சமீபத்தில் சூடானிலும் கேட்டது.
அங்கு மாணவர்கள் தங்கள் குறைகளை தீர்க்காத அரசுக்கு எதிராக திரண்டு எழுந்தனர். பின்பு அடக்கப்பட்டனர். இந்நிலையில் சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரின், தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரபீ அப்தலாடி நேற்று பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது: அதிபர் தேர்தலில் அடுத்த முறை தான் நிற்கப் போவதில்லை என, ஏற்கனவே பஷீர் தெரிவித்து விட்டார். அவரது பதவிக் காலம் இன்னும் நான்காண்டுகள் இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டங்களால் அவர் இந்த முடிவுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டத்தில் ஊழல் ஒழிப்பு கமிஷன் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவிகள் எனப் பல்வேறு சலுகைகளை அதிபர் பஷீர் அறிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடிய பிரதமர்.
லிபியா ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
பாதுகாப்பு படையினர் நடவடிக்கை கொடூரமானது இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வலியுறுத்தினார். லிபியா பல ஆண்டுகளாக மோமர் கடாபி ஆட்சி நடைபெறுகிறது.
42 ஆண்டுகளாக இவரது ஆட்சியில் லிபியாவில் சர்வாதிகாரமே தலைதூக்கி உள்ளது. பொருளாதார வீழ்ச்சி, வேலை இல்லாத திண்டாட்டம் ஆகியவை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதனால் லிபியா தலைநகர் திரிபோலி, பென்காசி ஆகிய பெரு நகரங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினர் ஏவப்பட்டுள்ளனர். இவர்களது தாக்குதலில் ஏறக்குறைய 200 மக்கள் பலியாகி உள்ளனர். கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் ஹார்ப்பர் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து திங்களன்று வான் கூவரில் அவர் கூறுகையில் லிபியா அரசு உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளோம் என்றார். கனடிய வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ஸ் கேன்ன் அமெரிக்கா ஜரோப்பிய நாடுகளுடன் விடுத்த அறிவிப்பை போன்று கனடிய குடிமக்கள் லிபியாவுக்கு தற்போது பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
வேக் பீல்டிங் அவர் பேசுகையில் லிபியாவில் தற்போது இருக்கும் கனடியர்கள் மக்கள் கூடுமிடங்கள் மற்றும் விளக்க போராட்டம் நிகழ்ச்சி இடங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு தீடீரென வன்முறை ஏற்படலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதி கசாபிற்கு மரண தண்டனை.
பயங்கரவாதி கசாபிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி  செய்து நேற்று உத்தரவிட்டது.

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
அஜ்மலிடம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவன் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுக்கும் போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்திகதி அவனுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அஜ்மல் மும்பை கோர்ட்டில் மேல் முறையீடு செய்தான். அதை விசாரித்த ஐகோர்ட்டு அஜ்மலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டது.


இதை எதிர்த்து அஜ்மல் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜ்மலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிக்கொண்டே போவதால், அவனை ஜெயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.


பலத்த பாதுகாப்பு, மருத்துவச் செலவு மற்றும் உணவுக்காக தினமும் அரசு சராசரியாக 9 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. அந்த வகையில் அஜ்மலுக்காக இதுவரை ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜ்மல் தினமும் தனக்கு பிரியாணிதான் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறான். அவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உயர்ரக சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
அஜ்மலுக்கு கொடுக்கப்படும் உயர் பாதுகாப்பு மற்றும் வசதிகள் மும்பை நகர மக்களை கடும் கோபத் தில் ஆழ்த்தி உள்ளது. அஜ்மலிடம் விசாரித்தது போதும். அவனை உடனே தூக்கில் போட வேண்டும் என்று மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


லிபிய கலவரத்தில் 300 பேர் பலி! போராட்டக்காரர் மீது தாக்குதல்.

லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது. 

கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். 

தலைநகர் டிரிபோலிக்கு அடுத்த படியான பெரிய நகரமான பென்காசியில் கலவரத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். 

ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதே போன்று, நேற்று நடந்த இறுதி ஊர்வலத்திலும், ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எந்திர துப்பாக்கிகளால் சுட்டதில் பலர் மடிந்தனர். நேற்று முன்தினம் வரை 84 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இந்த தகவலை மனித உரிமை கமிஷன் தெரி வித்துள்ளது. இதற்கிடையே அங்கு போராட்ட செய்திகளை பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக சேகரிக்க முடிய வில்லை. 

கலவர செய்திகள், போட்டோக்கள் போன்றவை அங்கிருந்து நாடு கட்டத்தப்பட்டவர்கள் மூலம் டெலிபோன் மற்றும் வீடியோ ஆக கிடைக்கிறது. போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு தாங்கள் அஞ் சப்போவதில்லை. 

போராட்டத்தை ஒடுக்கியே தீருவோம் என அதிபர் கடாபியின் மகன் சாய்ப் அல்-இஸ்லாம் தெரிவித்துள்ளார். அரசு டெலிவிஷனில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, லிபியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். லிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால் லிபியாவுக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்காது. இதனால் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF