Thursday, February 10, 2011

இன்றைய செய்திகள் 10/02/2011

திருமலையில் விமானப்படையினரின் அம்பியூலன்ஸ் ஹெலிகொப்டர் சேவை: தாக்குதல் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் விமானப்படையினர் தமது தாக்குதல் விமானங்கள் மூலம் அம்பியூலன்ஸ் ஹெலிகொப்டர் சேவையொன்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பிரதேசங்களில் இருக்கும் நோயாளிகளை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு விரைவாக எடுத்துச் செல்வது அதன் பணியாகும்.
அதன் பிரகாரம் இன்று இரவு சேருநுவரை பிரதேச நோயாளிகள் மூவர் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகியிருந்தார். அவருடன் கர்ப்பிணித் தாய் ஒருவரும், இன்னொரு இரண்டு மாதக் குழந்தையுமே விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதற்கு மேலதிகமாக தற்போதைக்கு திருகோணமலை மாவட்டத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில்  இராணுவ மற்றும் விமானப்படையினரின் அம்பியூலன்ஸ் சேவைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான தொலைபேசி இலக்கங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வு இன்று கொழும்பில் ஆரம்பம்.
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய பிராந்தியத்திற்கான மாநாடு இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் விசேட அதிதியாக இந்திய லோக் சபாவின் சபாநாயகர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் சுற்றாடல் பிரச்சினை, வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள அகதிகளுக்கு உதவ சர்வதேசம் கரிசனை காட்டவில்லை! - ஐ.நா. 51 மில். டொலரைக் கோரிய போதும் கிடைத்தது 8.4 மில். டொலர் மட்டுமே!
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐ.நா. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்ற போதிலும் அவற்றை வழங்குவதில் உலக நாடுகள் அவசரம் காட்டாத தன்மை காணப்படுகிறது. 
கிழக்கு, மத்தி, வடக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்தது. ஆயினும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வரை 8.4 மில்லியன் டொலர்களையே பெற்றிருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் இந்த புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகம் உதவி வழங்குவதில் வேகம் காட்டாத தன்மையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே 12 இலட்சம் மக்கள் மழை, வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டு பின்னர் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்திலும் 11 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகம் அதிகளவுக்கு உதவ வேண்டிய தேவையுள்ளது என ஒக்ஸ்பாமின் இலங்கைக்கான முகாமையாளர் துசித ஸ்ரீவர்தன கூறியுள்ளார்.
பிந்திய வெள்ளப் பெருக்கினால் குறைந்தது 21 மரணங்கள் சம்பவித்திருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போது வெள்ளம் வடிந்து வருகின்ற போதிலும் நேற்று புதன்கிழமை வரை 1 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் 43 பேர் பலியாகியிருந்தனர்.
இலங்கையின் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது 11,900 கிலோ மீற்றர் வீதிகளை முகாமைத்துவம் செய்கின்றது. இதில் 2500 கிலோ மீற்றர் வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை அவசரமாகத் திருத்துவதற்கு இலங்கை ரூபாவில் 560 கோடி ரூபா தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊவா, வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் ஆகிய பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகளே அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கால்வாய்களை அவசரமாகப் புனரமைக்க 500 கோடி ரூபா தேவைப்படுவதாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சவூதி அரேபிய எஜமானார்களால் உடலில் கம்பிகள் ஏற்றப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்ட இன்னொரு பணிப் பெண் .
சவூதி அரேபிய எஜமானார்களால் உடலில் கம்பிகள் ஏற்றப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்ட இன்னொரு பணிப் பெண் ஒருவர் கடந்த வாரம் நாடு திரும்பி வந்து உள்ளார். இவர் குருணாகல் மாவட்டத்தில் பொல்பிட்டிகம என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பணிப் பெண்ணாக சென்று இருந்தார்.

அங்கு சுமார் ஒரு மாதம் வரை வேலை செய்த அவர் மருத்துவ காரணங்களுக்காக சவூதி அதிகாரிகளால் கடந்த 04 ஆம் திகதி திருப்பி அனுப்பப்பட்டார்.இவர் இங்கு முதலில் பொல்பிட்டிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.பின் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இவர் எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.இவரது உடலுக்குள் ஏழு இடங்களில் நுண்ணிய வயர் கம்பிகள் ஏற்றப்பட்டு இருக்கின்றது என எக்ஸ்ரே காட்டியது.

இரு வயர் கம்பிகள் வலது கையிலும், நான்கு வயர் கம்பிகள் இடது காலிலும், ஒரு வயர் கம்பி வலது காலிலும் ஏற்றப்பட்டு இருக்கின்றன என்று எக்ஸ்ரே காட்டியது.அத்துடன் தலையிலும் சில வயர் கம்பிகள் ஏற்றப்பட்டிருக்கின்றமையை வைத்தியர்கள் கண்டு கொண்டனர்.மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் புலனாய்வு விசாரணைகளை நடத்தும் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்து உள்ளது.

10 செக்கனுக்கு 24 இலட்சம் ரூபாய்! எகிறும் உலகக் கிண்ண விளம்பர கட்டணம்.

உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்திய அணி "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வசூலிக்க, ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' அதிரடியாக திட்டமிட்டுள்ளது. 

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன.இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது. 

பன்மடங்கு அதிகரிப்பு: 

இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்' முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். 

அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது. இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். 

"நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,''என்றார். 

தூர்தர்ஷன் ஒப்பந்தம்


ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி') உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது. 

வருமானம் உயரும்: 


பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா' விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்' அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,''என்றார்.

ஈரானில் தூக்கிலிடப்பட்ட நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்.
ஈரானில் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படும் நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவரது பூதவுடல் வட மத்திய நகரான செம்னானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புதைக்கப்பட்டதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

சஹாரா பஹராமி(45) என்ற பெண்மணி போதைப் பொருள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இவரது கைதானது அந்நாட்டு ஜனாதிபதி அஹமட் நிஜாட்டிற்கு எதிரான போராட்டத்தினை அடுத்தே இடம்பெற்றமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவமானது நெதர்லாந்து மற்றும் ஈரானின் இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF