Wednesday, September 28, 2011

இன்றைய செய்திகள்.

ஜனாதிபதி மகிந்த இன்று காலை கொழும்பு வந்துசோ்ந்தார்.

நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 5.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்- 228 என்ற விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் 66 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த19 ஆம் திகதி நியூயோர்க் செனறிருந்த ஜனாதிபதி பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநி கழ்த்தினார்.
நியூயோர்க்கில் தமது பயணம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,
 அர்த்தமுள்ள வகையில் ஐ.நாவுடன் பேசுவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் வெட்கப்படவில்லை. நியூயோர்க்கிற்கான இந்தப் பயணம் குறித்து பெரிதும் மகிழ்கிறேன். இது மிகப்பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. எமது சந்திப்புக்கள் மூலமாக உண்மையான நிலைவரத்தை அடுத்தவருக்குப் புரிய வைக்க முடிந்தது என்று, ஓய்வாக இருந்த ஒரு பொழுதில் ஜனாதிபதி அமெரிக்காவின் டெய்லி எவ்.ரி. பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது இந்தப் பயணத்தின் போது, நியூயோர்க்கில் வைத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன்,  இந்தியா, ஈரான், பாலஸ்தீனம், கட்டார், கொலம்பியா, சல்வேனியா, நைஜீரியா, உகண்டா, நேபாளம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவுத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் மரியாதை நிமித்தம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளான வோல் ஸ்ரீட் ஜேர்னல் மற்றும் தி எக்கனமிஸ்ட் டைம்ஸ் ஆகியன ஜனாதிபதியை நேர்காணல் செய்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தபோதும் அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பதவி கிடைத்தால் மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து போட்டி!- முஸ்லிம் காங்கிரஸ்.

2013ம் ஆண்டு நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ கல்முனையில் நேரில் வந்து பிரகடனப்படுத்தினால் மட்டுமே எமது கட்சி அரசுடன் இணைந்து போட்டியிடும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷிர் சேகுதாவூத் தெரிவித்தார்.அவ்வாறு இடம்பெறவில்லையென்றால் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டு ஏனைய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைப்போம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பஷிர் சேகு தாவூத்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ‌ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாக இருந்தாலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் முஸ்லிம் காங்கிரஸ் கேட்கின்ற அனைத்தையும் வழங்கி அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே ஆட்சியை கைப்பற்ற முடியும்.
இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவது நிச்சயம். இதனால் அரசால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தான் கட்சி என்ற அமைப்பு இருக்கும். அப்போது தான் மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்து இருக்கும். அதனூடாக அபிவிருத்தி கிடைக்கும்.
இதுவே எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் கனவாகும். அந்தக் கனவை நினைவாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துகின்றோம். எனவேதான் கடந்த 30 ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்த கட்சியின் கொள்கைகளை காப்பாற்றி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
தனி நபர்கள் சண்டையிட்டு கொள்வதற்காக அல்ல இக் கட்சி. மறைந்த தலைவரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதே பெரும்பான்மை இன கட்சிகளின் நோக்கமாகும். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரை பிரித்தெடுத்து அமைச்சு பதவிகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கங்கள் வழங்குகின்றன.
நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த பதவிக்காவே. ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மேயர் அல்லது தவிசாளர் பதவிக்கே என்று தான் போட்டியிடுவார்கள். இங்குள்ள 25 வேட்பாளர்களினதும் நோக்கம் மேயராகுவதே தவிர உறுப்பினராகுவதல்ல என்றார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது!– ஐ.தே.க.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பல்வேறு வழிகளில் தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.சில பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய வேட்பாளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்ள அரசாங்கம் தீவிர முயற்சி செய்து வருகின்றது.
அம்பாந்தோட்டையில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதனை கண்காணிக்க கமரா பொருத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்போரை அச்சமூட்டும் நோக்கில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.இவ்வாறான பிரச்சாரங்களுக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு இம்மாதம் 30 ம் திகதி முதல் ஒன்லைன் விசா.
இலங்கைக்கு வருகின்ற மற்றும் இலங்கையூடாக பயணம் செய்கின்ற வெளிநாட்டவர்களுக்காக இணையத்தளத்தினூடாக விசாவை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய முறைமையொன்றாக இலத்திரனியல் பயண (Electronic Travel Authorization -ETA) முறைமையொன்றை தாபித்து நடைமுறைப்படுத்துவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இந்த புதிய முறைமையினை அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் இணையத்தளத்தில் சுற்றுலாப் பயணிகள், பல்வேறு நிகழ்வுகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் www.eta.gov.lk என்ற இணையத்தள முகவரியினூடாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் உடன்பாட்டுடனும் ஈடுபாட்டுடனுமே மேற்படி முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் : இந்தியா வலியுறுத்து.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திய விரைவான அரசியல் தீர்வை காண இலங்கை முன்வரவேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவிடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதான தீர்வு ஏற்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய அரசியல் விடயங்களில் தீ;ர்வுகளை முன்வைத்து இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரனாப் முகர்ஜி இதன் போது வலியுறுத்தினார்.
இதேவேளை இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் கருத்துரைத்த இந்திய அதிகாரி ஒருவர், சமாதான தீர்வின் மூலம் இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும் நீதியுடனும் வாழுவதை இந்தியா விரும்புவதாக இந்திய அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் படையினரை ஈடுபடுத்துவது தவறில்லை!– கோத்தபாய.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக படையினரை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையில் படையினரை வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்துவது பிழையானதா?
இராணுவத்தினர் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் போது அதனை சிலர் நாடு இராணுவமயப்படுத்தப்படுவதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
திறமையான படைவீரர்கள் நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறுகிய அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் இராணுவத்தின் அபிவிருத்திப் பணிகளை இராணுவமயமாக்கல் நடவடிக்கையாக நோக்குகின்றனர்.
இராணுவத்தினர் ஒழுக்கத்துடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏமன் பாதுகாப்பு அமைச்சரை கொலை செய்ய முயற்சி.
ஏமன் பாதுகாப்பு அமைச்சர் சென்ற வாகன அணிவகுப்புக்கு அருகில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காருடன் வந்து தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் காயமின்றி உயிர்தப்பியதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்பகுதி நகரான ஏடனில் கடற்கரையோர நெடுஞ்சாலையில் பாதுகாப்பு அமைச்சர் முகமது நசீர் அகமதுவின் வாகன அணிவகுப்பு சென்றபோது அந்த கார் வெடிகுண்டு வெடித்தது.
இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் அந்த நாட்டில் தற்போதுள்ள அரசியல் குழப்பநிலையைப் பயன்படுத்தி அல்கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.அவர்களை எதிர்த்து ஏமன் ராணுவம் போரிட்டு வருகிறது. அவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ட்ரீம்லைனர் விமானம் அறிமுகம்.
பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “787 ட்ரீம்லைனர்” விமானத்தை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் விமானம் நிப்பான் நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்பட்டது. விமான தயாரிப்பில் உலக புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனம் “போயிங்”. இதன் ஒரு பிரிவான போயிங் கமர்ஷியல் ஏர்பிளேன்ஸ்(பி.சி.ஏ) நிறுவனம் விமானங்களை டிசைன் செய்வது, விமானத்தின் பகுதிகளை உருவாக்கும் பணியை பல்வேறு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றை பெற்று அசெம்பிள் செய்வது, விமான விற்பனை, பராமரிப்பு, சர்வீஸ் ஆகியவற்றை கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் ரென்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விமான வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் செலவு அதிகம் ஏற்படுத்தாத குறைந்த எடை கொண்ட விமானத்தை உருவாக்க பிசிஏ பல ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடத்தி வருகிறது.
“787 ட்ரீம்லைனர்” என்று 2005-ல் பெயர் வைக்கப்பட்டது. ஆராய்ச்சி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க ஆர்டர்களும் குவிந்து கொண்டிருந்தன. 787 ட்ரீம்லைனர் 2007ல் வரும் என்றது போயிங். ஆய்வு முடியாததால் வரவில்லை.
சியாட்டில் நகரை ஒட்டியுள்ள எவரெட் தொழிற்கூடத்தில் அசெம்பிளிங் வேலை 2009 டிசம்பரில் முடிந்து ட்ரீம்லைனரை வெள்ளோட்டம் விட்டது போயிங். முறைப்படியான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததில் ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதல் ட்ரீம்லைனர் விமானத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறது போயிங்.
மிகமிக எடை குறைந்த கம்போசைட் பொருட்களைக் கொண்டு பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வழக்கமான அலுமினிய பாடிக்கு பதிலாக கார்பன் பைபர் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.வழக்கத்தைவிட பெரிய ஜன்னல் கண்ணாடி, ஜன்னல் வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளும் எலக்ட்ரானிக் டிம்மர் வசதி, உயரத்தால் ஏற்படும் காது அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பிரத்யேக பிரஷரைசேஷன் வசதி ஆகியவை சிறப்பம்சங்கள்.
எரிபொருள் 20% மிச்சமாகும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் 330 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஒரு விமானம் விலை ரூ.907 கோடி.கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 787 ட்ரீம்லைனர் விமானத்துக்காக உலகம் முழுவதும் இருந்து 827 ஆர்டர்கள் வந்திருக்கின்றன. கூடுதல் வசதிகளுடன் கூடிய 787ட்ரீம்லைனர்-9வது மொடல் விலை ரூ.1,068 கோடி.
சீனாவில் ரயில்கள் மோதி விபத்து: 40 பேர் பலி.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் 2 சுரங்கப்பாதை ரயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. எனினும் விபத்து நிகழ்ந்த பின்னர் தலையில் காயங்களுடன் பயணிகள் பலர் சுயநினைவிழந்த நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருப்பது சீன இணையதளங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் மூலம் தெரிகிறது.
கடந்த ஜூலையில் வென்ஜூவ் நகரில் அதிவேக ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். இதனால் ரயில்வே அமைப்பு குறித்து பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை சரிசெய்ய சீனா முயற்சித்துவரும் நிலையில் இந்த ரயில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்: 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்க ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஹோம்ஸ், பாபா அமர் உள்ளிட்ட பல இடங்களில் போராடும் மக்கள் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
துருக்கி எல்லை அருகேயுள்ள வடக்கு இட்லிப் பகுதியில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டு கொல்ல விரும்பாத ராணுவ வீரர்கள் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.இவ்வாறு தப்பி ஓடிய 4 பேரை சிரியா ராணுவம் சுட்டுக் கொன்றது. மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடாபியின் சொந்த நகருக்குள் நுழைந்த புரட்சி படை.
லிபியாவில் கடாபியின் சொந்த நகருக்குள் புரட்சி படை புகுந்தது. லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி மக்கள் போராட்டத்தால் வீழ்ந்தது.இருந்தும் அவரது ஆதரவாளர்கள் அதிகம் உள்ள ஒரு சில நகரங்கள் மட்டும் இன்னும் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எனவே அவற்றை கைப்பற்றுவதில் புரட்சிப்படை தீவிரமாக உள்ளது.
கடாபியின் ஆதரவு நகரமான பாலிவாட் கைப்பற்றப்படும் நிலையில் உள்ளது. அதை தொடர்ந்து அவரது பிறந்த ஊரான சிர்த் நகரை கைப்பற்ற கடும் சண்டை நடக்கிறது.சிர்த் நகரம் தலைநகர் திரிபோலி அருகே உள்ளது. அந்த நகரை நோக்கி புரட்சிப்படை முன்னேறியது. ஆனால் அவர்களை தடுத்து கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படையினரும் களம் இறங்கியுள்ளனர். ராணுவ தளங்களின் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கடுமையான துப்பாக்கி சண்டையும் நடக்கிறது.இதனால் ராணுவம் பின் வாங்கியது. அதை தொடர்ந்து சிர்த் நகருக்குள் புரட்சிப்படை புகுந்தது. அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதனால் அந்த நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
பாகிஸ்தானிற்கான உதவிகளை நிறுத்தும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்க எம்.பி.பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். 
கடந்த மே 1ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மூலம் பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதத்தினை ஆதரிப்பது அமெரிக்காவினை ஆத்திரமடைய வைத்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டோட்பையோ என்பவர் அமெரிக்கா பாராளுமன்ற விதி எண் 3013ன்படி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
அதில் இனி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து உதவிகளையும் முடக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவர் அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவுத்துறை கமிட்டியின் உறுப்பினர் ஆவார்.இது குறித்து கவர்னர் கூறுகையில்,“பயங்கரவாதத்தினை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவை ஏமாற்றி விட்டது. ஆனால் உதவியை மட்டும் எதிர்பாக்கிறது. இந்த தீர்மான அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” ‌என்றார்.
70 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் 240 டன்கள் வெள்ளி கண்டுபிடிப்பு.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது.கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.
கப்பல் 1941 பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது.
அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது.இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதில் 155 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளி: பள்ளிகளுக்கு விடுமுறை.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சூறாவளி, மழை காரணமாக உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் கிழக்கு அரோரா பகுதியில் மணிக்கு 215 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் என்று வானிலை ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.மீட்புப்பணிக்கு கடற்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை: மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்பு.
சவுதி அரேபியாவில் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்கவும், வாக்களிக்கவும், ஷூரா கவுன்சிலில் உறுப்பினர்களாகவும் மன்னர் அப்துல்லா அனுமதி வழங்கியுள்ளார்.
அவரது அறிவிப்பை அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவும் மன்னருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.பிற நாடுகளில் உள்ளதைப் போல பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என சவுதி அரேபியாவில் நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.
அந்நாட்டில் பெண்கள், ஆண் துணையின்றி வாழக் கூடாது, கணவர் அல்லது தந்தை அல்லது சகோதரர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, கார் ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. சமீபத்தில் பெண்கள் தனியாக கார் ஓட்டும் உரிமை கோரி போராட்டம் நடத்தினர்.தற்போதைய மன்னர் அப்துல்லா தன்னை சீர்திருத்தவாதியாகக் காண்பித்துக் கொள்பவர். அதற்கேற்ப சவுதி மக்கள் சமூகத்தில் காலத்திற்கேற்றபடி பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார்.
அரபு நாடுகளில் புரட்சித் தீ பரவிய வேளையில் சவுதி அரேபியாவிலும் அதன் தாக்கம் தென்பட்டது. அப்போது மன்னர் பல்வேறு சலுகைகளை அறிவித்து அந்தத் தாக்கத்தைக் குறைத்தார்.சவுதியைப் பொறுத்தவரை மன்னர் ஆட்சிதான் என்பதால் நகராட்சிக்கான பதவிகளுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நான்காண்டுக் காலம் கொண்ட இப்பதவியில் இன்று வரை ஆண்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி அடுத்த நான்காண்டுக்கான நகராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவான “ஷூரா கவுன்சிலில்” பேசிய மன்னர் அப்துல்லா,“அடுத்த நகராட்சித் தேர்தல் முதல் பெண்களும் வேட்பாளராக நிற்கலாம், வாக்களிக்கலாம். ஷூரா கவுன்சிலுக்கும் உறுப்பினர்களாக வரலாம். இம்முடிவை நாட்டின் உயரிய மத அறிஞர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே எடுத்துள்ளேன்” என அறிவித்தார்.
சவுதியில் நகராட்சிகளுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் கிடையாது. பாதி உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், மீதி பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.ஷூரா கவுன்சிலில் இன்று வரை ஆண்களே உறுப்பினர்களாக உள்ளனர். மன்னரின் அறிவிப்பு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பை உடனே ஏன் அமல்படுத்தக் கூடாது? நாட்டிற்கு உடனடியாக ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடக் கூடாது என்பதற்காக மன்னர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.எனினும் பெண்களுக்கான மிகச் சிறிய உரிமைகளுக்குக் கூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது என்பதே பெரிய வெட்கக் கேடு தான் என்று தெரிவித்துள்ளார் சவுதியின் பிரபல பெண்ணுரிமைப் போராளி வகேஜா அல் ஹவைதார்.
பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 37 பேர் பலி.
பாகிஸ்தானில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பாசிலாபாத் நகரில் உள்ள பள்ளி மாணவர்கள் காலார் கார்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
பஸ் சாவல்நகர் அரு‌கே சென்று கொண்டிருந்த போது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பள்ளிகுழந்தைகள் 37 பேர் பலியாயினர்.70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் கூறு‌கையில் அதிகளவிலான கூட்டம் மற்றும் ‌போதியலைட் வசதி இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.அதேசமயம் விசாரணை அதிகாரிகள் பஸ்சில் பிரேக் பெயிலியர் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
72 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பஸ்சில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என 110க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமான மாணவர்களை ‌பஸ்சில் பயணம் செய்ய அனுமதி வழங்‌கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான்.
பயங்கரவாத அமைப்பான ஹக்கானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி தலைமையில் நடைபெற்ற ராணுவக் கமாண்டர்கள் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தி எஸ்க்பிரஸ் ட்ரிபுனே பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஹக்கானி அமைப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலும் உருவாகியுள்ளது.இது அதிகரித்தால் மோசமான விளைவு ஏற்படும். இதைத் தணிக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் கமாண்டர்கள் ஒப்புக்கொண்டனர். அதேசமயத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்நிலைக்கு மேலும் பாகிஸ்தானால் செயல்பட இயலாது என்பதை உறுதியாகத் தெரிவித்தனர்.
அதிருப்தியில் உள்ள அமெரிக்கா ஒருவேளை தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் கமாண்டர்கள் அனைவரும் தங்களது யோசனைகளை வழங்கினர் என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இருப்பினும் ராணுவத் தளபதி அவசரக் கூட்டத்தைக் கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலின் தீவிரம் வெளிப்பட்டுள்ளது என்றும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
இதனிடையே ஹக்கானி அமைப்பை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்று பாகிஸ்தான் குற்றம்சுமத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது ஹக்கானி பயங்கரவாதிகளை அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ-தான் உருவாக்கிப் பயிற்சி அளித்தது. இதை மறந்துவிட்டுப் பேசக்கூடாது.
இப்போதும் ஹக்கானி பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தானில் இல்லை. அப்படி இருப்பதாகக் குற்றம் சுமத்தினால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
இதுபோன்ற மோசமான செயலில் அமெரிக்கா ஈடுபட்ட போதிலும் ஆப்கானிஸ்தானில் 1980களில் நடைபெற்ற போரில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் உதவியது என்றும் அவர் கூறினார்.அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் யூசுப் ரஸô கிலானி.
செப்டம்பர் 29ம் திகதி நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாதக் கட்சிகள், மதத் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் தொடரும் கலவரம்: ராணுவ தளபதி சுட்டுக் கொலை.
ஏமனில் ராணுவ தளத்தின் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.அதிபர் சலே ஆதரவு ராணுவ வீரர்கள் 30 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகார மாற்றம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான அதிபரின் அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே கடந்த 24ம் திகதி எதிர்பாராத விதமாக நாடு திரும்பினார்.ஏற்கனவே கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அதிபர் எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வந்த நிலையில் அதிபர் நாடு திரும்பிய பின்னும் தாக்குதல் ஓயவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் சலே விடுத்த அறிக்கையில் வளைகுடா கூட்டுறவுக் கவுன்சில் பரிந்துரைத்தவைகளின்படி அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தல்கள் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டன. இந்நிலையில் சனாவின் வடபகுதியில் உள்ள ராணுவத் தளம் மீது நேற்று பழங்குடியினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 63வது படைப் பிரிவின் தளபதி கொல்லப்பட்டார். ராணுவ வீரர்கள் 30 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆப்கன் முன்னாள் அதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி கொலையில் தலிபான்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானி கடந்த 20ம் திகதி பயங்கரவாதிகள் இருவரால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அதிபர் ஹமீத் கர்சாய் நியமித்துள்ளார்.
இந்நிலையில் ஹமீதுல்லா அகுண்ட் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவருக்கும் தலிபான்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் ஆப்கன் அரசு செய்தித் தொடர்பாளர் சிபதுல்லா சபி தெரிவித்துள்ளார்.தலிபான்களுக்கும், ரப்பானி தலைமையிலான அமைதி கவுன்சிலுக்கும் இடையில் தூதுவராக அகுண்ட் செயல்பட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: அனைத்து துறையினரும் போராட்டம்.
கிரீஸ் நாட்டில் அரசு மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து நேற்று நாடு முழுவதும் பொலிஸ் உட்பட அனைத்துத் துறையினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில் யூரோ மண்டல கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நிதியமைப்பு புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது.
ஐ.எம்.எப் ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புகளிடம் இருந்து கிரீஸ் பெற்ற கடன் தவணைகளுக்காக அரசு ஊழியர் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்நாடு அமல்படுத்தி வருகிறது.
இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் நேற்று நாடு முழுவதும் பாதாள ரயில், டிராம் மற்றும் புறநகர் ரயில் ஊழியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் பல மணிநேரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களும் வேலை செய்ய மறுத்ததால் விமானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இவர்களோடு கிரீஸ் பொலிஸ் துறையும் சேர்ந்து கொண்டது.இதற்கிடையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில் நேற்று யூரோ மண்டல கடன் நெருக்கடி தீர்வுக்கான கூட்டம் நடந்தது.
இதில் ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் மொத்த நிதியான 440 பில்லியன் டொலர் என்பதை 2 டிரில்லியன் டொலர் அளவிற்கு அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது.இன்னும் ஒரு சில நாட்களில் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் எனவும், அத்தீர்வு ஐந்தில் இருந்து ஆறு வாரங்களுக்குள் அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF