Friday, September 23, 2011

இன்றைய செய்திகள்.

பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கையை நீக்கும் யோசனை தோற்கடிப்பு!- இலங்கை உயர்ஸ்தானிகரகம்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி அவுஸ்திரேலிய செனட்டில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்று குற்றம் சுமத்தி அவுஸ்திரேலிய ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான கிறீன் கட்சியின் ( நியூ சௌத்வேல்ஸ்) செனட்டர் லீ ரெஹ்னொன் யோசனை ஒன்றை சமர்ப்பித்தார்
இந்த யோசனை இன்று செனட்டில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது அவுஸ்திரேலிய அரசாங்க கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இந்த யோசனையை தோற்கடித்ததாக இலங்கை உயர்ஸ்தானிகரகம் கூறியுள்ளது
அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் இதன் போது வாதம் முன்வைக்கப்பட்டது
இதேவேளை எதிர்வரும் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கைப் பிரதிநிதிகளின் பெயர்களை தருமாறு ஏற்கனவே கிறீன் கட்சியின் செனட்டர் லீ ரெஹ்னொன், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சரை கேட்டிருந்தார்
எனினும் அந்த தகவலை குடிவரவுத்துறை அமைச்சர் வழங்கவில்லை என்று இலங்கையின் கான்பரா உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
உலகின் ஐந்தாவது உயரமான கட்டடம் இலங்கையில் நிர்மாணம்.
உலகின் ஐந்தாவது உயரமான கட்டடம் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் கொழும்பிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பெஹலியகொட பிரதேசத்தில் இந்த பாரிய கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றது.
குறித்த கட்டத்தின் உயரம் 350 மீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளில் இந்த கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி நிலையங்கள், உணவு விடுதிகள், வர்த்தக நிலையங்கள், காரியாலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த கட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதி குறித்து நான் வெட்கப்படுகின்றேன்: ஹக்கீம்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதி குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் இன்று நீதி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதனை எண்ணி நீதியமைச்சர் என்ற வகையில் நான் வெட்கமுறுகின்றேன்.
சட்டத்தையும், ஒழுங்கையும் ஒருசிலர் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு காட்டுத்தர்பார் ஒன்றை இந்நாட்டில் கட்டவிழ்த்து விட முற்படுகின்றார்கள். தங்கள் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தண்டிப்பதற்கும், ஏனையவர்களை அச்சுறுத்தி அடக்கியாளவும் முற்படுகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளையும், இலங்கையின் நீதித்துறையை மீறி நடக்கும் காட்டுத்தர்பார்களையும் விமர்சிப்பதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையொன்று தேவையாக உள்ளது.
அரசாங்கத்தினுள் இருப்பதற்காக இவற்றைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மௌனியாக ,ருக்க முடியாது. அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தான் வேண்டும்.
இல்லாவிட்டால் நீதியமைச்சர் எங்கு போய் விட்டார் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பும் நிலையும் கூட உருவாகலாம் என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழும் காலம் உருவாக வேண்டும்: சஜித் பிரேமதாச.
நாட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழும் காலம் உருவாக்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐ.தே.க.வின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ,ன்று ஒவ்வொரு இனப்பிரிவினரும் தங்கள் சுயமரியாதையை இழக்க வேண்டிய, தங்கள் பாரம்பரிய அடையாளங்களை ,ழந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்த நிலையை மிக விரைவில் மாற்றியாக வேண்டும்.
அத்துடன் அனைத்து மக்களும் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சகல உரிமைகளும் பெற்று, சுயமரியாதையுடன் வாழும் சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான அரசியல் மாற்றமொன்று நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு அரசியல் மாற்றத்தை கொழும்பு மாநகரசபை மூலமாக உருவாக்கி, இந்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், பாரம்பரிய அடையாளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை முன்னெடுத்துச் செல்வதே ஐ.தே.க.வின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஏமாற்று மோசடி செய்த இலங்கைப் பெண் கைது.
அமெரிக்காவில் பாரிய நிதித் தொகையொன்றை மோசடி செய்த இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து வசித்து வந்த பெண்ணொருவரே அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பர்முடாவை அண்மித்த பிரதேசத்தில் வசித்து வந்த 36 வயதான ஆரச்சிகே சந்திமா என்ற பெண், தனக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலியான ஆவணங்களை முன்வைத்து நான்கு தடவைகள் காப்புறுதிப் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார்.
அவ்வாறு அவர் மோசடி செய்த மொத்தப் பணம் 76,297 அமெரிக்க டொலர்களாகும். ,லங்கையின் நாணயப் பெறுமதியில் 83 ,லட்சத்து 92 ஆயிரத்து 670 ரூபாவாகும்.
மோசடியாக காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவிலிருந்து தப்பியோட முற்பட்ட நிலையில் பர்முடா பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ராஜ் ராஜரத்தினத்திற்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு.
அமெரிக்காவில் இலங்கைத் தமிழர் ராஜ் ராஜரத்தினத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினம் மீது பங்குச் சந்தை நிதி மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நடைபெற்ற வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.
அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படுமென்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் அவருக்கெதிரான தீர்ப்பை செப்டம்பர் 27ம் திகதி முதல் அக்டோபர் 13ம் திகதி வரையான காலப்பகுதிக்கு அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெரும்பாலும் ராஜ் ராஜரத்தினத்துக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறான தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவில் நீண்டகால சிறைத்தண்டனை பெற்ற முதலாமவராக அவரே விளங்குவார். ,துவரை காலமும் ஆகக் கூடிய சிறைத்தண்டனையாக பத்து வருடங்கள் வரையான சிறைத்தண்டனையே அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக பிரபல சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா புட்டினஸ் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
வவுனியா விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வடக்கிற்கு வழங்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வடக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள விதம் தொடர்பில் அமெரிக்க பூரண திருப்தி அடையவில்லை.எவ்வாறெனினும், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறந்த திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
இலங்கைக்கு 8 வது தவணை கொடுப்பனவு எப்போது? : குழப்பத்தில் சர்வதேச நாணய நிதியம்.
இலங்கைக்கு வழங்கி வரும் 2.6 பில்லியன் டொலர்களில் 8வது தவணைக் கடன் கொடுப்பனவுக்கான பரிசீலனை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதுவரை இலங்கைக்கு குறித்த 2.6 பில்லியன் டொலர்களில் 7 தவணைக்கடன் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 7 வது தவணைக் கொடுப்பனவை இலங்கை எவ்வாறு பயன்படுத்தியது என்பது தொடர்பான முன்னேற்ற அறிக்கை இன்னும் பரிசீலனை செய்யப்படவில்லை.
இன்னும் அதற்கான காலவரையறையும் செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி கோசி மத்தாய் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் ரூபா நாணய பரிமாற்றத்தை இலகுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தமையை அடுத்தே சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து தற்போது வெளியாகியுள்ளது.
மெக்சிகோ சாலைகளில் மனித உடல்களை வீசி சென்ற மர்ம கும்பல்: பொலிசார் மீட்பு.
மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்களால் நெடுஞ்சாலை ஒன்றில் ஏறியப்பட்ட 35 மனித உடல்களை மீட்ட பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டின் விராகுரூஸ் நகரில் உள்ள பரபரப்பான நெஞ்சாலை ஒன்றில் 2 டிராக்குகளில் வந்த ஒரு கும்பல் 35 பேரின் உடல்களை சாலையின் நடுவே குவித்து வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
உடல்கள் குவிக்கப்பட்ட பகுதியில் ஒரு பாலம் இருந்ததால் அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை மறித்து நிறுத்திவிட்டு இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் கைத்தொலைபேசிகளின் வீடியோக்கள் மூலம் இரண்டு டிரக்குகளில் உடல்கள் கொண்டு வரப்பட்டது தெளிவாக தெரிகிறது.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சாலையில் மேலாடை இல்லாத மனித உடல்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்தவர்களில் 12 பெண் மற்றும் 23 ஆண் உடல்கள் இருந்தன. இந்த சம்பவ குறித்து கிடைத்த ஒரு வீடியோவில் மனித உடல்கள் கொண்டு வரப்பட்ட டிரக்குகளை சூழ்ந்த வண்ணம், சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது தெரிகிறது. சாலையில் ஏறிப்பட்டவர்களில் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனவர்கள்.
மேலும் ஒரு பொலிஸ்காரரின் உடலும் உள்ளது. அனைவரும் கடத்தல், போதைப் பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
சாலையில் கொண்டு வந்து போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.
விராகுரூஸ் நகரின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில்,"நெடுஞ்சாலையின் நடுவே சென்ற இரண்டு டிராக்குகளின் பின்கதவுகள் திறந்த நிலையில் உடல்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. பின்னர் அந்த டிரக்குகள் சம்பவ இடத்தில் இருந்து விரைவாக நகர்ந்து சென்றுவிட்டன" என்றார்.
தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு அபராதம்.
பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை மீறி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இதுவரை இவ்வாறு தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஆட்சி நிர்வாகம் குறித்து ஒபாமா புகழாரம்.
இந்தியாவில் ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் கிராம மக்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
வெளிப்படையான அரசுகளுக்கான அமைப்பு(ஓ.ஜி.பி) என்ற சர்வதேச அமைப்பின் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் மேலும் பேசியதாவது: மக்களுக்கான சேவையில் அரசின் செயல்களை மாற்றி அமைக்க இந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைந்துள்ளன.
இன்றைய தலைமுறையினர் மக்களின் நலனுக்காகவே அரசு என்பதில் உறுதியாக உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிராமப்புறங்களில் ஒருங்கிணைப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்நாடுகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில் அரசுகளை நிர்பந்திக்க கிராம மக்களால் முடிகிறது. அதனால் தேவையான அரசு சேவைகளை பெறவும் அவர்களால் முடிகிறது.
உலகில் உள்ள பல நாடுகளிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வெளிப்படையான அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தப்படும் புதுமைகள், செழுமையை கொண்டு வர உதவும் என்பது வளரும் நாடுகளைக் கண்டு அறிய முடிகிறது.
இந்த அமைப்பின் நாடுகள் ஒன்றிணைந்து "வெளிப்படையான அரசுகளுக்கான பிரகடனம்" ஒன்றை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இந்த அமைப்பில் இணையும் நாடுகள் சமூக நிறுவனங்களோடு இணைந்து இந்தக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒபாமா பேசினார்.
மேலும் இக்கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் அமெரிக்கா "நாம் மக்கள்" என்ற இணையதள முகவரியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் எவர் ஒருவரும் நேரடியாக வெள்ளை மாளிகைக்கு புகார் அளிக்கலாம்.
வெளிப்படையான அரசுகளுக்கான அமைப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன. இதில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா ஏற்க மறுத்து விட்டது.
இளவயதினரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 7 பேருக்கு மரண தண்டனை.
பாகிஸ்தானில் கடந்த வருடம் இரு இள வயதினரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்படி படுகொலைக் காட்சியானது புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் சியல்கோட் மாவட்ட பொலிஸ் தலைமையதிகாரி உட்பட 7 பொலிஸ் அதிகாரிகளுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முஹீஸ் பட்(19 வயது) மற்றும் முனீப் பட்(15 வயது) ஆகிய இந்த இரு சகோதரர்களையும் கொள்ளையர்கள் எனத் தவறாகக் கருதப்பட்டே தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுத்த திட்டம்.
பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புரட்சியை ஏற்படுத்தி ராணுவம் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 8ந் திகதி தலைமை ராணுவ தளபதி கயானி முக்கிய தளபதிகளை அழைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். அப்போது ராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய தளபதி கயானி பாகிஸ்தான் மக்கள் இப்போது அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டனர். இந்த அரசால் நமது பிரச்சினையை தீர்க்க முடியாது என கருதுகிறார்கள்.
எனவே இப்போதைய சூழ்நிலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது அவசியமான ஒன்று என்று பேசியிருக்கிறார். எனவே எந்த நேரத்திலும் ராணுவ புரட்சி ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ புரட்சி ஏதும் ஏற்பட்டு விடாமல் தடுக்க அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தங்களுக்கு வேண்டிய தளபதிகள் மூலம் அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானில் சிறை வைக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்கர்கள் விடுவிப்பு.
ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். ஈரானில் உளவு பார்த்ததாக ஷேன் பவுர், ஜோஷ் பட்டால் என்ற 2 அமெரிக்கர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவரையும் ஈரான் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க தூதரக அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் அவர்கள் மீதான வழக்கு விசாரணையும் நடந்தது. அமெரிக்கர்களுக்காக ஈரானை சேர்ந்த வக்கீலே வாதாடி வந்தார். இந்நிலையில் ஷேன் பவுர், ஜோஷ் இருவரும் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.அவர்களை தூதரக அதிகாரிகள் ஜீப்பில் அழைத்து சென்றனர். டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இருவரும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட வேண்டும்: நேபாள பிரதமர்.
சமீபத்தில் சிக்கிம் - நேபாள எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்தியாவின் பல மாநிலங்கள், நேபாளத்தில் பலர் பலியாயினர்.
இந்நிலையில் நியூயோர்க்கில் நடக்கும் ஐ.நா பொதுச் சபை ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க நேபாள பிரதமர் பாபுராம் பட்டாரய் சென்றுள்ளார். அவருக்கு பதில் உள்துறை அமைச்சர் பிஜய் குமார் கச்சேதர் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார்.
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரண பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பிஜய் குமார் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,"நிலநடுகத்தை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது. சீனாவில் முடியாது. அப்படி இருக்கும் போது நம்மால் எப்படி முடியும். ஆனால் நேபாளத்தை நிலநடுக்கம் தாக்குவதை விட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை நிலநடுக்கம் தாக்க வேண்டும் என்று பசுபதிநாதரிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.
நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்து நேபாள ராணுவத்துக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் பிஜய்குமாரின் பேச்சு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்: அமெரிக்கா.
தீவிரவாதிகள் இணையதளத்துடன் தொடர்பு வைத்து மறைமுக போரில் ஈடுபடுவதை பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ நிறுத்த அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் பயிற்சிக்கு அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவுவதாக ஆதாரங்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. இதுபற்றி இந்தியா நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீது போர் தொடுப்பதாக வெளியே காட்டிக் கொண்டு மறைமுகமாக தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதை ஐ.எஸ்.ஐ உடனடியாக நிறுத்த அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் அரசுக்கு தகவல்களை ஒபாமா அரசு அனுப்பியுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிரவாதிகளுடன் தொடர்பை ஐ.எஸ்.ஐ கைவிட்டு சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
தவறினால் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தன்னிச்சையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் நிலை ஏற்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.யின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்துவதில் அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனெட்டா மற்றும் அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கன் முன்னாள் அதிபர் படுகொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு.
தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இந்நிலையில் அவர் மீது தற்கொலை தாக்குதல் நடந்தது எப்படி என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. தலிபான் அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
இத்தாக்குதலோடு தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபரும், தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவருமான பர்ஹனுதீன் ரப்பானி(71) தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பு மிகுந்த அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது முதலில் தெரியவில்லை. எனினும் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என ஆப்கன் அரசு தெரிவித்தது.
அவர் மீதான தாக்குதல் குறித்த விவரங்களை ரப்பானியின் உதவியாளரும், ஆப்கன் அமைதிக் கவுன்சிலின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான முகமது இஸ்மாயில் காசீமியார் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தலிபான்களின் ஊடுருவல் திட்டங்களுக்கு முக்கிய கர்த்தாவான இஸ்மத்துல்லா என்பவர் ரப்பானியுடன் நேரடியாகப் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். அச்சமயம் ரப்பானி ஈரானுக்குச் சென்றிருந்தார்.
அவர் வரும் வரை அமைதிக் கவுன்சில் அலுவலக வளாகத்தில் விருந்தினர் தங்கும் வீட்டில் இஸ்மத்துல்லா தங்கியிருந்தார். ஈரானில் இருந்து ரப்பானி திரும்பியவுடன் நேற்று முன்தினம் அவரை இஸ்மத்துல்லாவும், மற்றொருவரும் நேரில் சந்தித்தனர்.
அவர்கள் இருவரில் ஒருவர் ரப்பானியின் அருகில் சென்று வணக்கம் செலுத்துவதற்காக குனிந்தார். அப்போது தனது தலைப்பாகையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை இயக்கினார். அந்தத் தாக்குதலில் தான் ரப்பானி பலியானார்.
காபூலில் ரப்பானி வீடு இருக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
காபூலின் பல இடங்களில் ரப்பானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் ரப்பானியின் படங்களை ஏந்தியிருந்தனர். இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரப்பானியின் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலோடு தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரப்பானி கொலைக்குப் பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தக் கொலைக்காக இருவர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவருமே ரப்பானியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்காக நீண்ட காலம் அவருடன் பழகினர்.
அவர்கள் தலிபான் அமைப்பின் தலைவரை ரப்பானியுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதாக நம்பிக்கை ஊட்டியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை என்ற மாய வலையில் சிக்கித் தான் ரப்பானி பலியாகியுள்ளார். இது போன்று எதிர்காலத்தில் பல்வேறு தாக்குதல்கள் நடத்துவோம்.
ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷியா.
ரஷியா தனது ராணுவ செயற்கைக்கோளை புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
மூன்று வாரகால தாமதத்திற்குப் பிறகு அந்நாட்டு ராணுவ அமைச்சகத்தின் விருப்பத்திற்கிணங்க ராணுவ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக ராஸ்காஸ்மாஸ் ஸ்பேஸ் அமைப்பு தெரிவித்தது.
கஜகஸ்தானில் உள்ள பைகானூர் தளத்திலிருந்து செலுத்தப்பட்ட ராணுவ செயற்கைக்கோள் திட்டமிட்டபடி 9 நிமிஷங்களில் விண்பாதையை அடைந்ததாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 31ம் திகதியே ராணுவ செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வாறு செலுத்தப்படவில்லை.
பிலிப்பைன்சில் நண்பனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்.
பிலிப்பின்ஸில் வணிக வளாகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை தனது நண்பனை துப்பாக்கியால் சுட்ட 13 வயது சிறுவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான்.
இதில் இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக பிலிப்பின்ஸில் உள்ள பாம்பாங்கா மாகாணத்தில் உள்ள மெக்சிகோ டவுன்சிப்பின் காவல் துறை அதிகாரி வில்சன் சான்டோஸ் கூறியதாவது: சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரித்து வருகிறோம்.
சிறுவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். தனது நண்பனுடன் சேர்ந்து மரணத்தை தழுவ விரும்புவதாக 13 வயது சிறுவன் எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றியுள்ளோம் என்றார்.
இருவருக்கும் மூளைச் சாவு ஏற்பட்டுள்ள நிலையில் அச்சிறுவர்களின் சிறுநீரகம் மற்றும் கண்களை தானமாக வழங்க அவர்களின் பெற்றோர்கள் விரும்பியதால் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் மற்ற உறுப்புகளை பாதுகாத்து வருவதாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அல்போன்ஸ் டானக் தெரிவித்துள்ளார்.
ஆயுத விற்பனை பரவலாக உள்ள பிலிப்பின்ஸில் சிறுவர்கள் கைகளிலும் அவை கிடைத்து வருவது அவர்கள் மீதான பெற்றோர்களின் கண்காணிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஆளில்லா விமானம் மூலம் ஆப்ரிக்காவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது ஆப்ரிக்காவிலும், அரபு தீபகற்பத்திலும் விரிவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப்பை எதிர்கொள்ள எத்தியோப்பியாவில் அமெரிக்க ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் இருந்து இம்மாத துவக்கத்தில் பரிசோதனை முயற்சிகள் நடந்தன.
விரைவில் அத்தளத்தில் இருந்து சோமாலியா மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தானில் அல்கொய்தா பலவீனம் அடைந்த பின் ஏமன், சோமாலியாவில் தீவிரவாதம் பரவி வருவதால் அமெரிக்கா இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கான செஷல்ஸ் தூதர், ரொனால்டு ஜூமி, அமெரிக்காவின் ராணுவ தளம் தங்கள் நாட்டில் அமைவதை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு துப்பாக்கிகள், குண்டுகள் பரிசளித்த பயங்கரவாத அமைப்பு.
சோமாலியா நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சம், பட்டினியால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மனப்பாடப் போட்டியில் வென்ற சிறுவர்களுக்கு இயந்திரத் துப்பாக்கிகளை பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறது அந்நாட்டின் ஷபாப் பயங்கரவாத அமைப்பு.
உலகில் பள்ளிக்கூடங்கள் மிக மிகக் குறைவாக உள்ள நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. இந்நாடு கடந்த 20 ஆண்டுகளாக வலுவான மத்திய அரசு இல்லாமல் சிதறுண்டு கிடக்கிறது.
நாட்டின் தென்பகுதி ஷபாப் பயங்கரவாத அமைப்பிடமும் பிற பகுதிகள் பல்வேறு பயங்கரவாத, பழங்குடியினக் குழுக்களிடமும் அகப்பட்டுள்ளன. தென்பகுதியில் பள்ளிக்கூடங்கள், வானொலி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் அனைத்தும் ஷபாப் வசம் உள்ளன.
கடந்த ரமலான் மாதத்தில் ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதி பள்ளிகளில் அந்த அமைப்பு பற்றிய விவரங்கள் மற்றும் குரான் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.
10 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த 18ம் திகதி நிகழ்ந்தது. அதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கொஞ்சம் பணம் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் தொடர்பான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மூன்றாவது இடம் பெற்ற மாணவருக்கு இரு கையெறி குண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. சூழல் காரணமாக சோமாலியாவில் உள்ள சிறுவர்களில் பெரும்பான்மையோருக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பரிச்சயம் உண்டு.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஷபாப் தலைவர் ஷேக் முக்தார் அபு மன்சூர், "இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக சிறுவர்கள் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.
பூமியை நாளை செயற்கைகோள் தாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில் உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை(யு.ஏ.ஆர்.எஸ்) ஏவியது.
இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ் 2005ம் ஆண்டு செயலிழந்தது.
ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது.
அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளி மண்டலத்தில் நுழையும் போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது.
வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.
செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம்.
ஆனால் யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர். யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம்.
இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும். 
லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்: இடைக்கால பிரதமர் உறுதி.
லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த சபா நகரின் பெரும்பகுதி எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டது. இடைக்கால அரசின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடக்கும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று 66 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் லிபியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய லிபியா இடைக்கால அரசின் பிரதமர் மகமது ஜிப்ரீல்,"எத்தனை அமைச்சகங்கள் திரிபோலி மற்றும் பெங்காசியில் எந்தெந்த அமைச்சகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்" என அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் தலைமையிலான லிபியா பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
திரிபோலியில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என அவர் உறுதியளித்தார். லிபியாவின் முன்னேற்றத்திற்கு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்காவும் உதவும் எனவும் அவர் கூறினார். அதன்பின் பேசிய ஜலீல் லிபியாவின் புதிய அரசுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகம் மற்றும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இதுவரை லிபியாவின் இடைக்கால கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வந்த ஆப்ரிக்க யூனியன் அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தது.
அதே போல் தென் ஆப்ரிக்காவும் இடைக்கால கவுன்சிலுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த லிபியாவின் முக்கிய நகரமான சபாவின் பெரும்பகுதி நேற்று எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டது. நகரின் மையப் பகுதியில் எதிர்ப்பாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
எனினும் நகரின் பிற மாவட்டங்களில் கடாபி ஆதரவாளர்களின் தாக்குதல் இருந்து வருகிறது. விரைவில் அந்நகர் எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விடும் என இடைக்கால கவுன்சில் நேற்று அறிவித்தது. எனினும் சிர்ட், பானி வாலித், ஜுப்ரா நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF