Tuesday, September 13, 2011

இன்றைய செய்திகள்.

இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார் ரொபட் ஓ பிளேக்.

தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.00  மணியளவில் அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சில நாட்கள் தங்கியிருக்கும் ரொபட் ஒ பிளேக் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் ரொபட் ஒ பிளேக்கின் இலங்கை விஜயம் முக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.
எனவே கடந்த விஜயங்களை காட்டிலும் அவரின் தற்போதைய விஜயம் சர்வதேச மட்டத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதாக கூறும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை சர்வதேச மன்னிப்பு சபை அண்மையில் விமர்ச்சித்திருந்தது.
எனினும் அந்த விமர்சனம், குழுவின் விசாரணைகள் முடியும் முன்னதாக முன்கூட்டிய தீர்ப்பாக இருக்க முடியாது என்று இலங்கை குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் இலங்கையின் இறையாண்மையில் சர்வதேச மன்னிப்பு சபை தலையிடுவதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தநிலையில் நல்லிணக்க குழுவின் விசாரணைகளின் உண்மை தன்மை தொடர்பில் ரொபட் ஓ பிளேக் ஆராய்வார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கு இலங்கை அரசாங்கம் மாற்றுக் கருத்து எதனையும் இதுவரை வெளியிடவில்லை.
நீதியான போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசு நடத்துமா?!இந்தியாவிடம் உத்தரவாதம் கேட்கிறது அமெரிக்கா.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த நீதியான விசாரணை யொன்றை இலங்கை அரசு தானே நடத்துமென்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா என்று இந்தியாவிடம் இராஜதந்திர ரீதியில் கேட்டிருக்கிறது அமெரிக்கா.
இதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கினால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை உடனடியாக அமைப்பது பற்றிய விடயத்தை மீள்பரிசீலனை செய்ய முடியுமென்று அமெரிக்கா இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
ஐ. நா. மனித உரிமைகள் சபைக் கூட்டம் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச பொறி முறை ஒன்று அவசியமென்று மேற்குலக நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா இந்தியாவிடம் குறித்த உத்தரவாதத்தைக் கோரியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை குறித்து இந்தியா இதுவரை எதுவித பதிலையும் வழங்கவில்லை.
அதே சமயம், கொழும்பு வந்து புதுடில்லி செல்லும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் அங்கு இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தவுள்ளாரெனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்தப் பதிலே சர்வதேச அரங்கில் இலங்கைத் தொடர்பான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அகதிகளை குறிவைக்கும் ஸ்கோட்டியா பிரின்ஸ் கப்பல்.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்கோட்டியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் எதிர்வரும் ஒக்டோர் நவம்பர் மாதங்களில் விசேட சலுகைகளை அறிவிக்கவுள்ளது. 
குறிப்பிட்ட மாதங்களில் அதிகளவான பயணிகள் இந்தக்கப்பலில் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கப்பல் நிறுவன பொதுமுகாமையாளர் பி ஏ பொன்னப்பா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை வடக்குகிழக்கு பகுதிகளுக்கு மீள்குடியேற்றத்துக்காக அழைத்து வருவது, தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சு நடத்தப்படுகிறது.
அத்துடன் மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக பொன்னப்பா கூறினார்.
இந்தக்கப்பலில் பயணிப்போரில் 20 வீதமானவர்கள் வர்த்தகர்களாவர்.
தென்னிந்தியாவில் இந்த கப்பல் சேவைக்காக சுமார் 100 முகவர்கள் செயற்படுகின்றனர்.
இலங்கையில் 20 முகவர்கள் செயற்படுகின்றனர். 
நாட்டில் உண்மையை கதைப்பதற்கு அச்சம் நிலவுகின்றது: இம்தியாஸ் பாக்கிர்.

நாட்டில் உண்மையை கதைப்பதற்கு அச்சம் நிலவுவதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவிக்கின்றார். 
வௌ்ளவத்தையில் நேற்று நடைபெற்று கூட்டமொன்றில் ககருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறினார்.
சிலர் ஊடகஙடகளை அச்சுறுத்தி தமக்கு தேவையான காட்சிகளை உருவாக்கி காட்சிப்படுத்துவதாகவும் மக்களுக்கு அதனையே பார்ப்பதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குறிப்பிட்டார்.
உண்மையை கதைப்பதற்கு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
கொழும்பிலுள்ள வளங்களுக்கு விலைமனுக்கள் கோரப்படாமல் தாம் விரும்பிய தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாககவும் அவர் கூறினார்.
இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்வதற்கான சூழல் உருவாகினால் மாத்திரமே நாடு அபிவிருத்தி அடைந்துள்ளது என கருத முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி - பிளேக் சந்திப்பு.

அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று நண்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
இதன்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் ரொபட் ஓ. பிளேக் ஜனாதிபதியிடம் கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நவம்பர் மாத நடு பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் என உறுதியளித்த ஜனாதிபதி, குறித்த அறிக்கைகிணங்க அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்ததுடன், இரு தரப்பிற்கும்  இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடைபெறும் எனவும் நாம் தெரிவித்தோம் என அவர் கூறினார்.
வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளேக் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்.
ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றது. இது ஏனைய நாடுகளை போன்றே அது தேவையெனவும் நாம் கூறினோம் என அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள ரொபட் ஓ  பிளேக் அரச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது.
யாழிலிருந்து கொழும்பு திரும்பும் ரொபட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ரொபட் ஓ பிளேக்கை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் இங்குள்ள் பல புத்திஜீவிகள், கல்விமான்கள் உட்பட பலரைச் சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
“தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வேண்டும்” “மனிதவுரிமை மதிக்கப்பட வேண்டும்” காட்டமான செய்தியுடன் இலங்கை செல்லும் கனடாவின் இரு முக்கிய அமைச்சர்கள்.

மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, யுத்தக் குற்ற விசாரணைகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழும் வகையில் இனப்பிரச்சினைக்கான பரிகாரம் காணப்பட வேண்டுமெனவும் கனடா இராஜதந்திரத்தின் காட்டமான நடைமுறையைப் பிரயோகித்து வலியுறுத்தவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்காபுரோ நகரில் தனது கட்சி ஆதரவாளர்களைச் சந்திந்த கனடியக் குடிவரவு அமைச்சரும், பிரதமரிற்கு நெருக்கமான அமைச்சருமான ஜேசன் கென்னி மனித உரிமைகள் விவகாரத்தில் சிறீலங்கா நடந்து கொள்ளும் விதம் தொடர்பாக தற்போதைய அரசு மிகவும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும்,

இதனை இலங்கை அரசிற்கு நேரடியாகத் தெரிவிக்குமுகமாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயாட் அவர்கள் மிக விரைவில் அநேகமாக ஒக்டோபர் மாதத்தில் இலங்கை செல்வார் எனவும் அது அவரது அடுத்த ஆசியப் பயண நிரலின் போது இது இடம்பெறும் என்றும்,

அதுபோலத் தானும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை தெரிவிக்குமுகமாகவும் மனித உரிமைகளை மதிக்குமுகமான செயற்பாட்டையும் யுத்தக் குற்ற விசாரணை தொடர்பாக அது மேற்கொண்டு வரும் நடவடிக்கையை ஆராயவும் இந்த வருட நவம்பர் மாதமளவில் பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கனடியத் தமிழர் கொன்சவேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ரொறன்ரோ தமிழ் சமூகத்தைச் சார்ந்த நிமால் விநாயகமூர்த்தி, பாபு நாகலிங்கம், ஹரி ஜெகநாதன், சுரேஸ் தர்மா, சாமி அப்பாத்துரை, மற்றும் சனோ தியாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி அமைச்சரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சருடனான இச் சந்திப்பு இடம்பெற்ற அடுத்த தினமான சனிக்கிழமை பல்லின நிருபர்களையும் சந்தித்த கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான தமது காட்டமான நிலைப்பாட்டை நிருபரொருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை தனது தமிழ் மக்களிற்கான புதுவருட வாழ்த்துக்களின் மூலம் தெரிவித்தவர் என்பதும் இனப்பிரச்சினைக்கான கனடியத் தீர்வுத் திட்டமொன்றை தனது பாராளுமன்றச் செயலரான பியர் பொலிவியர் மூலம் நடைமுறைப்படுத்த முயன்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடிய அரசானது கொழும்பிலுள்ள தனது தூதரகமூடாக இவ்வாறான ஒரு இராஜாங்க வேண்டுகோளை விடுக்காமல் நேரடியாக தனது அமைச்சர்களை அனுப்பி இவ்வேண்டுகோளை விடுக்கவுள்ளதன் மூலம் கனடாவின் நிலைப்பாடு தொடர்பாக ஒரு காட்டமான, தெளிவான செய்தி சிறீலங்கா அரசிற்குத் தெரியப்படுத்தமெனவும் இது தொடர்பாக தங்களது நாடளுமன்ற விவகாரக்குழு கடந்த வியாழக்கிழமை சந்தித்த போது தாங்கள் ஆராய்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொட்ட நவுபர் மகளின் திருமண வைபவத்திற்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்.

தண்டனை அனுபவித்து வரும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பொட்ட நவுபர் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரியுள்ளார்.
சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சிறைச்சாலை சட்ட விதிகளுக்கு அமைய இவ்வாறு பொட்ட நவுபருக்கு சலுகை அளிக்க முடியுமா என ஆராயுமாறு உயர் நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ஸ, சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதவான் சரத் அம்பேபிட்டியவை படுகொலை செய்த குற்றத்திற்காக பொட்ட நவுபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொட்ட நவுபர் தற்போது போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நவுபரின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதத்தின் பிரகாரம் திருமண சடங்குகளின் போது மணமகளின் தந்தையின் பிரசன்னம் முக்கியமானது என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். 
நியூயார்க் தாக்குதலின் 10வது நினைவு தினம்: அதிபர் ஒபாமா பங்கேற்பு.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ல் நிகழ்ந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் நேற்று அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
நியூயார்க்கில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் நினைவுதினத்தை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11ம் திகதி உலக வர்த்தக மையம் என்ற இரட்டைக் கட்டடங்கள் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் இருவிமானங்களை மோதி தாக்குதல் நிகழ்த்தினர்.
இச்சம்பவத்தில் அக்கட்டடங்கள் இடிந்து மண்ணோடு மண்ணாயின. இதில் இந்தியர், பிரிட்டன் நாட்டவர், அமெரிக்கர் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 2,976 பேர் பலியாகினர். இதையடுத்து பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.
இரட்டைக் கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் கிடைத்ததால் நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர். பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கட்டடங்கள் இருந்த இடத்தில் அதிபர் ஒபாமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அனைவரும் தலைகுனிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒபாமா பைபளில் இருந்து சில வரிகளை வாசித்தார். அதைத் தொடர்ந்து பலியான மூவாயிரம் பேரின் பெயர்களும் வாசிக்கப்பட்டன. அப்போது முன்னாள் அதிபர் புஷ் கண்ணீர் சிந்தினார்.
இதையடுத்து இரு கட்டடங்களில் வடபுறமாக நின்றிருந்த கட்டடம் இருந்த இடத்தில் ஒரு பிரதிபலிக்கும் குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதை அதிபர் ஒபாமா திறந்து வைத்தார். அதன் சுற்றுச் சுவர்களில் பலியானோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி ஆகியோர் ஒருவரது கரத்தை மற்றவர் பற்றியபடி அந்தக் குளத்தின் கரையில் நின்றபடி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
எந்தவொரு மதத்தின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோம்: ஒபாமா.
இஸ்லாம் மீது மட்டுமல்ல, வேறு எந்த மதத்தின் மீதும் அமெரிக்கா ஒரு போதும் போர் தொடுக்காது என்று அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தொடுத்த போரின் 10வது நினைவு நாள் செப்டம்பர் 11ம் தேதியன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்கியதில் அழிந்து போன இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பிற நினைவிடங்களுக்கும் அவர் போனார்.
கென்னடி மையத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளும் அமெரிக்கர்களிடையிலான உறவுகளை, நட்பை அதிகரித்துள்ளது, மேலும் வலுவாக்கியுள்ளது. எந்தவிதமான அவநம்பிக்கைக்கும், துவேஷத்திற்கும் நாம் பலியாகி விடவில்லை.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் புஷ் கூறியதைப் போல, இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த மதத்தின் மீதோ அமெரிக்கா ஒரு போதும் போர் தொடுக்காது. உலகெங்குமிருந்து பல்வேறு இன, மொழி மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறுகின்றனர். அவர்களுக்கு என்றும் அமெரிக்கா நட்புடன் இருக்கும்.
நம்முடைய பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், பள்ளிகளும், வேலை பார்க்கும் இடங்களிலும் பல்வேறு இன மக்கள் நம்மிடையே இருப்பதைக் காண்கிறோம். அனைவரும் மொழியால், இனத்தால், நிறத்தால் வேறு வேறு நாட்டவர்களாக இருந்தபோதும், நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் அமெரிக்கர்களாக ஒருங்கிணைந்துள்ளோம்.
நாம் அனைவருக்கும் ஒரே கனவுதான். வளமான அமெரிக்கா என்பதுதான் அது. நமது நாட்டை மிகுந்த பாதுகாப்பான நாடாக நமது வருங்கால சந்ததியினரிடம் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நமக்கு மிரட்டல் விடுப்போருக்கு எதிராக நாம் மிகுந்த விழிப்புடன் இருக்கிறோம். நமது பொது பாதுகாப்பில் சில இடையூறுகள் நேரிடலாம். ஆனால் அது நமது பாதுகாப்புக்காகத்தான்.
நாம் கடந்த பத்து ஆண்டுகளாக போர் குறித்தும், அமைதி குறித்தும் விவாதித்து வந்துள்ளோம். பாதுகாப்பு குறித்தும், மக்கள்உரிமைகள் குறித்தும் வாதம் புரிந்து வந்துள்ளோம். இந்த வாதத்தின் இறுதியில் நம்மால் நம்மையும், நம் மக்களையும் பாதுகாக்க முடியும் என்ற திருப்திக்கு நாம் வந்துள்ளோம். அதுதான் நமது பலமும் கூட.
மிகப் பெரிய தாக்குதலை சந்தித்தபோதும் கூட பென்டகன் இன்று மேலும் உயர்ந்த தலையுடன் நிமிர்ந்து நிற்கிறது. ஷாங்க்ஸ்வில்லி மேலும் பலமடைந்து காணப்படுகிறது. நியூயார்க் மேலும் துடி்ப்புடன் செயல்படுகிறது. கலை, கலாச்சாரம், தொழில், வர்த்தகம் மேலும் முனைப்புடன் செயல்படுகின்றன. உலக வர்த்தக மையத்தின் நிழல் இன்று இல்லாமல் போனாலும் கூட வானின் உச்சியைத் தொடும் அளவிலான நம்பிக்கையும், வளர்ச்சியும் அங்கு காணப்படுகிறது.
நம்முடைய மகிழ்ச்சி மேலும் ததும்பி வழிகிறது. நமது ஸ்டேடியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வானுயர்ந்த கட்டடங்களில் நமது மக்கள் பயமின்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். நமது வி்மான நிலையங்கள் முன்பை விட பிசியாக உள்ளன. மிகுந்த நம்பிக்கையுடன் நமது மக்கள் தொடர்ந்து நடை போட்டு வருகின்றனர் என்றார் ஒபாமா.
லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு: இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு.
லிபியாவின் இன்னும் 10 நாட்களுக்குள் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இடைக்‌கால அரசின் பிரதமர் கூறினார்.
லிபியாவின் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடாபியின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் வசம் வீழ்ந்தன.
கடாபியும் தற்போது ஆட்சியைவிட்டு நைஜர் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று திரிபோலி வந்த இடைக்கால அரசின் தலைவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து லிபியா இடைக்கால அரசின் தேசிய கவுன்சில் பிரதமர் முகமது ஜப்ரில் கூறுகையில்,"தற்போது அதிபர் கடாபியின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் லிபியாவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்‌தொடர்ந்து லிபியாவின் பல்வேறு மண்டலங்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்" என்றார்.
கடாபியின் மகன் நைஜருக்கு தப்பி ஓட்டம்.
லிபியாவில் 42 ஆண்டுகள் நடந்த அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் பக்கத்து நாடான நைஜருக்கு தப்பி விட்டனர்.
அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் கடாபி தலை மறைவாக இருக்கிறார் அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவரை புரட்சி படையினர் தேடி வருகின்றனர்.
அவரது 3-வது மகன் ஷாதி கடாபி ராணுவத்துக்கு தலைமை தாங்கி புரட்சி படையுடன் சண்டையிட்டு வந்தார். ரத்தம் சிந்துவதை தடுக்க தான் சரண் அடைய தயார் என கடந்த மாதம் 21ந் திகதி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் லிபியாவின் பக்கத்து நாடான நைஜருக்கு தப்பி ஓடிவிட்டார். லிபியாவில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் நியாமி நகருக்கு வந்ததாக மந்திரி மாருஅமாது தெரிவித்துள்ளார்.
ஷாதி கடாபி கால் பந்து வீரர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடாபியின் குடும்பத்தினர் தவிர அவரது ஆதரவாளர்கள் பலரும் நைஜரில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடாபியின் விமானப் படை தலைவர் அல்-ரிபி அலி அல் ஷரீப் உள்பட 3 ராணுவ ஜெனரல்களும், அவரது உதவியாளர்களும் நைஜரில் தங்கியுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை பாதுகாப்பு தலைவர் மன்சூர் டாவ் தெரிவித்துள்ளார். இவர்கள் நியாமிநகரில் வீட்டு காவலில் ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
லண்டனில் இருந்த போது பெனாசீரை முஷரப் மிரட்டினார்: அமெரிக்க நிருபர் சாட்சி.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கடந்த 2008ம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதிபராக இருந்த முஷரப் தகுந்த பாதுகாப்பு அளிக்காதது தான் கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முஷரப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது பெனாசீர் கொலை வழக்கு ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சவுத்ரி ஷீல்புகர் அமெரிக்க பத்திரிகை நிருபர் மார்க் சீ ஜெல்லின் எழுத்து மூலமான சாட்சியத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இவர் பெனாசீர் அமெரிக்காவில் இருந்த போது அவரது விசுவாசியாக இருந்தவர். சம்பவத்தன்று இவர் பெனாசீருடன் லண்டனில் இருந்த போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப்பிடம் இருந்து டெலிபோன் வந்தது.
அவருடன் பெனாசீர் டெலிபோனில் பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிட பெனாசீர் பாகிஸ்தான் திரும்பினால் கடும் ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் அவரது உயிருக்கு தனது அரசால் உத்தரவாதம் அளிக்க முடியாது என முஷரப் மிரட்டலுடன் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெனாசீர் மன வருத்தம் அடைந்தார். இது குறித்து என்னிடம் தெரிவித்தார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்கு மூலத்தை ஏற்று கொண்ட நீதிபதி இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வழக்கு விசாரணையை வருகிற 17-ந் திகதிக்கு தள்ளி வைத்தார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு சவால்: பிரிட்டன் பிரதமர் கமரூன் மாஸ்கோ பயணம்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவை வலியுறுத்த வேண்டும் என்று பிரிட்டனின் 4 முன்னாள் அயல்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி கவனம் செலுத்தாதது குறித்து பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர்கள் கூறி உள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு அலெக்சாண்டர் லிட்வி னென்கோ கொலை குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொழிலாளர் கட்சியை சேர்ந்த மாக்ரெட் பெகட், டேவிட் மில்பாண்ட், ஜாக் ஸ்டிரா மற்றும் கன்சர்வேடிவ் சர் மால்கம் சரிப் கைன்ட் ஆகியோர் பிரிட்டன் பிரதமருக்கு இந்த கேள்வியை எழுப்பி உள்ளனர்.
ரஷ்ய எல்லை பகுதியில் ஊழலை தடுத்து நிறுத்த முடியாத நிலை உள்ளது. அதே போன்று அலெக்சாண்டர் மரணம் போன்ற சட்டம் இல்லாத நிலை பிரிட்டிஷ் கடற்கரையை பாதிப்பதாக உள்ளது.
இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என பிரதமர் கமரூனை முன்னாள் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். கமரூன் ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ செல்கிறார். டோனி பிளேர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோ சென்றார். அதன் பின்னர் ரஷ்ய தலைநகர் செல்லும் முதல் பிரிட்டன் பிரதமர் கமரூன் ஆவார்.
கிறீஸ் திவால் நிலை: ஜேர்மனி தீவிர ஆலோசனை.
கிறீசின் கடன் பிரச்சனை தலைக்கு மேல் சென்று விட்டது. அது கடன் அடைக்க முடியாத திவால் நிலையை அடைந்து விட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளையும் அதனால் கடைபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கிறீஸ் திவால் நிலை பற்றி ஜேர்மனி தீவரமாக ஆலோசனை செய்து வருகிறது என்று ஜேர்மனி நிதி அமைச்சர் வோல்ப் காங்க் ஷாபிள் தெரிவித்தார்.
கீறிசிற்கு தொடர்ந்து கடன் அளிப்பது குறித்து ஜேர்மனியில் இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. கிறீஸ் திவாலாகி உள்ள நிலையில் அதனை மீட்டு தொடர்ந்து ஐரோப்பிய மண்டலத்தில் நீடிப்பதா? அல்லது முந்தய  ஜேர்மனி நாணயத்தை மீண்டும் தொடருவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் ஜேர்மனி நிதி அமைச்சர் வோல்ப் காங்க் ஐரோப்பிய மண்டல கடனை மீட்டு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார். ஐரோப்பிய மண்டலத்தை விட்டு உறுப்பினர் நாடுகள் வெளியேற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெஸ்சே மாநில கவர்னர் வோல்கர் பவுபயர் தெரிவித்தார்.
இவர் ஏங்கலா மார்கெலின் கன்சர்வேடிவ் கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். கடந்த ஜீலை மாதம் ஐரோப்பிய மண்டல தலைவர்கள் கிறீசிற்கு 15900 கோடி யூரோ கடன் உதவியை அறிவித்தனர்.
இருப்பினும் கிறீசால் கடனில் இருந்து மீண்டு வரமுடியவில்லை. தற்போது அளிக்கப்பட்டுள்ள நிதி இன்னும் சில வாரங்களே நீடிக்கும் நிலையில் அது திவால் ஆகும் பரிதாபத்தில் உள்ளது.
ஏமனில் மாயமான பிரான்ஸ் படகு மீட்பு.
கடந்த வெள்ளிக்கிழமை ஏமன் கடற்கரை பகுதியில் மாயமான பிரான்ஸ் படகு மீட்கப்பட்டது. அவர்களை கூட்டணிப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
சுற்றுலா தம்பதியினர் சர்வதேச தண்ணீர் எல்லையில் ஏமனுக்கு 120 மைல் தொலைவில்(190கி.மீ) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கி கொண்டனர். அப்போது அவர்கள் உதவி கோரி அழைப்பு விடுத்தனர் என்று ஏமன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் சுற்றுலா பயணியும் அவரது மனைவியும் சர்வதேச நீர் எல்லையில் உள்ள கூட்டணிப் படையின் ராணுவ கப்பலின் சிறப்பு படகு மூலம் மீட்கப்பட்டார்கள் என்று ஏடன் வளைகுடா கடலோர காவல்படை துணை இயக்குனர் கர்னல் அப்துல் ரகமான் அல் முசா தெரிவித்தார்.
கடலில் மாயமான தம்பதி பிரான்சின் தெற்கு பகுதியான வார் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்று பிரான்ஸ் நாளிதழ் லீ பாரிசென் செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த தம்பதியினர் உலகம் முழுவதும் கடல் பயணம் மேற்கொள்ள முயன்ற போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலை காரணம் காட்டி மக்களை சிறையில் தள்ளும் சீனா.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின் அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் பேரை சீன அரசு சிறையில் தள்ளியுள்ளதாக "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஷின்ஜியாங் பகுதி. இங்கு உய்குர் முஸ்லிகள் பெரும்பான்மையாக இருந்தனர்.
ஆனால் கம்யூனிஸ்ட் சீன அரசில் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் இரு இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
அதோடு உய்குர் இனத்தவர் வாழும் பகுதியைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனாவால் பயங்கரவாத அமைப்பு என அது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜேர்மனியில் செயல்பட்டு வரும் "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பின் தலைவர் ரெபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் பகுதிகளில் அமைதியான முறையில் நடக்கும் அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகளைக் கூட இரட்டைக் கோபுர தகர்ப்பைக் காரணம் காட்டி சீன அரசு அடக்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை ஏற்க சீன அரசு மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு "பயங்கரவாதம்" என முத்திரை குத்துகிறது.
கடந்தாண்டு மட்டும் உய்குர் இனத்தவர் 1,000 பேர் மீது அமைதியைக் குலைக்க முயற்சித்ததாக கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001ல் இருந்து இன்று வரை 7,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லிபிய ஆதரவாளர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.
லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபிக்கு ஆதரவான மூன்று நகரங்கள் சரணடைவதற்கான கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இதையடுத்து அந்நகரங்களை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று சண்டை துவங்கியது. இதற்கிடையில் லிபியா இடைக்கால அரசின் தலைவர் முதன் முதலாக  திரிபோலி வந்தார். அவருக்கு மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.
லிபியா முழுமையும் எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்ட நிலையில் திரிபோலியின் தெற்கில் உள்ள பானி வாலித், சபா, ஜுப்ரா நகரங்களும், கிழக்கில் உள்ள சிர்ட் நகரமும் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ளன.
எவ்வித உயிரிழப்புமின்றி அந்நகரங்களைக் கைப்பற்றுவதற்காக எதிர்ப்பாளர்கள், கடாபி ஆதரவு பழங்குடியினருடன் பேச்சு நடத்தினர். கடாபி ஆதரவாளர்கள் சரணடைவதற்கு கடந்த 10ம் திகதி வரை கெடு விதிக்கப்பட்டது. எனினும் பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து நேற்று பானி வாலித், சபா மற்றும் சிர்ட் நகரங்களில் உள்ள கடாபி ஆதரவாளர்களுக்கும் அந்நகரங்களை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சண்டை மூண்டது. பானி வாலித் நகர் மீது நேற்று நேட்டோ படை ஐந்து முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையில் லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று முன்தினம் முதன் முறையாக திரிபோலி வந்தார். "இது பழிவாங்கல், சட்டத்தை நாமே கையில் எடுத்தல் போன்ற காரியங்களுக்கான நேரமல்ல. இது ஒற்றுமையையும், ஒழுங்கையும் பேண வேண்டிய நேரம்" என்றார்.
பாதுகாப்பு கருதித் தான் இதுவரை திரிபோலிக்கு ஜலீல் வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர் ஜலால் அல் கலால்,"ஜலீலின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு" என்று கூறியுள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் லிபியா இடைக்கால அரசை அங்கீகரித்துள்ள நிலையில் நேற்று சர்வதேச நிதியமைப்பும் இடைக்கால அரசை லிபியாவின் புதிய அரசாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF