Sunday, September 11, 2011

இன்றைய செய்திகள்.

தரம் குறைந்த பெற்றோலினால், ரணிலின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு 75,000 ரூபா நட்டஈடு.

தரம் குறைந்த பெற்றோலினைப் பயன்படுத்தியதனால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த பெற்றோலைப் பயன்படுத்தியதனால் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அதிக பட்சமாக 50,000 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனத்தை பழுது பார்ப்பதற்கு 75,000 ரூபா செலவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, மொத்தச் செலவினையும் வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தரம் குறைந்த பெற்றோலைப் பயன்படுத்திய வாகன உரிமையாளர்கள் பெற்றோல் கொள்வனவு செய்தமைக்கான பற்றுச் சீட்டுக்கள் இல்லாவிட்டால் சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பித்து நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக முறைப்பாடு செய்தவர்கள் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும், ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 30ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பிளேக் ஆராய்வார்!- அமெரிக்க தூதரகம்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக ஆராயவுள்ளார். இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிசெய்துள்ளது. 
ரொபட் ஒ பிளேக் எதிர்வரும் 12.09.2011 திங்களன்று இலங்கைக்கு செல்லவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நல்லிணக்கக்குழுவின் செயற்பாட்டை சர்வதேச மன்னிப்பு சபை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில் உண்மைத் தன்மை இல்லை என்றும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் எந்தளவில் உள்ளன. இதன் நம்பகத் தன்மை எந்தளவில் உள்ளது என்பது தொடர்பில் பிளேக் ஆராய்வார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நியூலன்ட் (Victoria Nuland)  நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட இலங்கைக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் காலக்கெடுவை விதித்துள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு, வலுவான உண்மைத் தன்மையான அறிக்கையை வெளியிடவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நீக்கவில்லை!

எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.
எமது அரசாங்கம் யுத்த காலத்திலேயே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் யுத்தத்தை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று பதில் அமைச்ரவை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு என்பவற்றின் காரணமாக அவசரகால சட்டத்தை நீக்கியதாக கூறப்படுகின்றதே? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்ர் அங்கு மேலும் கூறியதாவது,
யுத்த காலத்தில் எங்களுக்கு எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தன என்று உங்களுக்கு தெரியும். பொருளாதாரத் தடை மற்றும் நிதியுதவி நிறுத்தம் என பல அழுத்தங்கள் வந்தன.
ஆனால் அதுபோன்ற எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாத அரசாங்கம் தற்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கும் விடயத்துக்கும் மட்டும் அடிபணியும் என்று கருதுகின்றீர்களா?
எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.
மேலும் யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக அரசாங்கம் நீக்கிவந்தது. தற்போது முற்றாக நீக்கியுள்ளது.
ஒபாமாவின் விமான பயண ரகசியத்தை வெளியிட்ட ஜப்பான்: அமெரிக்கா அதிர்ச்சி.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியா வந்தார்.
அவர் அதிகாரப் பூர்வமாக பயணம் செய்யும் ஏர் போர்ஸ் ஒன் விமான திட்டத்தை ஜப்பான் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கசிய விட்டு உள்ளார்.
அவர் தனது பிரத்யேக வலை பகுதியில் ஒபாமாவின் விமான பயண நேரம், அது பயணிக்கும் பாதை, போக்குவரத்து நேரம் மற்றும் விமானம் பறந்து வரும் நிலை போன்ற விவரங்களை வெளியிட்டு உள்ளார். இது ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒபாமாவின் பயண ரகசியங்களை வெளியிட்ட அதிகாரி 50 வயது உடையவர். அவர் டோக்யோவில் ஹனேடா விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்.
இந்த தகவல் ஒபாமா தென்கொரிய தலைநகர் சியோவில் இருந்து டோக்யோவுக்கு நவம்பர் மாதம் பான் பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிற்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்டதா எனத் தெரியவில்லை. இந்த ரகசிய கசிவுக்காக ஒபாமாவிடம் ஜப்பான் பிரதமர் யோஷிகோ நோடா மன்னிப்பு கோருகிறார்.
ஏழை மக்களுக்காக மானிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் சீன அரசு.
சீனாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக மானிய விலையில் 86 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வீடு மற்றும் நிலங்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் சொந்த வீடு என்பது கனவாகி விட்டதாக சீனாவில் மக்களிடையே புகார் கிளம்பியுள்ளது.
இதையடுத்து சீன அரசு ஒரு கோடி வீடுகளைக் கட்ட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று குறைந்த வாடகை வீடுகள், மானிய விலை வீடுகளை மாநில அரசுகள் கட்டி வருகின்றன.
தற்போது மானிய விலையில் 86 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் மூன்றரை கோடி மானிய விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
வறட்சி நன்கொடைகள் மந்தம்: 10 லட்சம் மக்கள் பரிதவிப்பு.
கிழக்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சிக்கு தீர்வு காண உலக நாடுகள் நன்கொடை அளித்து வருகின்றன.
இந்த நன்கொடை அளவு மந்தமாகி உள்ளதால் மேலும் 10 லட்சம் மக்கள் பட்டினியில் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பட்டினியில் தவிப்போர் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளை சேர்ந்த 133 லட்சம் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர் என ஐ.நா புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உணவு, தண்ணீர் மருந்து மற்றும் புகலிட வசதிகள் அளிக்க வேண்டி உள்ளது. இதற்கு உலக நாடுகள் அதிக அளவில் நன்கொடை உதவி அளிக்க வேண்டும் என ஐ.நா வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் இந்த நன்கொடை உதவிகள் மந்தமாக உள்ளது.
சோமாலியாவில் சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடும் குழந்தைகளை பாதுகாக்க மையங்கள் உள்ளன. இங்கு 671 குழந்தைகளுக்கு ஊட்டசத்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஏமன் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்.
ஏமனில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்று நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியில் திரண்டு சலே ஆட்சியை தூக்கி எறிய முழக்கமிட்டனர்.
தாய்ஸ் நகரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுதந்திர சதுக்கம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சலேவின் முறைகேடு ஆட்சி கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டு இருக்கிறது.
விரைவில் தூக்கி எறியப்படும் என இளைஞர்கள் முழங்கினர். தலைநகர் சனாவில் அரசுக்கு ஆதரவான போராட்டங்களும் இடம்பெற்றன. ஜனாதிபதி மாளிகைக்கு இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள சபீன் சதுக்கத்தில் 50 ஆயிரம் சலே ஆதரவாளர்கள் திரண்டு ஜனாதிபதி ஆட்சியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என ஆளும் பொதுமக்கள் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தகவல் துறை அமைச்சர் ஹசன் அல் லாவ்சி தெரிவித்தார்.
தான்சானியாவில் படகு விபத்து: 345 பேர் பலி.
தான்சானியா நாட்டில் நடைபெற்ற படகு விபத்தில் சுமார் 345 பேர் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தான்சானியாவில் உள்ள ஜான்சிபார் என்னும் இடத்தில் இருந்து பெம்பா தீவிற்கு சென்ற படகில் சுமார் 600 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அனைவரும் நீரில் தத்தளித்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் 250 பேரை காப்பாற்றினர்.
விபத்து குறித்த காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடாபி ஆதரவாளர்கள் சரண் அடைய தேசிய மாற்றக் கவுன்சிலின் இறுதி எச்சரிக்கை.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் சிர்தேவிலும், பானி வாலித் பகுதியிலும் நிறைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து புரட்சிப்படையினருடன் போராடி வருகின்றனர்.
அவர்கள் சரண் அடைய புரட்சிப்படையினர் இறுதி கெடு விதித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை வரை கெடு நீட்டிக்கப்பட்டு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.
கடாபி ஆதரவாளர்கள் சரண் அடைவதற்கான காலக்கெடு காலாவதியாகும் தருணத்தில் தேசிய இடைக்கால நிர்வாக கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஷாம்சுதின் பென் அலி கூறுகையில்,"கடாபி ஆதவாளர்கள் சரண் அடைய முன்வராத நிலையில் ராணுவ நடவடிக்கையாளர்கள் தொடர்நது முன்னோக்கி செல்வது குறித்து முடிவு எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.
கடாபியின் சொந்த நகரமான சிர்தே தலைநகர் திரிபோலிக்கு கிழக்கே மத்திய தரை கடல் பகுதியில் அமைந்துள்ளது. பானி வாலித் நகரம் தலைநகருக்கு தென் கிழக்கே அமைந்துள்ளது.
அமெரிக்க நகரங்களை தாக்க அல்கொய்தா திட்டம்: கிளிண்டன்.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகும் லண்டனில் இருந்து மும்பை வரை அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001 செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாதிகள் இரட்டை கோபுரங்களை தகர்த்தனர். இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.
இதன் 10ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மான்ஹாட்டனில் உள்ள ஜான்ஜே கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி பேசியதாவது: அமெரிக்கர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. அல்கொய்தா தலைவர் ஒசாமாவை கொன்ற பிறகும் லண்டனில் இருந்து மும்பை வரை உள்ள முக்கிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது.
ஒசாமாவை கொன்ற பிறகும் லண்டன், லாகூர், மட்ரிட், மும்பை போன்ற முக்கிய நகரங்களில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது இதற்கு சான்றாக உள்ளன. எனினும் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும்.
பின்லேடன் மனைவிகளை விடுக்க தலிபான்கள் சதித்திட்டம்.
அல்கொய்தா தலைவர் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து அமெரிக்காவின் நேவிசீல் சிறப்பு ராணுவ படையினர் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அவரது உடலை அமெரிக்க ராணுவ வீரர்கள் தூக்கி சென்றனர். பின்லேடன் கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவரது 2 மனைவிகள் மற்றும் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. தற்போது அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பின்லேடன் மனைவி மற்றும் அவரது குழந்தைகளை விடுவிக்க தலிபான் தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டி இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக அரசு உயர் அதிகாரிகளை கடத்தி சென்று பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டி அவர்களை விடுதலை செய்ய நிர்ப்பந்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இதை உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் மறுத்துள்ளார். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
கடந்த மாதம் 26ந் திகதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கவர்னரின் மகன் ஷாபாஷ் தஷீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு உள் துறை மந்திரி ரஹ்மான் மாலிக் எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சொந்த நகரில் தான் கடாபி பதுங்கி உள்ளார்: புரட்சிப்படையினர் அறிவிப்பு.
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி லிபியாவில் தனது சொந்த நகரமான சிர்தேவில் பதுங்கி இருக்கிறார் என புரட்சிப்படையினர் கூறுகின்றனர்.
கடாபி அருகாமை நாடான நைஜருக்கு தப்பி ஓடி விட்டதாக வந்த  தகவலை அவர்கள் ஏற்கவில்லை. கடாபியின் மனைவி, மகள் மற்றும் கடாபி ஆதரவு அதிகாரிகள் லிபியாவில் இருந்து வெளியேறி விட்டனர்.
ஆனால் கடாபி மட்டும் லிபியாவில் தங்கி இருப்பதை புரட்சிப்படையினர் உறுதிப்படுத்துகிறார்கள். மத்திய தரை கடலோரப்பகுதி மற்றும் அவரது சொந்த நகரமான சிர்தேவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிர்தேவில் இல்லாத நிலையில் அவர் தலைநகர் திரிபோலிக்கு தென் கிழக்கே உள்ள பானி வாலித் இடத்தில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் கடாபிக்கு உயிரை கொடுக்கும் பழங்குடியின மக்கள் உள்ளனர்.
இந்த 2 நகரங்களை தவிர்த்து அவர் சாபா என்ற இடத்திலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இடம் தெற்கு பகுதியில் உள்ள தொலை தூர பாலைவனம் பகுதியில் அமைந்துள்ளது.
சிர்தேவில் புரட்சிப்படையினர் சமீப நாட்களாக கடாபி ஆதரவாளர்களை எதிர்த்து கடுமையான ராக்கெட் தாக்குதலை மேற்கொண்டு வருகிறார்கள். மனித உரிமை மீறலுக்காக பதுங்கி இருக்கும் கடாபியை கைது செய்ய சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அவரை கைது செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான புதுச்சட்டம்: ஏங்கலா மார்கெல்.
சர்வதேச அளவில் பரவி இருக்கும் தீவிரவாதம் ஜேர்மனியின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே இந்த தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசுக்கு பரந்த அளவில் அதிகாரம் அளிக்கப்பட வேண்டி உள்ளது என அதிபர் ஏங்கலா மார்கெல் தெரிவித்தார். ஜேர்மனிக்கு வெளியே தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கில் அல்கொய்தா தீவரவாதிகள் பயங்கரமான தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது. அது உலக சமூகத்திற்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு நாம் கூடுதலாக கற்க வேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு சட்ட முறைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் மக்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது என விமர்சிக்கப்படுகிறது.
கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அரசு மேற்கொள்வதற்கு நானும் தயாராகி உள்ளேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐரோப்பிய கடன் பிரச்னைக்கு பிரான்ஸ் நிதி உதவி: நாடாளுமன்றம் ஒப்புதல்.
ஐரோப்பிய ஒன்றியம், கிறீஸ் போன்ற நாடுகள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
இந்த நெருக்கடியில் ஐரோப்பா மீளுவதற்கு நிகோலஸ் சர்கோசி தலைமையிலான பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் முடிவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில் கீழ்சபை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்நது வியாழக்கிழமை செனட் ஒப்புதல் அளித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண சட்ட முறைப்படி ஒப்புதல் அளித்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
பிரான்சின் தேசிய அவையான கீழ்சபையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மேல் சபையான செனட்டில் ஒப்புதல் தரப்பட்டது. கிறீசிற்கு கடன் உதவி அளிப்பது தொடர்பான விடயத்தில் எதிர்கட்சியினரான சோசலிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. கிறீஸ் அரசாங்கமும் நாடாளுமன்றமும் நிதி உதவி திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் நிதித்துறை அமைச்சர் வாலரே பெர்சி தெரிவித்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலைம்பியாவில் நிலநடுக்கம்.

கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா வளைகுடாவில் வெள்ளியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 பதிவானதாக அமெரிக்க நிலநியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வான்கூவரிலிருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஒன்றும் இல்லை என்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாகவும், சரியாக 12.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதற்கு முன் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென்ற 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உணரப்பட்டது என கனடா புவியியல் ஆய்வு விஞ்ஞானி ரோஜர்ஸ் கூறினார்.
இரட்டை கோபுர தாக்குதல்: கனடாவின் உதவிக்கு ஒபாமா நன்றி கடிதம்.
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சில நாட்கள் குலைந்து போன அமெரிக்காவிற்கு கனடா உதவிக்கரம் நீட்டியது. உலகை உலுக்கிய உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதலின் 10வது நினைவு தினம் நாளை(செப்11) கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தருணத்தில் கனடாவின் உதவியை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா கனடா பிரதமருக்கு தனது பாராட்டு கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த பாராட்டு கடிதத்தில் கனடா மக்கள் எங்களுடைய நெருங்கிய நண்பர்கள், நல்ல வர்த்தக கூட்டாளிகள், மிக அருகில் இருக்கும் சிறந்த நேச நாடு என ஒபாமா தனது கடிதத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கனடாவின் வான்கூவர் மற்றும் கான்டர் என்.எல் சிறிய நகரப்பகுதியில் இருந்து ஆபத்து நேரத்தில் விமான பயணிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6500 விமானப்பயணிகள் கான்டர் வழியாக சென்றனர்.
கிழக்கு வான்கூவரில் இருந்து விமான பயணிகள், 8500 அமெரிக்க பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை அமெரிக்க ஜனாதிபதி நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க விமான நிலையங்கள் மீண்டும் செயல்பட 3 நாட்கள் ஆனது. அந்த நேரத்தில் கனடாவை அமெரிக்க மக்கள் தங்கள் சொந்த வீடாக பயன்படுத்தினர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கன் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
போரால் சிதறுண்ட ஆப்கானிஸ்தானில் பல அமெரிக்கர்கள் உயிரிழந்ததற்கு ஐஎஸ்ஐ-யின் செயல்பாடே காரணம் என்று அமெரிக்க செனட் உறுப்பினர் மார்க் கிர்க் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு மிகப் பெரும் சவாலாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடற்படையின் புலனாய்வு கமாண்டராக இரண்டு வாரம் ஆப்கனில் பயணம் மேற்கொண்ட பிறகு நிகழ்த்திய உரையில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இரண்டு வாரம் வீதம் மூன்று முறை அவர் ஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செயல்பாடால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி குறிப்பிட்ட அவர், அமெரிக்கர்கள் பலர் உயிரிழந்ததற்கு ஐஎஸ்ஐ முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தங்களது அண்டை நாட்டால் ஆப்கானிஸ்தானியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் நாடு மிகவும் சிக்கலானது. அங்கு நிலவும் அரசியல் சூழலை புரிந்து கொள்வது மிகவும் சிரமம். இருப்பினும் தூதரக உறவுகளை பாகிஸ்தானுடன் அமெரிக்கா தொடரும்பட்சத்தில் அதை உபயோகமானதாக மாற்றிக் கொள்வது அவசியம். இல்லையெனில் பாகிஸ்தானுடனான உறவு தேவையற்றது.
இப்போது ஹக்கானி நெட்வொர்க் எனும் பயங்கரவாத அமைப்பு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஹக்கானி குழுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி புரிகிறது.
இத்தகைய சூழலில் பாகிஸ்தானுக்கு கடனுதவி மற்றும் திரும்ப செலுத்தும் விதத்திலான கடன் உள்ளிட்டவை அளிப்பது தேவைதானா என்பதை அமெரிக்கா பரிசீலிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகள் எந்த அளவுக்கு அமெரிக்காவுக்குப் பயன்படுகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு உதவிகளை அளித்தபோதிலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படவில்லை எனில், இனி இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது செயல்பாடுகளை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ளாவிடில், இந்தியாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க படைகள் ஆப்கனிலிலிருந்து வெளியேறும்போது, ஆப்கன் அரசுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். அத்துடன் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக ஆப்கன் மாறுவதற்கான வாய்ப்புகளும் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஆதரவு என்ற நிலையை எடுத்தால் பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு புலனாய்வு அமைப்பைத்தான் குற்றம் சாட்டுவர். நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒரு விஷயத்தைத்தான். அதாவது மற்றொரு பயங்கரவாத நாடாக ஆப்கனிஸ்தான் மாறிவிடக்கூடாது என்பதுதான் அது. தோல்வியின் பக்கம் பாகிஸ்தான் செயல்படுகிறது.
ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் உலகின் இரண்டு வலுவான ஜனநாயக நாடுகளை அது எதிர்க்கிறது. நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 10-வது ஆண்டு நினைவு தினத்திலாவது அமெரிக்கா ஒரு உறுதியை எடுக்க வேண்டும்.
அதாவது அமெரிக்காவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆப்கானிஸ்தான் மாற வழிவகுத்துவிடக்கூடாது என்பதுதான் அது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிவியாவில் விமான விபத்து: 9 பேர் பலி.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மாயமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இரு விமான சிப்பந்திகள் உள்பட 9 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பொலிவியாவின் கிழக்குப் பகுதி நகரான சாண்டா குரூஸில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள டிரினிடாட் நகருக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் இரு விமான சிப்பந்திகள், 7 பயணிகள் என 9 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் போனது. இதனால் விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் அங்குள்ள பெனி மாகாணத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி சிதைந்து கிடப்பதை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை காலை கண்டறிந்தனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாரேனும் உயிர்பிழைத்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்புடன் தேடினர். ஆனால் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே இறந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களது உடல்களை மீட்டு டிரினிடாட் நகருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா அதிபர் கடாபியை கைது செய்ய இன்டர்போல் உத்தரவு.
நாட்டைவிட்டு தப்பி ஓடிய லிபியா அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச காவல் படையானம் இன்டர்போல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவர்கள் எந்த நாட்டில் பதுங்கியுள்ளனர் என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியவராத நிலையில், இவர்களை கண்டால் கைது செய்யுமாறு தனது அமைப்பில் இடம்பெற்றுள்ள 188 நாடுகளையும் இன்டர்போல் உஷார்படுத்தியுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட வீட்டை படம் எடுத்த சீன பத்திரிக்கையாளர் கைது.

பாகிஸ்தானில், ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த வீட்டை படம் எடுத்த, சீன பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் அபோதாபாத்தில் தங்கியிருந்த போது, அமெரிக்க அதிரடி படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த இடம், தற்போது பொது மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, சமீபத்தில் டென்மார்க் நாட்டு தூதரக அதிகாரியும், அவரது மனைவியும் இங்கு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கைது செய்து, பின் விடுவித்தனர்.
இதே போல, சீன பத்திரிகையாளர் மற்றும் இரண்டு பாகிஸ்தானிய பத்திரிகையாளர்கள், நேற்று இந்த பகுதிக்குள் நுழைந்து, ஒசாமா தங்கியிருந்த வீட்டை படம் எடுத்தனர். இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானிய பத்திரிகையாளர்கள், நவான் ஷெர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சீன பத்திரிகையாளர், அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF