Wednesday, September 7, 2011

இன்றைய செய்திகள்.

சம்பூர் அனல் மின்சார நிலைய உடன்படிக்கையில் இலங்கை - இந்தியா கைச்சாத்து.

திருகோணமலை சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார நிலைய தொடர்பான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.
இது இலங்கையின் இரண்டாவது அனல் மின்சார நிலையமாகும்.
500 மேகோவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக கொண்டு இந்த அனல் மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று இந்திய என்டிபிசி நிறுவனத்தின் தலைவர் அருப் ரோய் மற்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்கிரம ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது.
500 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் 2012 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பணிகள் நிறைவடையும்.
இந்த அனல் மின்சார நிலைய திட்டத்துக்காக சம்பூரில் பொதுமக்கள் போருக்கு பின்னர் குடியமர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்தியா சம்பூரில் பொதுமக்கள் வாழ்ந்த இடத்தில் அனல் மின்சார நிலையத்தை அமைக்க இணங்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடனை செலுத்த கடன் வாங்கும் ஒரே அரசு இலங்கையில் மாத்திரமே பதவியிலுள்ளது!- ரில்வின்.

2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் 410.7 பில்லியன் ரூபாவை அரசு சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளது. என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். 
இதில் 231.3 பில்லியன் ரூபாவை ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடனை செலுத்த கடன் வாங்கும் ஒரே அரசு இலங்கையில் மாத்திரமே பதவியிலுள்ளது. 
பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார அபிவிருத்திக்கு பதிலாக நாடு செலுத்த வேண்டிய கடன் தொகைகளே அபிவிருத்தி கண்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தின் போலியான பொருளாதார மாயைக்குள் மயங்கி ஏமாற்றமடையக் கூடாது.
எனவே மாற்று பொருளாதார கொள்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டும். அதற்கு முன்னர் தற்போதைய ஆட்சியை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் காணிகளை விற்று பொதுமக்கள் தெருக்களில் குடியமர்த்துவதேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. நிதி நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ள அரசாங்கம் மேலும் மேலும் கடன்களைப் பெற்று வருகின்றது. யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை.
எனவே யுத்தம் முடிந்ததும் அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும். அத்தோடு நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் தற்போதைய அரசாங்கம் கூறி வந்தது.
ஆனால் தற்போது நாட்டில் என்ன நடந்துள்ளது? பொதுமக்களால் வாழ முடியாதளவிற்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாமல் அரசாங்கம் திண்டாடுகின்றது.
இலங்கையில் தொழில் வாய்ப்புக்கள் இல்லை என்று கருதி தமது எதிர்காலத்தை சீர் செய்து கொள்ள இளைஞர், யுவதிகள் கொரியா போன்ற நாடுகளில் தொழில்களுக்காக தஞ்சமடைகின்றனர்.
உலகமே தோல்வி கண்டுள்ள திறந்த பொருளாதார கொள்கைகளையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கையாள்கின்றார். தேசியத்துவம் என்பது போலியான நடிப்பு மாத்திரமே.
தேசிய வளங்களை விற்பதற்காக புதிய சட்டங்களை அரசாங்கம் தயாரித்துள்ளது. சுற்றுலாத் துறையை வளர்ச்சியடைய செய்வது அதனூடாக இலாபம் தேடிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2011 ம் ஆண்டுக்கான நிதியமைச்சின் அறிக்கையின்படி முதல் ஐந்து மாதத்தில் 410.7 பில்லியன் ரூபாவை கடனாக அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இத் தொகையில் 231.3 பில்லியன் ரூபா பெற்ற கடனை செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இத் தொகைகளுக்கான வட்டி 6.5 வீதமாகவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க சீனாவிடமிருந்து 307 டொலர் மில்லியனை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. ஆனால் துறைமுகத்தை அமைத்து 10 மாத காலம் ஆகியும் கப்பல் வரவில்லை. பாரிய நஷ்டத்தில் இயங்குகின்றது.
அது மட்டுமின்றி நுரைச்சோலை அனல் மின் நிலையம் தேசிய நிதியை விழுங்கியுள்ளது. ஹெஜிங் மோசடிகளால் 5 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 20 கோடி ரூபா நஷ்டம் தரம் குறைவான பெற்றோல் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மிஹின் லங்கா நிறுவனத்தால் கடந்தாண்டு 73 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நஷ்டங்களை அரசு சுமப்பதில்லை. இந்த நாட்டு மக்களே கடன் சுமைகளையும் அரசின் செலவுகளையும் சுமக்க வேண்டியுள்ளது.
எனவே இவ்வாறான வீழ்ச்சியை நோக்கி செல்லும் பொருளாதாரத்தை அங்கீகரிக்கும் அரசை அனுமதிக்க முடியாது என்றார்.
சுதந்திரக் கட்சி 60ம் ஆண்டு நிகழ்வில் சந்திரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து சிரேஸ்ட அமைச்சர்கள் அதிருப்தி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சிரேஸ்ட அமைச்சர்களும், முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து வரும் கட்சி உறுப்பினர்களும் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கொழும்பின் பிரபல சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
60ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சந்திரிக்காவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் வருத்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தவறுகள் இழைத்திருக்கலாம் எனினும், கட்சியின் முக்கியமான கூட்டமொன்றில் அவருக்கு சந்தர்ப்பம் வழங்காமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் சிரேஸ்ட அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை சுட முபாரக் உத்தரவிடவில்லை: பொலிஸ் அதிகாரி வாக்குமூலம்.
அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்திய போது அவர்களை சுடுவதற்கு எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி உத்தரவிடவில்லை என காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் ஜனாதிபதி முபாரக் ஆட்சியை எதிர்த்து தீவிர போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிடவில்லை என பொலிஸ் தலைவரான ஜெனரல் ஹூசைன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இந்த உயர் பொலிஸ் அதிகாரி களத்தில் உள்ள பொலிஸ் படை பிரிவுகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். வாக்குமூலத்தின் போது நீதிமன்றத்தில் குழப்பம் நிலவியது.
இதனால் விசாரணை நடவடிக்கைகளை நீதிபதி பாதியாக குறைத்தார். 30 ஆண்டு முபாரக் ஆட்சியை அகற்ற பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்த போது போராட்டக்காரர்கள் மீது முபாரக் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
முபாரக்கிற்கு எதிராக நடந்த 18 நாள் போராட்டத்தின் போது 84 பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர் என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
பிரிட்டன் தண்டனை சட்டம் மாற்றப்பட வேண்டும்: நீதித்துறை அமைச்சர்.
பிரிட்டனின் நீண்ட கால தண்டனை சட்டம் நொறுங்கி போனதாக உள்ளது. அதனால் தான் கடந்த மாதம் நாட்டில் வன்முறை பரவியது என பிரிட்டன் நீதித்துறை அமைச்சர் கென் கிளார்க் கூறினார்.
இந்த தண்டனை சட்டத்தை சீரமைக்க வேண்டி உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். முந்தய தண்டனைகளால் கிரிமினல்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவில்லை.
இதனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது என அவர் தெரிவித்தார். குற்றவாளிகள் மீண்டும் புனர்வாழ்வு பெற்று பழைய நிலையை அடைந்து விடுகிறார்கள்.
கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமும் குற்றவாளிகள் மீண்டும் பழைய கிரிமனில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தடுக்க முடியும். சில கிரிமினல்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிளார்க்கின் கருத்தை தொழிலாளர் துறை நிழல் அமைச்சர்கள் விமர்சித்தனர். குற்ற நிகழ்வுகளை குறைப்பதை காட்டிலும் பணம் செலவழிப்பதை குறைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவில் காட்டுத் தீ: 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வனத்தீயில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்ட்ராப் வனப்பகுதியில் ‌கடந்த ஞாயிறன்று சிறிய அளவின் வனத்தீ ஏற்பட்டது.
எனினும் அம்மாகாண பேரிடர் மேலாண்மை துறையினர் ஹெலிகாப்டர் மூலம் ரசாயணப்பொடிகளை தூவி தீயை அணைத்தனர்.
எனினும் காற்றின் வேகம் அதிகரித்து வந்ததால் தீ மளமளவென பரவி வருகிறது. இதனால் டெக்ஸாஸ் மாகாணத்தின் வனப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின.
இந்த தீ விபத்தில் 2 பேர் பலியாயினர். தொடர்ந்து தீ வேகமாக பரவி வருவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
ஜப்பான் சூறாவளியில் சிக்கி 41 பேர் மரணம்: பல ஆயிரம் பேர் பரிதவிப்பு.
மேற்கு ஜப்பான் பகுதியில் பயங்கர சூறாவளியில் இறந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. பல ஆயிரம் பேர் பரிதவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் ஜப்பானை மேலும் ஒரு இயற்கை பேரிடர் தாக்கி அந்த நாட்டின்
பொருளாதாரத்தை நிலை குலைய செய்துள்ளது.
சக்தி வாய்ந்த டலாஸ் புயல் சனிக்கிழமை தரை இறங்கியது. கடந்த 7 ஆண்டுகளில் மிக மோசமான சூறாவளியாக இந்த புயல் அமைந்தது. இதன் காரணமாக கனமழை கொட்டி நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக கட்டிடங்கள் நொறுங்கின. நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட்டன. மிக மோசமாக பாதிக்கப்பட்ட வகாயமா பகுதியில் 4500 பேர் பரிதவித்து நின்றனர். அங்கு சாலைகள் சிதைந்துள்ளன.
நரா என்ற கிராமத்தில் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலம் 1000 லிட்டர் குடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
டலாஸ் சூறாவளி ஞாயிற்றுக்கிழமையே ஜப்பானில் இருந்து விலகிச்சென்றது. இதனால் சூறாவளி சீற்றம் படிப்படியாக குறைந்தது.
ரஷ்யா போர் விமானம் நொறுங்கியது: 2 விமானிகள் பலி.
ரஷ்யாவின் போர் விமானம் நொறுங்கியதில் 2 விமானிகள் மரணம் அடைந்தனர். இன்று இந்த விபத்து ஏற்பட்டது.
பெர்ம் பிராந்தியத்தின் ராணுவ விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளானது. இதனை ரஷ்யா அரசின் செய்தி நிறுவனமான ரியா நோவஸ்டி தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் வழக்கமான பயிற்சிக்கு பயன்படும் விமானம் ஆகும். இதே போன்ற ஜெட் விபத்து கடந்த ஆண்டு ஏற்பட்டது. ஆனால் அப்போது பைலட்டுகள் பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரை இறங்கினர்.
இந்த விபத்தை தொடர்ந்து எம்.ஐ.ஜி 31 ரக விமானங்கள் உடனடியாக தரை இறக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சிறுவன் பலி.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் காலை 12.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 52 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் என பதிவானது.
பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 400 கி.மீ சுற்றளாவில் அதன் பாதிப்பு இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த இயற்கை சீற்றத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படும் என்பதால் சிறிது நேரம் பரபரப்படைந்த மக்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு சுமித்ரா தீவில் 9.9 நிலநடுக்கம் ஏற்பட்டு 2,20,000 மேற்பட்ட மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
லிபிய கலவரம்: ராணுவம் நைஜர் எல்லையை கடந்தது.
லிபிய ராணுவம் பாலைவன எல்லை பகுதியான நைஜர் எல்லை பகுதியை கடந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ பீரங்கிகள் அகாடெஸ் நகர பகுதிக்குள் சென்றுள்ளன.
அந்த பீரங்கி வாகனங்களில் சக்தி வாய்ந்த துராக் பழங்குடியின வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக கடாபியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"கர்னல் கடாபி முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் லிபியாவில் தான் உள்ளார்" என்றும் தெரிவித்தார்.
தான் சாகும் வரை லிபியாவில் போராடுவேன் என கடாபி முன்னர் முழங்கி இருந்தார். லிபியா புரட்சிப்படையினர் நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றிய போதும் முன்னாள் சர்வாதிகாரி லிபிய அதிகாரத்தை விட்டு தர மாட்டேன் என்ற உறுதியுடன் உள்ளார்.
தலைநகர் திரிபோலி உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. லிபிய ராணுவம் தங்கள் எல்லை பகுதிக்கு வந்ததை நைஜர் அரசும், பிரான்சும் உறுதி செய்துள்ளன.
லிபியா ராணுவம் 200 அல்லது 250 வாகனங்களுக்கு பாதுகாப்பாக நைஜர் எல்லை வழியாக கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர் பாகிஸ்தானில் கைது.
உயர் அல்கொய்தா தீவிரவாத தலைவரை பாகிஸ்தான் உளவுத்துறையினர் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அல்கொய்தா தீவிரவாத தலைவர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை தாக்க திட்டம் தீட்டி வந்தவர் என பாகிஸ்தானிய உளவுத்துறை தெரிவித்தது.
பாகிஸ்தானின் குவெட்டா புறநகர் பகுதியில் தலைமை அல்கொய்தா தலைவர் யூனூஸ் அல்-மொளரிதானி மற்றும் அவரது 2 உதவியாளர்களை கைது செய்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவின் பொருளாதார முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த மொளரிதானி அல்கொய்தா தலைவர் பின்லேடன் உயிருடன் இருந்த போது கேட்டுக்கொண்டிருந்தார்.
அமெரிக்காவின் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய் பாதைகள், அணைகள் மற்றும் எண்ணெய் கொள்கலன்கள் ஆகியவற்றை தாக்க அல்கொய்தா தலைவர் மொளரிதானிக்கு உத்தரவிட்டு இருந்தார் என பாகிஸ்தான் ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF