Wednesday, September 21, 2011

இன்றைய செய்திகள்.

நியுயோர்க்கிற்குள் முடக்கப்பட்டார் மகிந்த – வெளியே செல்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடை.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியுயோர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியுயோர்க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இராஜதந்திரிகளுக்கு நியுயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியுயோர்க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

குர்பானுக்கு எதிராக செயற்பட்டால் மேர்வின் பிரச்சினையை எதிர்நோக்கவேண்டிவரும்!- அலவி எச்சரிக்கை.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களின் குர்பான் என்ற விலங்கின அர்ப்பணிப்பு கடமைக்கு எதிர்ப்பு வெளியிட்டால், அமைச்சர் மேர்வின் சில்வா, பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஹஜ் கடமையின் போது இஸ்லாமியர்கள் விலங்குகளை அர்ப்பணிப்பது வழக்கமாகும்.இதனை தடுக்க மேர்வின் சில்வா முயன்றால், அவர் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று அலவி மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
தற்கு ஏனைய மதத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.அமைச்சர் மேர்வின் சில்வாவும் வெளிநாட்டவர்களின் கைகளில் அகப்பட்டு நாட்டை நாசப்படுத்த முயல்கின்றார்.விலங்குகளைக் கொல்ல எவராவது முயன்றால் தாம் அவர்களின் கைகளை வெட்டிவிடப் போவதாக அண்மையில் களனியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் மோ்வின் சில்வா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்தவிற்கும் பில் கிளின்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையில் நியுயோர்க்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
மனித உரிமை மீறல், மீள் குடியேற்றம் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.
சர்வதேச ரீதியான சவால்களை எதிர்நோக்குவதற்கு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கிளின்டன் க்ளோபல் இனிடேடிவ் போரம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.இலங்கையில் ஆழிப் பேரலை அனர்;த்தம் ஏற்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடிய வேலையாள் தேவை! விரைவில் இலங்கை அறிவிக்கும்!
தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடிய வேலையாள் தேவை என்ற விளம்பரத்தை விரைவில் வெளியிடப்போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை நாட்டின் சட்டத்தில் உள்ளது. 
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தான் இந்தப் பணிக்கான ஆள் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இருந்தவர் சிறைக்காவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் சற்றே கீழ் நிலையில் இருக்கும் இந்தப் பணி காலியாகி உள்ளது.
உடனடியாக ஆட்களைத் தூக்கில் போடும் எண்ணம் தமக்கு இல்லை என்று இலங்கை சிறைத் துறைத் தலைவர் பி.டபிள்யு. கொடிப்பிலி பிபிசியிடம் தெரிவித்தார்.ஆனால், மொத்தமாக 357 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கின்றனர், எனவே தண்டனைகளை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது.
அலுகோஸ் என்று சொல்லப்படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பணியில் தற்போது இருப்பவரும் அதற்கு முன்பு அந்தப் பணியை இருந்தவரும் யாரையும் தூக்கிலிட்டதில்லை.
தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியாளராக இருப்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது 22 ஆவது வயதில் இந்தப் பணிக்கு சேர்ந்தார்.
ஆனால் இவரின் பெயர் விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. வறுமை காரணமாக தனது தந்தை செய்த பணியில் தான் சேர நேரிட்டதாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.
மிக மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தணடனை விதிக்கப்பட வேண்டும் என்று தான் நம்பினாலும் தனது பணிக்காலத்தில் யாரையும் தூக்கில் போடாதது தனக்கு மகிழ்சியை அளிப்பதாக இருப்பாதகவும் அவர் கூறினார். எல்லோரும் தூக்குப் போடும் வேலையைச் செய்வர்கள் இதயமில்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் அது தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.
அதே போல தனது குழந்தைகள் தம்முடையை குடும்பத் தொழிலை செய்யக் கூடாது என்று விரும்பும் அவர் தான் தனது பணிக் காலத்தில் குமாஸ்த்தா வேலைகளைச் செய்து காலத்தைக் கழித்ததாகத் தெரிவித்தார். தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் முன்னாள் புலிகள் யாரும் இல்லை.
மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வரப் போவதாக அரசு அவ்வப்போது தெரிவித்தாலும், தூக்குத்தண்டனை அமுலுக்கு வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு இளவயதினரைக் கொன்ற வழக்கில் நான்கு பொலிஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதிகக்கப்பட்டிருந்தது.
பரஸ்பர குற்றச்சாட்டுகளை அள்ளித்தெளிக்கும் அரசும், எதிர்க்கட்சியும்.
அரசாங்கம் தன்மீது குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி மீது பாரதூரமான குற்றங்களை சுமத்த முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கூற்றினை முன்வைத்தார்.
கட்சித் தலைமைத்துவத்திற்கு பணம் கொடுத்ததாக மொஹம்மட் மஹ்ரூப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டிற்கும் இதன் போது திஸ்ஸ அத்தநாயக்க பதிலளித்தார்.
ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்கும் அளவிற்கு மஹ்ரூபிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று தேடிப்பார்க்க வேண்டியுள்ளதாதகவும் 2004 ஆம் ஆண்டின் சொத்துக்கள் மற்றும் உடைமைகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் அவரின் வங்கிக் கணக்கில் அந்த அளவிற்கு பணம் இருக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பணமோசடி தொடர்பில் மஹரூபிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறிய அவர் அதுபற்றி எதுவும் தன்னாள் கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மாநகரசபை உறுப்பினராக தன்னை நியமிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்குழு உறுப்பினர் ஒருவர் மூன்று மில்லியன் ரூபாவைக் கோரியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக கொழும்பு நமாநகர சபை வேட்பாளராக களமிறங்கியுள்ள மொஹம்மட் மஹ்ரூப் அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டிற்கு திஸ்ஸ அத்தநாயக்க பதிலளித்தார்.
கட்சியின் வேட்பு மனுக்குழுவானது மிகவும் ஜனநாயக ரீதியில் ஏகமனதாகவே மாநகர மேயர் வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாகவும், தன்னை இந்த இடத்திற்கு தெரிவு செய்யாத காரணத்தினால் குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது என்றும் பொதுச் செயலாளர் கூறினார்.
இதேவேளை கொலன்னாவையில் இடம்பெறுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக தன்னை அறிமுகப்படுத்துகின்ற மற்றும் பாதிகாப்பு செயலாளரின் அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் கூறிக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலன்னாவை பிரதேசத்திற்குட்பட்ட வாக்காளர்களை அச்சுறுத்துவதுடன் தாக்குதல்களையும் நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் முஸம்மில் மீது தாக்குதல்.
கொழும்பு மாநகரசபைக்கான தோ்தலின் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளரான முஸம்மில் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த வேட்பாளர் முஸம்மிலின் அலுவலகம் மற்றும் கொட்டாஞ்சேனையில் அமைந்திருந்த அவரது ஆதரவாளர் ஒருவரின் வீடு ஆகியவற்றின் மீதே பிரஸ்தாபத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவே பிரஸ்தாப தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டுள்ளதாக முஸம்மில் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் கொழும்பில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் வகையில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யார் எதிர்த்தாலும் அரசு தீர்வை முன்வைத்தே தீரும் : அமைச்சர் டியூ குணசேகர தெரிவிப்பு.
எந்தப் பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் அரசு முன்வைத்த காலைப் பின் வைக்காது. நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசு முனைப்பாகவே இருக்கிறது.எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை புறக்கணிக்காது அதில் பங்குகொண்டு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார் சிரேஷ்ட அமைச்சர் டியூகுணசேகர. 

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் உதயனிடம் இதனைத் தெரிவித்தார். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற 11ஆவது சுற்றுப் பேச்சின் 13ஆவது திருத்தத் துக்கும் அப்பால் சென்று தீர்வு காண இரு தரப்பினரும் இணங்கினர். ஆனால், ஜனாதிபதி நாட்டில் இல்லாத வேளையில் அரசில் இருக்கும் தீவிரவாதப் போக்குடைய அமைச்சர்கள் சிலர் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கடைசி வரை இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் டியூ குணசேகரவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நான் ஆரம்பம் முதலே இனப்பிரச்சினைக்கு பேச்சுகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் அப்போதே 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவன். நான் சிறுபான்மை மக்களுடன் நிற்பவன். அவர்களின் ஆதரவைப் பெற்றவன் என்றார் அமைச்சர். அவர் மேலும் தெரிவித்ததாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு தீர்வை முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சி முன் வைத்தால் ஸ்ரீ.ல.சு. கட்சி எதிர்க்கும். இவை இரண்டும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டால் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்யும். இதுதான் எமது அரசியல் நிலைப்பாடு.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்தார். அதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தனர். நாடாளுமன்றத்தில் வைத்தே எதிர்த்தனர். இதனால் அந்த முன்னெடுப்பு தடைப்பட்டது. அன்று ஐ.தே.க. ஆதரவளித்திருந்தால் அன்றே பிரச்சினை தீர்ந்திருக்கும் என்றார் அமைச்சர்.
முன்பு எதிர்தரப்பினர்களாலே எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. ஆனால் இப்பொழுது அரசுக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் எல்லா விடயங்களிலும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. ஒரு சிலர் சத்தம் போடத்தான் செய்வார்கள். அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. இன்று அரசுக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இப்படியான சிலரின் கூற்றுக்களைக் காரணம் காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தைரியப்படக்கூடாது. ஜனாதிபதி முன் மொழிந்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டணியினர் கட்டாயமாகப் பங்குபற்ற வேண்டும். அங்கே தமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டணியின் பங்கு இல்லா விட்டால் அது தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு கூட்டணியினர் காரணமாகிவிடக் கூடாது என்றார் அமைச்சர் டியூகுணசேகர.
இறக்குமதி செய்த சீமேந்து தரம் குறைந்ததென நிரூபிக்கப்பட்டால் 24 மணிக்குள் ராஜினாமா : ஜொன்ஸ்டன்.
தரம் குறைந்த சீமேந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 24 மணித்தியாலத்திற்குள் பதவி விலகுவேன் என கூட்டுறவு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கூட்டுறவு சங்கம் ஒரு மூட்டை தரம் குறைந்த சீமேந்தையேனும் இறக்குமதி செய்யவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.கூட்டுறவு அமைச்சிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட சீமேந்து உரிய தர நிர்ணயங்களை பூர்த்திய செய்யவில்லை எனவும் அதனால் தரச் சான்று வழங்க முடியாது எனவும் இலங்கை தர நிர்ணய சபை முன்னர் அறிவித்திருந்தது.எனினும், திடீரென குறித்த தரம் குறைந்த சீமேந்து வகைகளுக்கு தர முத்திரை வழங்கப்பட்டதுடன், சந்தையில் அவை தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
ஐ.நா பொதுச் சபை கூட்டம் இன்று துவங்குகிறது: 130 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு.
ஐ.நா பொதுச் சபையின் இந்தாண்டுக்கான கூட்டம் இன்று துவங்குகிறது. இக்கூட்டத்தில் 130 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா பொதுச் சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இந்தாண்டுக்கான கூட்டம் 13ம் திகதியே துவங்கி விட்டாலும் கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் துவங்கி 27ம் திகதி வரை நடக்க உள்ளன.
நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.
மேலும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு 130 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கிற்கு வருவதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் பொலிஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணிவகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தலைவர்கள் தங்கும் ஓட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஓட்டல்களின் அருகில் நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
வாகனப் பரிசோதனை, பாதாள ரயில் நிலையத்துக்குச் செல்வோரின் உடைமைகள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இம்மாதம் 11ம் திகதியே துவக்கப்பட்டுவிட்டன.
தெருக்களில் கூடுதல் எண்ணிக்கையில் பொலிசார் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமெராக்கள், தலைவர்கள் செல்வதற்கான தனிப் போக்குவரத்துப் பாதைகள், வெடிபொருட்கள் பரிசோதனைகள் போன்ற ஆண்டுதோறும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
இதற்கிடையில் இந்தக் கூட்டத்தை முன்னிட்டு ஐ.நா தலைமை அலுவலகத்தின் வெளியில் திபெத், பாலஸ்தீனம், தைவான் போன்ற நாடுகளை ஐ.நா.வில் உறுப்பினராக சேர்க்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன.
இந்தாண்டு ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும் மிக முக்கியமான ஐந்து விவகாரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய விதத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் ஒரு படியாக பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என அந்நாட்டின் அதிபர் மகமது அப்பாஸ் கோரியுள்ளார்.
தனது கோரிக்கையை பொதுச் சபை விவாதத்தில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை தனது "வீட்டோ" எனப்படும் மறுப்பாணை மூலம் நிராகரிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மையப்புள்ளியாகும் துருக்கி: அரபுலக நாடுகளின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி ஈராக்கில் நிலையான அரசியல் வேண்டும் எனக் கோரி வருகிறது. அதோடு லிபியாவுக்கு ஆதரவளித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தற்போது தான் துருக்கி ஒரு முக்கிய மையப்புள்ளியாக உருவாகி வருகிறது. அதன் அதிபர் டாயிப் எர்டோயனை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எர்டோயன் பாலஸ்தீனத்தின் உறுப்பினர் அந்தஸ்துக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
லிபியா விவகாரம்: லிபியா அரசு சார்பில் பங்கேற்பதற்கு எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் ஆகிய விவாதங்கள் இம்முறை இடம் பெறுகின்றன.
சிரியா மீது மேலும் தடைகள்: ஏற்கனவே ஐ.நா ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என மூன்று தரப்பும் இணைந்து சில தடைகளை விதித்திருந்த போதும், தனது மக்கள் மீதான அடக்குமுறையை சிரியா அதிபர் பஷர் அல் அசாத் கைவிடவில்லை.
கடந்த வாரம் ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த அறிக்கை ஒன்றில், சிரியாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்று திரளும்படி கோரியிருந்தார். சிரியா மீதான கடுமையான பொருளாதார தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த விவாதம் இந்த முறை இடம் பெறுகிறது.
தெற்கு சூடான் வன்முறை: புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடான் இம்முறை முதன் முறையாக ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நடந்து வரும் சில வன்முறை தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை. இதுகுறித்த விவாதமும் இம்முறை நடக்க உள்ளது.
ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி. ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைதி குழுவின் தலைவராக இருந்தார். இவர் தலிபான்களுடன் பேச்சு நடத்தி வந்தார்.
இந்நிலையில் 2 தலிபான் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அவர் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பேஸ்புக், டுவிட்டருக்கு பாகிஸ்தானில் தடை.
மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ள பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பாகிஸ்தானில் யாரும் பயன்படுத்தக்கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர் நீதிமன்ற நீதிபதி ஷேக் அஜ்மத் சயீத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
எனினும் கூகுள் மற்றும் இதர தேடுதளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பேஸ்புக் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பேஸ்புக்கில் முகமது நபிக்கு எதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் அதை முற்றாக தடை செய்ய வேண்டும் என முகமது அசாத் சித்திக் என்ற பாகிஸ்தான் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களை அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் முற்றாக தடை செய்துவிட்டது. இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது குறித்து அக்டோபர் 6ம் திகதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குற்றமே: நெதர்லாந்து பாராளுமன்றம்.
நெதர்லாந்தின் பாராளுமன்றம் முஸ்லிம் பெண்களால் அணியப்படும் உடல் முழுதும் மறைக்கப்பட்ட பர்தா ஆடைகளைக் குற்றமாக கருதுகிறது.
இது பெண்களின் உரிமையைத்தான் தாக்குகின்றது எனக் கூறுகின்றனர். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் பெண்களால் இந்த முழுமையான உடலை மறைக்கும் உடை அணியப்படுகின்றது.
இந்த ஆடையினால் கண்கள் கூட திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும். முஸ்லிம் பெண்கள் இந்த பாரம்பரிய உடைகளைத் தெரிவுசெய்வதானது அல்லது அணியும்படி கட்டாயப்படுத்துவதானது குழப்பமான செய்தி ஒன்றையே வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இதுபற்றித் தீர்மானிக்க ஒரு அரசாங்கத்திற்கு யார் அனுமதி கொடுத்தது என முஸ்லிம் அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுபற்றித் தர்க்கம் செய்ய உரிமை இருக்கலாம். ஆனால் இதுபற்றிச் சட்டம் உருவாக்குவது என்பது என்ன விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போன்று பொது இடங்களில் பணியாற்றுபவர்கள் என்றால் அதற்குத் தடைவிதிக்கலாம். எல்லா பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு பர்தா அணிந்த பெண்ணை முன்னோடியாகக் கூற விரும்பமாட்டார்கள் என்பதுதான் உண்மை.இருப்பினும் இதற்குத் தடைவிதிப்பதன்பது சற்றுச் சிரமமானதுதான். ஆனால் பொது இடங்களில் பர்தா அணிந்துசெல்லும் எவருக்கும் நெதர்லாந்து அரசு 380 யூரோ தண்டம் விதித்துள்ளது.
பிரான்சையும் பெல்ஜியத்தையும் போலவே நெதர்லாந்தும் பெண்கள் தமக்கு விருப்பமானவற்றை அணியத் தடைசெய்கின்றது என்பதைத் தான் இது கூறுகின்றது.பிரான்சிலும் பெல்ஜியத்திலும் விதிக்கப்பட்டதுபோல முகத்தை மட்டும் மூடும் திரையையும் நெதர்லாந்து அரசாங்கம் உள்ளடக்கவில்லை.
அதற்குப் பதிலாக அது ஆகக்கூடியளவு 100 பேரே அணியும் இந்த பர்தாவிற்கே தடைவிதித்துள்ளது. இந்த 100 பெண்களால் அந்நாட்டு அரசிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது என்பது சர்வ நிச்சயம் இதனை இந்த அரசுகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சீனாவில் வெள்ளப்பெருக்கு: 57 பேர் பலி.
சீனாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்மழை காரணமாக சிச்சுவான், ஷான்ஸி மற்றும் ஹீனான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 57 பேர் உயிரிழந்தனர். 29 பேரைக் காணவில்லை.120,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன என சீன பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டென்மார்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த டைட்டானிக் நெக்லஸ் திருட்டு.
இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி "ஆர்.எம்.எஸ் டைட்டானிக்" பயணிகள் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு புறப்பட்டது.குழந்தைகள், பெண்கள், மாலுமிகள், ஊழியர்கள் உள்பட 2,224 பேர் இருந்தனர். அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பனிப்பாறையில் மோதி ஏப்ரல் 15ம் திகதி கப்பல் மூழ்கியது. 1,514 பேர் பரிதாபமாக பலியாயினர். 710 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
டைட்டானிக் கப்பலின் எஞ்சிய பாகங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்தது. கப்பலின் பாகங்கள், பயணிகள் வைத்திருந்த பொருட்கள் உள்பட பல்வேறு அரிய பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கப்பலின் முதல் வகுப்பில் பயணித்த அமெரிக்க பெண் எலினார் வைடனருக்கு சொந்தமானதாக கருதப்படும் தங்க நெக்லசும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ரூ.12 லட்சம் மதிப்புள்ள இந்த நெக்லசை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்று விட்டனர்.
இதுபற்றி கண்காட்சி உரிமையாளர் லூயிஸ் பெரைரோ கூறும்போது,"ஷோகேஸ் உடைக்கப்படவில்லை. அலாரமும் அடிக்கவில்லை. திகைப்பூட்டும்படி இந்த திருட்டு நடந்துள்ளது. கண்காட்சியில் இதைவிட விலை அதிகமான நகைகள் இருக்கின்றன. நெக்லசை மட்டும் திருடியது ஏன் என்பது தெரியவில்லை" என்றார்.
நெக்லஸ் திருடியவர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுபற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.65 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நகரமும் வீழ்ந்தது: புரட்சிப்படை அதிரடி வெற்றி.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சியில் இறங்கினர்.
அவர்களை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்.
புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களத்தில் இறங்க பல நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து புரட்சி படையினர் வசம் வந்தன. குடும்பத்துடன் கடாபி தலைமறைவானார். எனினும் ஒன்றிரண்டு நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.
இந்நிலையில் லிபியாவின் தென் பகுதியில் உள்ள சாபா நகரில் உள்ள விமான நிலையத்தையும் பல பகுதிகளையும் புரட்சி படையினர் நேற்று கைப்பற்றினர். இதனால் கடைசி நகரமும் ராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து புரட்சி படையின் செய்தித் தொடர்பாளர் அகமது பனி கூறுகையில்,"இப்போது எல்லா இடங்களிலும் எங்கள் கொடி பறக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி" என்றார்.
அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயல்படும் அரசியல்வாதிகள்: இம்ரான்கான் குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்(58) ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் பெரும்பாலான அரசியல்வாதிகள் அமெரிக்காவின் கைப்பாவையாக, பொம்மையாக செயல்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.அமெரிக்கா நிதி உதவி தருகிறது என்பதற்காக ஒரு செயலற்ற பொம்மையாக அதிபர் சர்தாரி செயல்பட்டு வருகிறார். அமெரிக்க நிதியை பெற்று எங்கள் ராணுவத்தின் மூலம் சொந்த நாட்டு மக்கள் 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடுமையாகும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது அனுபவித்த இன்னல்களை விட தற்போது மிகுந்த கொடுமைகளை பாகிஸ்தான் மக்கள் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது.
இதற்கிடையே பின்லேடனை பாதுகாத்து வந்ததாக பாகிஸ்தான் அரசை அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் லியான பெனேட்டாடி குற்றம் சாட்டுகிறார். அது மிகவும் ஆபத்தானது.பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவம் புகுந்து பின்லேடனை கொன்றது நாட்டுக்கு அவமதிப்பாகும். இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாட்டில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
மத்திய அமெரிக்க நாடான கவுதமலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கவுதமலா சிட்டியில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.நேற்று மதியம் 12.34 மணிக்கு தொடங்கிய இந்த நிலநடுக்கம் 30 நிமிடத்துக்கு ஒருமுறை என  நான்கு தடவை ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் குலாபா, சாந்தா மரியா இன்குவாடன், தெராடோரியா ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்தன.எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகள் அகற்றப்பட்டு அதில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கம் காரணமாக எல்சால்வேடர் நாட்டுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு கார் மண்ணில் புதைந்தது.இங்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடைபெறுவதாக அந்த நாட்டு அதிபர் அல்வாரோ கலோம் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்.
பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள நிஷ்தாராபாத் தில் சி.டி.க்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் உள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 12 பேர் உயிர் இழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு தீவிரவாதிகளால் ரிமோட் கண்டரோல் மூலம் வெடிக்க செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடித்ததில் அங்கிருந்த ஏராளமான கடைகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன. அச்சம்பவத்துக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் தினமும் 50 குழந்தைகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு பிறக்கின்றனர்: அறிக்கையில் தகவல்.
பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளுக்கு மட்டும் சராசரியாக 50 குழந்தைகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பிறப்பதாக அந்நாட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 20,000 குழந்தைகள் இவ்வாறு பிறந்திருப்பதாக மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது பிரித்தானியாவில் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஒன்று புலம் பெயர்ந்தவர்களுடையது. இந்த நிலைமை நீடிக்குமானால் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவை தாயகமாக கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற சேவைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது.தொழில் காரணமாகவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களே இதில் முன்னிலை வகிக்கின்றார்கள்.
கிரீஸ் கடன் பிரச்சனை: பங்குச்சந்தைகள் சரிவு.
கிரீஸ் தனது கடன் சுமையில் இருந்து வெளியே வரவேண்டுமானால் முறையான வரி விதிப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நிதியமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் கிரீசின் பொருளாதார நிலை மீதான சந்தேகத்தால் நேற்றும் ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
அக்டோபர் 15ம் திகதிக்குப் பின் அன்றாடச் செலவுக்கே திண்டாட வேண்டிய நிலையில் உள்ளதாக அறிவித்த கிரீஸ் மேலும் அதிக நிதியுதவிக்காக ஐ.எம்.எப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே நடந்த ஐரோப்பிய நிதியமைச்சர்கள் மாநாட்டில் கிரீசுக்கு இம்மாதம் வழங்கப்பட இருந்த 11 பில்லியன் டொலர் நிதியுதவி அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெற்ற நிதியுதவிகளுக்கான 15 நிபந்தனைகளை கிரீஸ் நிறைவேற்றினால் தான் இந்த மூன்றாவது நிதியுதவி கிடைக்கும் என ஐ.எம்.எப் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும், அந்நாட்டிற்கு அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் சொத்துக்கள் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து கிரீஸ் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து கிரீசுக்கான ஐ.எம்.எப் பிரதிநிதி பாப் ட்ரா கூறுகையில்,"இதுபோன்ற கடுமையான அதிகளவு வரி விதிப்பு கிரீசுக்கு நல்லதல்ல. செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் வருமானத்தைப் பெருக்கினால் தான் கிரீசால் கடனில் இருந்து மீள முடியும் " என்றார்.
இதற்கிடையில் கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த தகவல்களால் நேற்று ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. சமீபத்தில் நடந்த ஆய்வின்படி 65 சதவீத பொருளாதார நிபுணர்கள் கிரீஸ் திவாலாகி விடும் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ பயன்படுத்தும் நாடுகளின் கடன் சுமையைக் குறைப்பது குறித்து இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா நான்கு நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் இவ்வார இறுதியில் நடக்க உள்ளது.
அவுஸ்திரேலியாவில் விநாயகரை இழிவுபடுத்தும் நோக்கில் நாடகம்: இந்து மக்கள் அதிர்ச்சி.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில் இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில் ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில் அக்டோபர் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக அவுஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்" என்ற நாடக அமைப்பு, "தி கணேஷ் வெர்சஸ் தி தேர்டு ரெய்க்" என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.இதுகுறித்து விழாவிற்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்துக்களின் புனிதச் சின்னமான "ஸ்வஸ்திக்" அடையாளத்தை ஜேர்மனியின் நாஜிக்கள் திருடி தங்கள் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர்.
அந்த அடையாளத்தை இழக்க விரும்பாத இந்துக்களின் தெய்வமான விநாயகர், ஹிட்லரை நேரில் சந்தித்து விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மூலம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களிலும், ஹிட்லரைப் போல் தோற்றம் உடைய ஒருவர் முன் வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக் கொண்டு யானைத் தலையை அணிந்த ஒரு குண்டான மனிதர் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பும், விளம்பரமும் உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நாஜிக்களால் சித்ரவதைக்குள்ளாவது அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை" என்று தெரிவித்துள்ளார்.
"பேக் டு பேக் தியேட்டர்" அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில்,"அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம் பெறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்களின் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின் அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து ஹிலாரி அதிருப்தி.
பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கை குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி காரிடம் ஹிலாரி கிளிண்டன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள ஹீனா ரப்பானியை ஹிலாரி கிளிண்டன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சுமார் மூன்றரை மணி நேரம் இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது இருவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் குறித்தும், அவர்களால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஹக்கானி ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளும் சமீபகாலமாக கடுமையானச் சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றன. இதனால் இந்த அமைப்புகளை நசுக்க பாகிஸ்தான் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஹிலாரி கேட்டுக்கொண்டார் என்றும் கூறினர்.
மேலும் கடந்த 13ம் திகதி காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஹக்கானி அமைப்பினர்தான் தாக்குதல் நடத்தினர் என்று குற்றம் சுமத்திய ஹிலாரி அதற்கான ஆதாரங்களை ஹீனாவிடம் அளித்தார் என்றும் குறிப்பிட்டனர். ஆனால் இதுதவிர வேறு எவ்வித உளவுத் தகவல்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டார்களா என்பது குறித்து அவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாகிஸ்தானின் நடவடிக்கை மீது ஹிலாரி அதிருப்தி தெரிவித்ததில் நியாயம் உண்டு என்பதை ஹீனா ரப்பானி புரிந்து கொண்டார். அதை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்தனர்.
காபூலில் அமெரிக்கத் தூதரகம் மீது ஹக்கானி அமைப்பினர் நடத்திய தாக்குதல் மூலம் அந்த அமைப்பு எந்த அளவுக்கு மோசமானது, கொடூரமானது என்பது வெளிப்பட்டுள்ளது.
இதனால் அந்த அமைப்பை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எங்களது கருத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் கூறியுள்ளோம். அவரும் அந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார் என்றும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பணத்தை அளித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் இந்த நிதியை அந்நாடு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பயன்படுத்தாமல் ஆயுதம் வாங்கிக் குவித்து வருவதாகப் புகார் எழுந்து வருகிறது.
அத்துடன் தமது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கண்டுகொள்வதில்லை என்பது ஒசாமா பின்லேடன் அங்கு இருந்ததன் மூலம் வெளிப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகையப் போக்கால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
மத்திய ஆப்ரிக்காவில் துப்பாக்கி சூடு: 36 பேர் பலி.
மத்திய ஆப்ரிக்காவின் சிறிய நாடான புருண்டியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து புஜூம்புரா பகுதி கவர்னர் ஜாக்குயிஸ் மினானி கூறியதாவது: கடும்பா பகுதியில் உள்ள வீடுகள் மீது காங்கோவை சேர்ந்த நபர் ஒருவர் ராணுவ உடையில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 36 பேர் இறந்தனர்.காங்கோவில் இருந்து ஆற்றை கடந்து வந்த அவர் ராணுவ துப்பாக்கியை உபயோகித்தது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே புருண்டியில் நடந்த உள்நாட்டு போரில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற சம்பவம் போன்ற அடிக்கடி நிகழ்வதாகவும், இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியை மையமாக கொண்டு நடைபெற்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் மூத்த அதிகாரியின் வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி.
பாகிஸ்தானின் கராச்சியில் மூத்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் தாய்-மகன் உள்பட 8 பேர் இறந்தனர்.
இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் உள்ள குற்ற புலனாய்வுத் துறை அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுபவர் செளத்ரி அஸ்லாம்.
திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு சக்திவாய்ந்த வெடிப் பொருள்களை வாகனத்தில் ஏற்றிவந்த ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி இவரது இரண்டடுக்கு மாடி வீட்டில் மோதினார்.
இதில் அந்த வீடு இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமானது. தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த உடனே செளத்ரியின் குடும்பத்தார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அல்கொய்தா உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்களை செளத்ரி தலைமையிலான பொலிஸ்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள செளத்ரி ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடுவேன் என்று நினைத்தால் அது நடக்காது என்றார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தஹ்ரிக் இ தலிபான் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. குண்டு வெடித்த சப்தம் பல மைல்களுக்கு அப்பால் வரை கேட்டது. கட்டட செங்கற்கள் வெகு தூரம் வரை வீசி எறியப்பட்டன.
பொலிஸ் அதிகாரியின் வீடு இருந்த இடத்தில் 10 அடி ஆழம் மற்றும் 25 அடி சுற்றளவுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடித்த இடமருகே ஏராளமான பள்ளிக்கூடங்கள் உள்ளன. சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அழைத்து செல்ல அங்கு குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: இந்தியா முழு ஆதரவு.
பாலஸ்தீனம் தனி கோரிக்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவினை தரும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாலஸ்தீன அதிகாரபூர்வ அதிபருக்கு எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளார்.
ஐ.நா சபையின் 66வது பொதுச்சபைக்கூட்டம் இன்று துவங்குகிறது. 193 நாடுகள் பங்கேற்கின்றன. இக்கூட்டத்தின் போது பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்கிறது.
அப்போது பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையும் இடம் பெறுகிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பாலஸ்தீன அதிபர் அப்பாஸிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி எழுதிய ஒரு பக்க அக்கடிதத்தினை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்த பிரதிநிதி ஹர்தீப்சிங்பூரி நிருபர்களுக்கு படித்து கூறியதாவது: பாலஸ்தீனம் எப்போதும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளது.
பாலஸ்தீனம் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. பாலஸ்தீனத்தின் தனித்தன்மையை இந்தியா மதிக்கிறது.
எனவே கிழக்கு ஜெருசலம் நகரை தலைமையிடமாக கொண்டு பாலஸ்தீன தனி நாடு உதயமாக இந்தியா தனது ஆதரவினை தரும். இதற்காக ஐ.நா. சபையிலும் இந்தியா சார்பில் வலியுறுத்துவோம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF