Friday, September 16, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகாவின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஜெனரல் பட்டம் பறிப்பிற்கு எதிராக சரத் பொன்சேகா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெண்டர் மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவின் ஜெனரல் பட்டம், ஓய்வூதியம் ஆகியவற்றை பறித்ததுடன், அவருக்கு முப்பது மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
அதற்கு எதிராக சரத் பொன்சேகா வழக்குத் தொடுத்திருந்தார். ஆயினும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி அனுமதித்துள்ளதால் அதற்கெதிராக வழக்குத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கெதிராக சரத் பொன்சேகா தரப்பில், பிரஸ்தாப நீதிமன்றம் இராணுவச் சட்டங்களின் பிரகாரம் நியமிக்கப்பட்டதன் காரணமாக அதற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்துள்ளன. ஆயினும் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கான தீர்வு மற்றைய இனங்களுக்கு பாதகமாக அமையக் கூடாது!- லக்ஸ்மன் யாப்பா.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் ஏனை இன சமூகங்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய வகையில் அமையக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டமென்றை முடிவுறுத்துவதனைப் போன்று அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது இலகுவானதல்ல.
அரசியல் தீர்வுத் திட்டம் தமிழ் மக்களைப் போன்றே நாட்டுக்கும் பொருந்தக் கூடிய வகையில் அமைய வேண்டும்.
இதனால் அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு பரிந்துரைகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் சிறந்த தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் முனைப்புக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இலங்கையின் இராணுவ முகாம்களைத் தீர்மானிப்பதற்கு பிளேக்'கிற்கு அதிகாரமில்லை: விமல் வீரவங்ச.

இலங்கையின் இராணுவ முகாம்களைத் தீர்மானிப்பதற்கு ரொபர்ட் பிளேக்கிற்கு அதிகாரமில்லை என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டு, அப்பகுதிகளில் தமிழ்பேசும் பொலிசார் கடமையிலீடுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இராணுவ முகாம்கள் அமையப் பெற்றுள்ள இடங்கள் மற்றும் அவற்றை இடமாற்றுவது குறித்து கதைப்பதற்கு ரொபர்ட் பிளேக்கிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.
தவிரவும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட அவரை யாரும் அனுமதிக்கவுமில்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை.
அமெரிக்காவில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டிய இடங்களை வெளிநாட்டவர் தீர்மானிக்க முடியாததைப் போன்றே இலங்கையில் இராணுவ முகாம்கள் அமைய வேண்டிய இடங்களை வெளியார் யாரும் தீர்மானிக்க முடியாது.
இலங்கையின் பாதுகாப்புக்குப் பொருத்தமான முறையில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் அவற்றை அகற்றுமாறு கூற ரொபர்ட் பிளேக்கிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. தவிரவும் இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு இம்சைகள் இழைக்கப்படுவதாக சர்வதேசத்திற்கு உணர்த்தும் வகையிலான ரொபர்ட் பிளேக்கின் கூற்று வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிவேகப் பாதையின் கிலோமீற்றர் ஒன்றின் நிர்மாணத்துக்கு ஆறுகோடி செலவு.

இலங்கையின் தென்பகுதி அதிவேகப் பாதைக்கான கிலோமீற்றர் ஒன்றின் நிர்மாணத்துக்கு ஆறுகோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு தொடக்கம் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த அதிவேகப் பாதையானது கொட்டாவையிலிருந்து மாத்தறை வரை 126 கிலோ மீற்றர்கள் தூரம் கொண்டது.
தற்போதைக்கு கொட்டாவை தொடக்கம் காலி வரையான 100 கிலோ மீற்றர்கள் வரையான பாதை நிர்மாணப் பணி நிறைவுற்றுள்ளது.
அதன்போது அதிவேகப் பாதையின் ஒரு கிலோ மீற்றர் நிர்மாணத்துக்கென ஆறு கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
பாதையின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விளக்குக் கம்பங்கள், பாதுகாப்புத் தூண்கள், போன்ற ஏனைய நிர்மாணப் பணிகளையும் சேர்த்துக் கவனத்தில் எடுத்தால் கிலோ மீற்றரொன்றுக்கு சுமார் பத்துக்கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வாறான கொள்ளையடிப்புகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், லஞ்சம் மற்றும் ஊழலை நாட்டில் தலைவிரித்தாட வழிசெய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது கண்டனம் தெரிவித்துள்ளன.
அரசாங்க ஊழியர்களுக்கு வேதனம் வழங்கவும் திறைசேரியில் பணமில்லை: ஐ.தே.க.

அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கவும் திறைசேரியில் பணமில்லை என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது.
திறைசேரிப் பணத்தை அரசாங்கத்தின் தனிப்பட்ட நலன்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டதன் காரணமாக திறைசேரி காலியாகிவிட்டது.
அதன் காரணமாக எதிர்வரும் ஆறு மாதகாலத்தின் பின் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் முடியாத நிலை ஏற்படும்.
ஆனால் அதனைக் கருத்திற் கொள்ளாத அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கையர்கள் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள், சொந்த நாட்டில் மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் போது சொந்த நாட்டு மருத்துவ சான்றிதழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் உள்நாட்டில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ மனையொன்றில் மருத்துவ தகுதி சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.
உள்நாட்டில் பெற்றுக் கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் மற்றுமொரு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எயிட்ஸ், காச நோய், சிபிலீஸ் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து முக்கியமாக சோதனை நடத்தப்படவுள்ளது.
நாட்டில் 10 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர் : தேசிய உள சுகாதார நிறுவனம்.

நாட்டில் 10 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தேசிய உள சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மூன்று தசாப்த காலமாக நீடித்த போர், ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் சில காரணிகளினால் இவ்வாறு அதிகளவானவர்குள் உள பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தவறினால் எதிர்காலத்தில் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மொத்தச் சனத்தொகையில் இரண்டு வீதமானவர்கள் கடுமையான உளவியல் நோய்களினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
உளவியல் பாதிப்புக்கள் தொடர்பில் காத்திரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய உள சுகாதார நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அங்கோலாவில் விமான விபத்து: 30 பேர் பலி.
அங்கோலாவில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 30 பேர் உடல் கருகி இறந்தனர்.
அங்கோலா விமான படையை சேர்ந்த வீரர்கள் 36 பேர் விமானத்தில் நேற்று ஹூவாம்போ விமான நிலையத்துக்கு புறப்பட்டனர்.
விமானம் தரையிறங்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 30 பேர் பலியானதாக அங்கோலா ரேடியா நேற்று செய்தி வெளியிட்டது.
தகவல் அறிந்து தலைநகர் லுவான்டாவில் இருந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிரேசில் சாபாலோ நகரில் சில நாட்களுக்கு முன் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி இறுதி போட்டியில் அங்கோலாவை சேர்ந்த லெய்லா லோப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் காவலில் கடாபியின் மகன்.
பிரிட்டனில் சொகுசு வாழ்க்கை நடத்திய கர்னல் கடாபியின் மூன்றாவது மகனும் கால்பந்து வீரருமான சாடி கடாபி நைஜர் சென்றார்.
அங்கு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தலைநகர் நியாமேவில் வீட்டுக் காவலில் உள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 38 வயது சாடி கடாபி ராணுவ ஹெர்குலஸ் விமானம் மூலமாக நைஜர் சென்றார்.
சாடி கடாபி ஒரு சமயம் இத்தாலி பிறீமியர் லீக் கால்பந்து போட்டியில் தொழில்முறை ஆட்டக்காரராக ஆட முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு.
தென் சீனக் கடலில் வியட்நாம் அருகே இயற்கை எரிவாயுவை தோண்டியெடுக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சீன அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தனது கடலோரப் பகுதியில் தனது கடல் எல்லைக்குள் 2 இடங்களில் எரிவாயுவை தோண்டியெடுக்க இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு வியட்நாம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சியின் வெளிநாட்டுப் பிரிவான ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிகம் அமைப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறையிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள கடிதத்தில் எங்களிடம் அனுமதி பெறாமல் தென் சீனக் கடலில் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டுவது சட்ட விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு சீன தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை சீன அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில் நாங்கள் எரிவாயுவைத் தோண்டுவது வியட்நாமின் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதியுடன் தான். இதற்கு உங்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இதில் எந்த சட்ட விதியும் மீறப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 16ம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியட்நாம் செல்ல உள்ள நிலையை இந்தப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடலின் 127, 128வது பிளாக்குகளில் தான் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டியெடுக்க உள்ளது. ஐ.நா சபையின் கடல் எல்லை ஒப்பந்தப்படி இந்தப் பகுதி வியட்நாமைத் தான் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு ஆசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பதும், வியட்நாமின் பாராசல் தீவை 1974ம் ஆண்டில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஸ்பார்ட்லி தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுடன் வியட்நாம் மோதி வருவதும் முக்கியமான விஷயமாகும்.
2007ம் ஆண்டு ஸ்பார்ட்லி தீவு அருகே இங்கிலாந்தின் BP நிறுவனம் எரிவாயு தோண்டியெடுக்க இருந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
5.4 டன் எடையுள்ள சொக்லேட்டைத் தயாரித்து சாதனை.
அமெரிக்காவை சேர்ந்த சொக்லேட் நிறுவனம் 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சொக்லேட் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த நிறுவனம் "வேர்ல்ட்ஸ் பைனஸ்ட் சாக்லேட்". சொக்லேட் தயாரிப்பில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்தது. லாபத்தில் பெரும் பங்கை தொண்டு நிறுவனங்களுக்கும் சமூக பணிகளுக்கும் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் 21 அடி நீளம், 3 அடி உயரம், 5574 கிலோ எடையுள்ள பிரமாண்ட சொக்லேட்டை தயாரித்துள்ளது. 540 கிலோ பாதாம்பருப்பு, 2494 கிலோ சர்க்கரை, 907 கிலோ பால் பவுடர், 771 கிலோ கோகோ, 635 கிலோ சொக்லேட் எசன்ஸ் கலந்து இந்த சொக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது.
"அளவாக சாப்பிடுங்கள், பெரிய அளவில் சாதனை புரிங்கள்" என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள் தோறும் ஊர்வலம் போகப் போகிறது கின்னஸ் படைத்துள்ள இந்த சூப்பர் சொக்லேட்.
இந்திய பதுங்கு குழிகளில் சீன ராணுவம் குண்டுவீச்சு: இந்திய ராணுவம் மறுப்பு.
காஷ்மீரின் லடாக் பகுதியில் லே மாவட்டத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள், கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது சீன ராணுவம். கடந்த மாதமே இந்தத் தாக்குதல் நடந்தாலும் அதை மத்திய அரசு மூடி மறைத்துவிட்டது. ஆனால் இப்போது இந்த விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.லே பகுதியில் இருந்து 300 கிமீ தூரத்தில் உள்ள சுமர் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களில் நுழைந்து இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய வான் பகுதிக்குள் சுமார் 1.5 கிமீ வரை அவர்கள் ஊடுருவி வந்து தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.ஆனால் சுமர் பகுதியில் சீன ராணுவம் நுழைந்தது என்ற தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவலே இல்லை என்று ராணுவத்தின் வடக்கு மண்டலச் செய்தித் தொடர்பாளர் கர்னல் ரஜேஷ் கலியா கூறியுள்ளார்.அதே நேரத்தில் இந்திய ராணுவம் பயன்படுத்தாத சில பதுங்கு குழிகளைத் தான் சீன ராணுவம் தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது.
2009ம் ஆண்டு இதே பகுதியில் தான் சீன ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள பாறைகளி்ல் சிவப்பு வண்ணத்தைப் பூசி விட்டு சில காலி உணவு டப்பாக்களையும் விட்டுவிட்டுச் சென்றனர். அதாவது இந்தப் பகுதி எங்களுடையது என்ற ரீதியில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் மீண்டும் தனது வேலையைக் காட்டியுள்ளது சீனா.
மேலும் லே மாவட்டத்தில் காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்ட சாலைகள் அமைக்கும் பணியை சீனா கடந்த ஆண்டு தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
காப்பகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்.
பல குடும்பங்களில் ஒருவர் சம்பாதிப்பது போதவில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிளிகளுக்கு இறக்கை முளைச்சு, கூட்டுக் குடும்பத்தை விட்டு ஏற்கனவே பறந்து விட்டதால் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இல்லை.இதற்கு வழியாக குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததுமே காப்பகங்களில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். நேரடியாக ஆரம்பப் பள்ளியில் 5 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த கலாசாரம் எப்போதோ மலையேறிவிட்டது.
நாலு குழந்தைகளோட பழகணும் என்று காரணம் சொல்லி 2 ஆண்டு முன்னதாகவே கே.ஜி பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இப்போது அதையும் தாண்டி முன்னேறி விட்டார்கள் பெற்றோர்.தங்களை பொறுப்புள்ள பெற்றோராக கருதிக் கொண்டும், காட்டிக் கொண்டும் தவறாமல் 2 வயதில் பிளே ஸ்கூலில் போட்டுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மனநல நிபுணர்கள்.
இதுதொடர்பாக லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆராய்ச்சியாளரும் மனநல நிபுணருமான டாக்டர் அரிக் சிக்மன் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. "டே கேர்" காப்பகங்களில் விடப்படும் குழந்தைகள், தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் என 200 குழந்தைகள் தொடர்ந்து 6 வாரம் கண்காணிக்கப்பட்டனர்.இதில் அவர்களின் மன உளைச்சலுக்கு காரணமான கார்டிசால் என்ற சுரப்பியில் அதிக வித்தியாசம் இருந்தது கண்டறியப்பட்டது. பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு இந்த சுரப்பியில் பாதிப்பு இருந்தது.
இதுபற்றி டாக்டர் அரிக் சிக்மன் கூறியதாவது: 2, 3 வயது குழந்தைகளை காப்பகங்களில் விடுவதும் பிளே ஸ்கூலுக்கு அனுப்புவதும் அவர்களது எதிர்காலத்துக்கு உதவும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. அது உண்மையில்லை என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது.
அப்பா, அம்மா மற்றும் உறவினர்களின் அறிமுகத்தில் மட்டுமே வளரும் குழந்தைகள் திடீரென புதுமுகங்களிடம் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இதனால் வயதுக்கு மீறி அதிகம் சிந்திக்கின்றனர். இது அவர்களை பெரிதும் பாதிக்கிறது. இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவர்களை எதிர்காலத்தில் நோயாளிகளாக்கி விடும் அபாயமும் இருக்கிறது. முதலில் சளி, இருமல் என்று தொடங்கும் பிரச்னை நாளடைவில் இதய பாதிப்பு வரைகூட போகலாம்.
கார்டிசால் பாதிப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் பல்வேறு நோய்தொற்றுகளால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.உண்மையிலேயே பிள்ளைகளின் எதிர்கால நன்மையை கருதுபவர்கள் முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பது, காப்பகங்களில் விடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பயாலஜிஸ்ட் ஜர்னல் இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன தனி நாடு தீர்மானம்: இஸ்ரேல் எச்சரிக்கை.
பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கோரி ஐக்கிய நாடுகள் சபையை அணுகுகிறது.
பாலஸ்தீன கோரிக்கையில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கப்பட்டால் விபரீத விளைவு ஏற்படும் என இஸ்ரேலிய அயல்துறை அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனம் காசா மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அங்கு யூதர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் தொடர்ந்து கட்டி வருகிறது.பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து அளிக்க கூடாது என கூறிவரும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது.
ஏமனில் அரசக் கட்டிடங்களில் குண்டு வெடிப்பு.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள இரண்டு அரசக் கட்டிடங்களில் குண்டுகள் வெடித்தன.
நகரில் உள்ள அரசியல் பாதுகாப்பு தலைமையகத்திலும், மற்றொரு குண்டுவெடிப்பு அல் முல்லா காவல் நிலையத்திலும் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் உயிர்சேதம் ஏதும் இல்லை.
காவல் நிலையத்திற்கு பின்புறம் புதைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்தன. அல்மன் சூரா மற்றும் முல்லா பகுதிகளில் ஒருமணி நேரத்தில் நான்கு குண்டு வெடித்து சத்தம் கேட்டது.
தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புக்கு பதிலடி தரும் வகையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை பலியானது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை நடத்த நேட்டோ தலைவர்கள் லிபியாவுக்கு பயணம்.
கர்னல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடத்த நேட்டோ தலைவர்கள் லிபியா செல்கிறார்கள்.
இந்த நேட்டோக் குழுவில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் லிபியாவில் தற்போது உருவாகி உள்ள தேசிய மாற்றக் கவுன்சில் நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் இதர கடாபி எதிர்ப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.லிபியா வரும் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று இடைக்கால நிர்வாக தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார். நேட்டோ தலைவர்கள் முதலில் லிபியா தலைநகர் திரிபோலி வருகிறார்கள்.
பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களின் மையப்பகுதியான பெங்காசிக்கு வருகிறார்கள். அவர்கள் சுதந்திர சதுக்கத்தில் இருந்து உரையாற்றுவார்கள். நேட்டோக் குழுவில் புகழ்பெற்ற தத்துவ மேதை பெர்னார்டு ஹென்றி லெவியுடன் சர்கோசி வருகிறார்.இதற்கிடையே லிபியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடையை நீக்குவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானத்தை பிரிட்டன் சுற்றிக்கையில் அனுப்பி உள்ளது.
போராட்டக்காரர்கள் மீது சிரிய அரசு துருப்புகள் துப்பாக்கிச் சூடு.
சிரியாவில் பஷார் அல் அசாத் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு பாதுகாப்பு படையினர் திடீர் தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த தாக்குதல் நாட்டின் வடமேற்கு பகுதியில் நடந்தது. இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில்,"சிரியா துருப்பினர் ஜபல் அல்- ஜவய்யா பகுதியில் உள்ள 10 கிராமங்களில் புகுந்தனர். அவர்கள் சரமாரியாக எந்திரத் துப்பாக்கியால் சுட்டனர்" என தெரிவித்தனர்.
முன்னதாக அரச துருப்பினர் பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தலைநகர் டமாஸ்கசுக்கு புறநகர் பகுதியில் உள்ள இடத்தில் உரிமை ஆர்வலர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது இந்த தாக்குதல் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது உரிமை ஆர்வலரின் இறுதி நிகழ்ச்சியில் அமெரிக்க தூதரும் கலந்து கொண்டார். சிரிய துருப்பினர் தாக்குதலுக்கு முன்னர் அவர் வந்திருந்தார். துருப்பினர் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் யாரும் காயம் அடையவில்லை என இதர ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.
பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. தற்போது 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
பிரிட்டனில் தற்போது வேலை இல்லாத சதவீதம் 7.9ஆக உள்ளது. வேலை இல்லாமல் 9 லட்சத்து 73 ஆயிரம் இளைஞர்கள் உள்ளனர். வேலையில் உள்ளவர்களின் பொருளாதாரமும் கடந்த 3 மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது.பிரிட்டனில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங்க் கூறுகையில்,"இந்த வேலை இல்லாத நிலை அதிகரிப்பை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்" என்றார்.
பிரிட்டனின் பொருளாதாரம் அதிகரிக்கவும், தனியார் துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் ரோபோக்கள்.
அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு பரிமாற உள்ளன. 
அவுஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடந்த 2008ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க மருத்துவமனை நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.அதை தொடர்ந்து சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் மருத்துவமனை சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் ரோபோக்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கணணி மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த ரோபோக்கள் கணணி டிராலியின் மூலம் மருத்துவமனை முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள்,  ஆடைகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கணணியில் பதிவு செய்யப்படும். அதன்படி அவை செயல்படும்.
நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஆட்சி பறிபோன சோகத்தில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான கடாபியின் மகன்.
லிபியாவை ஆட்சி செய்த கடாபியின் மகன்களில் ஒருவரான சாடி கடாபி(38) தனது தந்தை ஆட்சி பறிபோன பின்னர் கடுமையான போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானார்.
அவர் லண்டனில் உள்ள 110 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள பங்களாவில் தொடர்ந்து போதை மருந்து பயன்படுத்தினார் என்று அவரது பாதுகாப்பாளர் ஸ்டெபான் பெல் தெரிவித்துள்ளார்.
அந்த பாதுகாப்பாளருக்காக தினமும் 300 பவுண்ட் சம்பளம் அளிக்கப்பட்டது. சாடி கடாபியின் வாழ்க்கை முறை மிக பரிதாபமாக இருந்தது. அவர் எந்த நேரமும் போதை மருந்து பிடிக்கும் நிலையிலேயே இருந்தார்.
சாடி கடாபி ஆயிரக்கணக்கான வோட்கா, கோகைன் மற்றும் இதர போதை மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
பிராங்க்பர்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி: விசாரணையில் தகவல்.
ஜேர்மனி பிராங்பர்ட் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி சூடு நடந்ததில் 2 அமெரிக்க விமானப்படை நபர்கள் கொல்லப்பட்டனர்.
இவரது பெயர் அரிட் உகா(21). இவர் இஸ்லாமிய பிரசாரத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார் என்று ஜேர்மன் நீதிமன்றத்தில் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் விமானப்படை வீரர்கள் பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்ல முயன்ற போது அரிட் உகா சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
அவரது அந்த பயங்கரத் தாக்குதலில் அமெரிக்க விமானப்படை வீரர் நிகோலஸ் ஜே ஆடன்(25) மற்றும்  கடேபேக்(21) ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும் காயம் அடைந்தனர்.
ஜேர்மனி மண்ணில் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும். இந்த துப்பாக்கிச்சூடு அரசை அதிரச் செய்தது. அரிட் உகா ஐந்தாவது நபரை துப்பாக்கியால் சுட முயன்ற போது அவரது துப்பாக்கியை அதிகாரிகள் செயல் இழக்க செய்தனர்.
கடந்த மாதம் நீதிமன்றத்தில் அரிட் உகா கூறுகையில்,"அமெரிக்க வீரர்கள் ஒரு ஆப்கானிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரம் அடைந்து சுட்டேன்" என தெரிவித்து இருந்தார்.இருப்பினும் தற்போதைய விசாரணையில் அரிட் உகா இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கையில் அதிக ஆர்வமும் நீண்ட கால தொடர்பும் உள்ளவர் என விசாரணையாளர்கள்  தெரிவித்தனர்.
லிபியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு கனடா படைகள் நீடிக்கும்: அரசு அறிவிப்பு.
லிபியாவில் கர்னல் கடாபி ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது இடைக்கால நிர்வாகம் அங்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு இடைக்கால ஆட்சி ஏற்படவும் பொதுமக்களை பாதுகாக்கவும் பாதுகாப்பு பணியில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த படை பிரிவில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா படைகள் உள்ளன.தற்போது புதிய ஆட்சி ஏற்பட்டாலும் கனடா படைப்பிரிவில் தொடர்ந்து 3 மாதம் இருக்க முடிவு செய்துள்ளது. லிபிய புதிய நிர்வாகத்தில் பாதுகாப்பு பிரிவுகள் ஸ்திரதன்மை அடையும் வரை அந்த நாட்டு பாதுகாப்பு உதவிக்கு கனடா படைகள் முகாமிடுகின்றன.
லிபியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் பொதுமக்களை பாதுகாக்க லிபியாவில் முகாமிட்டன.கடாபியின் ஆட்சி நிர்வாகத்தை புரட்சிப்படையின் தேசிய மாற்றக் கவுன்சில் அகற்றியது. தற்போது இடைக்கால நிர்வாகத் தலைவராக ஜலீல் உள்ளார். லிபியாவில் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடாபி தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.இருப்பினும் அவரது குடும்பத்தினர் அருகாமையில் உள்ள நைஜர் மற்றும் அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஐரோப்பிய கடன் பிரச்சனை: மூடிஸ் நிறுவனத்தால் யூரோ மதிப்பு குறைந்தது.
கடனில் மூழ்கியுள்ள கிரீஸ் நாடு விரைவில் திவாலாகிவிடும் எனப் பரவி வரும் செய்திகளால் ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்றும் சரிவு தொடர்ந்தது.
இந்நிலையில் பிரான்சின் இரு வங்கிகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகளை "மூடிஸ்" நிறுவனம் நேற்று குறைத்தது. இதையடுத்து டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
யூரோ நாணயம் பயன்படுத்தும் ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 17 நாடுகளில் கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்றவை கடனில் மூழ்கி விட்டன. இந்த மூன்றுக்கும் யூரோ தொகுப்பு நிதியில் இருந்து கடன் தவணைகள் வழங்கப்பட்டு விட்டன.
இவற்றில் கிரீஸ் இருமுறை கடன் தவணை பெற்றும் கூட ஏற்கனவே கூறப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை. அதனால் கடந்த இரு ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் திறனையும் அது இழந்து விட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அந்நாடு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"அரசின் கையிருப்பில் குறைந்த அளவே பணம் உள்ளது. இன்னும் சில வாரங்களுக்குப் பின் சம்பளம் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கே 11 பில்லியன் டொலர் நிதி தேவைப்படும்" என தெரிவித்தது.
இந்த 11 பில்லியன் டொலர் பணமும் இந்த மாதம் இறுதியில் கிரீசுக்கு வழங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியைத் திருப்பி செலுத்தியது பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் இந்த பணம் வழங்கப்படுமா, நிறுத்தப்படுமா என்பது தெரியவரும்.
இந்த மதிப்பீடுகள் இவ்வாரத்தில் துவங்கி விட்டன. இதையடுத்து கிரீஸ் நிச்சயம் திவாலாகி விடும் என செய்திகள் பரவ துவங்கின. இதனால் கடந்த ஒரு வார காலமாக ஐரோப்பிய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. அதன் தாக்கம் ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் விடுத்த அறிக்கையில்,"கிரீஸ் திவாலாவது அல்லது யூரோ நாணயத்தில் இருந்து விடுபடுவது இரண்டில் எது நடந்தாலும், அது சீட்டுக் கட்டு சரிந்தது போல ஐரோப்பாவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் கிரீஸ் திவாலாகாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
அவரது அறிக்கையால் பயன் ஏதும் ஏற்படவில்லை. பங்குச் சந்தை சரிவு நேற்றும் தொடர்ந்தது. இதையடுத்து ஜேர்மனி, பிரான்ஸ் அதிபர்களுடன் கிரீஸ் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
இதற்கிடையில் இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட யூரோ கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கான பரிந்துரைகளை விரைவில் ஐரோப்பிய கமிஷன் வெளியிடும் என கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பராசோ நேற்று தெரிவித்தார்.
யூரோ மண்டல நாடுகள் பொருளாதார, அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஒழிய யூரோ கடன் பத்திரங்களை வெளியிட முடியாது என ஏற்கனவே ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
அதேநேரம் கிரீஸ் கடன் பத்திரங்களை வாங்கியதால் சந்தையில் நம்பிக்கை இழந்த கிரெடிட் அக்ரிகோல், சொசைட்டி ஜெனரல் ஆகிய இரு பிரான்ஸ் வங்கிகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகளை தலா ஒரு புள்ளி குறைத்து மூடிஸ் நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதன் பாதிப்பு ஏற்கனவே சரிவில் இருந்த ஐரோப்பிய பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்குகளை பெருமளவில் பாதித்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் நிதி விவகார கமிஷனர் ஓல்லி ரென் நேற்று விடுத்த அறிக்கையில்,"கிரீஸ் நாடு யூரோ நாணயத்தில் இருந்து வெளியேறி அதன் சொந்த நாணயத்திற்கு மாற வேண்டும்" என்றார்.
ஈராக்கில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 17 பேர் பலி.
ஈராக்கில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
ஈராக்கின் பாபில் மாகாணத்தில் உள்ள மெதாதியா நகரத்தில் பாதுகாப்புப் படையினர் அடிக்கடி வந்து செல்லும் உணவகம் ஒன்றில் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பொலிசார் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் அன்பர் மாகாணம், ஹபானியா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்துக்குள் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் குவாஹிரா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இன்னும் சில மாதங்களில் அமெரிக்கப் படைகள் இராக்கை விட்டு வெளியேறவுள்ள நிலையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மீதே தாக்குதல் நடத்தப்படுவது அவர்களின் செயல்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF