Wednesday, August 17, 2011

இன்றைய செய்திகள்.

கோத்தபாயவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கிறீஸ் மனிதர்கள்! மங்கள குற்றச்சாட்டு.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சில அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
கடந்த காலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த வெள்ளை வான் அச்சுறுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த தரப்பினரே தற்போது இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்துள்ளன.
சிக்கியவர்களில் பலர் இராணுவச் சிப்பாய்கள்
கிறீஸ் மர்ம மனிதர்களாக நடமாடிய நபர்கள், பிரதேச மக்களின் கைகளில் சிக்கிய பின்னர் அவர்களில் ஏராளமானோர் இராணுவச் சிப்பாய்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி விடுதலையாகியுள்ளனர்.
கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து, இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.
கிறீஸ் மர்ம மனிதர்களிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போர்வையில், கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்து சுமார் 5 ஆயிரம் இராணுவத்தினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா ஒரு விசேட அதிரடிப்படை முகாமை அமைப்பதற்கும் இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தின் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்படி மங்கள சமரவீர தெரிவித்தார். 
களவுகளையும் மர்ம மனிதர்களின் தொல்லைகளையும் தடுத்து நிறுத்துங்கள்!- ஜனாதிபதிக்கு சிவசக்தி ஆனந்தன் பகிரங்கக் கடிதம்.

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட ஏனைய இடங்களில் நடைபெற்றுவரும் களவுகளையும் கிரிஸ் மனிதர்களின் நடமாட்டத்தையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தி மக்கள் பதற்றமற்று நிம்மதியாக வாழ வழியேற்படுத்துங்கள் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தின் முழுவிபரம் வருமாறு:
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கட்கு,
வடக்கு-கிழக்கில் கடந்த சிலநாட்களாக நடைபெற்றுவரும் கொள்ளைககளினாலும் கிரிஸ்ப+சிய மனிதர்களின் நடமாட்டத்தினாலும் மக்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
தனியாக இருக்கும் பெண்களும் வயது வந்தோர்களும் இளம் பெண்களும் மிகவும் அச்சவுணர்வுடன் உள்ளனர்.
ஆகவே தாங்கள் இந்த விடயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கையினை எடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உதாரணத்திற்கு சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓமந்தையைச் சொந்த இடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட 75வயது மூதாட்டி அன்னபூரணம் என்பவர் தனது பேத்தியாருடன் தனியாக வசித்து வருகிறார்.
இன்று விடியற்காலை 1மணியளவில் இவரது வீட்டினுள் புகுந்த மர்ம மனிதர்கள் இவரைக் கடுமையாகத் தாக்கி இடது காதை அறுத்துள்ளதுடன் வலதுகையிலும் எலும்புமுறிவை ஏற்படுத்தியுள்ளனர்.
வயது முதிர்ச்சியுடன் மனஅழற்சியும் சேர்ந்துள்ளதால் மூதாட்டி மிகவும் வேதனையடைந்து மனச்சோர்வுடனும் வாழ்க்கையில் பிடிப்பின்றியும் அச்சவுணர்வுடனும் காணப்படுகின்றார்.
பம்பைமடுவைச் சேர்ந்த கதிர்காமு துரைராசா என்னும் 56வயதுடைய நபர் கடந்த 15ஆம் திகதி இரவு ஒரு மணிக்கு மர்ம மனிதர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மர்ம மனிதர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து இவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன் இவரது கழுத்தை வெட்ட முற்பட்டபோது கையால் தடுத்ததால் கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைப்போன்றே வவுனியாவின் ஏனைய இடங்களிலும் மன்னார் மாவட்டத்தின் பலஇடங்களிலும் மர்மமனிதர்களின் தொல்லையால் மக்கள் கதிகலங்கிப்போயுள்ளனர்.
இதனால் பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன் தினக்கூலிக்குச் செல்லும் நபர்கள் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர்.
பெண்கள் பகலில்கூட வீடுகளில் தனியாக இருப்பதற்கு அச்சப்படுகின்றனர். தங்களின்வீடுகள் கூட பாதுகாப்பற்றதாக மக்கள் எண்ணுகின்றனரனர். மலையகம் மற்றும் கிழக்கில் ஆரம்பித்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்பொழுது வன்னியிலும் பரவிவிட்டது மிகுந்த வேதனை அளிப்பதாகவுள்ளது.
ஆகவே தாங்கள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட். புதுநகரினுள் புகுந்த மர்மமனிதரை மக்கள் துரத்திச் சென்றபோது, பொலிஸ் காவலரணுக்குள் ஒளிந்தனர்! கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு புதுநகரில் திங்கட்கிழமை இரவு நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அம்மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி ஒளிந்துகொண்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று  பிரதேசசபைத் தவிசாளர்  சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.விமலநாதன், மாநகரசபை உறுப்பினர் கிருபைராஜா, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன்,  மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சேத்துக்குடா பொலிஸ் காவலரணிலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்யுமாறும் அக்காவலரணிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களை காவலரணிற்கு முன்பாக காட்சிக்கு வைக்குமாறும் கோரிக்கை விடுத்து கோசங்களை எழுப்பினர்.
அத்துடன், மர்ம மனிதர்கள் விமான நிலையம்,  சேத்துக்குடா பொலிஸ் காவலரண்  ஆகியவற்றுக்குள் தப்பிச்சென்று ஒளிந்துகொள்கின்றனர்' எனவும், ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவலரணை உடனடியாக அகற்றுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்ட தலைமையிலான பொலிஸார் சமுகமளித்தனர்.
சேத்துக்குடா பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் அம்மர்ம மனிதர்கள் சேத்துக்குடா காவலரணுக்குள் ஓடி ஒளிந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள பொதுமக்கள், இவ்வாறு தமது பகுதிக்குள் புதிதாக நடமாடுபவர்களை அடையாளம் காணும் நோக்கில் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்கு முன்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களை காட்சிக்கு வைக்குமாறும் சேத்துக்குடா பொலிஸ் காவலரணிலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்யுமாறும் கோரினர்.
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதமளித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்ட, சேத்துக்குடா காவலரணில் தமிழ்மொழி மூலமான பொறுப்பதிகாரியுடன் புதிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்களெனவும் கூறினார்.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்ட இதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக முடியாதளவுக்கு இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அவர்கள் குழப்பமடைந்து காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயம் என கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால் போர்க்குற்றம் பற்றி பேசாதீர்கள்!- ஜெயலலிதாவிற்கு கோத்தபய ராஜபக்ச ‘அறிவுரை’

ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால், அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள், அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் பேசுவது பயன்றறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசுகையில் தமிழினப் படுகொலை செய்த இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்காக அதன் ஆசிரியர் ராஜேஸ் சுந்தரம், கோத்தபாய ராஜபக்சவுடன் நடத்திய நேர்காணல் சற்று முன் ஒளிபரப்பானது.
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விடுக்கப்பட்ட வினாவிற்கு பதிலளித்த கோத்தபய, அது அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இங்குள்ள நிலவரம் தொடர்பான விடயங்களை நாங்கள் ஜெயலலிதாவிற்கு அளிக்க வேண்டும். தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது.
அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது என்று மற்றொரு வினாவிற்கு பதிலளித்து கோத்தபாய கூறியுள்ளார்.
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறிய கோத்தபாய, இலங்கை ஒரு சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடுதான் என்றும், அங்கு சட்டத்தி்ன் ஆட்சிதான் நடக்கிறது என்றும் கூறிவிட்டு, பன்னாட்டு விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
நாங்கள் ஒரு இறையாண்மை உள்ள நாடு, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது.
இரவில் பயணிக்கும் ஆண்களை மயக்கி உடமைகள் அபகரிக்கும் கும்பல்! கொழும்பில் 10 பேர் கைது.

இரவு நேரங்களில் கொழும்பு, புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வரும் ஆண்களை ஏமாற்றி ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று அவர்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பத்துப் பெண்களைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 20,23 வயதுக்கிடைப்பட்டவர்களெனவும், இவர்கள் தனமல்வில, மாத்தறை, கண்டி, மொரட்டுவ மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மர்மமனிதன் பிரச்சினை அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை!- செய்தியாளர் மகாநாட்டில் யோகேஸ்வரன் எம்.பி.

மர்ம மனிதன் பிரச்சினையில் அரசாங்கத்துக்கு பங்கிருக்கிறது. இதனை அரசாங்கம் மறுக்க முடியாது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.
இன்று மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற மர்மமனித செயற்பாடு சார்பான செய்தியாளர் மகாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம் மாநாட்டில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பா.உ. யோகேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது
மர்ம மனிதன் பிரச்சினையில் அரசாங்கத்துக்கு பங்கிருக்கிறது. இதனை அரசாங்கம் மறுக்க முடியாது. இதற்கான முடிவை ஜனாதிபதியும் அரசாங்கமும் விரைந்து எடுக்க வேண்டும். அரசாங்கம் சொல்வது போன்று ஒரே நேரத்திலா காமப் பசியும், மனநோயும் இன்னும் பலவும் ஏற்படும்? இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றார்.
இப்பிரச்சினை அரசியல் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கையாளப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் வருகை தந்து இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கையிலும் மர்ம மனிதன் பிரச்சினை நீடித்து வருகிறது.
நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். மாவட்டம், மாகாணம், வடக்கு - கிழக்கு என்று இல்லாமல் முழு நாட்டிலும் ஏற்பட்ட பிரச்சினை என்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
இந்தப் பிரச்சினை மலையகத்தில் ஆரம்பித்து வேறு மாவட்டங்களில் பரவி, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் சென்று இப்போது தமிழ் பிரதேசங்களுக்குள் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசிய அரசுடன் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்னர் அரசின் பொய் என்ற கருத்துக்களை வெளியிடத் தொடங்கியமையினால் அம்மக்கள் மத்தியில் கவலை தோன்றியிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் கட்சி என்ற வகையில் அந்த மக்களுக்காகவும் நடவடிக்கை எடுக்கும். வேலியே பயிரை மேய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
நிலைமை கட்டுக்கடங்கா நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நிலை மக்கள் மத்தியில் அச்சத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே இவ்விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவ்வேளையில் அரசாங்கம் இந்த மர்ம மனிதன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறுமானால் பெரும் அபகீர்த்தியைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். மக்களுக்காக நியாய பூர்வமாக நீதியான ஒரு முடிவு காணப்பட வேண்டும்' என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த பொன் செல்வராசா எம்.பி.
இந்தச் சம்பவத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 60 வருட காலமாக அஹிம்சைப் போராட்டம் உட்பட அனைத்து போராட்ட வகைகளாலும் பாதிக்கப்பட்டு நொந்து போன தமிழ் மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் போர் ஓய்ந்த பிறகு இப்போதும் இரவில் நிம்மதியாக நித்திரை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது.
கிழக்கில் இறக்காமத்தில் தொடங்கி பொத்துவில் திருக்கோவில் என வந்து இப்போது தொடர்ச்சியாக தமிழ் பகுதிகளுக்குள் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடந்த மூன்று தினங்களுக்கு முன் களுவன்கேணியில் நடைபெற்ற சம்பவத்தில் அக்கிராமத்திற்குள் வந்த கறுத்த முகமூடி அணிந்த மூன்றுபேர் பெண்களிடம் சேட்டை விட முயன்ற வேளை அவர்கள் சத்தமிட்டதனால் துரத்திச் செல்லப்பட்டு வேளை பொலிஸ் முகாமுக்குள் சென்றுள்ளனர். அதன் பின்னர் வெளிச்சங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது.
பின்னர் மக்கள் திரண்டுபொலிஸ் முகாமை முற்றுகையிட்டு பிரச்சினை செய்தவுடன் அங்குள்ள அதிகாரிகளை மாற்றுவதுடன் புதிதாக நியமிக்கப்படுபவர்களில் தமிழர்களையும் சேர்ப்பதாக உறுதியளித்தன் பின்னர் இப்போது அங்கு அமைதி நிலவுகிறது.
இதேபோன்று புதூர், குறிஞ்சாமுனை பிரதேசங்களிலும் சம்பவங்கள் நடைபெற்று மக்கள் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாங்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று மக்களுடன் பேசித் தீர்வுகளுக்கு முயற்சித்திருக்கிறோம்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எமது தலைவர் இந்தியாவிலிருந்து நாளை வந்தவுடன் ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும்படி கோரவிருக்கிறோம்.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் மக்களால் விடுக்கப்பட்ட பொலிஸ் முகாம்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பதிலாக அங்குள்ள உத்தியோகத்தர்களை மாற்றுவதற்கான தீர்வைப் பெற்றுத்தரலாம் என தெரிவித்து அதற்கு முயற்சித்தோம். அவ்வேளையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால், மர்ம மனிதனையும் பொலிஸ் படைத்தரப்பு ஏற்றுக்கொள்கிறது. தாங்கள் அவர்களை மறைத்ததையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே அர்த்தமாகிறது. இதனாலேயே இவற்றுக்குத் துரிதமாகத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
சிறிகோத்தாவை அண்டிய பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகோத்தா அமைந்துள்ள பிரதேசத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக் கட்சியின் மாற்றுக் கருத்து குழுவினரால் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படும் என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அல்லது போராட்டங்களை நடத்தவோ கூடாது என கங்கொடவில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிகோத்தாவை அண்டிய சில வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்பதனை எவரும் தடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டவாறு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சஜித் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
சிறிகோத்தாவிற்கு எதிரில் நடத்தப்படவிருந்த போராட்டம் தற்போது விகார மகாதேவி பூங்கா பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இதேவேளை கட்சிக்கு எதிரான வகையில் போராட்டங்களை நடத்துவோரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியில் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் விரைவில் அழிந்து விடும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் விருப்பு வெறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த வாக்காளர்களை மட்டுமன்றி சிறுபான்மையின வாக்காளர்களையும் கட்சி இழந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படாது மெய்யாகவே எதிர்க்கட்சியாக செயற்படக் கூடிய ஓர் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாற்றமடைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிகோத்தாவிற்கு முன்னால் போராட்டம் நடத்துவோரை நல்ல அல்லது தீய வழிமுறைகளைப் பயன்படுத்தி வெளியேற்றப் போவதாக சர்ச்சைக்குரிய பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டங்களை நடத்த அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
சிறீலங்காவுடன் இந்தியா மேலும் நெருக்கமாகச் செயற்பட வேண்டும் - த ஹிந்து ஆலோசனை.

பொருளாதாரத் தடை இலங்கை மீது விதிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கோருவது சிங்களவர்களை விட இந்தியர்களிற்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து, ஹிந்து பத்திரிகையின் “வர்த்தகச் சஞ்சிகை” அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இருமுறை விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்தியா தவிர்த்ததைக் காரணமாக வைத்து சீனா அந்தத் துறைமுக அபிவிருத்திப் பணியை கையகப்படுத்தி இன்று இந்தியாவிற்கெதிரான ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது எனவும்,
தற்போது இந்தியா இலங்கைக்கு இடையில் அமுலிலுள்ள வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்குச் சாதகமானதொரு ஒப்பந்தமெனவும் எனவே பொருளாதாரத் தடை விதிக்கப்படுதல் என்பது ஒரு முட்டாள்தனமான காரியம் என்றும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 2010ம் ஆண்டின் தரவுகளின் படி இந்தியா இலங்கைக்கு 2,460 மில்லியன் டொலர்களிற்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்கிறது எனவும் ஆனால் இலங்கையிலிருந்து வெறும் 470 மில்லியன் டொலர்களிற்கு இறக்குமதியை மேற்கொள்கிறது எனவும் பொருளாதாரத் தடை ஏற்படுத்தப்பட வேண்டுமானல் இந்தியா 2,000 மில்லியன் (இரண்டு பில்லியன்) டொலர்களை இழக்கும் எனவும் எனவே பொருளாதாரத் தடை சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு,
எவ்வளவுக்கெவ்வளவு சிறீலங்காவுடன் இந்தியா நெருக்கமாகச் செயற்படுகிறதோ அவ்வளவிற்கு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் தமிழர்களிற்கான பிரச்சினைகளிற்குத் தீர்வு காணப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் இனந்தெரியாதோர் அச்சுறுத்தல்! பீதியுற்ற முஸ்லிம் மக்கள் பள்ளிவாசலில் தஞ்சம்.

சாவகச்சேரியில் இனந்தெரியாத சிலரின் அச்சுறுத்தலை அடுத்து பீதியில் அங்கு மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு அருகில் உள்ள பள்ளி வாசலில் தஞ்சமடைந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சாவகச்சேரி பள்ளிவாசலை அண்டிய பகுதிகளுக்கு 4 பேர் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளது.
அங்கு முஸ்லிம்களின் வீடுகளுக்குத் தனித்தனியாகச் சென்ற அந்தக் குழு நீங்கள் இதுவரை காலமும் எங்கே இருந்தீர்கள் என்ற பாணியில் விசாரித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதனால் பதற்றமடைந்த முஸ்லிம் மக்கள் நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலில் தஞ்சமடைந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவுக்கு அனுமதி வழங்கவில்லை: பாகிஸ்தான் மறுப்பு.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க உளவு விமானம் ஒன்று பழுதாகி விழுந்தது.
அந்த விமானத்தைப் பார்வையிட சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதியளித்ததாக செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து ஐ.எஸ்.ஐ.யின் மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி அதர் அப்பாஸ் வெளியிட்ட அறிக்கையில்,"அமெரிக்க உளவு விமானத்தை ஆராய சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதியளித்ததாக வந்த செய்தி உண்மை இல்லை. சில வெளிநாட்டு ஊடகங்கள் பாகிஸ்தான் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றன" என்றார்.
வெனிசுலா அதிபர் நாடு திரும்பினார்.
வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் புற்றுநோயால் அவதிப்பட்டார். அவருக்கு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு இரண்டு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனது நடப்பு நாடான கியூபா சென்ற வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் நாடு திரும்பினார். நாடு திரும்பிய நிலையில் மிக சிறப்பாக இருப்பதை உணர்கிறேன் என அவர் தெரிவித்தார்.
வயிற்றுப் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி கடந்த ஜூன் மாதம் அகற்றப்பட்டது. தற்போது அவருக்கு எந்த அளவு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்பது அறிவிக்கப்படவில்லை. தனது உடலில் புற்றுநோய் பரவவில்லை என சாவேஸ் தெரிவித்தார்.
கடந்த 1999ம் ஆண்டு முதல் ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் சாவேஸ் 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. தனக்கு மூன்றாவது முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமா என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் சாவேஸ் பொதுமக்கள் முன்பாக உரையாற்றுகையில்,"தான் இன்னும் வெற்றியை எதிர்நோக்கி தான் உள்ளேன்" என தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெரிவித்து இருந்தார்.
விரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சபதம்.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், தேர்தல் நடத்தவும் தயார் அதற்காக விரைவில் நாடு திரும்புவேன், மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்பேன் என ஏமன் அதிபர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டில் கடந்த 33 வருடங்களாக ஆட்சி செய்து வந்தார் அதிபர் அலி அப்துல்லா சலே. தற்போது அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கிளர்ச்சியாளர்கள் அதிபர் மாளிகை மீது நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அதிபர் சலே, பிரதமர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரும் சவூதி அரேபியா தப்பிச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரதமர் கடந்த வாரம் குணமடைந்தார். அதிபர் சலே உடல் முழுவதும் 40 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால் சிறப்பு சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்துள்ளார்.
நேற்று சவூதி அரேபியாவில் தொலைக்காட்சி வாயிலாக ஏமன் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,"ஏமன் நாட்டின் அரசியல் சிக்கல் தீர எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். நாட்டில் பொதுத்தேர்தலையும் சந்திக்க தயார். விரைவில் நாடு திரும்புவேன்" என்றார்.
தனது 45வது பிறந்தநாளை மறந்ததால் கணவரை குத்திக் கொலை செய்த பெண்.
தனது 45வது பிறந்தநாளை கணவன் மறந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை குத்திக் கொலை செய்தார்.
இந்த வெறிச்செயலை தெற்கு ரஷ்யாவில் உள்ள அஸ்ட்ரஹான் பகுதியை சேர்ந்த லயா துபிகோவா என்ற பெண் மேற்கொண்டுள்ளார். அவர் பொலிசாரிடம் கூறுகையில்,"தனது பிறந்த நாளை கணவர் கால்பிக் மறந்தார். அவர் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது" என்றார்.
அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய கணவன் மலர் கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன். அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. இது எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
இந்த நிலையில் பிற்நதநாள் விருந்தாக தயாரித்த உணவை பறிமாற தயாராக இருந்த போதும் கணவன் எனது பிறந்தநாளை அறியவில்லை. இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் சமையல் கத்தியால் நெஞ்சில் குத்தினேன் என்றும் தெரிவித்தார்.
குடியரசு கட்சி மீது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குற்றச்சாட்டு.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி ஒபாமா பிரசார பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குடியரசுக்கட்சியினரின் கடுமையான போக்கை தாக்கி உள்ளார். அமெரிக்காவின் வலிமையான பொருளாதார வளர்ச்சிக்கு சமரச முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் குடியரசு கட்சியினர் அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதில் கடுமையாக நடந்து கொண்டனர் என அவர் தெரிவித்தார். வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையை காட்டிலும் செலவினங்ளை ரத்து செய்வதிலேயே குடியரசு கட்சியினர் ஆர்வம் காட்டினர்.
இதில் இருந்தே அவர்களது தேச நலன் தெரிகிறது என குற்றம் கூறினார். குடியரசு கட்சியினர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட அரசியல் நடவடிக்கையில் தான் குடியரசு கட்சியினர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
ஐரோப்பாவின் கடன் பிரச்சனை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்கம் மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவில் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரபு நாடுகள் போராட்டம் காரணமாக எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இது நமது பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பணிநிறுத்தம் காரணமாகவும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது: போராட்டக்காரர்கள் உறுதி.
லிபியாவில் போராட்டாக்காரர்களை கொன்று குவிக்கும் கர்னல் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
கடாபியின் லிபிய ராணுவம் பயங்கர சேதம் ஏற்படுத்தும் ஸ்கட் ஏவுகணையை வீசிய நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தால் 69 வயது கடாபி தலைநகர் திரிபோலியில் தனிமைபடுத்தப்படுத்தபட்டுள்ளார்.
லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் குழு தேசிய மாற்றக் கவுன்சிலை அமைத்துள்ளது. இந்த குழு பிரதிநிதிகளையே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தூதர்களாக அங்கீகரித்துள்ளன.
இந்த குழுவினர் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் முஸ்தபா அப்டல் ஜலீல் கூறுகையில்,"தமது அமைப்பு முடிவுப்படி கடாபி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவருடன் பேச்சு வார்த்தை என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று" என தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் உள்ள பிரகா நகரில் லிபியா ராணவத்தினர் ஸ்கட் ஏவுகணையை வீசினர் என தகவல்கள் கூறுகின்றன.
யூரோ பொருளாதார நிர்வாகத்தில் உண்மை தேவை: பிரான்ஸ் - ஜேர்மனி அதிபர்கள் பேட்டி.
கடன் பிரச்சனையில் தவிக்கும் ஐரோப்பிய மண்டலத்தை மீட்க யூரோ பொருளாதாரத்தில் உண்மையான நிர்வாகம் தேவை என பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியும், ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெலும் தெரிவித்தனர். 
ஐரோப்பிய மண்டல ஒருங்கிணைப்பு நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என ஏங்கலா உறுதி அளித்தார். நிதி பரிவர்த்தனையில் வரி விதிப்பதன் மூலம் கூடுதல் வருவாயை அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 17 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட வேண்டும் என விரும்புவதாகவம் அவர்கள் தெரிவித்தனர். ஐரோப்பா மண்டலத்தின் தற்போதைய தலைவராக ஹெர்மான் வான் ரோம்பய் உள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் சந்தித்த பேச்சு வார்த்தையில் பெரும் அறிவிப்புகளை எதிர்பார்த்ததாக சந்தையாளர்கள் தெரிவித்தனர். நியூயோர்க்கில் திடோ ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியில் சராசரி 1.3 சதவீதம் சரிந்தது.
அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் அரசு பத்திரங்கள் வீழ்ச்சி அடையாமல் பாதுகாப்பான நிலையில் இருந்தன. ஐரோப்பாவில் கிறீஸ் கடுமையான கடன் பிரச்சனையில் உள்ளது. அந்த கடன் பிரச்சனையை தீர்க்க இதர உறுப்பினர் நாடுகள் போராடும் நிலையில் இதர நாடுகளிலும் கடன் மற்றும் பற்றாக்குறை அதிரிக்க துவங்கி உள்ளது.
நத்தை வேகத்தில் நகரும் ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி: அரசு கவலை.
ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு கொண்ட ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி நத்தை வேகத்தில் முன்னேறுகிறது. இது அரசுக்கு கவலையை அளித்துள்ளது.
2011ஆம் ஆண்டின் 2வது கால் இறுதியில் வளர்ச்சியில் மிக மந்தநிலை காணப்பட்டது. ஐரோப்பிய தலைவர்கள் யூரோ மண்டல கடன் பிரச்சனையை சரி செய்ய போராடுகிறார்கள்.
இந்த நிலையில் ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்ததைவிட மோசமாக உள்ளது. நடப்பாண்டின் 2வது கால் இறுதியில் 0.1 சதவீதமே ஜேர்மனி பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த விவரங்கள் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் உற்சாகமான வேகத்தை பெற்ற ஜேர்மனி பொருளாதாரம் பின்னடைவை பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் ஜூன் மாதம் வரையில் ஜேர்மனி பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டு இருந்தனர். ஆனால் 0.1 சதவீதமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடனில் தவிக்கும் ஸ்பெயின் பொருளாதார வளர்ச்சியை விட ஜேர்மனி வளர்ச்சி மோசமாக உள்ளது. ஸ்பெயினின் வளர்ச்சி இந்த கால கட்டத்தில் 0.2 சதவீதமாக உள்ளது.
ஐ.எம்.எப் தலைவர் லாகர்டே மீது ஊழல் புகார்: விசாரணை துவக்கம்.
சர்வதேச நிதியத்தின் தலைவராக கிறிஸ்டியானே லாகர்டே உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு பிரான்ஸ் நிதித்துறை அமைச்சராக இருந்த போது அரச பணத்தை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த புகார் தொடர்பாக பிரான்ஸ் நீதிபதிகள் நேற்று விசாரணையை துவக்கினர். இந்த விசாரணை துவக்கம் மூலம் லாகர்டேவிடம் கிரிமினல் விசாரணை நடைபெறும் நிலை உள்ளது.
55 வயது கிறிஸ்டியானே லாகர்டே ஐ.எம்.எப்பின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமைக்குரிய லாகர்டே தற்போது முறைகேடு புகாரில் சிக்கி தவிக்கிறார்.
குடியரசு கோர்ட் நீதிபதி மூன்று அப்பீல் கோர்ட் நீதிபதிகளை லாகர்டே மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார். தன் மீது எந்த தவறும் இல்லை என லாகர்டே திட்டவட்டமாக கூறிவருகிறார்.
2008ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியின் நண்பரான தொழிலதிபர் பெர்னார்டு தாபேவுக்கும், முன்னாள் அரசு வங்கியான லியோனிஸ் வங்கிக்கும் பண விடயத்தில் பிரச்சனை இருந்தது.
அப்போது லாகர்டே தன்னிச்சையாக பொது மக்கள் வரி பணத்தை 40 கோடி யூரோ மதிப்பில் தொழிலதிபருக்கு அளித்தார். இந்த முறைகேடு குறித்து தற்போது புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை துவங்கி உள்ளது.
கனடா விமானப்படை மற்றும் கடற்படை பெயர்கள் மாற்றம்: அரசு அறிவிப்பு.
அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கனடா நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படையின் பெயர்கள் மாற்றப்படுகின்றன என அரசு அறிவித்துள்ளது.
தற்போது கனடா விமானப்படை ஏர் கமாண்ட் என அழைக்கப்படுகிறது. இனிமேல் இந்த படை பிரிவு றொயல் கனடியன் ஏர்போஸ் என அழைக்கப்படும்.
கனடா கடற்படை தற்போது மாரி டைம் கமாண்ட் என அழைக்கப்படுகிறது. இனிமேல் றொயல் கனடியன் நேவி என அழைக்கப்படும். ஹாலிபாக்கசில் கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் மாகே பேசுகையில் இதனை குறிப்பிட்டார்.
கனடாவின் தரைப்படை பரிவு தற்போது லேண்ட் போர்ஸ் என அழைக்கப்படுகிறது. இனிமேல் இந்தப்படை பிரிவு கனடியன் ஓர்மி என அழைக்கப்படும். இந்த பெயர் மாற்ற அறிவிப்பு குறித்து அமைச்சர் மாகே குறிப்பிடுகையில் கடந்த 1970ஆம் ஆண்டு கால கட்டத்தில் கனடா படை பிரிவுகளுக்கு பெயர் மாற்றங்கள் நடந்தன.
இந்த மாற்றம் காரணமாக நடந்த வரலாற்று தவறுகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன. நமது நாடு அரச குடும்பத்தை கௌரவிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றங்கள் வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
லண்டன் கலவரம்: 68 வயது முதியவரை தாக்கியதாக 16 வயது சிறுவன் கைது.
லண்டன் கலவரத்தில் தொடர்புடையதாக 16 வயது சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதியன்று சமூக விரோதி ஒருவனை பொலிசார் சுட்டுகொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் லண்டன் நகர் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கலவரத்தின் போது கண்காணிப்பு கமெராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு லண்டனில் இலாயிங் தெருவில் 68 வயதுடைய ரிச்சர்ட் பவுஸ் என்பவர் தெருவோரம் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த சிறுவன் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் தலையில் காயமடைந்த முதியவர் அதே இடத்தில் இறந்தார்.
இதனை கண்காணிப்பு வீடியோ காட்டி ‌கொடுத்ததாக அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அவன்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவன் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.
சிறுவனுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வாதிட்டார். எனினும் சிறுவன் பெயர், ஊர் பற்றிய விவரங்களை பொலிசார் தெரிவிக்கவில்லை. முன்னதாக அவனது தாய் சிறுவனுக்கான ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF